Saturday, March 18, 2017

லோகன் - ரத்தக்களரி


இப்டி ஒரு ரத்தமும் சதையுமா, பிச்சு எறியிற படம் சமீபத்துல பாக்கவேயில்லை. அடித்தூள் பறக்குது. ஹ்யூ ஜேக்மெனின், வுல்வரீன் அதிகம் நான் பார்த்ததில்லை. இது இந்த சீரிஸ்ல கடைசிப்படம் என்று சொல்கிறார்கள். புறங்கையில் குத்தீட்டிகள் முளைக்கும் ம்யூட்டன்ட் இயல்பில் உருவான மார்வெல் கார்ட்டூன் கேரக்டர். கார்ட்டூன் கேரக்டர்களில் ஸ்பைடர்மேன், பேட்மென் வரிசையில் இந்த ம்யூட்டன்ட். இதே போல ஸிஸர்ஹேன்ட்ஸ் என்றொரு படம். கை விரல்களுக்குப் பதில் அவனுக்கு கத்திரிக்கோல்கள் இருக்கும். பூஞ்செடிகளை அவற்றாலேயே அழகு படுத்துவான்.



ஹ்யூ ஜெக்மென் எனக்கென்னவோ அசப்பில இந்த மேக்கப்ல நம்மூரு விக்ரம் மாதிரியே இருக்கார். உடல்மொழி, நடை உடை பாவனை எல்லாமே நம்மாளுதான். தாடி கூட பொருந்துதுன்னா பாத்துக்குங்களேன். பாட்ரிக் ஸ்டூவர்ட் வயதான கேரக்டரில் வீல் சேரில் உட்கார்ந்து கொண்டே உலகத்தையே ஸ்தம்பிக்க வைக்கிறார். ஒவ்வொரு முறை அவர் மீது தாக்குதல் நடத்த எத்தனிக்கும்போதும் , ஆஹா.. ஆற்றல் அந்த அறையை மீறி வசிப்பிடம் கடந்து ஊரின் எல்லை வரை பரவுகிறது.ஹா... யாராலும் தாக்குப்பிடிக்க இயலுவதில்லை. சாலையில் அடைத்து வைக்கப்பட்ட வண்டியிலிருந்து குதிரைகள் தவறுதலாக வெளியேறிச் சென்றுவிடும், அவற்றை மீளக்கொண்டு வருவது என அத்தனையும் சாத்தியமான விஷயங்கள்.



ஃபாஸ்ட் கட் இங்க தமிழ்ல செய்தாலும் இந்தப்படம் தான் ரியல் ஃபாஸ்ட் கட். ஒரு செகன்ட் கூட சலிக்காத எடிட்டிங். அந்தச்சின்னப்பெண் லாரா பின்னி எடுக்கிறாள். அதீத சக்தி கொண்ட இனம் உருவாக்கப் படுகிறது. இதே போல நைட் ஷாமளன் 'ஏர் பென்டர்' எடுத்தார். அதுபோல இங்கு செயற்கையாக உருவாக்கப் பட்ட ம்யூட்டன்ட் இனம் அவள். வன்முறையின் உச்சம் அத்தனை சண்டைக்காட்சிகளும். முதல் பாதியில் அந்தப்பெரியவரையும் , சின்னப் பெண்ணையும் அள்ளிப் போட்டுக்கொண்டு வில்லன் கோஷ்ட்டியிடமிருந்து தப்பிக்கும் காட்சிகள் கிட்டத்தட்ட 20 நிமிடத்துக்கும் மேலே. அத்தனையும் பரபரப்பு. இப்படி ஒரு கன்டினியூட்டி. எப்படித்தான் எடுத்தார்கள் எனத்தெரியவேயில்லை. கடைசியில் ஒரு ட்ரெயினை அதிரடியாக கடந்து சென்றுவிடுவதில் முடியும் ...யப்பா... ட்ரான்ஸ்போர்ட்டர் சீரீஸுக்கப்புறம் அத்தனை சீட் நுனித்தருணங்கள் அவை.


பேட்ரிக்கின் ஆற்றலை அத்தனை உத்வேகமாக நம்மை உணரவைக்கும் இசை. அதிரடி இசை என்பதெல்லாம் இக்காலத்தில் சர்வ சாதாரணமாகி விட்டபோது , இங்கோ நல்ல தீம் இசையுடன் அதிரவும் வைக்கிறது. விட்டால் நம்மையும் நிலைகுலைய  வைத்து விடுவது போல அடக்கிவைக்கிறது நம்மை.

என்ன வழக்கம்போல எல்லா ஹாலிவுட் படங்களிலும் காட்டப்படுவதுபோல மெக்ஸிகோ/சீனா/ஜெர்மன் நாட்டுக்காரர்கள் மட்டுமே உலகத்துக்கு கெடுதல் செய்வார்கள் எனவும், இப்படியாப்பட்ட ரெய்ஸ் டுத அக்கேஷன் சூப்பர் ஹீரோஸ்லாம் அமெரிக்கக்காரர்களாக இருப்பதும் மட்டுமே சாபம்.படத்தில் மற்றதெல்லாம் கிடைத்தற்கரிய கனிகள்.





