Tuesday, December 18, 2018

மன்ட்டோ'



மன்ட்டோ' பார்த்துக்கொண்டிருந்தேன் காலையில். லூதியானாவில் பிறந்து பாம்பேவிற்கு குடி பெயர்ந்து, பின்னர் லாகூக்கு புலம் பெயர்ந்த எழுத்தாளர். ரொம்ப நாட்களாக அவர் பெங்காலி என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் பஞ்சாபி ! தண்டா கோஷ்ட் (குளிர்ந்த இறைச்சி) கதைக்காக கோர்ட் வாசலுக்கு நடையாய் நடந்திருக்கிறார். லாகூரில் 'பாக் டீ ஹவுஸ்'ல் அவரும் சக எழுத்தாள நண்பர்களும் காரசாரமாக இலக்கியம் அரசியல் என  விவாதிப்பதை உள்ளூர் சர்வாதிகாரிகளாலும் தடுக்க இயலாதாம். என்ன படம் முழுக்க ஒரு ஆவணப்படம் போல தோன்றுவது சலிப்பு. இத்தனைக்கும் நவாஸுதின் ஸித்திக்கி, இவரை ரமன் ராகவ்'விலும் பின்னர் ஷாரூக்கானின் 'ரயீஸிலும்' பார்த்ததை விட இங்கு ஏமாற்றியிருக்கிறார்.இவரைத்தான் கொண்டு வந்து 'பஞ்ச் டயலாக்' பேச வைத்தனர் பேட்ட ஆடியோ ரிலீஸீல். ஹிஹி.

புகைக்கிறார் குடிக்கிறார் எனக்கு ஒரு எழுத்து போலும் புரியாத உருதுவில் எழுதித்தள்ளுகிறார். அவர் பிடித்த சிகரெட்டுகளின் எண்ணிக்கை எப்படியும் ஒரு ஐநூறைத்தாண்டும் படத்தின் இரண்டு மணிநேரத்துக்குள். அதிக உருது வசனங்கள். புரியச்சிரமம் , இன்னொரு முறை 'அடியெழுத்துகளின்' துணையுடன் பார்க்க வேணும். குதா ஹாஃபிஸ், தஷ்ரீஃ ரக்கியே.. எல்லாம் உருது யப்பாஆ..  நீ இப்டி எழுதறாலதான் நாம இப்டி கஷ்ட்டப்பட்றோம்னு மனைவி சொன்னதும் விருட்டென எழுந்து சென்று கை கழுவுகிறார்.

மனதைத்தைக்கும் இடமோ , இல்லை வசனங்களோ, இல்லை நிகழ்வுகளோ இல்லை. காமராஜர் படம் இப்படித்தான் இங்கு இருந்தது. எல்லாம் வரலாற்று ஆவணங்கள். சலிப்பூட்டும் திரும்பத்திரும்ப வரும் காட்சிகள். எழுதி முடித்த கதைகளுக்கு/நாடகங்களுக்கு இப்பவே பணம் கொடுத்தாலே ஆயிற்று என்று பல காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது சலிப்பு. தானாய் மூடிக்கொள்ளும் திட்டிக்கதவை வலுவாய்த்திறந்து மூடி தமது கோபத்தை வெளிப்படுத்துகிறார். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று அவர் நண்பர் சொல்ல, ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் என மன்ட்டோ கூறுகிறார். இந்த பாகிஸ்தான் இந்தியா பிரிவினை குறித்து தமிழனுக்கு கிஞ்சித்தும் தெரியாது. எதையும் கிளறவும் செய்யாது. இருப்பினும் அந்தக்காட்சி அத்தனை உணர்ச்சியற்ற அமைப்பு. எப்படா படம் முடியும் என்றாகி விட்டது எனக்கு. நந்திதா தாஸ் நடிச்சா மட்டும் போதும் ...#மன்ட்டோ



Monday, December 10, 2018

பேட்ட பராக்!



வணிக நாயகருக்கு நடிக்கத்தான் பிடித்திருக்கிறது. மேடையில் சிவப்பு துண்டு போட்டு ஒரு இளைஞர் பிரமாதமாக அவரின் அத்தனை வேஷங்களையும் அபிநயித்துக்காட்டிக் கொண்டிருந்தார். உண்மையிலேயே நல்ல கலைஞர் அவர். அப்படியே செய்து காட்ட நிறையப்பேர் இருந்ந்த போதும் அவரின் அத்தனை அசைவுகளும் வணிக நாயகனைப்போன்றே அச்சசல் அமைந்திருந்தது, எத்தனை பேர் கவனித்தீர்கள் , ரஜினி அந்த இளைஞரை கட்டை விரலை உயர்த்தி புன்முறுவலுடன் பாராட்டியதை.  ஆடின காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது.

 அரசியல் கிரசியல்னு இவங்க தேவைக்காக இழுக்குறாங்ய. பேசாம நற்பணி மன்றமாகவே வைத்துக்கொண்டு இன்னும் பல உதவிகள் செய்ய இயலும்.  ஜிகர்தண்டா'வில் பாபி சிம்ஹாவின் கேரக்டரை எனக்கு ஏன் கொடுத்து இருக்கக்கூடாது என்ற அவரின் ஆதங்கம். ஹ்ம்.. படம் வேற லெவலுக்கு போயிருக்கும். இப்போதும் என்ன பேட்ட'யில் இன்னமும் கலக்குவார். தம்பி அநிருத் கிடைத்த வாய்ப்பை அப்படியே கபளீகரம் செய்து கொண்டு இறங்கி வேலை பார்த்திருக்கிறார்.

அத்தனை பாடல்களும் அற்புதம். கல்யாணப்பாடல் என்னவோ வேறு ஜானரில் இருக்குமென நினைக்கிறேன். உல்லாலா உல்லாலா லத்தீன் அமெரிக்க பாணியில் ஆந்தோனியோ பந்தேராஸ் போல கையில் கிட்டார் வைத்துக்கொண்டு ...ஆஹா...பாராட்ட வார்த்தைகளே இல்லை.  பேட்ட பராக்..வேற லெவல் இன்னமும் கேட்கவேணும்.

இது பழைய 'முள்ளும் மலரும்' காளியை, 'முரட்டுக்காளை' காளையனை, 'ஊர்க்காவலன்' காங்கேயனை மீளக்கொணரும் எனவே தோன்றுகிறது. கார்த்திக்கிற்கு அந்த ஜிகர் தண்டா ஒரு படம் போதும். நான் லீனியரில் கதை சொல்ல இப்போதைக்கு யாரும் இல்லை தமிழுலகில். இளைஞர்களுடனும் சேர்ந்து வெலை செய்ய ஒப்புக்கொண்டதற்கு ரஜினிக்கு வாழ்த்துகள். கேமரா முன்னால் நிற்கவில்லை மில்லியன் சனங்கள் முன்னால் நிற்கிறார் எத்தனை அற்புதமான கூற்று. ரோபோ கீபோல்லாம் வேணாம்டா. அவர் பழைய பரட்டை'டா ங்கொய்யால. #பேட்டபராக்!

Saturday, December 8, 2018

உல்லாலா உல்லாலா ...




பீலா பீலா பீலா விடாத (தானா சேர்ந்த கூட்டம்) , ஹொலா மீகோ (ரம்) வரிசையில இந்த உல்லாலா.. ஹ்ம்.. இதுவும் ஒரு  ஹிஸ்பானியா தீம். ராசைய்யாவி  'மாருகோ மாருகோ மாருகயே' கூட இதே ஜானர் தான். எல்லாரும் கொஞ்சம் ஊறுகாய் மாதிரி தொட்டுக் கொள்ளத்தான் செய்வர்.  யுவனின் 'வத்திக்குச்சி பத்திக்காதுடா' கூட இந்த ஜானர்ல வந்த பாட்டுதான். மென்மையா மெலடியா, அதிராத தாளம் கொண்ட பாடல் முழுக்க ரிதம் மாற்றாம, கிட்டார் வைத்துக்கொண்டு தலைவன் பாடுவது போன்ற பாடல்கள், ஆன்டானியோ பந்தேராஸ் பாடுவார் 'எல் மரியாச்சீ'  லூயி ஃபொன்ஸி 'டெஸ்பாஸீத்தோ'ன்னு எடக்கு மடக்கா அந்தப்பெண்ணோட பாடி ஆடுவார். போர்ச்சுகல்/ஹிஸ்பானியா டைப் ஸாங்.

