Wednesday, December 23, 2020

#பாவம் கதைகள்

 


பாவக்கதைகள். சின்ன தீப்பெட்டிக்குள் யானையை அடைக்கச் சொன்னது போல அத்தனை பெரிய இயக்குநர்களையும் கிட்டத்தட்ட 35 நிமிடங்களுக்குள் முழுக்கதையையும் சொல்லிவிடவேணும் என்று பலவந்தப்படுத்தியது போல இருக்கிறது. வெற்றிமாறன் மூன்று மணிநேர பெரிய படமானாலும் சின்னத் திரைக்குள் அரைமணிக்கூறு மட்டுமே ஓடும் சிறு நதியானாலும் உழைப்பு அருமை. அதான் சிறுகதை எழுதுவது தான் கடினம், பெரிய புதினத்தை முன்னூறு பக்கங்களுக்கு எழுதிவிடலாம் மனம் போன போக்கில் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் பல அத்தியாயங்களை வைத்துக் கொண்டு தலையணை உயரத்தில் அடுக்கிவிடுவது சுலபம். 
 
வெற்றி மாறனிடம் எனக்குப்பிடித்ததே அந்த விவரித்தல் தான் (டீட்டெய்லிங்) . இங்கு ஒரு சவால் போல அவருக்கு. ஒரே கதை 35 நிமிடங்கள் மட்டுமே. எடுத்து முடிக்க வேணும் என்ற கட்டாயம். ’வடசென்னை’யில் ஒவ்வொரு கதாபாத்திரமாக எடுத்து அறிமுகப்படுத்தி அது வரை அத்திரைக்கதையின் படுதாவில் பார்த்தேயிராத கதாபாத்திரங்களை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி பின்னர் அவைகளை மைய நீரோட்டத்தில் கலக்க வைத்து என அமர்க்களம் செய்திருப்பார். அதில் ஒன்றே ஒன்றை மட்டுமே எடுக்கவைத்து நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டிருக்கிறது என்றே தோணுகிறது எனக்கு.
 
பாலச்சந்தர் கூட சின்னத்திரை நாடகங்களுக்கென தம்முடைய உத்தியை சிறிதும் மாற்றாது பெரிய திரைக்கென எடுத்தது போலவே எடுத்திருப்பார். அது போலவே இங்கும் வெற்றி. நல்ல கலைஞர்களை வைத்து எடுத்தாலே பாதி வெற்றிதான். இருப்பினும் இதே கதையை சுந்தர்சி’யும் இன்னபிற பிரபலமற்ற கலைஞர்களும் எடுத்த அதே களம் தான். நிகழ்வுகள் கூட அதே தான். என்ன பெரிய வேறுபாட்டைக் காண்பித்து விட முடியும் ? சொல்லும் விதத்தைத் தவிர,. இங்கும் அதே வடசென்னையின் நான் லீனியரில் தான் முயன்றிருக்கிறார். எங்கோ வாசித்த ஞாபகம் இருக்கிறது எனக்கு, நான் லீனியரில் படமாக்குவது எளிது , அதே வடிவத்தில் எழுதினால் , டெக்ஸ்ட்டாக , யாராலும் வாசிக்க போலும் இயலாது விளங்காது. 
 
சாய் பல்லவி தமது அம்மாவின் வீட்டில் சேர் போட்டு உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். எல்லோரோடும் அளவளாவிக்கொண்டு அதன் பின்னர் வரும் காட்சியில் தான் பிரகாஷ்ராஜ் பெங்களூரில் இருக்கும் பல்லவி வீட்டின் வாசலில் தயங்கி தயங்கி அழைப்புமணியை அழுத்துகிறார். பிறகு வரும் காட்சிகள் எல்லாம் லீனியர் தான். இருப்பினும் அழுத்தமும் இறுக்கமும் பிரகாஷ்ராஜுக்கு கை வந்த கலை. இருப்பினும் கடைசியில் ஏன் ஆர்ட்வொர்க் கொண்டு முடிக்கவேணும் படத்தை? டீம்ல யாருக்காச்சும் கொரொனா போட்ருச்சா ?!🙂
 
சுதாவின் கதை அப்பட்டமான லீனியரில் மட்டுமே. ஒரு மாற்றமும் இல்லை. எந்தப்புது விஷயமும் இல்லை. அடிப்படையில் பார்ப்பவர்களின் செண்டிமெண்டை உரசிப்பார்த்ததை தவிர வேறொன்றும் செய்ய வில்லை அது.
 
விக்னேஷ் சிவனின் கதை, அப்பட்டமான கமர்சியல். அபிநயித்த யாருக்கும் அக்கறை இருந்ததாகத் தோன்ற வில்லை. கல்கி உட்பட. அந்தக் குள்ள மனிதன் மட்டுமே சிறப்பு.
 
கெளதமனின் கதை எப்படியோ முடிஞ்சா சரி ரகம். குழந்தைகள் யாருமே அந்தத்தம்பதிக்கு பிறந்தவர்கள் போலவே இல்லை. எதோ மொழி மாற்றுப்படம் போல இருக்கிறது.
 