Thursday, March 16, 2017

கரடிக்காதல்


ஃபெப்ரவரி 2017 தடம் இதழில் 'தேன் வாசித்தேன். புதுவிதமான ஒரு மயக்கம் தரும் சிறுகதையாக இருந்தது (சிறுகதை தானே?) பால் ஜக்காரியா மலையாள மூலம் பவா' தமிழாக்கம். இதுவும் ஒரு மேஜிக்கல் ரியலஸிம் கதை தான்.காடு பற்றிய வர்ணனை மிகவும் அலுப்புத்தட்டியது எனக்கு அதுபோல மீன்களின் வகைகளைப்பற்றி விலாவரியாக விளக்கியிருப்பதும் எதோ விக்கிப்பீடியா வாசிப்பது போன்ற உணர்வைத் தருவது சலிப்பு. ஒருபக்கம்  இத்தனை பெயர்களும் அவர் அறிந்து வைத்திருப்பதை பறைசாற்றினாலும் இன்னொரு புறம் அது ஒரு பொதுஅறிவுத்தகற்குவியலாகவே எனக்கு தென்பட்டது.

இங்கும் எனக்கு மிகவும் பிடித்த இன்றளவும் இம்மி கூட அசைக்காமல் நான் கண்ணுறும் அலிஸ் இன் த வொன்டர் லேன்ட்'டைப்பற்றி பேசுகிறார். ஓரளவு அதையொட்டியே இந்தக்கதையும் அதே உளப்பாங்கில் எழுதப்பட்டது போல , மேலும் யாருக்கும் அறிவுரை எல்லாம் சொல்வது போலல்லாது தாம் நினைத்ததை சொல்லிவிட எத்தனிக்கிறார் பால். இவரின் பிற எழுத்துகளை நான் வாசித்தது இல்லை.

கரடி ஒரு பெண்ணை அதுவும் மானிடப்பெண்ணை காதலிப்பது தான் கதை. இதேபோன்ற ஒரு ஆங்கிலத் திரைப்படம் கூட எனக்கு நினைவுக்கு வருகிறது. அதில் ஒரு தேனீ ஆம் தேனீதான் ஒரு பெண்ணை காதலிக்கும். இன்னபிற தேநீக்களிடம் அதைப்பற்றி விசாரிக்கும். இது சாத்தியமா நடக்கக்கூடியதா என்றெல்லாம். அது ஒரு கார்ட்டூன் திரைப்படம் (பெயர் மறந்து விட்டேன் ) இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம் , பியூட்டி அன் த பீஸ்ட் போன்ற படங்களும் விலங்குகளும் மனிதர்களும் விரும்புவதை.

இதில் கரடி என்பது ஒரு உருவகம் மட்டுமே. மனிதரில் பலரும் அவ்வப்போது சூழலுக்கேற்ப சில மிருகங்களாக மாறுவது என்பது சாத்தியம்தானே. வன்மமும் , முன்னற் செய்த தவறுகளை நினைவிற்கொண்டு பழி வாங்குவதில் நரி, கிட்ட நெருங்கவும் விடாத சமயங்களில் புலி/சிங்கம், கொம்பேறி மூக்கனைப்போல எதிரி இறந்து விட்டானா என இடுகாடு வரை போய்ப்பார்ப்பதில் என அவ்வப்போது சில மிருக உணர்வுகளும் நம்மில் இருந்து கொண்டுதானிருக்கின்றன. பரிணாம வளர்ச்சியின் எச்சங்கள்.

கரடிக்கு மொழிப்பிரச்னை. ஹிஹி..எப்படி மனிதமொழி பேசுவது ?..அடடா அவளைக்கண்டதும் பேச்சு வந்துவிடுகிறது :) ஆம்..காதல் வந்துவிட்டால் கவிமழையும் பொழிவர் அல்லவா ?! கரடி போய்க் கடவுளிடம் வேண்டும்போது அவரோ கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருக்கிறார். நல்ல பகடி.!  மேற்கத்திய நாட்டுப்புறக்கதைகளின் பாதிப்பில் எழுதியதாக குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

கதையின் முடிவில் அவளின் அம்மா வினவுகிறாள், எப்படி வைத்துக்கொள்கிறார் கரடியார் உன்னை என. வீடு முழுவதும் தேனடைகள்.,பழங்கள் எல்லாம் நிரப்பி விடுவார், என்னைவிட்டு ஒரு போதும் அகலுவதேயில்லை, வேறெந்தப்பெண்ணையும் ஏறிட்டும் நோக்குவதில்லை, இன்ன பிற விடயங்களில் கில்லாடி என்று அடுக்கிக்கொண்டே போகிறாள். அதற்கு அம்மா அவளிடம் என்ன சொல்லியிருப்பார் ... #கரடிக்காதல்


Wednesday, March 1, 2017

கோக்'கை உறிஞ்சும் வண்ணத்துப்பூச்சிகள்


பாலசுப்ரமணியன் பொன்ராஜ் எழுதிய 'துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை' என்ற சிறுகதைத்தொகுப்பிற்கு ,  கணையாழி 'ஃபெப்ரவரி 2017' இதழில் வெளியான எனது நூல் விமர்சனக்கட்டுரை




