Thursday, December 15, 2011

பாரதியின் கடிதம்


பாரதி எழுதிய கவிதைகளும்,கட்டுரைகளும் தவிர கடிதங்களும் உணர்ச்சிப்பூர்வமாகவே இருக்கின்றன.அதிகம் வெளித்தெரியாவிடினும், அவ்வகையில் அரிய வகை கடிதம் ஒன்று உங்கள் பார்வைக்கு. இதை வாசிக்கும்போது நமக்கே ஒரு உந்துதல் வருவது இயற்கை. மேலும் அவரது கடிதங்கள் அனைத்துமாக அடங்கிய ஒரு நூலாகவும் வெளிவந்திருக்கிறது.
 

பரலி சு.நெல்லையப்ப பிள்ளைக்கு கடிதம் 1915

                                                      ஒம்
                                                                                                                       
புதுச்சேரி
                                                                                                                         19
ஜுலை 1915

எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளையைப் பராசக்தி நன்கு காத்திடுக
தம்பிமாதத்துக்கு மாதம் , நாளுக்கு நாள் , நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக்கமலத்திலே பேரறிவாகிய உள்ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்
நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை
ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து,
அந்த பாஷைப் பத்திரிக்கைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால் தமிழ் நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும், தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க ஆனால் புதிய செய்தி, புதிய யோசனை . புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம்தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்

தம்பிநான் ஏது செய்வேனடா ,தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாகயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது

தம்பிஉள்ளமே உலகம்
ஏறு
! ஏறு ஏறு  மேலே மேலே மேலே!

நிற்கும் நிலையிலிருந்து கிழே விழாதபடி  
கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு  
பிழைக்க முயற்சி பண்ணும்  
பழங்காலத்து மூடர்களை 
கண்டு குடல் குலுங்கச் சிரி
உனக்குச் சிறகுகள் தோன்றுக.  
பறந்து போ ! பற. ! பற ! -  
மேலே மேலே மேலே!
 
**

தம்பிதமிழ்நாடு வாழ்க என்றெழுது 
தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க்க என்றெழுது
தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது
அந்தத் தமிழ் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம்  
பயிற்சி பெற்று வளர்க என்றெழுது
தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு. அதன்பெயர் தமிழ் ஜாதி.  
அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது
ஆணும் பெண்ணும்  ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது
அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது
பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக்குத்திக் கொண்டான் என்றெழுது
பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது
தொழில்கள், தொழில்கள் என்று கூவு
தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பன்  
மேற்குலத்தான் என்று கூவு.
வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக
முயற்சி ஒங்குக. ஸங்கீதம், சிற்பம் யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கைநூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு

சக்தி ! சக்தி சக்தி என்று பாடு
தம்பிநீ வாழ்க

**
உனது கடிதம் கிடைத்தது. குழந்தைக்கு உடம்பு செம்மையில்லாமல் இருந்தபடியால் உடனே ஜவாப் எழுத முடியவில்லை. குழந்தை புதிய உயிர் கொண்டது. இன்று உன் விலாசத்துக்கு  நாட்டுபாட்டுக்கள் அனுப்புகிறேன். அவற்றைப் பகுதி பகுதியாக உனது பத்திரிக்கையிலும் ஞானபானுவிலும் ப்ரசுரம் செய்வித்திடுக. புதுமைப்பெண் என்றொரு பாட்டு அனுப்புகிறேன். அதைத் தவறாமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக. எங்கேனும் எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் நமக்கனுப்புக 
தம்பிஉனக்கேனடா இது கடமையென்று தோன்றவில்லை ? நீ வாழ்க.
       

                                                                                                 உனதன்புள்ள
                                                                                                 
பாரதி








.

6 comments:

  1. தமிழையே உண்டு, தமிழையே சுவாசித்து வாழ்ந்த மகாகவியின் வார்த்தைகளைப் படிக்கையில் (முன்பே படித்திருப்பினும்) மனம் களிபேருவகை கொள்கிறது. பதிவிட்ட உமக்கு நன்றியோ நன்றிகள்! வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. முண்டாசுக் கவியின் நினைவலைகள்..
    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  3. அவரின் ஒவ்வொரு எழுத்தும் ஆர்ப்பரிப்பவை..!
    நன்றி சௌந்தர்..

    ReplyDelete
  4. கருன் , நீண்டநாளுக்குப்பின்னதான வருகைக்கு
    நன்றி..! இந்த வாரம் முழுதும் பாரதி புகழ் பாடலாம் என்றிருக்கிறேன்...:-)

    ReplyDelete