கோவா' டைப் ஸாங்னு வெச்சிக்கலாம். இத வயசான காலத்துல ரசினிக்காக போட்டது தான் எப்டீன்னு தெரியல. ஏன் வயசானவா எல் மரியாச்சி பாடக்கூடாதா? ஹ்ம்..  ரசினிக்கு இது மாதிரி பாட்டு இப்பதான் முதன்முறை :)

கார்த்திக் சுப்பராஜ் போயி சந்தோஷ் கால்ல விழணுமாம் இந்தப்பாட்டுக்காக. யாரோ எழுதியிருந்ததப்பார்த்தேன். ரஹ்மான் கூட ராசைய்யாவின் பாணியில் தான் இசைத்திருந்தார் வணிக நாயகனுக்கு, அதை உடைத்து பிற பாடல் ஜானர்களையும் இசைக்கலாம் என கொஞ்சம் முயற்சித்தால் தவறு. என்னதாண்டா உங்களுக்குப்பிரச்ன ?! #உல்லாலா


Wednesday, November 28, 2018

ம்யூஸிக் ரவுடி




ஒரு காலத்துல ம்யூஸிக் ரவுடியா இருந்த யுவன்...இங்க ஐயோ பாவமா இருக்கார். பழைய ட்யூன், அதே பழைய மெதட் ஆஃப் சாங் மேக்கிங். என்ன பண்றது, பசங்கல்லாம் வளர்ந்து வந்து அடிபின்றானுங்களே.. என்ன பண்றது ..ஹ்ம்..?  ராப்/ஹிப் ஹாப்ல ட்ரை பண்ணீருக்கலாம். இது குத்து மாதிரியும் இல்லை,  சும்மா பாப்'மேரியும் இல்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னில் ட்ரெம்ப்பெட் வருவதெல்லாம் அரதப்பழசு யுவன். 

ஒமக்கு என்னாதான் ஆச்சு.? கிளர்ந்தெழச்செய்யாத இசை. வயசாயிருச்சா?!. இந்த ஜானர் ஒத்து வரல.இதுக்கெல்லாம் யூத் மனசு வேணும். அதான் தம்பி அநிருத் இப்ப இந்த மாதிரி ஜானலர்ல கலக்கிக்கிட்டு இருக்கான். சிங்காரி சரக்கு'ல்லாம் ராசைய்யா உச்சத்தில இருந்தப்ப போட்டது..ஹ்ம்...என்ன சொல்றது ?! தனுசுவின் லிரிக்ஸ் எங்கயுமே ஒக்காரலை. ஒட்டு மொத்தமா ஃப்ளாப்.  #ரவுடி

.

Tuesday, November 13, 2018

காகித உறைகள்

இன்னிக்கு பக்கத்தில இருக்கிற மெடிக்கல் ஷாப்பில சில மாத்திரைகள் வாங்கப்போயிருந்தேன். ஆச்சரியம் மாத்திரைகளை ஒரு காகித உறையில் போட்டுக்கொடுத்தார். அந்தக்காகிதம் எதோ ஒரு புத்தகத்தின் ஒரு பக்கமாக இருந்திருக்கக்கூடும். 

அப்போதைய காலங்களில் எல்லாப்பொருட்களுமே காகித உறைகளிலேயே வழங்கப்படுவது வழக்கம். அப்படிக்கிடைத்த உறைகளை புரட்டிப்புரட்டிப்பார்த்து அதில் எழுதியிருப்பவற்றை வாசிப்பது வழக்கம் எனக்கு. சில சமயம் விகடன்/குமுதம் போன்றவைகளின் பக்கங்களிலும் உறைகள் செய்யப் பட்டிருக்கும். வாய்ப்பிருப்பின் சிறுகதைகளின் ஒரு பக்கத்தை நான்காக மடித்து பசை ஒட்டி அந்த உறையை அளவிற்கேற்ப தயாரித்து வைத்திருப்பர். பொதிந்து கொடுக்க. அப்படி சில சிறுகதைகளை அந்த சிறுமடிப்பிலேயே வாசித்துவிடுவது என்பதில் உள்ள சுகம் அலாதி. 

வீட்டிற்கு வந்து அதனுள் இருக்கும் பொருட்களை எடுத்து வைத்துவிட்டு கவனமாக அந்த பசையை நீக்கி,(சில சமயம் கிழிந்து கொண்டே போகும் :)) , கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முழுப்பக்கத்தையும் வாசிப்பது என்பது சால சுகம். சில சமயங்களில் அந்தக்கதைப்பகுதி மிகப்பெரிதாக இருக்கும் பட்சத்தில் , மீதக்கதையை நமக்குள்ளேயே புனைந்து கொள்வதும், இன்னொரு பொருள் வாங்கியிருந்தால் அதன் தொடர்ச்சி அடுத்த காகித உறையில் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதே என்ற நப்பாசையும் கிளர்ந்தெழும். 

இப்பொதெல்லாம் மால் கலாச்சாரம் , காகித உறைகளையோ , இல்லை அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறுகதை, கட்டுரைகளையோ வாசிக்கவோ வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இருப்பினும் இன்று வாங்கிய காகித உறை , எதோ ஃப்ரன்ட்லைன் பத்திரிக்கை போல வழவழவென இருந்த பக்கம், சுவைக்கவியலாத கட்டுரை. இருப்பினும் அந்தக்கால நினைவுகளை கிளறத்தவறவில்லை. இன்று கடலை வாங்கினால் கூட காகிதத்தில் வருவதில்லை. எல்லாம் அந்தக்கடையின் விளம்பரம் தவிர சுவாரசியமான பத்திகள் வாசிக்கவென எதுவும் வாய்ப்பதில்லை. ஒரே ஆறுதல், தீபாவளிக்கு வெடிகள் வெடித்து மிச்சக்குப்பைகள் எல்லாம் காற்றில் பறந்து கொண்டிருந்தன தெருவில் இங்கு, அவையனைத்தும் தினத்தந்தி நாளிதழின் பக்கங்கள்...! #காகிதஉறைகள்

.

Tuesday, November 6, 2018

ஜானூ.....



இசை அற்புதம். இதுவரை யாரும் இசைத்ததில்லை இத்தனை அருமையான பின்னணி. கோவிந்த வஸந்த். தாய்க்குடம் குழுவிலிருந்து ராசைய்யாவின் நிகழ்ச்சியில் பங்குகொண்டவர். படம் முழுக்க இழையோடும் இசை மாயாஜாலங்களைக் காட்டுகிறது. அளவோடு ராசைய்யாவின் பாடல்களைப் பயன்படுத்திக்கொண்டதில் இனிமை. அவருக்குப்பிறகும் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்திருந்த போதிலும் அவரின் இசையே இக்காலங்களில் மீள் வாசிக்கப்படுகிறது. 96 என்பது இசைப்புயலின் காலம். அவர் உச்சத்திலிருந்த காலம். ஆச்சரியமான இசைக்கோவைகளை ராசைய்யா ஒதுக்கி வைத்தவற்றைத்தொட்டு உச்சம் காட்டிக்கொண்டிருந்தார். ஜானு எப்படி ராசைய்யாவின் பாடலையே பாடிக்கொண்டிருந்தாள். ஆச்சரியம் தான். கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம், ஆசை அதிகம் வெச்சு, தென்றல் வந்து தீண்டும் போது, யமுனை ஆற்றிலே இப்படி நாலே நாலு பாட்டுதான் படமே முடிஞ்சிருச்சிடா. வெறுமனே ராசைய்யாவோட பாட்ட மட்டும் வெச்சிக்கிட்டு கதை தயார் பண்ணி சில்வர் ஜூப்ளி அடிக்கலாம்டே. இன்றைக்கும் பெண்கள் கல்லூரி மாணவிகள் ராசைய்யாவோடு இணைந்து ஹார்மனியாக பாடியதெல்லாம் நிகழ்கால அற்புதம்.