ஸ்ரீனி என்னுடன் தொலைபேசியில் உரையாடும் போது உற்சாகமாக ஒன்றைச் சொன்னார். இலக்கியக் கூட்டங்கள் தொடர்ந்தும் நடத்துவது பற்றி பேசிக் கொண்டிருக்கையில், பாலா (பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ) எழுதின ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பல்’ கதைகள் ஒரு பிரதியை உங்களிடம் கொடுக்கச்சொல்லி அதற்கு விமர்சனமும் எழுதச்சொன்னார் என பேருவகையுடன் சொன்னார். இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய சிறுகதைகள், குறுங்கதைகள் சற்றே நீண்ட சிறுகதைகள் எனப்பலவகைகளில் தரம் பிரிக்கக்கூடிய வகையில்.. எனக்கென்னவோ இவரின் மொழி எக்கச்சக்கமான உவமைகளோடேயே பிறந்தது போலிருக்கிறது .இவ்வளவு உவமைகள் நான் எங்கும் வாசித்ததேயில்லை. எல்லாமே அந்நியமாகவே இருக்கிறது. இது காறும் தமிழில் வாசித்த உவமைகளைப் போலன்றி புதுப்பாங்கு எங்கும் காணப்படுகிறது.

நான் சிறுவனாக இருந்தபோது முன்னேற்றப்பதிப்பகம்’ (இப்பவும் இருக்கிறதா என்று தெரியவில்லை) ரஷ்யமூல நூல்களை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுவார்கள் குறைந்தவிலையில் அப்படி ஒரு நூல் ‘பாறைச்சூறாவளித் துறைமுகம்’ என்ற சிறுகதை தொகுப்பு. விண்வெளி வேற்றுக் கிரக வாசிகள் , அவர்கள் தம் கதைகள், என அப்போது எனக்கு எதுவும் தெரியாத வயதில் வாசித்தவை. பிரமிப்பு எப்போதும் அடங்காது எனக்கு. பத்து வயதில் வேற்றுக்கிரகம், காலப்பயணங்கள் பற்றிய கதைகள் அதுவும் பரமக்குடி பொட்டல்காட்டில் இருந்துகொண்டு அத்தகைய ஸ்பேஸ் ஃபேண்ட்டஸிக்களை வாசிப்பதென்பது என்னைப் பொருத்தவரை விவரிக்கவியலாத புளகாங்கிதங்களே.. இன்றைக்கும் அதில் இருந்த சில கதைகளை என்னால் நினைவு கூர இயலும்.

அதே போன்ற மொழி, உவமை சொல்லும் பாங்கு, எளிதில் விளக்கவியலாத இருமுறை மும்முறை வாசித்தே புரிந்துகொள்ள வேண்டியவை என சிறுகதைத் தொகுப்பெங்கும் வியாபித்துக்கிடக்கிறது. ஒவ்வொரு உவமையும் கமாவுடன் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. சலிக்கவில்லை. ஆயிரம் கவிதைகள் உருவாக்கலாம் போலிருக்கிறது எனக்கு.

ஒவ்வொரு சிறுகதையாக மெல்ல மெல்லவே என்னால் வாசிக்கமுடிந்தது. பெரும்பாலும் பயணங்களிலேயே வாசிக்கும் பழக்கம் எனக்கு. வெளியிலிருப்பதை விட உள்ளில் கையிலிருப்பது சில சமயம் மிகவும் சுவாரசியமாக இருந்துவிடும். அது போன்ற ஒரு புத்தகம் தான் இந்த துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை. ஆமாம் இதற்கு இப்படி ஒரு அமங்கலப்பெயர்.? எழுத்தாளனின் எழுத்தும், அவனின் தலைப்புகளும் அவனது உரிமை. பால் தாக்கரே 'பம்பாய்' படம் வெளியான போது அதை 'மும்பை' என்று மாற்ற வேணும் என்று அடம்பிடித்தார். அவரும் துரதிர்ஷ்டத்தால் அரசியல்வாதி ஆனவர். நல்ல கார்ட்டூன் வரைக்கலைஞர்.சரி அதை விடலாம்.

எல்லாச்சிறுகதைகளுமே வேறேதோ மொழியில் எழுதப்பட்டு பின்னர் அதை தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது போலவே ஒவ்வொரு கதை வாசிக்கும்போதும் எனக்குத்தோன்றுகிறது. எனினும் தமிழ் இலக்கண விதிகளுக்குட்பட்டு வாக்கிய அமைப்புகளும், உவமைச் சொல்லாடல்களும் , நிறுத்தற் குறிகளும் சரியான இடத்திலேயே அமர்ந்திருக்கின்றன. மொழி மாற்றக்கதைகளில் அங்கனம் எதிர்பார்ப்பது கடினம். மேலும் உவமைகள்/சொல்லாடல்கள் பிற மொழியில் (Idioms and Phrases ) சொல்வதை அப்படியே மொழி பெயர்த்தால் மத்தியான வேளையில் ஏசி இல்லாத தியேட்டரில் அமர்ந்து கொண்டு விருப்பமில்லாத திரைப்படத்தை பார்ப்பது போன்ற உணர்வையே தரும். எகா'வுக்கு ஒன்று சொல்கிறேன் 'ஏக் தாம் தோ காம்' என்ற சொலவடை இந்தியில் உண்டு அதை தமிழில் மொழி பெயர்க்கும் போது எல்லோரும் செய்யும் தவறு 'ஒரு விலை இரண்டு வேலை' என்பது அதையே தமிழ்ப்பாங்கில் மொழி பெயர்க்கும்போது 'ஒரு கல்லில் இரண்டு மாங்காய்' என்பதே சரி. இப்படியான மொழிபெயர்ப்புகளையே என்னால் காண முடிகிறது. நன்றி பாலா. ஆதலால் கிட்டத் தட்ட எல்லாச்சிறுகதைகளிலுமே என்னால் ஒன்றிப்போய்விட முடிகிறது.