இந்த ஓட்டீட்டீ’க்காரா எல்லாம் ஒண்ணா சேர்ந்து ஒரு ப்ளான் வெச்சா நல்லாருக்கும். அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ்,டிஸ்னிஹாட்ஸ்டார், மூபி, இன்னும் எத்தனை எத்தனைக்கு பணம் கட்டி பார்க்கிறது ?? இடைல ஜியோ வேற படம் காட்றேன்கிறான், டாட்டா ஸ்கை மாசம் முப்பது ரூபா குடு,உலகப்படம் காமிக்கிறேன்னு வெளம்பரம் கேட்காமலே ஓட்றான் ஒவ்வொரு தடவையும் டீவீ ஆன் பண்ணும்போது..! ஒரு குடையின் கீழ் அத்தனை ஓட்டீட்டீ’யும் வந்தா நல்லது.
 

Friday, December 18, 2020

கடல் காணமலாகிறது

 


Human Space Time and Human கிம்-கி-டுக்-கின் படம் காணக் கிடைத்தது. ஒரு வழியாக தேடிக்கண்டடைந்து பார்த்தேன். அவரது மற்ற படங்களை ஒப்பிடும் போது இங்கு கொஞ்சம் வேறு பாணி. படத்தை முழுதுமாக பார்த்து முடிக்க பொறுமை வேண்டும். ஒரு முகச்சுளிப்பு கிட்டியாலே எனக்கு அது வெற்றி எனக்கூறியவரின் படம் . ஒரு கப்பல், அதில் பயணிகள், மேலும், அரசியல்வாதி, ரெளடிகள் மற்றும் பல பெண்கள் என்று ஒரு கூட்டம் , அதில் ஆச்சரியம் கடவுளும் கூடவே பயணிக்கிறார். கப்பல் வேறொன்றுமில்லை. ‘நோவா’வின் படகு’ தான் அது. அழியப் போகும் உலகிலிருந்து பாதுகாக்க இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட ஒன்று. அன்னை மரியாவும் அவளின் மகவும் கூடவே.

 இப்படி பல புராணக் கதைகளைப் பின்னி  வைத்துக் கொண்டு , வழக்கம் போல் கிம்-மின் மீது குற்றச்சாட்டு வைக்கப்படும் அதீத வன்முறை, மனித உடலைத்தின்ன கசாப்பு கத்தி வைத்து ஓங்கி ஓங்கி வெட்டி –அத்தனை சுளுவில் மனித உடம்பு கூறு போட முடியாது போல இருக்கிறது எலும்புகள் அத்தனை கடினம் – ரத்தம் தெறிக்க தெறிக்க கூறு போட்டு உண்கின்றனர். இறந்த மனிதனின் உடலைத்தான் ..உணவுப் பஞ்சத்தில் கப்பலே தடுமாறுகிறது.

 


கப்பலின் கடவுளும் பிள்ளைக்கறி கேட்ட ருத்ரனைப்போல மனிதக்கறி தான் சாப்பிடுகிறார். கப்பலின் தரைத்தளத்தில் சேரும் காலடி மண்ணை சேகரித்து வைக்கிறார். செடிகளை நட்டுவைக்க.. கூடவே இரண்டு கோழிகளை வளர்க்கிறார். எந்த வம்பு தும்புக்கும் போவதில்லை. நல்லது நடப்பினும் கெட்டது நடப்பினும் வெறும் பார்வையாளராகவே இருக்கிறார். உண்டது போக மிஞ்சும் மனித எலும்புகளை அரைத்துக் கூழாக்கி அதை உரமாக செடிகளுக்கு இரைக்கிறார். அத்தனை கொடியவர். இருப்பினும் மரியாளைப் பாதுகாக்கிறார். கப்பலில் வன்கலவிக்குள்ளாகி  தற்கொலை செய்யத் துணியும் அவளை கழுத்தில் விரல் வைத்து மயக்கமுறச் செய்து அறைக்கு கூட்டி வந்து கட்டிப்போட்டு வைக்கிறார்  இறக்கும் காலம் இன்னமும் வரவில்லை என்று கூறாமல் கூறுகிறார். உனக்கான பணி இன்னமும் முடியவில்லை என்று அவளாகவே காலம் செல்லச் செல்ல தமக்குள் சமாதானம் ஆகிக்கொள்ள வைக்கிறார். ஹ்ம்.. கடவுள் என்றாலே இப்படித்தான் இருப்பர் போலும்.

வழக்கம்போல படிநிலை பிரகடனம், அதிகாரிகளுக்கும் அவர் தம் அடிப் பொடிகளுக்கும் பல விதமான உணவுவகைகள், சாதாரணப்பயணி களுக்கோ ஒரு வேளை அரிசி உணவு மட்டுமே. வழக்கம்போல கலவரம் வெடிக்கிறது. லஞ்சக்காசு கொடுத்தேனும் உணவை வாங்கி விடவேணும் என்று நினைக்கும் கூட்டம். ஒரு வித்தியாசமுமில்லை. எல்லாம் பூமியிலும் நடப்பது தான். The Platform’ என்ற படமும் இதையே அடிப்படையாக கொண்டது தான். 233 படிநிலைகள், அற்புதமான உணவு தயாரிக்கப்ப்ட்டு ஒவ்வொரு தளமாக கீழ் தளத்துக்கு வரும் வரையில் எலும்பு கூட மிஞ்சாது போகும் நிலை. அதில் மேலிருப்போர் வீணாக்கும் உணவுகளைக் கண்டால் பார்ப்போருக்கு ரத்தக்கண்ணீர் வரும். ஒரு வேளை கிம்-மின் இந்தப்படமே தூண்டுதலாக இருந்திருக்கக் கூடும்.