படம் மலர் டீச்சரை ஞாபகப்படுத்தியபோதும் சலிக்கவில்லை. கிளறிவிடவும் தயங்கவில்லை. கடைசி வரைக்கும் காதலையே சொல்லாத இதயம் முரளி மாதிரில்லாம் இல்லை. கொஞ்சம் தைரியம் இருக்கு ராமுக்கு.வீட்டுக்கு கூட்டிப்போகும் வரைக்கும். தொடாமல் தள்ளியே நிற்பது,கூச்சம், இன்னும் இருக்கும் அந்த உள்ளூர அச்சமெல்லாம் அற்புதம் விஜய் சேதுபதி. பண்ணையாரும் பத்மினியும்-க்குப்பிறகு விசேக்கு ஒரு அருமையான படம். நா முத்துக்குமார் எழுதின கவிதை ஒன்று இருக்கிறது. ' இன்னமும் அவள் பத்தாவதில் தான் இருக்கிறாள்'என அந்த ஒன் லைனரை வைத்துக்கொண்டு பிழிந்து எடுத்திருக்கிறார் 96.

மாமி இன்னமும் 35லும் 16 தான். இந்தப்படத்தை டீவியில் அதற்குள் ஏனென்று ட்வீட்டியெல்லாம் பார்த்தார் மாமி. ஒன்றும் நடக்கவில்லை. அந்த ராமச்சந்திரன் ஜானகி தேவியைத்தேடி கடல் கடந்து இலங்கை போனான். இந்த ஜானகி தேவி கடல்கடந்து ராமச்சந்திரனைப்பார்க்க வந்திருக்கிறார்.

அந்த சலூன்காரன் 'எல்லாந்தெரியும் போ' என்பது, வசனங்களே தேவையில்லை. இந்த மாதிரி படங்களுக்கு. முதலில் விஜய் சேதுபதி பாடும் பாடல் சமுராய் படத்தில் விக்ரம் பாடும் பாடல் போலவே அமைந்திருக்கிறது. மற்ற பாடல்கள் கதையோட்டத்தை மைய்யமாக வைத்தே பின்னப்பட்டிருப்பதால் வெளியே தெரியவில்லை.

பிரிந்த காதல் தான் வாழும்.சேர்ந்துவிட்டால் அது காதலே இல்லை. மொத்தமே நாலு கேரக்டர்களை மட்டுமே வைத்துக்கொண்டு கதையை நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது. யமுனை ஆற்றிலே பாடும் இடம் பொருள் ஏவல் என்னவெல்லாம் சொல்லலாம். அற்புதம்டா! ராமச்சந்திரன்கள் இன்னமும் ஜானகி தேவிக்கென காத்துத்தான் இருக்கின்றனர். ஜானகி தேவிகளுக்குத்தான் இன்னொரு சரவணன் கிடைத்துவிடுகிறார்.




Wednesday, October 31, 2018

'ரெட் ஹேட்'


'ரெட் ஹேட்' (Red Hat) நிறுவனத்தை ஐ பிஎம் (IBM) வாங்கிவிட்டது . ஒரு ஷேருக்கு 180 டாலர் கொடுத்து மொத்தமா வாங்கிப் போட்டுவிட்டது. இப்ப விலை 116 டாலர்லதான் இருக்கு ஒரு ரெட்ஹேட் ஷேர்.  கிட்டத்தட்ட பதினோரு மடங்கு விலை கொடுத்து உள்ள இருக்கிற அத்தனை பேரையும் கிட்டத்தட்ட பில்லியனாராக்கி விட்டான். சரி அதுக்கு இப்ப என்ன ? வழக்கமா எல்லா ஐ.ட்டீ. நிறுவனங்கள்ல நடக்கிற டேக் ஓவர்/அக்வையர் தானேன்னு சும்மா இருந்துவிட இயலாது. மைக்ரோசாஃப்ட் என்கிற மைட்டி மலையோட மோதி ஜெயிச்ச ஒரே நிறுவனம் ரெட் ஹேட் மட்டுந்தான். இயக்கச்செயலி சந்தையில் (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) தன்னை மிஞ்ச ஆளே கிடையாதுன்னு மார்தட்டிக்கொண்டிருந்த நிறுவனம் பில் கேட்ஸோடது.  திறந்த ஆணை மூலத்தின் மூலமா (Open Source) ஒரு இயக்க செயலியை உருவாக்கி அதை வெற்றிகரமாக கார்ப்பொரேட் கூட மோதத்துணிந்த நிறுவனந்தான் ரெட் ஹேட். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திலும் மைக்ரோஸாஃப்ட்டின் சர்வர்களூடன் ரெட்ஹேட் சர்வர்களும் இருந்தே தீர வேண்டிய அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சி. ஒரு கட்டத்தில் 85 சதமான சர்வர்கள் ரெட்ஹேட்/லினக்ஸ் சர்வர் மயமாகிவிட்டது.

ஐபிஎம்'மிடமும் ஒரு லினக்ஸ்/யுனிக்ஸ் இருக்கிறது, அது அத்தனை புகழ் பெறவில்லை. என்ன செய்யலாம் என நினைத்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ரெட்ஹேட்டை வளைத்துப்போடுவது என்ற எண்ணத்துடன் காரியம் கச்சிதமாக முடிக்கப்பட்டிருக்கிறது. இப்போது அதை ஐபிஎம் வாங்கின செய்தி அறிந்ததும் திடுக்கிடத்தான் செய்கிறது. இனியும் திறந்த ஆணை மூலத்தை இத்தனை முனைப்புடன் வெற்றிகரமாக மேலும் லாபத்துடன் எடுத்துச்செல்லவென  யாரும் இல்லை என்பதே உண்மை. இதே ரெட்ஹேட் (சிவந்த தொப்பி) கொஞ்சம் கம்பூனிச சிந்தனையுள்ள நிறுவனம். எதிர்ப்பினைக்காட்ட அந்தக்காலத்தில் சிவப்பு தொப்பியை அணிவது வழக்கம். அதையே தனது கம்பனியின் லோகோவாக வைத்துக்கொண்டு சவால் விட்டுக்கொண்டிருந்த ரெட்ஹேட் இப்போது வாங்கிப்போடப்பட்டு விட்டது. அத்தனை பேரின் கவலையெல்லாம்  இனியும் இதே முனைப்புடன் ஐபிஎம் திறந்த ஆணை மூலத்தை தொடருமா என்பதே. லினஸ் டோர்வால்ட்ஸின் திறந்த ஆணை மூல ஐடியா வெகுவாக புழக்கத்தில் கொண்டு வரப்பட்டது ரெட்ஹேட் நிறுவனத்தின் மூலந்தான். இன்னமும் லினஸ் டோர்வால்ட்ஸின் திறந்த ஆணை மூலப்பொருள் கொண்டே ரெட்ஹேட் சர்வர்கள் கட்டமைக்கப் படுகின்றன.

கொஞ்ச நாட்கள் முன்புதான் மைக்ரோசாஃப்ட் 'கிட்ஹப்'(GitHub)பை வாங்கிப்போட்டது. அப்போதே சாவு மணி தொடங்கி விட்டது தமக்காக எந்த ஒரு மென்பொருள் ப்ராஜெக்டையும் உருவாக்கி அழகு பார்த்து அதை பிறருக்கு கொடுத்து மகிழ்வது என்ற உன்னதம் மங்கிப் போகப்போகிறது . கிட்ஹப் மட்டுமே உலகின் பல லட்சக்கணக்கில் மென்பொறியாளர்களை இணைக்கும் ஹப். இப்போது முதலுக்கே மோசம்.  மைக்ரோசாஃப்ட்டின் உள் எண்ணங்கள் என்னவென்பது உள்ளங்கை நெல்லிக்கனி. எவரையும் அழித்தொழிப்பது. மடங்காதவரை விலைக்கு வாங்குவது. ஹாட்மெயிலின் கதை எல்லாவரும் அறிந்ததே. இப்போது எவருக்கேனும் ஹாட்மெயிலில் (hotmail) அக்கவுன்ட் இருக்கிறதா? 90களின் இறுதியில் அதை வாங்கிபோட்டு அதன் புகழை கெடுத்து குட்டிச்சுவராக்கியது மைக்ரோசாஃப்ட். அதே போல் வின்டோஸ் ஃபோன் என்ற பேரில் 'நோக்கியா'வை ஒன்றுமில்லாமல் ஆக்கியதும் இதே பில் கேட்ஸின் நிறுவனந்தான்.  குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல கிட்ஹப் ஆகியிருக்கிறது.

