Thursday, November 19, 2020

கொரோனா டெஸ்டிங்

 


கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப்பிறகு எச்டிஎஃசி வங்கிக்கு சென்றேன். போயே ஆகணும்ங்கறதால. வழியில் வழக்கம் போல சொற்ப சனம் தான் நடமாடுது. வழியில் எட்டாவது வரை கற்பிக்கும் ஒரு கார்ப்பரேஷன் பள்ளி நிரந்தரமாக மூடப்பட்டு மரத்தின் இலைகள் எல்லாம் உதிர்ந்து கிடக்கிறது. எப்போதும் வாய்ப்பாடு சத்தம் கேட்கும் அந்தப்பக்கம் போகும் போதெல்லாம். கொஞ்சம் எட்டிப் பார்த்தால் பிள்ளைகளெல்லாம் ஒன்றுக்கொன்று அடித்து விளையாடிக் கொண்டிருக்கும். இப்போது கதவு துருப்பிடித்து அடைத்துக் கிடக்கிறது. ஒரு ஏரோநாட்டிகல் காலேஜ் ஒன்று அதனையடுத்து இருக்கும். காவலாளி மட்டும் உட்கார்ந்து கொண்டிருந்தார் அங்கு.

கலாமந்திர் சேலைக்கடை அப்படி ஒரு கூட்டம் அள்ளும் எப்போதும். இத்தனைக்கும் சர்வீஸ் ரோட்டில் தான் இருக்கிறது. பார்க்கிங் வசதி இல்லை அத்தனை கார்களும் ரோட்டில் நிறுத்தி வைத்து ரகளை பண்ணுவார்கள். அந்த இடத்தை கடந்து செல்வதற்கு எப்படியும் பத்து நிமிடம் ஆகிவிடும். இன்றைக்கு ஒரு ஈ காக்கை கூட இல்லை. கடை திறந்து தான் இருக்கிறது. வழியில் போகும் பேருந்தில் ஓட்டுநரைத்தவிர இரண்டே இரண்டு பேர் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து செல்கின்றனர். வங்கி, உள்ளே நுழைய எத்தனித்தேன், கூடவே இருக்கும் ஏடி எம்’மில் வழக்கம் போல பேனா இல்லை. உள்ளே சென்றே ஆக வேணும். எண்ணி நான்கு பேர் அமர்ந்திருந்தனர். அத்தனை பேரின் முகத்திலும் மாஸ்க் இல்லை. ஏசி ஓடிக் கொண்டிருக்கிறது. பெங்களூரில் வெய்யில் இல்லை நான்கு நாட்களாக .வெளியே 22டிகிரி தான். இருப்பினும்.

உள்ளே நுழையும் போது யாரும் கண்டு கொள்ளவேயில்லை. சலான் எழுதிக்கொண்டிருக்கும் போது மெசெஞ்சர் அருகில் வந்து கைகளில் தெர்மாமீட்டரை வைத்துப் பார்த்தார். என்னைத் தொடாமல். ஹ்ம்.. என்றவனை ’ருக்கோ ருக்கோ’ என்று கட்டாயப்படுத்தினார். கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டார். ஒன்றுமில்லை போலருக்கு. ஹிஹி.. சலானை நிரப்பி பெட்டியில் போட்டு விட்டு வந்தேன்.

பிரிட்ஜ் ஏரியாவில் மூன்று இடங்களில் கொரோனா டெஸ்டிங் மையங்கள் ,போறவாறங்கள் எல்லாரையும் ’டெஸ்டிங் மாட்தீரா சார்? சேம் டே ரிசல்ட் பரத்தே’ நிம்தே மொபைல் நம்பர் கொடி’ என்று அழைத்துக் கொண்டிருந்தனர். முழு கவச உடையுடன் அத்தனை உபகரணங்களுடன் அமர்ந்து இருக்கின்றனர். கார்ப்பரேஷன்ல இருந்து வந்திருப்பார்கள் போலும். நான் பிறகு வருகிறேன் என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். இதுவரை டெஸ்டிங் பண்ணவுமில்லை, மாதிரி கொடுக்கவும் இல்லை. அப்பார்ட்மெண்ட் மீட்டிங்கில் ஒரு முறை பேச்சு வந்தது. கார்ப்பரேஷன் கட்டாயப்படுத்துகிறது. பிரிட்ஜ் ஏரியாவில் இருக்கும் அத்தனை அப்பார்ட்மெண்ட் வாசிகளும் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேணும், என்று நாட்களும் குறித்தனர். அப்படித்தவறினால் காவிரி (குடி தண்ணீர்) கனெக்ஷன் நிறுத்தப்படும் என்றெல்லாம் எச்சரிக்கை வந்தது. இப்போது ஒன்றுமில்லை.