 


இதெற்கெல்லாம் காரணம் கூடவே பயணிக்கும் கடவுள், இது காறும் கடலில் பயணித்துக்கொண்டிருந்த கப்பலை ஆகாயத்தில் மிதக்க விட்டு விடுகிறார். கடல் காணமலாகிறது. கப்பல் கேப்டன் உட்பட அனைவருக்கும் ஆச்சரியம். இது எப்படி , ஒரு போதும் நாங்கள் இப்படி கண்டதேயில்லை என பயணிகளுக்கு கூறுகிறார்.  உணவுக் கையிருப்பு தீருகிறது. உணவுக்கென வெடிக்கும் போரில் ரெளடிகளும் அதிகாரியும் பங்கு போட்டுக் கொண்டு பிறரை வெட்டி சாய்க்கின்றனர் அனைத்து சாதாரணப் பயணிகளையும். உணவுக்கென ஓரிடத்தில் அடைத்து வைக்கப்பட்ட பயணிகளை கண்ணி வெடிகளை தூக்கி வீசி...அடப்பாவி அரசியல்வாதி. கூடப்பயணிக்கும் அந்த பிரதம ரெளடியே ஒரு கணம் ஆடிப்போகிறான்.

 ’நீ சாதாரண தெருப்பொறுக்கி ரெளடிடா, உனக்கெல்லாம் என்ன தெரியும்’ என்று கூறும் அந்த அரசியல்வாதி. அவனிடமிருந்த ஒரே துப்பாக்கியை பிடுங்கி ரெளடி போட்டுத்தள்ளுமிடத்தில் நாம் நிமிர்ந்து உட்காரலாம். இறக்கும் தருவாயிலும் எதோ சொல்ல வருகிறான் அந்த அரசியல்வாதி, என்ன வாரிசு அறிவிப்பா எனக்கேட்டு நெற்றியிலேயே சுட்டுத் தள்ளுகிறான் அந்த ரெளடி. அது தான் முடிவு. அவனுக்கு. கைப்பாவைகளை நம்பலாம். ஆட்டி வைப்போரை ஒரு போதும் நம்ப வியலாது.

 


இனியும் வெட்டிக்கறி எடுக்கமுடியாது என்ற நிலையில் மிகுதியான  உடல்களின் வெட்டிப்பிளந்த இடங்களில் விதைகளை ஊன்றி மண்ணை இட்டு வைக்கிறார் கடவுள். புதைக்கப்பட்ட உடலங்கள் விதைகளுக்கு உணவாவதைப் போல. காலம் செல்கிறது. கடவுளும் மரிக்கிறார் மரியாளை வல்லுறவு கொண்டவனின் பசியாற தம்மையே வெட்டிக் கொடுத்து பின்னர் இரத்தக்கால்களால் நடந்து நடந்து 8 என்ற குறியீட்டை இட்டு விட்டு மரிக்கிறார்.இதில்லென்ன குறியீடு என்று விளங்கவில்லை

மிஞ்சுவது மரியாளும் அவளின் மகனும் மட்டுமே. புல்லாகிப் பூண்டாகி பல்கிப் பெருகியிருக்கும் மரங்கள் சோலையாக மாறியிருக்கின்றன., கோழிகளின் கூட்டமும் பெருகி இருக்கிறது. அபரிமிதமாக உண்ண உணவு கிடைக்கிறது. கப்பலும் ஒரு மலை மேல் தரை தட்டி நிற்கிறது.. கடைசிக் காட்சியையும் கூடவே ஜீரணித்துக்கொள்ளலாம். வேறு வழியில்லை. மனித இனத்தின் தோற்றமே இங்கனம் தானே.?!

 


 

Thursday, December 3, 2020

தார் (தந்தி)

 


தார் (தந்தி) என்ற மராத்தி குறும்படம் பார்த்தேன். ஆர்கே லக்ஷ்மணின் ’மால்குடி டேய்ஸ்’ கதைகளில் வரும் ஒரு தபால்காரனின் கதை ஞாபகத்துக்கு வந்தது.அதிலும் அப்படித்தான் ஒரு கெட்ட செய்தியை (தந்தியை) கொடுக்க செல்லும் போது அந்த வீட்டில் ஒரு நல்ல நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும். கொடுக்காமல் திரும்ப வருவார். பல முறை சென்று பார்த்து விட்டு இந்த நேரத்தில் இப்படி ஒரு தகவலை கொடுக்கத்தான் வேண்டுமா என அல்லாடுவார். அதே போன்ற ஒரு கதா பாத்திரம். நாகராஜ் மஞ்சுலே (ஃபன்றி இயக்குநர்) தான் தபால்காரராக நடித்திருக்கிறார். இந்திரா காந்தி காலத்தை பின்னொட்டாக வைத்து, அற்புதமான பின்னணி மண்ணுக்கேற்ற இசை. யுவன் இசைத்த ‘பறவையே எங்கு இருக்கிறாய்’ இதே பாணியிலான மராத்தியரின் இசை தான்.
 