'நாளை இறந்து போன நாய்' இந்தச்சிறுகதை வாசிக்கும்போது எனக்கு ஜூடி ஃபாஸ்ட்டர் நடித்த ஒரு ஆங்கில திரைப்படம் தான் ஞாபகத்துக்கு வந்தது. அதில் எதிரி , தலைவியும் அவளது இறந்து போன கணவனும் ஒரு சிறு பிள்ளையுமாக பயணிக்கும் விமானத்தைக்கடத்த எண்ணி , சாமர்த்தியமாக காய் நகர்த்தி விமானத்தை ஜூடியே கடத்துவது போல எல்லொருக்கும் அறியச்செய்வான். அதற்கென அவளை மிரட்ட அந்தச்சிறுபிள்ளையை கடத்தி வைத்துக்கொண்டு தன் வேலையைச்செய்து தொடர்ந்து கொண்டிருப்பான். அப்போது விமானத்திலேயே ஒரு மனநல மருத்துவரும் பயணம் செய்வார். இந்தச்சிறுபிள்ளை அவளுடன் விமானம் ஏறுகையில் தம்முடன் கூட வரவேயில்லை என்று அவளை நம்ப வைக்க அவளுடன் உரையாடி அது முழுதுமே உன்னுடைய இல்லூஷன் என நம்பச்செய்வார். அவளோ சாதிப்பாள் நான் என்னுடன் என் மகளை கூட்டி வந்தேன் என்று. இதுவும் அந்த எதிரியின் வேலைதான் அவள் அதை அறிய மாட்டாள்.

அப்படி ஒரு கதை இந்த நாய்ச்சிறுகதை, இந்தக்கதையில் தலைவனிடம் ஒரு நாய் இருந்தது என்ன காரணத்தினாலோ அது இறந்து விட்டது (தலைவன் தான் அதைக்கொன்றானா என்ற சந்தேகம் நமக்குள் எப்போதும் எழாமல் பார்த்துக் கொள்கிறார் ஆசிரியர்) அவன் சந்திக்கும் ஒவ்வொருவரும் அந்த நாயைப்பற்றிக் கேட்பார்கள். 'எத்தனை முறை சொல்வது நான் . நாயே வளர்க்கவில்லை என்று' என மன்றாடுகிறான். யாரும் அவன் சொல்வதை கேட்பதில்லை. நாயின் பிடரி மயிர் படிந்த சங்கிலியையும் வார்ப்பட்டியையும் பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்து விட்டுச்செல்வார். முனிசிபாலிட்டி அதிகாரிகள் அவன் வீடு தேடி வந்து விசாரிப்பர். தலைவனுடன் படுக்கையைப்பகிர்ந்துகொள்ளும் தோழி கூட அதைப்பற்றி விவாதிப்பாள். இவனோ சாதிப்பதை நிறுத்த மாட்டான். அப்படி ஒரு வஸ்து/ஜீவன் தன்னுடன் உயிரும் சதையுமாக பழகி வந்தது , தன்னுடன் உணவையும் நீரையும் பகிர்ந்துகொண்டது என்பதை மறைக்க, மறக்க அவன் அத்தனை சாதிக்கிறான். இருப்பினும் அவனது மனவலிமையை பாராட்டத்தான் வேண்டும். புதுஎழுத்து மனோன்மணி பேசிக்கொண்டிருக்கையில் இப்படி சொல்வார். 'போர் நடந்து கொண்டிருக்கும்போது நான் பூக்களைப்பற்றி எழுதுவேன் என.' தாகூர் கூட துணைக்கண்டம் முழுக்க விடுதலையைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது கீதாஞ்சலி எழுதினார்.

இன்னுமொரு திரைப்படம் கூட எனக்கு ஞாபகம் வருகிறது. 'As Good as it gets' ( இதற்கு என்னுடைய மொழிபெயர்ப்பு ' உள்ளங்கை நெல்லிக்கனி' ) அதில் யாருடனும் ஒட்டி உறவாடாது, தானுண்டு தன் பணியுண்டு என கூச்ச சுபாவம் உள்ள, யாரும் எப்போதும் தன்னை ஒருக்காலும் காயப்படுத்தி விடக்கூடாது என எண்ணும் 'successive multiple disorder' எனும் வியாதியுள்ள தலைவன் வசிக்கும் அதே அப்பார்ட்மென்ட்டில் ஒரு ஒவியனும் வசிப்பான். வரைந்து வரைந்து விற்காத நிலையில் ,அவனது காலரி ஒருநாள் எதிர்பாரா தாக்குதலில் இடர்ப்பட இனியும் தொடர்ந்து உணவிட்டு வளர்க்க இயலாது என்றெண்ணி ஒரு சிறு நாயை யாரிடமாவது கொடுத்து விடலாம் என எண்ணும்போது நமது தலைவன் அகப்படுவான் ஏனெனில் அவனிடம் தான் அவனைத்தவிர யாரும் கூட இல்லவே இல்லையே , அதனால்... ஆனாலும் அதை அத்தனை எளிதில் ஏற்றுக்கொள்ளத்தயங்கி தயங்கி பின்னர் ஒரு வழியாக சம்மதித்து வாங்கிக்கொள்வான். ஒரு நாள் அந்த நாய் எங்கோ சென்றுவிடும். அதைத்தாங்கிக்கொள்ள முடியாது வீட்டிலிருக்கும் பியானோவை இசைத்துக்கொண்டே 'just a small dog' என்று கண்ணீர் உகுப்பான். எல்லோரும் அன்புக்கு ஏங்குபவர்கள் தான். அதே தான் இங்கும், சரி செத்துப்போய்விட்டது என்ன செய்வது , நான் அப்படி ஒரு ஜந்துவை வளர்க்கவே இல்லை என்று இறுமாப்புடன் யாரும் தம்மை சீண்டிவிடப்போகிறார்களோ , இரக்கப்பார்வை கொண்டு தம்மைக்கூறு போட்டுவிடுவார்களோவென உள்ளுக்குள் மருகிப்போகிறான் தலைவன், எக்காரணம் கொண்டும் யாரிடமும் தோற்றுப்போய்விடக்கூடாது என்றெண்ணும் சிலரின் உளப்பாங்கு இக்கதை