பற்றாக்குறைக்கு இப்போது ஐபிஎம் ரெட்ஹேட்டை வாங்கி விட்டது. இனியும் திறந்த ஆணை மூலம் என்பதெல்லாம் கனவு தான் போலிருக்கிறது. சைனா ஹாங்காங்கை தமதாக்கியவுடன் இத்தனை காலமும் ஹாங்க்காங் எப்படி இயங்கி வந்ததோ அதே போல இனியும் ஐம்பது ஆண்டுகளுக்கு இயங்கும் என்ற அறிக்கை இப்போது எங்கிருக்கிறது என்று தேடித்தான் பார்க்க வேணும். அதே கதை தான் ரெட்ஹெட்டுக்கும், கிட்ஹப்புக்கும் வாய்க்கும்.

எனது நிறுவனம் நிர்வகிக்கும் சர்வர்களில் 80 சதமானம் ரெட்ஹேட் வெளியிடும் சென்ட் ஓஸ் என்ற திறந்த ஆணை மூல சர்வர்கள் தான். பத்தாண்டுகளுக்கு புதுப்பிக்கும் உரிமை அனவைருக்கும் இலவசம். (இயக்க செயலி மட்டுந்தான் , அதனுள் இயங்கும் மற்ற ஆப்களுக்கு இல்லை ) இப்போது அப்ஸ்ட்ரீம் எனப்படும் மேல்நோக்கிய புதுப்பித்தல்கள், அவ்வப்போது கிடைக்கும் பழுதுநீக்கிகள் எல்லாவற்றிற்கும் கொட்டிக்கொடுத்து தான் சரி செய்து கொள்ள வேணும்.

இந்தக்கட்டுரை மட்டுமல்ல, நானெழுதும் அனைத்து எழுத்துகளும் சென்ட் ஓஸ்(Cent OS) எனப்படும் திறந்த ஆணை மூல கணினி மூலமே எழுதப்படுகிறது. எனது டெஸ்க்ட்டாப் எப்பவும் சென்ட் ஓஸ் தான். இனியும் இதைப்போலவே தொடருமா என்ற ஐயம் எனக்குள் அன்றே தொடங்கி விட்டது. உபுன்டு (Ubuntu) இருக்கிறதே அதில் எழுதலாம் தான். இருப்பினும் வழமையையும் பழக்கத்தையும் மாற்றிக்கொள்வது அத்தனை எளிதில்லை. அலுவலகத்தில் ரெட்ஹேட்/சென்ட் ஓஸ் என புழங்கியே பழகி விட்டது.

ஐபிஎம்மின் செய்திக்குறிப்பில் அத்தனை தெளிவில்லை. திறந்த ஆணை மூலம் இனியும் இதே வேகத்துடன் தொடருமா என்பது ஐயம் தான். மேலும் ரெட்ஹேட்டின் மேகக்கணினி அமைப்புகளை மட்டுமே வாங்கி இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். இன்னும் பலரோ இல்லை முழு ரெட்ஹேட்டுமே விலை பேசப்பட்டு விற்றுவிடப்பட்டது என்று. இதை நியாயமான விலையில் உள்ளுரில் ஆட்டோ/கார் ஓட்டிக்கொண்டிருந்த முகவர்களை மொத்தமாக ஓலா/ஊபர் அள்ளிக்கொண்டு போனதுடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.'





Sunday, October 21, 2018

நாற்குழிச்சதுரங்கம்



வரும் விமர்சனங்கள் காட்டும் அத்தனை ஹைப் இல்லை படத்தில். படத்தில் பெண்கள் காட்டும் கெத்து புதிது. எப்பவாவது சொர்ணாக்கா'வை மட்டுமே பார்த்து வந்த நமக்கு , சூழல் கருதி குரலுயர்த்தி,முஷ்ட்டி காட்டும் பெண்கள்.ம்..நல்ல காட்சிகள். இயல்பில் இப்படி பெண்களை நாம் சந்திக்கத்தான் செய்கிறோம். அநீதி கண்டு பொங்கி ஒலிவாங்கிக்கென ஆக்ரோஷமாக பேசும் பெண்களை இப்படம் பேசவில்லை. எக்கச்சக்க கதா பாத்திரங்கள். இருப்பினும் யாரும் தனித்தனியாக நிற்கவில்லை. கதையில் சூழலில் அனைவருக்கும் தேவை,அவரவர் இடம் இருக்கிறது. தனுஷின் இளமைக்கால முகம் அவர் நடித்த இந்திப்படத்தை(ராஞ்சனா) நினைவூட்டுகிறது. அதே முகம்,களை,ஒப்பனை எல்லாம். ஹிப்பி வைத்து,பெல்பாட்டம் போட்டுக்கொண்டு தடித்த ஃப்ரேம் கொண்ட குளிர் கண்ணாடிகளுடன் கேங்ஸ்ட்டர்ஸ்..80களின் ரசினி பட எதிரிகளை நினைவூட்டுகிறது நிசத்தில் சிறையில் போய் எடுத்தனரா..இல்லை செட்ட்'டா என வியக்க வைக்கும் கலைஇயக்கம்.!.

சாலிடெர் டீவி,சுவரில் பான்ட்ஸ் விளம்பரம், ரோஜா பாக்கு,பின்னர் இரட்டை இலைக்கான தேர்தல் போஸ்ட்டர்கள், ஆல் இன்டியா ரேடியோவின் செய்திகள்,பின்னில் பாயும் புலி போஸ்ட்டர், மூன்றெழுத்து மட்டும் வைத்து பின்னர் எண்கள் கொண்ட பைக்குகள் என 80களை அப்படியே கண்ணில் கொண்டு வருகிறது காட்சிகள். இறங்கி வேலை பார்த்திருக்கின்றனர். இளமைப்பருவம் ராஞ்சனா கெட்டப் என்றால் நடுத்தர வயதில் கொடி கெட்டப் தனுஷுக்கு. ஒவ்வொரு வசனமும் அவரே பேசுவது போல தோன்றுகிறது. இது வெற்றி மாறன் எழுதிக்கொடுத்துப்பேசுவது போலத்தோன்றவேயில்லை எனக்கு.





ஹார்பரில் இரவில் வைத்து பொருள் கொண்டுபோய் வைத்து அங்கேயே கொன்றுபோடும் காட்சி,அத்தனை இரவிலும் அவ்வளவு தெளிவாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு காட்சியும் அது இரவில் நடப்பதாக இருப்பினும் எவ்வித குழப்பமுமின்றி தெளிவாக அமைந்திருக்கிறது. படத்தின் பாதி வரை வெறும் ஆண்களை வைத்தே ஓட்டி இருப்பது சலிப்பு.

"என் பாசையே புரியலை, என் லைஃப் எப்படி ஒனக்குப்புரியப்போகுது ?, சின்ன ஆங்க்கர் தானே அம்மாம்பெரிய கப்பலை நிக்க வெக்கிது ?, என்னை என்ன தேவடியான்னு நெனச்சியா? ராஜன் பொண்டாட்டிடா" பொட்டில் தெறிக்கும் வசனங்கள்.கதை சொல்லும் பாணி நான் லீனியர் என்ற போதிலும்,பார்வையாளனுக்கு எவ்வித சிரமுமின்றி தெளிவாக விளங்குதல் சிறப்பு. விடாது ஒலிக்கும் வசவுகள், பாசாங்கில்லாத வசனங்கள் என பரிமளிக்கிறது. பொண்ணு பார்க்க போகும் காட்சி, நான் கூப்ட்டா வந்துரும், அதான் பயமா இருக்குன்னு சொல்ற தனுஷ்.நெகிழும் அந்த அப்பா.ஆஹா..