அந்தப்பையனை சைக்கிளிலேற்றி கொண்டு செல்கிறார் நாக்ராஜ். ‘சினிமா பாரதீஸோ’ சிறுவன் போல சைக்கிள் பாரின் முன்னில் அமர்ந்து கொள்கிறான். நான் சொன்னேன்ல பையா, ஹரிபாவு ரொம்ப வீரமானவர் அவருக்கெல்லாம் ஒண்ணும் ஆவாதுன்னு 🙂 எனக்கூறிவிட்டு பின்னர் இங்கியே எறக்கி விடுங்க என்று கூறி இறங்கிக்கொள்கிறான் அவனின் வீட்டு முன்னில்.
 
மொத்தமே மூன்று கதாபாத்திரங்கள் தான். தபால்காரர், அவர் மனைவி மற்றும் பின்னர் “தந்திகளை நீ கொடுக்கவில்லை என்றால் என்ன , இன்னொருத்தன் கொடுக்கத்தான் போறான், அதுக்காக விசனப்பட்டு வேலையை விடுவதெல்லாம் நல்லதல்ல” எனச்சொல்லும் அந்த தபால்கார நண்பர் என.சிறப்பான வழங்கல். நாக்ராஜ் மஞ்சுலெ’ மனைவியின் வளையோசை இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. #தார்
 
.

Tuesday, December 1, 2020

வேற்றுக்கிரகவாசிகள்

 


வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய ஒரு வலைத்தளத்தில் இவருடைய பெயரைப் பார்த்தேன். எதோ ஒரு புதிய புத்தகம் எழுதியிருக்கிறார் போல. போன ஆண்டு, அதில் வேற்றுக் கிரகவாசிகள் என்ற ஒரு உயிரினமே இல்லை, அப்படியாக நம்ப வைத்துக் கொண்டு இருக்கின்றனர் என்கிறார். அப்படி ஒன்றும் சாதாரண ஆள் இல்லை மைக்கேல் மாஸ்டர்ஸ். மொண்டானா யுனிவர்சிட்டியில் பயாலஜிக்கல் ஆந்த்ரப்போலஜி கற்பிப்பவர். ஆந்த்ரபோலஜியில் பிஹெச்டி பட்டம் பெற்றவர். தொடர்ந்தும் மனிதவியல் வளர்ச்சி போன்ற தலைப்புகளில் உரையாற்றக் கூடியவர். 
 
அவரின் வாதம் இப்படிப்போகிறது. வேற்றுக்கிரக வாசிகளை கண்டேன் எனக்கூறியவர்களில் பலரும் பாமரர்களே. உலகம் முழுக்க. விஞ்ஞானிகளோ இல்லை அதைப்பற்றிய ஆராய்ச்சி செய்யக்கூடிய எவருமோ இதுவரை ஏலியன்களுடன் கூட்டி முட்டியதில்லை. வாதங்களை நம்பும்படி வைக்கிறார். அறிவில் வளர்ந்த நம்மை விடவும் கூடுதல் தொழில் நுட்பங்களில் முன்னேறிய ஒரு இனம் அதுவும் பூமியிலேயே வேறொரு பரிமாணத்தில் (நான்காம் பரிமாணம்) வாழக்கூடிய ஒரு உயிரினத்தை தான் எல்லோரும் வேற்றுக்கிரக வாசிகள் என்று கூறிக்கொண்டு இருக்கிறோம் என்கிறார்.
 
பரிணாம வளர்ச்சியில் மனித இனத்தில் உடலில் மனதில் சிந்தனையில் பல மாற்றங்கள் உண்டானது. அவற்றுள் எடுத்துக்காட்டுக்கென கைகளை ஊன்றி நடந்து கொண்டிருந்த குரங்குகள் (நாம்) எழுந்து நடக்க ஆரம்பித்தது, அதனால் கைகளை வேறு பயன்பாட்டிற்கு உட்படுத்த முடிந்தது. இல்லையெனில் முழு உடலையும் எடுத்து செல்ல கைகளும் கால்களுமே பயன்பட்டன. இன்னிக்கு இந்த கட்டுரையை தட்டச்சு செய்வதும் கை விரல்கள் தான். எழுந்து நடந்தவுடன் வாலின் தேவையின்றிப் போனது. நம் வயிற்றுக்குள் அப்பெண்டிக்ஸ் என்ற ஒன்று மட்டும் மிச்சமாக இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது விலங்கின் எச்சமாக. 
 