'பன்னிரண்டு மரணங்களின் துயர் நிரம்பிய தொகுப்பேடு' ஜேஜே'யின் சில குறிப்புகளைப்போல , அங்கு ஒரு பத்தி இல்லையெனில் ஒரு நான்கு வரிகள் மீறிப்போனால் பத்துவரிகளுக்குள் அடங்கிவிடும் குறிப்புகள் , இங்கு ஒவ்வொரு குறிப்புகளும் ஒவ்வொரு பத்திகள். கல்லெறிந்து வீழ்த்திய குருவி' எங்கனம் வீழ்ந்தது , என்றெண்ணி அவன் குற்ற உணர்வில் துடித்துப்போவான் என்கிறார் ஆசிரியர், வேடன் என்றாவது துடிப்பானா ? ஹ்ம். வேணுமெனில் தம் கண்ணிக்குச்சிக்காத பறவையை எண்ணி எண்ணி கண்ணீர் உகுப்பானாயிருக்கும். ஒரு மனிதனைக் கொல்வது இதயத்தையும் சேர்த்தே கொல்லும் , எனினும் வைஸி வெர்ஸா Vice Versa புதிது. கொஞ்சம் துரோகமும் தேவைப்படும். இது போன்ற வரிகள் வாசகனை அவனுள் இருக்கும் எழுத்தாளனை இன்னமும் எழுதத்தூண்டுபவை.

ஜங்க்' எனும் சிறுகதை , தொகுப்புகளிலேயே மிகச்சிறந்த ஒன்று , இதையே கூட இந்த நூலுக்கு தலைப்பாக வைத்திருக்கலாம். தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் தமிழ் புதினங்கள் வாசிப்பவராயிருந்தால் இப்படி ஒரு தலைப்பில் நூலை வாங்க மாட்டார்கள் என்றெண்ணி வைத்திருக்கமாட்டார் என்றெண்ணுகிறேன். ஹ்ஹ்ஹாஹா...பெரும்பாலும் கதைகள் நடக்கும் களம் பெங்களூராகவே இருக்கிறது அதுவே இன்னும் எனக்கு நெருக்கமாக இருப்பதாக உணர்கிறேன். பழகிய தெருக்கள், அலைந்த இடங்கள் , உட்கார்ந்து பேசிக்கழித்த பொழுதுகள் என அந்த ஒரு சொந்த உணர்வு தொகுப்பெங்கும் உணரமுடிவது ஒரு சிறப்பு. என்ன சொன்னாலும் நம்மூர்க்கதை மாதிரி வருமா என்பதும் கூடுதல் நெருக்கம் தருகிறது. இந்தக்கதையில் ஓரிடத்தில் ஆங்கிலத்தில் சில வாக்கியங்கள் இடம் பெறுகின்றன. தொடராக.. அதிலொன்று எனக்குப்பிடித்தது " Even the Cloud is become technical and the service needs to be paid” இப்போது எனது பணி முழுதும் இந்த தொநு'வைச்சார்ந்தே இருப்பதால் இன்னமும் நெருக்கமாக உணர்கிறேன்.

அத்தனை கணினி வசதிகளும் இப்போது நாம் அனுபவிப்பவை எல்லாம் "மேகத்துக்குள்" சென்றுவிட்டது . மின்னஞ்சலாகட்டும், சேமித்து வைக்கும் கோப்புகளாகட்டும், கரை கடந்த வணிகமாகட்டும், திரை கடலோடி திரவியம் தேடவும் இந்த மேகங்கள் மட்டுமே உதவுகின்றன இனியும் இவையே ஆட்சி செய்யும். அத்தனையும் மேகங்களின் கட்டுப்பாட்டில் ஆஹா..கேட்கவே எத்தனை சுகமாயிருக்கிறது ?! ஒரு கவிஞனுக்கு இதை விட என்ன உற்சாகம் இருந்து விட முடியும் ?! எனினும் மேகத்தைப்பயன்படுத்த கட்டணம் செலுத்த வேணும் என்பது எத்தனை கொடுமை , என் கனவுகளுக்கு என்னிடம் காசு கேட்பது போலல்லவா இருக்கிறது ?