அமீர் இத்தனை குள்ளமா? டூட்ஸியின் தமிழ்ப்பதிப்பை விட அடக்கி வாசித்திருக்கிறார். பாரக்க அசப்பில் டி ராஜேந்தர் போலவே தோன்றுவது எனக்கு மட்டுந்தானா? அதற்காகவே டீ ஆரின் பாடலை அவர் திருமணத்தில் ஒலிக்க விட்டிருக்கிறார் சந்தோஷ். 'சொல்லாமத்தானே இந்த மனசு துடிக்குது :) அடிக்குரலில் பேசி தம் நிலைப்பாட்டை விளக்கும் அந்தக்காட்சி போதும். பின்னர் இரவில் ஓட்டலில் அமர்ந்து தம்மைப் போடுவதற்குத்தான் என்பதை அறிந்ததும் களைத்து சேரில் முழுதுமாக தம்மை சாய்த்துக்கொண்டு..ஆஹா. நானே செட்டில் பண்ணி விடுவேனேடா என்று மன்றாடுகிறார். பிடிக்க வந்த காவல் அதிகாரியை உடுப்புகளை அவிழ்த்துவிட்டு படகில் பயணிக்க வைக்கும் காட்சியில் வணிக நாயகன் ராஜன் அமீர்!




சந்தோஷ் பற்றி பேசியே ஆக வேண்டும். அந்த காரம் போர்ட் போட்டி சிறைக்குள் நடக்கும் காட்சியில் இறங்கி அடித்திருக்கிறார். சம்பவம் செய்ய மணித்துளிகள் எண்ணப்படுவது போல இசை. பாடல்கள் ஆங்காங்கெ பின்னில் ஒலிக்கவிட்டு அத்தனை முக்கியத்துவம் தரப்படாததில் கவலை கொள்ளாது பின்னணி இசையில் களம் இறங்கியிருக்கிறார். 80களின் பின்னணி இசை,பின்னர் 2000ம் ஆண்டுகளின் இசை, பின்னர் நவீனம் என புகுந்து விளையாட அனுமதி கிடைத்திருக்கிறது. கானா' மட்டும் எப்போதும் பாடலாம் போலிருக்கிறது. அறிமுக ஐஸ்வர்யாவின் காட்சிகளில் கானா கலக்குகிறது. எங்கு அடக்கி வாசிக்க வேணும், எங்கு ஆர்ப்பாட்டம் தேவை என்பதெல்லாம் புரிந்து வைத்து இசைத்த பண்பட்ட முதிர்ச்சியான இசை.

ஆன்ட்ரியாவின் பழிவாங்கும் முறை, அயன் ரான்ட் எழுதிய 'ஃபொன்டன் ஹெட்' கதையின் தலைவி எதிரியின் உடனே எப்போதும் இருப்பாள். தலைவனுடன் இருந்தால் எப்போதும் அவளே ஒரு பொறாமையின் இலக்காக இருக்கக்கூடும், அவனை வெற்றியை அடைய முடியா இலக்கில் விட்டுச்செல்லும் என்ற நோக்கில் எதிரியுடனேயே பயணிப்பாள். வெற்றி பெற்றவுடன் தலைவனுடன் சேர்வாள்.! 




அன்பு, பத்மா, சந்திரா, ராஜன், குணா, செந்தில் என அத்தனை கதாபாத்திரங்களின் பெயர்களும் ஒரு முறை படம் பார்த்ததில் மனதில் பதிந்துவிட்டது. அரிதான நிகழ்வு. இருந்தாலும் நான் லீனியர் கதை சொல்லலில் வாய்ஸ் ஓவர் எதற்கு ?..இந்த வாய்ஸ் ஓவர் எல்லாம் எஸ்.ரா'வுக்கு ரொம்ப பிடித்த விஷயம். நான் சொல்றேன் நீ கேளுன்னு :) மக்களுக்கு புரியாது போய்விடும் என்ற பயமா வெற்றி மாறன் ?!





Thursday, September 20, 2018

கீச்சுக்குரல் கன்னி..!



கீச்சுக்குரல் கன்னி..! சக்திஸ்ரீஈஈஈஈஈஈஈ….ஹிஹி… இவ்வளவு உச்சஸ்த்தாயில அந்த ‘நுஸ்ரத் ஃபதே அலிக்கான்’ தான் பாடுவார். சுதி பிசகாம…ஹ்ம்.. டெக்னோ எலக்ட்ரானிக் பாப் என்னென்னல்லாம் இருக்கு இந்தப்பாட்டுல… எலெட்ரானிக் பாப்பு எண்டு முடிச்சிக்கலாம். முழு ஆல்பத்துலயும் இந்தப்பாட்டத்தான் கொஞ்சம் கேக்றாப்போல போட்ருக்கார் ரஹ்மான். 03:03-ல காண்டாமணி போல ஒலிக்கும் அந்த ஒலி. புதுசு. ”வென்று சென்றனை”… ஐ படத்தின் ’லேடியோ’ பாடலுக்குப்பிறகு எனக்கு பிடித்தவாறு இசைத்திருக்கிறார். ட்ரூலி இண்டர்நேஷ்னல். விஎச்1- சேனல்ல போடலாம் டைரக்டா!

.

Monday, September 17, 2018

இளையராஜா



ராசைய்யாவின் நேற்றைய நிகழ்ச்சி அத்தனை உவப்பானதாக இருக்கவில்லை. குரல் உடைந்து இருக்கிறது ராசைய்யாவிற்கு. பயணக்களைப்பா இல்லை உடல் சோர்வா என எண்ணவைத்தது. இருப்பினும் முடியும் வரை இருந்து பார்த்துவிட்டுத்தான் உறங்கினேன். எழுபத்தைந்து வயதில் இத்தனை தூரம் பயணம் செய்து அத்தனை ஆர்க்கெஸ்ட்ராவையும் தயார் செய்து ,ஒருங்கிணைத்து வாசிப்பது என்பதெல்லாம் பெரிய விஷயம். அத்தனை களைப்பிலும் தன்னைக் காண வந்திருக்கிறார்கள் என்ற ஒரே நோக்கத்திற்கென வலிந்து தம்மை ஆட்படுத்திக்கொள்கிறார். பாட இயலவில்லை. பல வரிகளை இரண்டு முறை பாடுகிறார் அதே வரிகளை. இனியும் வதைக்க வேணுமா?!. கண்டெக்டர் லாஸ்லோ கவாக்ஸ் முன் வந்து தலை சாய்க்கிறார் பலமுறை எத்தனையோ சிம்ஃபொனி. ஆர்க்கெஸ்ட்ராவை வழி நடத்துபவர்.

விஜய் பிரகாஷின் குரல் கிஞ்சித்தும் எட்டவில்லை பாலுவின் உயரத்துக்கு. அப்படி என்னதான்யா சண்டை ஒண்ணாப் பாடிட்டுப் போகவேண்டீது தானே?! மொத்தமே பதினைந்து பேர் இசைக்குழுவில் இருந்திருப்பர் என நினைக்கிறேன். அதிலும் அதே பிரமிப்பு. கன கச்சிதமாக இசைக்கோர்வை. எனினும் பாடிய பலர் புதுமுகங்கள். என்னவோ ஒன்று குறைகிறதே என்ற எண்ணம் மேலிடாமலில்லை. ராசைய்யாவே வெளிநாடு சென்று நிகழ்வுகள் நடத்தவேணுமா என யோசிக்க வைக்கிறது. ஸ்கைப், வீடியோ கான்ஃபெரன்ஸிங் என பல அறிவியல் ஊடகங்கள் வளர்ந்துவிட்ட போதிலும் நேரில் தோன்றித் தான் நிகழ்ச்சி நடத்த வேணுமா?! முதுமை வாட்டுகிறது அவரை.

’என் ஜோடி மஞ்சக்குருவி’யில் 04:00 லிருந்து 04:10 வரை வரும் வரிகள், அதில் குரல் எது குழல் எதுவெனத்தெரியவே தெரியாது.ஆஹா. சித்ரா அதைக்கொணர முயன்றார். முயன்றார் மட்டுமே. அந்த இடங்களில் வரும் ”கூக்கூ”வைப்பாடினது சித்ரா தானே? இல்லை ஷைலஜாவா ?

”இசைக்கு என்னைப்போல குழலுக்கு இவர்” என அருண்மொழியைக் கைகாட்டினார். இசைத்திமிர் ஆணவம் :) இன்னமும் ஆணவக்கொம்பு இளைக்கவேயில்லை. மனோவைப்பார்த்து நீ தான் பாடுகிறாயா இல்லை வேறு யாராவது பாடுகிறார்களா? என பாலுவை கிண்டலடிக்கவும் செய்கிறார். இதெல்லாம் கட்டையோட தாண்டி போகும்.அம்புட்டும் ஆணவம். அவருக்கிருக்கிற திறமைல 0.0001 விழுக்காடு எனக்கு இருந்திருந்தாலும் இத விடப்பல்லாயிரம் மடங்கு திமிரோட பேசுவேன் நான்..!