இன்றோடு ஒன் இயர் அனிவர்சரியாம் கொரொனாவுக்கு ...ஹ்ம்.. #கொரோனாடெஸ்டிங்

Sunday, November 15, 2020

வானம் வசப்படும்

 


சூரரைப்போற்று , நானும் பார்த்தேன். சூர்யாவைப் போற்று. அது தான் சரி படம் முழுக்க சத்யா’ கமல். தோற்றமும், ஒப்பனையும், தலைமுடி பாணியும், நடிப்புமென சூர்யா நகல் எடுத்திருக்கிறார்.பயோபிக் என்றால் அப்படியேதான் அட்சரம் பிசகாமல் எடுக்க வேணும் என்று அவசியமில்லை. கொஞ்சம் கற்பனை கலந்தால் தான் உணமையையும் கேட்க பார்க்கத் தோன்றும்.

நிறைய எழுதிவிட்டனர் அத்தனை பேரும். எல்லாரும் எழுதாத ஒன்றை எழுத வேணுமெனில் , சூர்யாவின் அப்பா யார்.? வாத்தி ரெய்டுடா. அதே போல அந்த காளி கேரக்டர், அற்புதமான பொம்மி வலுவான திரைக்கதை. சொல்லுவதில் எந்த குழப்பமும் இல்லை. கூடவேயிருந்த அந்த நண்பர் யார்,? மல்லையாவின் மீட்டிங்கிற்குப்பிறகு திருகி வெளியேறும் நிலையில் சூர்யாவை நீயெல்லாம் என்னடா நடிக்கிற என்று கேட்கிறார். பொம்மி எப்போதும் புறமுதுகு காட்டுகிறார். சூர்யா ஒவ்வொரு முறை தோற்று வரும்போதும். அதை உணர்த்த. ...அப்படித்தான் நான் பார்க்கிறேன். 

 

அதேபோல அவசரமான ஒரு ஃபோன் காலில் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பும் சூர்யா, அபர்ணாவை அப்படியே விட்டு விட்டு செல்கிறார். சூழல் கருதி மன்னிக்கலாமென நினைக்கும் போது , குற்ற உணர்வில் சூர்யா திரும்பிப் பார்க்கிறார், பொம்மி ‘இல்ல நான் போய்க்கிறேன் ஆட்டோ பிடித்துக் கொண்டு என்று. அவசரமா போறேன் நீ போய்க்கொ என்று என்று சூர்யா சொல்லவில்லை அப்படி சொல்லி யிருந்தால் அது இரண்டு பேரின் கேரக்டர்களுக்கு பொருந்தியிருக்காது இதுதான் ரியாலிட்டி. நல்ல புரிதல் இருக்கிறது தம்பதிகளிடம். இது இருந்தால் போதும் வாழ்ந்து விடலாம் எவரும்.

எத்தனையோ பேர் பொண்டாட்டிய உக்காத்தி வெச்சு சோறு போட்றான், அது மாதிரி புருஷனுக்கு நீ சோறு போடேன். ஆஹா. வசனம் விஜயகுமார் – அவரின் உறியடி சொல்லியடித்த படம் யாரும் கண்டு கொள்ளவேயில்லை.


 டிக்கெட்டிற்கு பணமில்லை என்ற காட்சி அமைத்ததை என்னால் ஏற்க முடியவில்லை. ஒரு ஃபைட்டர் பைலட், அவர்களுக்கென சில இட ஒதுக்கீடுகள் இருக்கக்கூடும். அதிலும் அதே துறையிலிருப்பவர். அப்பாவை முறுக்கி கொண்டு இருந்தவனை அவர் மகனைப்பற்றி என்ன நினைத்திருந்தார் என்பதை ஊர்வசி காகிதங்களை சூர்யா மீது விசிறியடிக்கும் காட்சிக்கென, அந்த அழுத்தத்துக்கென அமைத்ததிற்கான அடிப்படையாகத் தான் பார்க்கவியலும். #வானம்வசப்படும்

 


 

Saturday, November 14, 2020

பறவை புட்டிகள்

 



இந்த ஆண்டு தீபாவளிக்கு துணிமணி எதுவும் எடுக்கவில்லை. எடுத்தாலும் எங்க போட்றது? இருக்கிற ரெண்டு வேட்டிய மாத்தி மாத்தி கட்டிக்கிட்டு வீட்டுக்குள்ளயே உட்கார்ந்து வேலை பாத்துக்கிட்டு இரூக்கிறேன். வாங்கின ஜீன்ஸ்/டீ ஷர்ட்டெல்லாம் ஹேங்கர்ல அழகாத்தொங்குது.. அதான் இந்தாண்டு இந்த ரெண்டு ”பறவை புட்டிகள்” வாங்கினேன். அமெஸான்ல. இதெல்லாம் வெளிநாட்டில் மட்டுந்தான் கிடைக்குமாயிருக்கும்னு நினைத்துக் கொண்டிருந்தேன்.