இந்தச்சிறுகதையில் 'மின்கித்தார்' என்ற பதத்தை ஆசிரியர் பயன்படுத்துகிறார். எப்போதும் எலெட்ரிக்கிட்டார் என்றே கூறிப்பழகிய எனக்கு இந்தப்பதம் ஒரு அதிர்வைத்தந்தது. நானும் கித்தார் வாசிப்பவன் என்ற உணர்வில் அந்த அதிர்வு சற்று மிகையாகவே இருந்தது என்பதே உண்மை. இந்த மின் கித்தாரை ஒருமுறை வாசித்துவிட்டால் இனிப்பழையபடி இயல்பில் ஒலி எழுப்பும் மரத்தாலான சாதாரண கித்தார்களைத் தொட மனம் மறுக்கும். எனில் அத்தகைய இனிமையான ஒலிகளும், தொடரும் இசைக்குறிப்புகளை (Sustaining Notes களை) லகுவில் வாசிப்பதும் இவ்வகை மின்கித்தார்களின் சிறப்பு.

புதிதாக எழுதவேணும் என்பது பெரிய விஷயமல்ல. தேய்வழக்குகளைத்தவிர்த்தாலே போதுமானது என அ.முத்துலிங்கம் ஐயா கூறுவார். அதுபோல இங்கு தேய்வழக்குகள் எதுவும் இல்லை. அத்தனையும் இதுவரை வாசித்த உவமைகள் இல்லை. “ஆற்றின் குறுக்காக படுத்துக்கொள்ளும் திமிங்கிலம், வாளேந்திய ஈசல்கள்,நிலத்தடியில் நகரும் நட்சத்திரக்கூட்டம்,கடலுக்கடியில் தண்டவாளம் அமைக்கும் மீன்கள், ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஏலியன்கள்" இப்படி சர்ரியலிஸக்காட்சிகள் விரவிக்கிடக்கின்றன. ஜங்க்'கில். " ஒரு சிக்கன் லெக்பீஸின் அளவிற்கோ, போர்னோக்ராஃபியைப்போன்றோ கடவுள் அத்தனை சுவாரசியமானவரில்லை" ஜங்க் கதைக்கு மகுடம் வைக்கும் வரி.

தந்திகள்' சற்றே பெரிய சிறுகதை. நெடுங்கதை. அதில் சில இடங்களில் A தந்தி போல் ஒலிக்கிறது அவள் குரல் என்ற பதம் அடிக்கடி வருகிறது. கித்தாரில் இந்த A தந்தி கொஞ்சம் சிறப்பு வாய்ந்தது. G தந்திக்கும் Major E தந்திக்கும் இடையிலான தந்தி. அடிச்சுரமாக ஒலிக்கும் இது நல்ல ஷார்ப் குறிப்புகளை ஜி தந்தியில் வாசிக்கலாம். மணி ஒலிப்பது போல , மேலேயுள்ள மேஜர் ஈ தந்தி தொண்டை கட்டிக்கொண்டு குளிர்கால நாட்களில், இல்லையெனில் இரவில் பியரை ஐஸ்கட்டி துண்டுகளை போட்டு மிதமிஞ்சிக்குடித்து விட்டு காலை எழுந்து பேச எத்தனிக்கும்போது ஒலிக்கும் நம் குரல் போன்றது இந்த Major E தந்தி , இவையிரண்டுக்கும் இடையில் அமர்ந்திருப்பது தான் இந்த A தந்தி. அதிக மென்மை/கீச்சுக்குரல் போலல்லாது அதே சமயம் கட்டிய தொண்டையின் கடினக்குரலும் போலல்லாது இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு ஒலி. அது அவளின் குரலாயிருந்தது என்பது சிலிர்க்கும் செய்தி.

இது எதோ விக்கிப்பீடியாவில் பார்த்து பின்னர் எழுதியதைப்போலல்லாது தாமே வாசிக்கக்கூடிய கலைஞராகவும் இருப்பார் ஆசிரியர் என்றே தோன்றுகிறது எனக்கு. அதே குரல் மறுமுறை ஒலிக்கும்போது A அதிர்ந்தது என்றே குறிப்பிடுகிறார் ஆசிரியர் , இது சுஜாதா'வின் பாணி. ஏற்கனவே வேண்டுமளவு விளக்கி விட்ட ஒரு பொருளை மீண்டும் மெகா சீரியல் போல சொல்லிச்சொல்லி சொய்வாக்காது தேவையானதை மீள ஒலிக்கச்செய்தல் சுஜாதா.

இந்த தந்திக்கதையில் "John Denver” Anne's Song என்ற பாடலைக்குறிப்பிட்டு சொல்கிறார். கொஞ்சம் கிறிஸ்மஸ் கரொல்களைப்போன்ற ஒரு பாடல் கேட்பதற்கு இனிமையானது. எனினும் தொகுப்பின் எந்தப்பக்கத்திலும் ஒரு தமிழ்ப்பாடலைக்கூட குறிப்பிட்டு சொல்லாதது எனக்கு வருத்தமே.