இதற்குப்பிறகு இன்ன நோட்’தான் என ஊறிப்போன ராகம்,தாளம் என்றாலும் நேரில் வாசிக்கும்போது சிலிர்க்கத்தான் செய்கிறது. மிக்ஸிங் குறைபாடு இருப்பினும் இல்லையே இங்க இது வரணுமே என்ற எண்ணம் மேலிடுவதைத் தவிர்க்க இயலவில்லை. நனவிலி மனது அறியும் அந்த இசைக்குறிப்புகளை! அடுத்த வாரமும் பார்ப்பேன்!

.

Friday, September 14, 2018

மீண்டும் 'மழைக்குருவி'

யப்பா சாமீகளா , அந்த மழைக்குருவி பாட்டுல என்னதாம்ல இருக்கு ? ஆளாளுக்கு வரிஞ்சி கட்டிக்கிட்டு எழுதறீங்களே..? வரிகள் படு சுமார், இசை அப்பட்டமான உருவல், இழுத்து எடுத்தது, இதெல்லாம் தெரிஞ்சுமா பத்தி பத்தியா எழுதித்தள்றீங்க? ஒண்ணும் புரியலை. இல்ல என் காது தான் மக்கர் பண்ணுதா,எழவு இசை ரசனையே இல்லாமப் போயிருச்சா? ரவ்வும் பகலுமா உக்காந்து ப்ராஹ்ம்ஸ், ரஹ்மானினோவ், மொஸார்ட், மற்றும் இன்னபிற தெரிந்த இசைக்கலைஞர்களின் இசைக்கோவைகளை மனனம் செய்து அவர்களின் இசைக்குறிப்புகளை எனது கிட்டாரில் எடுக்க எத்தனை சிரமப்பட்டது எல்லாம் வீணா ? 

இசைச்செல்வங்களே.செப்புங்கள் …ஹ்ம்… ! நெஞ்சத் தொட்டு சொல்லுங்க இசைவெறியர்களே. இதே பாடலை ஒரு அறிமுகப் பாடலாசிரியர் எழுதி அதற்கு தரன்குமார், இல்லை ஒரு லீயான் ஜேம்ஸ், ஷான் ரோல்டான் போன்ற திரைக்கும் வந்தும் புகழே கிடைக்காதவர்கள் இசைத்திருந்தால் இத்தனை எழுதுவீரா ?. ஐயா எனக்கொண்ணும் ரஹ்மான் மீது காண்டு இல்லை. கிஞ்சித்தும் யோசிக்காது மேம்போக்காக இசைத்து,அப்படி சொல்வதே தவறு, வாசித்துவிட்டு சென்ற ஒரு பாடலை எப்படிய்ய்யா இப்ப்டீல்லாம் வரிஞ்சி கட்டிக்கிட்டு எழுத முடியுது ?! 

விமர்சனம் எழுதுபவர்களெல்லாம் தமக்குப்பேர் கிடைக்கவேணும் என்பதற்காகவே எழுதுகின்றனர் என சுஜாதா சொல்லியிருக்கார். இதையெல்லாம் பாக்கும்போது அது தான் சரி என்று தோணுகிறது எனக்கு. #மழைக்குருவி

.

Tuesday, September 11, 2018

நீராளீ - ஆக்டபஸ்



நேத்து ஒரு மலையாளப்படம் பார்த்தேன். நீராளி ஹிஹி.. லாலேட்டன் சினிமயல்லே அது கொண்டு. லாலேட்டன் பீஜேப்பீல சேரப் போறாராமேன்னு ரொம்ப விசனப்பட்டுக்கொண்டார் போகன். ஏற்கனவே லால்சலாம்னு ஒரு படத்துல நடிச்சவர் தான் லாலேட்டன். சரி அதேல்லாம் எதுக்கு நமக்கு படத்தப்பாப்பம்னு ஒக்காந்தென், ஒரு பழைய டெம்ப்போவ எடுத்துக்கிட்டு அவரும் அவர் நண்பரும் பெங்களூரிலருந்து கேரளாவுக்கு போகின்றனர். வழியில் ஒரு அபகடம் அதாண்ணே ஆக்ஸிடென்டு.! வண்டி தொங்குது பாறைமேல. கீழ அதலபாதாளம். விழுந்தா ஒரு எலும்பு கூட மிஞ்சாது. 

இங்கருந்து தான் ப்ளாஷ்பேக் ஆரம்புடிக்கிது. வண்டிக்குள்ள மாட்டிக்கிட்டவொடனே கதையும் குடுங்கிப்போகுது. அவரால ஒண்ணும் செய்ய முடியலை. பக்கத்துல இருக்கிற மரத்துல ஒரு மந்தி அந்த அர்த்தராத்திரியிலயும் ஒக்காந்து லாலேட்டன் எந்தா செய்யுன்னுன்னு நோக்குன்னு. ட்ரைவர் ஃப்ரெண்டு மயங்கிக்கிடக்கார். அவர் தம்மட மகளுக்கு வாங்கிச்ச கேக்கை எடுத்து தூக்கிப்போட்டு ஆச காட்றார். இருன்னாலும் பக்கத்துல வரமாட்டார் அந்த மந்தி!. கொண்டு வந்த வைரங்களை எடுத்து தூக்கிப்போட்றார் , உயிரை விட இதெல்லாம் வெறும் துச்சமாணுன்னு மந்திக்கி சொல்றாரா இல்ல நமக்குதான் சொல்றாரான்னு புரியலை. இதுக்கிடையில நாசர் திடீர்னு வண்டி பேனட்ட் மேல வந்து குந்திக்கினு ‘ஞான் கரையின்ன ஆளில்லா நோக்கியோ, இதக்க அங்ஙன ஊதிக்களையாம்’னு கூவறார். இந்த பெர்ஃபார்மன்ஸ பண்றதுக்கு நாசர் தேவையா?! ஹ்ம்,…

வண்டிக்குள்ள குடுங்கிய சமயத்தில ஒரு எதிர்பார்ப்பும் இல்லை ஆடியன்ஸுக்கு. இவர் லாலேட்டனில்லே எங்கனயாகிலும் தப்பிக்கும் என்ற மனநிலைதான் எனக்கும். அதான் ஒரு பிரச்னை. இருக்கிற செல்ஃபோனுக்கு சார்ஞ் போட வழியில்லை. அதில பேலன்ஸும் இல்லை. கோள்ஸ் (calls) வந்தில்லங்கில் இங்க இருக்கிற பிரச்னைய வெளில சொல்ல வழியில்லை. Daylightன்னு ஒரு சில்வஸ்டர் படம் அது பாக்கணும். கிட்டத்தட்ட இதுமாதிரி நிலை தான். ஆனாலும் அவரோட ஒரு பத்து பேர் உள்ள கிடப்பார்கள். ஒவ்வொரு நிமிடமும் சில்லிட்டு சீட்டு நுனிக்கு கொண்டு போகும். இங்க லாலேட்டன் எந்து வேணங்கிலும் செய்து இவடருன்னு தப்பிக்கும்னு நமக்கு நம்பிக்கை இருக்கிறதால.. ஹிஹி.. செம போர் சேட்டா!