இதே போன்ற பரிணாமத்தின் வளர்ச்சியாக எதிர்காலத்தில் இன்னபிற உறுப்புகள் தேவையின்றிப் போவதற்கு வாய்ப்புகள் உள்ளன. காது மடல், புருவங்கள் இல்லாது போதல் மற்றும், அதீத ஆராய்ச்சிகள் மற்றும் தீவிர கண்டுபிடிப்புகளுக்கு ஏதுவாக மூளை தன் அளவைக்காட்டிலும் கூடுதல் ஸைஸில் பெருப்பதால் தலை வீங்குதல் என்ற மாற்றங்கள் உருப்பெற்று ஏலியனாக பரிணமிக்கும் என்பது அவர் வாதம். 
 
மேலும் உலகெங்கிலும் ஏலியன்களைக் கண்டோம் என உறுதியுடன் கூறியவர்களும் இதே போன்ற தோற்றத்தை தான் சொன்னதாக பல இடங்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. எங்கோ பல்லாயிரம் ஒளியாண்டு தொலைவில் வசிக்கும் ஒரு உயிரினம் பூமியில் பரிணமித்து வரும் உயிரினத்தைப்போல அல்லது எதிர்காலத்தில் எப்படி இருக்கப்போகிறோம், உடலில் என்னென்ன மாற்றங்கள் வரக் காத்திருக்கின்றன என்பதை உறுதி செய்யும் விதமாக இருந்துதான் ஆக வேணும் என்ற எந்தக் கட்டாயமுமில்லை. 
 
சரி அப்புறம் ஏன் நம்மை ‘விசிட்’’ செய்கிறார்கள் ஏலியன்கள் ? அவர்களிடம் இருக்கும் அதி நவீன கருவிகளைக்கொண்டு காலத்தின் பின்னோக்கிப் பயணித்து அவர்களின் மூதாதையர் எப்படி இருந்தனர் என்பதைக் காண வந்தவர்களாக இருக்கும்,. ஒரு க்யூரியாஸிட்டி தான் வேறொன்றும் இல்லை. இதே போன்று காலக்கருவி இருக்கும் பட்சத்தில் நம்மாலும் பின்னோக்கி 1.5 பில்லியன் ஆண்டுகள் வரை பயணித்து நமது மூதாதையர்கள் எங்கனம் இருந்தனர் என்று ஆப்ரிக்கா சென்று ஆராயலாம். மேலும் அவர்களும் இப்போது நம்மைப் போலவே அவர்களுக்குள்ளாக பேசிக்கொள்வார்கள் ஏலியன்கள் நம்மை வந்து பார்த்து சென்றனர் என்று.
 
புத்தகத்தின் முதல் அத்தியாயம் மட்டும் பகிரங்க வாசிப்புக்கு இலவசம். முழுமையாக வாசிக்க வேணுமெனில் கிண்டில் பதிப்பு கிடைக்கிறது அமேஸானில்.
 
UFO unidentified Flying Objects என்ற பதத்தையே மாற்றி புத்தகம் முழுக்க IFO Identified Flying Objects என்றே குறிப்பிடுகிறார் ஆசிரியர்.!
 
Identified Flying Objects: A Multidisciplinary Scientific Approach to the UFO Phenomenon
- Dr. Michael P. Masters
 

 

Thursday, November 19, 2020

கொரோனா டெஸ்டிங்

 


கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப்பிறகு எச்டிஎஃசி வங்கிக்கு சென்றேன். போயே ஆகணும்ங்கறதால. வழியில் வழக்கம் போல சொற்ப சனம் தான் நடமாடுது. வழியில் எட்டாவது வரை கற்பிக்கும் ஒரு கார்ப்பரேஷன் பள்ளி நிரந்தரமாக மூடப்பட்டு மரத்தின் இலைகள் எல்லாம் உதிர்ந்து கிடக்கிறது. எப்போதும் வாய்ப்பாடு சத்தம் கேட்கும் அந்தப்பக்கம் போகும் போதெல்லாம். கொஞ்சம் எட்டிப் பார்த்தால் பிள்ளைகளெல்லாம் ஒன்றுக்கொன்று அடித்து விளையாடிக் கொண்டிருக்கும். இப்போது கதவு துருப்பிடித்து அடைத்துக் கிடக்கிறது. ஒரு ஏரோநாட்டிகல் காலேஜ் ஒன்று அதனையடுத்து இருக்கும். காவலாளி மட்டும் உட்கார்ந்து கொண்டிருந்தார் அங்கு.

கலாமந்திர் சேலைக்கடை அப்படி ஒரு கூட்டம் அள்ளும் எப்போதும். இத்தனைக்கும் சர்வீஸ் ரோட்டில் தான் இருக்கிறது. பார்க்கிங் வசதி இல்லை அத்தனை கார்களும் ரோட்டில் நிறுத்தி வைத்து ரகளை பண்ணுவார்கள். அந்த இடத்தை கடந்து செல்வதற்கு எப்படியும் பத்து நிமிடம் ஆகிவிடும். இன்றைக்கு ஒரு ஈ காக்கை கூட இல்லை. கடை திறந்து தான் இருக்கிறது. வழியில் போகும் பேருந்தில் ஓட்டுநரைத்தவிர இரண்டே இரண்டு பேர் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து செல்கின்றனர். வங்கி, உள்ளே நுழைய எத்தனித்தேன், கூடவே இருக்கும் ஏடி எம்’மில் வழக்கம் போல பேனா இல்லை. உள்ளே சென்றே ஆக வேணும். எண்ணி நான்கு பேர் அமர்ந்திருந்தனர். அத்தனை பேரின் முகத்திலும் மாஸ்க் இல்லை. ஏசி ஓடிக் கொண்டிருக்கிறது. பெங்களூரில் வெய்யில் இல்லை நான்கு நாட்களாக .வெளியே 22டிகிரி தான். இருப்பினும்.