"வலை" சிறுகதை ஒரு மேஜிக்கல் ரியலிஸம் என்றுதான் கூற வேணும். இந்தப்பதத்தை நான் சரியாகத்தான் அறிந்து வைத்திருக்கிறேனா என்பது இனி நான் எழுதுவதைப் பொறுத்தே அமையும். இந்தக்கதை ஒரு சிறுமியின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருக்கிறது. ஒரு புத்தகம் வாசிக்கிறாள் அது மிகவும் புதிர் அடங்கிய புத்தகம். அவளுக்கு காய்ச்சல் நாளில் எங்கும் அலையாமல் உள்ளுக்குள் இருந்து வாசிக்கட்டும் என அவளின் பெற்றோர் வாங்கிக்கொடுத்த புத்தகம் அது. சிலந்தி, புலி மற்றும் ஜெசியா எனும் மீன் இவற்றை சுற்றியே நகரும் கதை. எனக்குத்தெரிந்து இது போன்ற கதைகளை நான் திரைப்படமாகவே பார்த்ததுண்டு. ஜூமான்ஜி மற்றும் அலிஸ் இன் வொன்டர்லேன்ட். எத்தனை முறை பார்த்தாலும் என்னுள் இருக்கும் சின்னப்பயலை எப்போதும் வெளிக்கொண்டுவந்து விடும் படம் அலிஸ். ஏகத்துக்கு உயரமாக வளர்ந்து கிடக்கும் அவளை மீண்டும் தங்கள் உருவத்துக்கு கொண்டு வர ஒரு கஷாயம் தயாரிப்பாள் ஒருத்தி. அந்தக்காட்சி என் மனதில் இன்றும் அகலாது. பல வித மூலிகைகள் கொண்டு பின்னர் தன் வாயால் கொஞ்சம் உமிழ்ந்து , அதை முறைப்படியான அளவுகளோடு தயாரித்து பருகக்கொடுப்பாள் அலிஸ் அதைப்பருகியதும் சாதாராண உருவத்துக்கு மீண்டு வருவாள்.

வெள்ளை அரசியும் கருப்பு அரசியும் தமக்கைகள் இருவருக்கும் இடையிலான பதவிப்போட்டி. இப்படியாக கதை ஓடும். ஒரு வெள்ளைப்பன்றியை தம் காலிருக்கையாக பாவிப்பாள் அந்த கருப்பு அரசி. கோபம் வரும்போது ஒரு எத்து விட்டு எழுந்து போவாள். எல்லாம் புதிதாகவே இருக்கும் எனக்கு எப்போதும். இரண்டு மினியன்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டே அலைவர். கண்களை விட்டு அகலாத காட்சிகள் அத்தனையும். எல்லாம் வொன்டர்லேன்ட் என்ற இடத்தில் நடப்பவையாகவே காண்பிக்கப்படும். தமக்கு திருமணம் நடக்கவிருக்கும் வேளையில் ஒரு புதரினுள் விழுந்து வொன்டர்லேன்டில் எழுவாள் அந்த அலீஸ். நமக்கும் இந்தப்புத்தகத்துக்குள் போவது போல ஒன்று நடந்தால் எத்தனை சுவாரசியமாக இருக்கும்.? இப்போது மலையாளத்தில் வெளிவந்த 'சார்லி' படத்தைக்கூட அவ்வகையில் சேர்க்கலாம். கார்ட்டூனில்ருந்து புறப்பட்டு எழுந்து வருவர் அத்தனை கதா பாத்திரங்களும்.

அப்படிப்பட்ட ஒரு கதை இந்த சிலந்தி வலை. ஜூமான்ஜி' என்பது ஒரு ஓஜா போர்டு போன்ற ஒரு விளையாட்டு. அதில் விளையாடுபவர்கள் அந்தந்த இடங்களுக்கே/ காலங்களுக்கே பயணித்துப் போய் விளையாட்டை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். புலி சிங்கம் கரடி காடு எல்லாம் வரும். இங்கும் வருகிறது. கதை சிறு பிள்ளைக்கானதாக இருந்த போதிலும் எடர்னிட்டி' பற்றிய தரவுகள் அதைப்பற்றிய விளக்கங்கள் அத்தனையும் எடர்னிட்டி தான். காலத்தால் அழியாதவை. மரணமின்மை மற்றும் பிறப்பின்மை இதற்கு என்ன பதம் பயன்படுத்துவது? ஒரு சொல்லில் சொல்லவேணும் ,,என்னால் இயலவில்லை. பொம்மை ஆனையை உண்மை ஆனையென நம்பி ஏமாந்து செல்லும் சாதாரணர்களைப்போலவே நானும் நிற்கிறேன்.

நார்னியா'வின் கதையில் ஒரு மரத்தாலான பீரோவைத்திறந்து சிறுவர்கள் பயணிப்பர். அது போல ஒரு புத்தகத்துள் நுழைந்து இங்கும் பயணிக்கிறாள் சிறுமி. மரணத்தைக்கொன்றுவிடத்துடிக்கும் புத்தன் போலானேன் இந்தக்கதையை வாசித்த பிறகு. புலி எல்லா மிருகங்களையும் வதைக்கிறது கொன்று தின்கிறது அல்லது கடித்துத்துன்புறுத்துகிறது, என் அம்மா நேஷனல் ஜியாக்ரபி சேனலில் சிங்கங்கள் அடிப்பதும் கொல்வதும் , விரட்டி பயமுறுத்துவதுமாகவே அலைவதைக்காட்டுவர். என்னிடம் கேட்பாள் 'இந்த சிங்கத்தை யார்றா கொல்வா' என்று. எனக்கும் பதில் தெரியாது.