நதியாதான் பொண்சாதியாம் அவர் ஒரு பிரசவ வார்டுல அட்மிட் ஆயிட்டுண்டு. அவர் எப்பழும் லாலேட்டனுக்கு ஃபோன் கோள் செய்து டைம்பாஸ் செய்றார். அடிக்கடி கால் கட் செய்துவிடுகிறார். கட்டெய்யறது கட்டெய்யறதுன்னு கெஞ்சறார் லாலு. இருந்தாலும் மசியாது அந்த நதியா மொய்து…ஹிஹி :)
 
இதுக்கிடையில ஒரு ஒன்ஸ்ஸைடு காமம். யப்போ காமமெண்டால் மலயாளத்துல லவ்வுன்னு அர்த்தமாக்கும். அவள் லாலேட்டன் மேல காண்டாகி இப்ப லாலேட்டன் மாட்டிக் கொண்டிருக்கும் நிலையை போலிஸுக்கோ இல்ல தீஅணைப்பவருக்கோ பறையாது அடம் பிடிக்கின்னு. என்னதான் செய்வார் லாலேட்டன் இந்த அறுபது வயசிலை இதெல்லாம் தேவையா ?!...ஹிஹி… 

ஒரே ஒரு சம்சயம் எனிக்கு. இந்த எழவு படத்துக்கு எதுக்கு நிராளீன்னு பேர் வெச்சது ?...ஹ்ம்… நீராளின்னா மலயாளத்துல ‘ஆக்டபஸ்’ எண்டு அர்த்தம், #நீராளீஈஈ


.

Monday, September 10, 2018

#ஓலாஊபர்

ஓலா/ஊபர் பற்றி நிறையப்பேர் சென்னை அனுபவங்களைப்பற்றி எழுதுகிறார்கள். இங்கும் அதே பிரச்னை உண்டு. ஓட்டுநர்கள் பயணத்தை கேன்சல் செய்வது என்பது.முக்கிய காரணம் பெங்களூரில் உள்ள அரசு பஸ்ஸான வோல்வோ வஜ்ரா ஏசி சர்வீஸ் இப்போது கூடுதலாக மக்களால் விரும்பப்படுவதற்கு ஓலா/ஊபர் டாக்ஸிகளின் அட்ராசிட்டியே காரணம். டாக்ஸியில் இரவு நேரங்களில் பயணிக்கும் பெண்களுக்கு தொல்லை, குறிப்பிட்ட நேரத்துக்கு வராது நீட்டித்தல் போன்ற பல வெறுப்புகள் இப்போதெல்லாம் எல்லோரையும் அரசு ஏசி பஸ் சர்வீஸினை நோக்கி போக வைக்கிறது. 

இரவு இரண்டு மணி வரை பெங்களூர் விமான நிலையத்திலிருந்து எல்லா முக்கிய பாகங்களுக்கும் செல்ல பஸ் வசதி உண்டு. அதை விட்டால் அதிகாலை ஐந்து மணியிலிருந்து தொடங்கும். எப்போதும் எனது அத்தனை பயணங்களையும் இந்த நேரத்துக்குள் வந்து சேரும் படியாக அமைத்துக் கொள்வேன். ஓலா/ஊபர் இவர்களை நம்பிக் கொண்டிருந்தால் அதோ கதிதான். மேலும் இந்த ஓலா/ஊபர்களில் பயணித்த பின் வரும் ஃபீட்பேக்களில் நான்கு ஸ்டார்களுக்கு கீழ் கொடுத்த பயணிக்கு அடுத்தமுறை ஓலா/ஊபர் டாக்ஸி புக் பண்ண முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்ற குண்டும் உண்டு. இந்த எழவுகளுக்காகத்தான் நான் அதன்பின்னர் வரும் குறுஞ்செய்திகளுக்கோ இல்லை ஈமெயிலுக்கோ பதிலே சொல்வதில்லை :)
 
ஏர்போர்ட் செல்லும் வழிக்கு இந்த டாக்ஸிகாரர்கள் ”வாங்க கொண்டு போய் விடுகிறேன் பஸ் கட்டணம் கொடுத்தால் போதும்,ஷேரிங்கில் செல்லலாம்” என்று ஆசை காட்டுவர். ஏறினால் அதோடு தொலைந்தோம்.கண்ட இடங்களிலும் நிறுத்தி இன்னும் சில பலர் ஏறட்டும் சார் எனக்காக்க வைத்து கடைசி நொடியில் கொண்டு போய் சேர்ப்பர்.

எனக்குத்தெரிந்து எங்கள் ஏரியாவில் ஆறு ஏழு ஆண்டுகளாக ட்ராவல் சர்வீஸ் நடத்தி வந்த மலையாளி ஒருவர், ஓலா/ஊபர் போட்டியில் தொடர்ந்து நடத்த வியலாது அத்தனை கார்களையும் விற்று விட்டு ஒன்றிரண்டு கார்களை மட்டும் வைத்துக்கொண்டு எங்கள் ஏரியாவிலேயே எதோ சிறிய ட்ரைவிங் ஸ்கூல் நடத்திக்கொண்டிருக்கிறார் பாவம் வண்டி கேட்டால் வீடு வாசல் கொண்டு வந்து நிறுத்துவார்.. #ஓலாஊபர்

.

Thursday, September 6, 2018

'செக்கச்சிவந்த' மழைக்குருவி




ரஹ்மானின் ’மழைக்குருவி’ இங்கு கீச்சிடுகிறதா மக்களே… நல்ல ஃபாஸ்ட் டெம்ப்போல இருக்கிற இந்தப்பாட்ட அப்டியே தூக்கி ஒண்ணுமில்லாமப் பண்ணிட்டியேப்பா ..! என்னடா எங்கயோ கேட்டப்போலவே இருக்கேன்னு ஒரே ரோசனை தான் :) நாள்ப்பூஊரா ... :)

மழைக்குருவி, எங்கோ கூவ ஆரம்பித்து எங்கு முடிப்பது எனத்தெரியாமல் அநிருத் சந்தோஷின் காட்டுக்குள் வழி மறந்து அலைகிறது பாவம். எப்டீல்லாம் இருந்த மனுசன். சரி ஃபீல்டவுட் வைரமுத்து வரிகளை அடைகாத்துத்தானே ஆகவேண்டும். இவால்லாம் செத்த ஒதுங்கி ஓரமா ஒதுக்குப்புறமா இருந்து என்ன நடக்குது எண்டு பாத்துக்கிட்டு சொம்மா இருந்தாதான் என்ன ? அய்யனார் கோவில்ல பூசாரி மெதுவா ஆரம்பிப்பார் பயந்துகிட்டு அது மேரி ஆரம்பிக்கிறார் ரஹ்மான்.

“நான் இயற்கையில் திளைத்திருந்தேன்’ என்னா வைர வரிங்ணா..?! அடப்பாவமே.. ”கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து  பேசின பேச்சரவம் கேட்டிலையோ?  பேய்ப்பெண்ணே!”  திருப்பாவை’யை விட்டொழிங்க முத்து. ஏற்கனவே ஆண்டாள்கிட்ட வாங்கிக்கட்டினது போறாதா?!

சரணம் பல்லவின்னு ஒரு வேறுபாடின்றி, மொத்தமே வசனங்களை வாசித்து விட்டுப்போவதற்கு பாட்டு எதற்கு? தாளம் தன்னால் பின்னில் இசைக்கிறது, அதோடு எங்கும் பொருந்தாது வரிகள் செல்கிறது. கேட்கக்கேட்க இன்னமும் தப்பித்தான் போகிறது ரஹ்மான். 01:53 லிருந்து விலகல் ஆரம்பிக்கிறது. 03:04 ல் பாருங்க எங்க போனார்னு தேடத்தான் வேணும்.ஒரு போதும் திரும்பி வர அவரால் இயலவில்லை.

தேநீக்கள் எல்லாம் தம் திரும்பும் வழி மறந்து போகின்றன. எல்லாம் உரங்களும் செயற்கைத் தெளிப்பான்களும் தான் காரணம் என்றறிந்த மோர்கன் ஃப்ரீமேன் அமெரிக்காவில் இதற்கென ஒரு ஆர்கானிக் தோட்டமமைத்து செயற்கை உரம், சோதனைக்கூட தெளிப்புகளின்றி வளர்த்து வருகிறார் தேநீக்களை. அவை தம் வழி தப்பாது இசைக்க, தம் பாரம்பரிய வழியறிந்து கூட்டுக்கு திரும்ப வாழ்நாளில் ஒரு நல்ல விஷயத்தை செய்து வருகிறார். இந்த ரஹ்மான் தேநீக்கும் ஒரு மார்கன் ஃப்ரீமேன் கிடைத்தால் நல்லது.