உள்ளே நுழையும் போது யாரும் கண்டு கொள்ளவேயில்லை. சலான் எழுதிக்கொண்டிருக்கும் போது மெசெஞ்சர் அருகில் வந்து கைகளில் தெர்மாமீட்டரை வைத்துப் பார்த்தார். என்னைத் தொடாமல். ஹ்ம்.. என்றவனை ’ருக்கோ ருக்கோ’ என்று கட்டாயப்படுத்தினார். கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டார். ஒன்றுமில்லை போலருக்கு. ஹிஹி.. சலானை நிரப்பி பெட்டியில் போட்டு விட்டு வந்தேன்.

பிரிட்ஜ் ஏரியாவில் மூன்று இடங்களில் கொரோனா டெஸ்டிங் மையங்கள் ,போறவாறங்கள் எல்லாரையும் ’டெஸ்டிங் மாட்தீரா சார்? சேம் டே ரிசல்ட் பரத்தே’ நிம்தே மொபைல் நம்பர் கொடி’ என்று அழைத்துக் கொண்டிருந்தனர். முழு கவச உடையுடன் அத்தனை உபகரணங்களுடன் அமர்ந்து இருக்கின்றனர். கார்ப்பரேஷன்ல இருந்து வந்திருப்பார்கள் போலும். நான் பிறகு வருகிறேன் என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். இதுவரை டெஸ்டிங் பண்ணவுமில்லை, மாதிரி கொடுக்கவும் இல்லை. அப்பார்ட்மெண்ட் மீட்டிங்கில் ஒரு முறை பேச்சு வந்தது. கார்ப்பரேஷன் கட்டாயப்படுத்துகிறது. பிரிட்ஜ் ஏரியாவில் இருக்கும் அத்தனை அப்பார்ட்மெண்ட் வாசிகளும் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேணும், என்று நாட்களும் குறித்தனர். அப்படித்தவறினால் காவிரி (குடி தண்ணீர்) கனெக்ஷன் நிறுத்தப்படும் என்றெல்லாம் எச்சரிக்கை வந்தது. இப்போது ஒன்றுமில்லை.

இன்றோடு ஒன் இயர் அனிவர்சரியாம் கொரொனாவுக்கு ...ஹ்ம்.. #கொரோனாடெஸ்டிங்

Sunday, November 15, 2020

வானம் வசப்படும்

 


சூரரைப்போற்று , நானும் பார்த்தேன். சூர்யாவைப் போற்று. அது தான் சரி படம் முழுக்க சத்யா’ கமல். தோற்றமும், ஒப்பனையும், தலைமுடி பாணியும், நடிப்புமென சூர்யா நகல் எடுத்திருக்கிறார்.பயோபிக் என்றால் அப்படியேதான் அட்சரம் பிசகாமல் எடுக்க வேணும் என்று அவசியமில்லை. கொஞ்சம் கற்பனை கலந்தால் தான் உணமையையும் கேட்க பார்க்கத் தோன்றும்.

நிறைய எழுதிவிட்டனர் அத்தனை பேரும். எல்லாரும் எழுதாத ஒன்றை எழுத வேணுமெனில் , சூர்யாவின் அப்பா யார்.? வாத்தி ரெய்டுடா. அதே போல அந்த காளி கேரக்டர், அற்புதமான பொம்மி வலுவான திரைக்கதை. சொல்லுவதில் எந்த குழப்பமும் இல்லை. கூடவேயிருந்த அந்த நண்பர் யார்,? மல்லையாவின் மீட்டிங்கிற்குப்பிறகு திருகி வெளியேறும் நிலையில் சூர்யாவை நீயெல்லாம் என்னடா நடிக்கிற என்று கேட்கிறார். பொம்மி எப்போதும் புறமுதுகு காட்டுகிறார். சூர்யா ஒவ்வொரு முறை தோற்று வரும்போதும். அதை உணர்த்த. ...அப்படித்தான் நான் பார்க்கிறேன். 

 

அதேபோல அவசரமான ஒரு ஃபோன் காலில் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பும் சூர்யா, அபர்ணாவை அப்படியே விட்டு விட்டு செல்கிறார். சூழல் கருதி மன்னிக்கலாமென நினைக்கும் போது , குற்ற உணர்வில் சூர்யா திரும்பிப் பார்க்கிறார், பொம்மி ‘இல்ல நான் போய்க்கிறேன் ஆட்டோ பிடித்துக் கொண்டு என்று. அவசரமா போறேன் நீ போய்க்கொ என்று என்று சூர்யா சொல்லவில்லை அப்படி சொல்லி யிருந்தால் அது இரண்டு பேரின் கேரக்டர்களுக்கு பொருந்தியிருக்காது இதுதான் ரியாலிட்டி. நல்ல புரிதல் இருக்கிறது தம்பதிகளிடம். இது இருந்தால் போதும் வாழ்ந்து விடலாம் எவரும்.