சில புத்தகங்கள் நான் வாங்கியிருக்கிறேன், சிறு வயதில் , அந்தப்புத்தகங்களில் எழுத்தும் படமும் இருக்கும். சிறுவர்களுக்கானது. அதிலென்ன ஆச்சரியம் என்றால் , அரண்மனை இருக்கிறது என்றால் புத்தகத்தின் அந்தப்பக்கத்தை விரித்தால் அரண்மனை உள்ளிருந்து இருபுறமுமாக எழுந்து விரிந்து நிற்கும். கடினமான காகிதங்களால் அப்படி வெட்டி வைத்து செய்து வைத்திருப்பர். அடுத்த பக்கத்தை திருப்பினால் அரசனும் அரசியும் முன் வந்து அரியணையில் அமர்வர் , அவர்கள் அருகில் காவலாளிகள் ஏந்திய வாளோடு என்னை நோக்கி வருவர். அற்புதங்கள் . திரும்ப மூடிவிட்டால் அரண்மனை புத்தகத்துக்குள்ளேயே ஒளிந்து கொள்ளும். இப்போதெல்லாம் அப்படியான புத்தகங்கள் இருக்கின்றனவா எனத்தெரியவில்லை என்னைப்பொருத்தவரை அப்போது எனக்கு அம்மாதிரியான புத்தகங்களே மேஜிக்கல் ரியலிஸங்கள். எனினும் 3டி தொழில் நுட்பத்தில் ஐ'பாடிலேயே களித்துக் கொள்கின்றனர் இக்காலச்சிறுவர்கள்.

கால இடைவெளி அசலையும் நகலையும் பிரித்துக்காண்பிக்காதா? காப்பி பேஸ்ட் காலத்தில் அசலேது நகலேது? எங்கிருந்து காப்பி எதிலிருந்து காப்பி எப்படி பேஸ்ட் , ரிஷிமூலம் காணப்புறப்பட்டால் இக்கதையில் வருபவர்களைப்போல நானும் பல கதைகள் சொல்லவேண்டிவரும்.

'உடைந்து போன ஒரு பூர்ஷ்வா கனவு' இந்தக்கதை இந்தச்சிறுகதைத்தொகுப்பில் ஒட்டாது தனியாக நிற்கிறது. இது இங்கு சேர்க்கப்பட்டிருக்கவேண்டிய கதை இல்லை. ( கதை என்பதற்கான தமிழ்ச்சொல் இருக்கிறதா ? ஹ்ம்.. 'கதா' என்ற வடமொழி மூலம்) சாதாரண சிறுகதை. இதை இங்கு சேர்த்திருக்க வேண்டியதில்லை.ராசைய்யா இப்படித்தான் (இங்கயும் ராசைய்யா வந்துட்டார்:)) “வளையோசை கலகலவென" எனப்பின்னர் வரிகள் சேர்க்கப்பட்ட பாடலை முழு இசைக்கோவையாக இசைத்து வைத்திருந்தார். அதன் இசைப்பாங்கு, அமைத்தவிதம் எல்லாம் செவ்வியல் பாணியின்றி எளிதில் வாசித்து உணர்ந்துவிடக்கூடியதாக அமைந்துவிட்டது. அப்போது “How To name it” இசைக் கோவைக்கென பணிகள் நடந்து கொண்டிருந்தது. அந்த செவ்வியல் இசைப்பாணிக் கோவையின் உள்ளில் அடக்கவியலாத இந்த 'எளிமையான 'வளையோசை'யை எங்கு ஒலிக்க விடுவது/சேர்ப்பது என்றெண்ணிய போது கமல் எனது படத்தில் பயன்படுத்திக்கொள்கிறேன் என்றார்.

அது போல ஒரு உயர்ந்த தரமுள்ள நூலின் பல சிறுகதைகளுக்கிடையில் இந்த சாதாரணம் உட்கார மறுக்கிறது. அனுபவித்து வயிறு முழுக்க உண்ட பிறகு மது அருந்துதல் போல அத்தனை உவக்கவில்லை இந்தச்சிறுகதை. இதே போல இன்னொரு சிறுகதையும் இருக்கிறது , உடற்பயிற்சி நிலையத்தில் சில மனிதர்கள் என. இதையும் அதே பொருந்தா லிஸ்ட்டில் சேர்க்க எனக்கு தயக்கம் ஏதும் இல்லை. வலுவிழந்த முடிச்சு,வெகு எளிதில் முடிவை கண்டறிந்துவிடும் ரகசியமின்மை, எதிர்பாரா திருப்பங்கள் என ஏதும் இல்லாமை எல்லாமாகச்சேர்ந்து பக்கத்தை நிறைக்கிறது. கப்பலின் கதையையும் என்னால் சகித்துக்கொள்ள இயலவில்லை. நான்கிற்கு இரண்டு பழுது.

எல்லாவற்றிலும் சிறப்பாக நூலெங்கும் எழுத்துப்பிழைகளே இல்லை. பிழைகளையே இலக்கணமாக கொண்டலையும் காலத்தில் இப்படி ஒரு நூல் , அட்சர சுத்தமாக வெளிவந்திருப்பது மகிழ்ச்சியே. இதிலும் ஏகத்துக்கு அரசியல் புகுந்து விளையாடுகிறது. சொக்கனைக்கேட்டால் கதை கதையாகச் சொல்வார்.

நூல் : துரதிர்ஷடம் பிடித்த கப்பலின் கதை
ஆசிரியர் : பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
வெளியீடு : யாவரும் பதிப்பகம்