Friday, August 24, 2018

மசாலா ஜெட்டு

டெல்லியிலிருந்து திரும்பி வருவதற்கு ஸ்பைஸ்ஜெட்டில் பதிவு செய்திருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து அத்தனை அழைப்பு, குறுஞ்செய்திகள் என உட்பெட்டி நிறைந்து விடும். மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும். உங்கள் பறப்பு இத்தனை இத்தனை மணிக்கு என ஆனால் ஒரு நாள் கூட சொன்ன நேரத்துக்கு புறப்பட்டதுமில்லை, வந்தடைந்ததும் இல்லை தாமதம் அரைமணி நேரமெல்லாம் சர்வ சாதாரணம். இப்போது பறப்பு அத்தனை பெரிய விஷயமில்லை என்றாகி விட்டது. டெல்லி ஏர்போர்ட்டில் பெங்களூர் மெஜஸ்டிக் டவுன்பஸ் ஸ்டாண்டு தோற்றுவிடுமளவுக்கு கூட்டம் செம்மும். நகர முடியாத கூட்டம்.

வழக்கம்போல இந்த முறையும் வண்டி தாமதம். அரைமணிநேரம். சரி போனால் போகிறது என கொஞ்சம் சுற்றலாமெனக்கிளம்பினேன். தீபிகா படுகோன் அத்தனை பைகளையும் உடுப்புகளையும் அணிந்து நொடிக்கொருமுறை மாற்றிக் கொண்டேயிருந்தார் எதிரே இருக்கும் தொகா’வில். ஒரு 2000 இஞ்ச் டீவி இருக்குமென நினைக்கிறேன். விமானப்புறப்பாடு குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. ஒரு வழியாக போர்டிங் பாஸ் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன். ’டெக்னிகல் ஸ்நாக்’ தொழில்நுட்ப குறைபாடு. அது சரி. உள்ளே ஏறி அமர்ந்த பிறகும் சரி செய்யப்படவில்லை. ஏற்கனெவே 40 நிமிடம் தாமதம். உள்ளே இருந்த விமான ஓட்டி பெங்காலி கலந்த ஆங்கிலத்தில் இன்னமும் பத்து நிமிடத்தில் சரி செய்து விடுவோம் கவலை கொள்ள வேண்டாம் என்றார். சரி என்ன செய்வது இவாளையெல்லாம் நம்பித்தானே நாம புறப்பட்டிருக்கம் என்று சமாதானம்.

உள்ளிருக்கும் விளக்குகளெல்லாம் ஒளி குறைக்கப்படும் என்று கொஞ்சினாள் மிட்டாய் கொடுப்பவள். என்ன நடக்குதுன்னு தெரியலை. இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பிவிடும் என்றாள். அளவுக்கதிகமாக அதிர்ந்தது விமானம். கொண்டு போய் சேர்ப்பாரா இல்லை ஒருதிரியாக கொண்டு போய் சேர்த்துவிடுவாரா என நினைத்துக் கொண்டேன். வலப்பக்கம் 32 இடப்பக்கம் 32 ஒவ்வொரு வரிசையிலும் 3 இருக்கைகள். மொத்தம் 192 பயணிகள். மிட்டாய் கொடுக்கும் பெண்மணிகள் நால்வர், இரண்டு விமான ஓட்டிகள். எல்லாரும் கோவிந்தாதான்.

இன்னமும் ஓடு தளம் கிடைக்கவில்லை கொஞ்சநேரம் பொறுக்க வேணும் என்று மீண்டும் அந்த பெங்காலி. வயது முப்பதுக்குள் தான் இருக்கவேணும். இளமையான குரல். ஒருவழியாக அதிர்ந்தது கிளம்பியது. பெல்ட் அணியவும் அணியவும் என மெக்கானிக் குரல். கரும்மடா. ஒரு பெல்ட்தான் இருக்கு அதத்தான் அணியமுடியும். மொதல்ல வண்டியக் கிளப்புங்கடா ! போகும் வழியெல்லாம் வானம் பதற்றமாக இருக்கிறது என்று ஒரு அறிவிப்பு வேறு (turbulence) இந்தப்பயணம் தான் கடைசி போல என நினைக்க வைக்கும் சூழல். கண்ணைக்கட்டிக்கொண்டு உறங்க நினைத்தேன். வெளியில் எதையும் பார்க்க முடியவில்லை. அத்தனை கும்மிருட்டு. அவ்வப்போது மின்னல் வெட்டுகிறது. ஹாலிவுட் படங்களில் மின்னல் வெளிச்சத்தில் ட்ராகுலா கைகளில் பிணங்களை ஏந்திச்செல்லும் அது போல. ஜன்னல் பக்கமே பார்க்காது கண்ணை இறுக மூடிக்கொண்டேன்.

ஒரு வழியாக பெங்களூர் வந்து விட்டது இன்னமும் பத்து நிமிடங்களில் இறங்கி விடலாம் என்றார் பெங்காலி. எப்படியோ பிழைத்தால் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது தடாலென ஒரு சப்தம். எமெர்ஜன்ஸி எக்ஸிட் பக்கமிருந்து எதோ சப்தம் வந்தது. அத்தனை இரைச்சல் களுக்கிடையில் அதைக்கேட்க முடிந்தது ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை என்றார் விமானப்பெண்மணி. சொல்ல மறந்துவிட்டேன் அவர் பார்க்க தமன்னா போலவே இருந்தார். ஒரு வேளை தங்கச்சியாகக்கூட இருக்கலாம் யார் கண்டது ? ரணகளத்திலயும் ஒரு…ஹிஹி.

கொஞ்சம் குனிந்து பார்த்தேன். பளப்பளவென மின்விளக்குகள் தரையில் தெரிந்தன. இறங்கப்போகிறோம் என்ற ஆவலில் இருக்கும் போது பின்பக்க டயர்கள் சரேலென தரையில் பதிந்தன. அத்தனை வேகத்துடன், எதோ எங்கோ போய் மோதுவது போல.தரையை கிழித்துக்கொண்டு மோதியது விமான பின் சக்கரங்கள். அத்தனை வேகமாக வரும்போது கொஞ்சம் உராய்வு சாத்தியந்தான். இருப்பினும் இது எதோ சரியில்லை எனத்தோணியது. உட்கார்ந்திருந்த அனைவரும் முன்பக்க இருக்கையில் மோதிக்கொள்ளாத குறை. விழுந்த பின் சக்கரங்களை முந்திக்கொண்டு முன் சக்கரமும் மோதியது போன்ற ஒரு உணர்வு. சடாரென வேகம் குறைக்கப்பட்டு ப்ரேக் வலிமையாக அழுத்தியிருப்பார் போலும். ஓடு தளத்தில் இறங்கிய வேகத்துக்கு விமானம் குறைந்தது ஐந்து நிமிடங்களாவது ஓடவேணும், ஒரு நிமிடம் கூட ஓடவில்லை.. சடாரெனெ நிறுத்தி விட்டது போல உணர்வு. இது என்ன நடக்குது என்று கொஞ்ச நேரத்துக்கு மரண பயத்தைக்காட்டீட்டாய்ங்க பரமா!

எப்போதும் டிக்கட் பதிவு செய்யும்போது இன்ஷ்யூரன்ஸை தவிர்ப்பது வழக்கம். என்ன பெரிசா விபத்து வந்திரப்போகுது என்ற அலட்சியம் இனி வரும் அத்தனை பயணங்களுக்கும் அதற்கும் சேர்த்தே பணம் செலுத்திவிடுவது நல்லது என்ற இரண்டு மணிநேரத்தில் காட்டிவிட்டார் அந்தப்பெங்காலி.

இத்தனை மணிநேர பறத்தல் செய்த முன்னனுபவம் இருக்கவேணும் என்றெல்லாம் கட்டுப்பாடுகளெல்லாம் இந்த உள்ளுர் விமான ஓட்டிகளுக்கு கிடையாதா ?! எனது இந்தப்பறப்பு முழுதுமே எதோ ஒரு அமெச்சூர் விமானியிடம் விமானம் சிக்கிக் கொண்டதைப் போலவே உணர நேர்ந்தது.

பெங்களூர் விமான நிலையத்திலிருந்து வீடு வந்து சேர (கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் கூடுதலாகும்) உள்ளூர் பிஎம்டீசி வஜ்ராவில் ஏறி அமர்ந்தேன். வீடு வரும் வரை ஒரு குலுக்கலில்லை ஒரு சறுக்கலில்லை!
 

.