எத்தனையோ பேர் பொண்டாட்டிய உக்காத்தி வெச்சு சோறு போட்றான், அது மாதிரி புருஷனுக்கு நீ சோறு போடேன். ஆஹா. வசனம் விஜயகுமார் – அவரின் உறியடி சொல்லியடித்த படம் யாரும் கண்டு கொள்ளவேயில்லை.


 டிக்கெட்டிற்கு பணமில்லை என்ற காட்சி அமைத்ததை என்னால் ஏற்க முடியவில்லை. ஒரு ஃபைட்டர் பைலட், அவர்களுக்கென சில இட ஒதுக்கீடுகள் இருக்கக்கூடும். அதிலும் அதே துறையிலிருப்பவர். அப்பாவை முறுக்கி கொண்டு இருந்தவனை அவர் மகனைப்பற்றி என்ன நினைத்திருந்தார் என்பதை ஊர்வசி காகிதங்களை சூர்யா மீது விசிறியடிக்கும் காட்சிக்கென, அந்த அழுத்தத்துக்கென அமைத்ததிற்கான அடிப்படையாகத் தான் பார்க்கவியலும். #வானம்வசப்படும்

 


 

Saturday, November 14, 2020

பறவை புட்டிகள்

 



இந்த ஆண்டு தீபாவளிக்கு துணிமணி எதுவும் எடுக்கவில்லை. எடுத்தாலும் எங்க போட்றது? இருக்கிற ரெண்டு வேட்டிய மாத்தி மாத்தி கட்டிக்கிட்டு வீட்டுக்குள்ளயே உட்கார்ந்து வேலை பாத்துக்கிட்டு இரூக்கிறேன். வாங்கின ஜீன்ஸ்/டீ ஷர்ட்டெல்லாம் ஹேங்கர்ல அழகாத்தொங்குது.. அதான் இந்தாண்டு இந்த ரெண்டு ”பறவை புட்டிகள்” வாங்கினேன். அமெஸான்ல. இதெல்லாம் வெளிநாட்டில் மட்டுந்தான் கிடைக்குமாயிருக்கும்னு நினைத்துக் கொண்டிருந்தேன்.

சும்மா தேடிப்பார்க்கலாமென நினைத்த போது கிடைத்து ஆணை கொடுத்தேன் மிகச்சரியாக இந்த தீபாவளியன்று இன்று கைக்கு கிடைத்தது. வீட்டில் மூன்று உப்பரிகைகள் சிறிதும் பெரிதுமாக. இருப்பினும் அத்தனையும் க்ரில் வைத்து மூடி இருக்கிறது, காககையும் உள்ளுக்குள் வர் அஞ்சும்...மேலும் உள்ளே கூட வர வழியில்லை. செடி கொடி படர மட்டுமே பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது. நானும் எத்தனையோ செய்து பார்த்தேன். காகிதத்தட்டுகளை வைத்து, பின்னர் பிரியாணி வாங்கி வந்த பிளாஸ்டிக் பெட்டிகளை க்ரில் மேல் வைத்து பறவைகளுக்கு உணவளிக்கலாமென. எல்லாம் ஒரு காற்றில் அடித்துக் கொண்டு போய் விடும். அத்தனையும் மரங்களடர்ந்த சோலை எல்லாம் வீட்டின் முற்றத்தில் இருக்கும் நந்தினி பால்கழகத்தின் கிருபை.

இதில் இரண்டு பறவை புட்டிகளுக்கும் கொக்கி கொடுத்திருக்கிறான். அதனால் க்ரில்லில் தொங்க விட முடியும். மேல் மூடியைக்கழற்றி தானியத்தை நிறைத்து பின்னர் மூடி தொங்க விடவேண்டியது தான், இருப்பினும் பயம் எங்கு காற்றில் விழுந்து விடுமோவென. இந்த இரண்டு புட்டிகளிலும் தானியம் மட்டுமே இடவியலும். நீரளிக்க ப்ளாஸ்டிக் பெட்டிகளை வைத்துக்கொள்ளலாமென்று இருக்கிறேன்.

பறவைகளுக்கு என்னென்ன உணவளிக்கலாமென இணையம் முழுக்க தேடி எடுத்திருக்கிறேன். நானுண்ணும் அதே சிறு தானியங்களை கொடுக்கலாமென போட்டிருக்கிறார்கள். ஆதலால் பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்பலாம். செல்லம்மா அன்றைய பகல் பொழுது உணவிற்கென அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி வைத்திருந்த அரிசியை குருவிகளுக்கு இரைப்பான் பாரதி. இங்கே இவை எதோ என்னாலியன்றது.


 பறவைகளைக் கூண்டில் அடைத்து அவை கிறீச்சிடுவதையும் , உணவுக்கு ஏங்குவதையும் காண ஏனோ மனம் ஒப்பவில்லை. அருகிலேயே கூண்டு விற்கும் கடை இருந்தது. அந்த வழி போகும் போதெல்லாம் பார்ப்பேன். திறந்து விட்டு விடலாமெனத்தோன்றும். கொரோனா காலத்தில் அதுவும் அடைபட்டு விட்டது.