சும்மா தேடிப்பார்க்கலாமென நினைத்த போது கிடைத்து ஆணை கொடுத்தேன் மிகச்சரியாக இந்த தீபாவளியன்று இன்று கைக்கு கிடைத்தது. வீட்டில் மூன்று உப்பரிகைகள் சிறிதும் பெரிதுமாக. இருப்பினும் அத்தனையும் க்ரில் வைத்து மூடி இருக்கிறது, காககையும் உள்ளுக்குள் வர் அஞ்சும்...மேலும் உள்ளே கூட வர வழியில்லை. செடி கொடி படர மட்டுமே பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது. நானும் எத்தனையோ செய்து பார்த்தேன். காகிதத்தட்டுகளை வைத்து, பின்னர் பிரியாணி வாங்கி வந்த பிளாஸ்டிக் பெட்டிகளை க்ரில் மேல் வைத்து பறவைகளுக்கு உணவளிக்கலாமென. எல்லாம் ஒரு காற்றில் அடித்துக் கொண்டு போய் விடும். அத்தனையும் மரங்களடர்ந்த சோலை எல்லாம் வீட்டின் முற்றத்தில் இருக்கும் நந்தினி பால்கழகத்தின் கிருபை.

இதில் இரண்டு பறவை புட்டிகளுக்கும் கொக்கி கொடுத்திருக்கிறான். அதனால் க்ரில்லில் தொங்க விட முடியும். மேல் மூடியைக்கழற்றி தானியத்தை நிறைத்து பின்னர் மூடி தொங்க விடவேண்டியது தான், இருப்பினும் பயம் எங்கு காற்றில் விழுந்து விடுமோவென. இந்த இரண்டு புட்டிகளிலும் தானியம் மட்டுமே இடவியலும். நீரளிக்க ப்ளாஸ்டிக் பெட்டிகளை வைத்துக்கொள்ளலாமென்று இருக்கிறேன்.

பறவைகளுக்கு என்னென்ன உணவளிக்கலாமென இணையம் முழுக்க தேடி எடுத்திருக்கிறேன். நானுண்ணும் அதே சிறு தானியங்களை கொடுக்கலாமென போட்டிருக்கிறார்கள். ஆதலால் பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்பலாம். செல்லம்மா அன்றைய பகல் பொழுது உணவிற்கென அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி வைத்திருந்த அரிசியை குருவிகளுக்கு இரைப்பான் பாரதி. இங்கே இவை எதோ என்னாலியன்றது.


 பறவைகளைக் கூண்டில் அடைத்து அவை கிறீச்சிடுவதையும் , உணவுக்கு ஏங்குவதையும் காண ஏனோ மனம் ஒப்பவில்லை. அருகிலேயே கூண்டு விற்கும் கடை இருந்தது. அந்த வழி போகும் போதெல்லாம் பார்ப்பேன். திறந்து விட்டு விடலாமெனத்தோன்றும். கொரோனா காலத்தில் அதுவும் அடைபட்டு விட்டது.

வீட்டைச் சுற்றி மைனாக்கள் இஷ்டம்போலுண்டு. புறாக்கள் எப்போதும் வீட்டின் முட்டுச் சந்துகளில் குலவித்திரியும். கழுகுகளுக்கு பஞ்சமில்லை. எப்போதும் கதவைத்திறந்தால் கருடபகவானின் தரிசனம் தான் தினமும். காக்கைகள் மதிய வேளையில் கிளைகளிலமர்ந்து கரைந்து கொண்டேயிருக்கும்.

காடெங்கும் சுற்றித்திரிந்து விட்டு வரும் பறவைகள் விருப்பிருப்பின் நானளிக்கும் உணவையும் உண்ணட்டும். அத்தனை பெரிய ஆகாயம் விரிந்து கிடக்கிறது. ஊரெங்கும் கிடைக்கும் உணவு. காடெங்கும் கிட்டும் கனிகள்,. அவற்றோடு இந்தச்சின்னப்பயலின் சிறுதானியமும் உணவாகக் கூடும் என்ற ஆசை தான், வேறென்ன?

நீங்களளிக்கும் உணவை உண்ண பறவைகள் வருவதற்கு ஒரு வாரம் கூட ஆகலாமென போட்டிருக்கின்றனர். இங்கு கிடைக்கிறது என அறிய அவை நேரம் எடுத்துக்கொள்ளுமாம். ஹ்ம்... காத்திருப்பது மட்டும்தான் இப்போதைக்கு என்னாலியலும்.

#பறவைபுட்டிகள்