வீட்டைச் சுற்றி மைனாக்கள் இஷ்டம்போலுண்டு. புறாக்கள் எப்போதும் வீட்டின் முட்டுச் சந்துகளில் குலவித்திரியும். கழுகுகளுக்கு பஞ்சமில்லை. எப்போதும் கதவைத்திறந்தால் கருடபகவானின் தரிசனம் தான் தினமும். காக்கைகள் மதிய வேளையில் கிளைகளிலமர்ந்து கரைந்து கொண்டேயிருக்கும்.

காடெங்கும் சுற்றித்திரிந்து விட்டு வரும் பறவைகள் விருப்பிருப்பின் நானளிக்கும் உணவையும் உண்ணட்டும். அத்தனை பெரிய ஆகாயம் விரிந்து கிடக்கிறது. ஊரெங்கும் கிடைக்கும் உணவு. காடெங்கும் கிட்டும் கனிகள்,. அவற்றோடு இந்தச்சின்னப்பயலின் சிறுதானியமும் உணவாகக் கூடும் என்ற ஆசை தான், வேறென்ன?

நீங்களளிக்கும் உணவை உண்ண பறவைகள் வருவதற்கு ஒரு வாரம் கூட ஆகலாமென போட்டிருக்கின்றனர். இங்கு கிடைக்கிறது என அறிய அவை நேரம் எடுத்துக்கொள்ளுமாம். ஹ்ம்... காத்திருப்பது மட்டும்தான் இப்போதைக்கு என்னாலியலும்.

#பறவைபுட்டிகள்

 




Monday, October 26, 2020

'I Love You Baby’

 


'I Love You Baby’ என்ற பாடல் டிக்டாக்கில் மிகப் பிரபலமாம். நான் டிக்டாக் ஆப் எப்போதும் நிறுவியதில்லை. இந்தப்பாடல் மில்லியனுக்கும் கூடுதல் மீள் பகிரப்பட்ட பாடலாம். கேட்கவும் ரம்மியமாக இருக்கிறது. இதை ஒரு விளம்பரத்தின் பின்னணிப்பாடலாகவே கேட்டுக் கொண்டிருந்தேன் எப்போதும் வெளிநாட்டு விளம்பரங்களுக்கு பெரும்பாலும் ஆங்கிலப் பாடல்கள் ஒலிக்கும் , ana_d_armas என்ற ஒரு பெண்மணி (ஹிஹி... இவாளப்பாத்துட்டு தான் பாட்டே கேட்டேன்...ஹிஹி இதே ஐடி தான் இன்ஸ்டாவிலும்..இஹி இஹி..) இப்ப ஜேம்ஸு பாண்டூ படத்துலல்லாம் (No Time to Die) நடிக்கிறாராஆஆஅம்...

அப்படியான ஒரு விளம்பர ஜிங்கிள்’ஆக இது இருக்கலாம் என நினைத்தேன், பின்னரும் ஒரு நாள் சேனல் விஎச்1-ல் இந்தப்பாடல் ஒலித்தது. ஆஹா... Surf Mesa என்ற பாடகரின் ily என்று ஆரம்பிக்கும் பாடல். கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்னர் வெளியான பாடல். இணையமே கெதின்னு மூழ்கிக்கிடக்கிறதால (கரோனாவுக்கு நமஸ்தே) இப்ப இந்த மாதிரி பாட்டெல்லாம் உந்தித்தள்ளி மேல கொண்டு வருது. எல்லாம் கொரொனோவின் ‘கிருப கிருப’ தான் ஹிஹி.. இதே பாட்டை அப்படியே ஒருமணி நேரத்துக்கும் கூடுதலாக ஓட விட்டு ஒரு வீடியோ சீக்வென்ஸ் கெடக்கு யூட்யூபில். முன்னால Continuing Music என்று ஒரு ஜானர் ரொம்ப பிரபலம்.. அது மாதிரி இதுவும்! ஐ லவ் யூ பேபி.! #ily

https://youtu.be/SfQJiGJO5Bo - விளம்பரம்
https://youtu.be/89degLrNZM8 - பாடல்



Wednesday, October 7, 2020

கடைசி வரை - பாவண்ணனின் சிறுகதை

 

பாவண்ணனின் சிறுகதை ’கடைசி வரை’ வாசித்தேன் பதாகை இணைய இதழில். அத்தனை விவரிப்புகள் அத்தனையும் காட்சிக்கோவையாக மனதுள் வந்து நிற்கிறது. ஒரு எழவு வீட்டை இவ்வளவு அட்சர சுத்தமா விவரிக்க முடியுமா ? பேண்டு வாத்திய குழு, பறையடிப்பவர்கள், உறவுக்காரர்கள் ஊர்க்காரர்கள் , அவர்களுக்கிடையேயான உரையாடல் எதிலும் செயற்கை இல்லை. அந்த பேண்டு குழுவினரின் பாடல் தெரிவுகள் அபாரம்.  அண்ணனுக்கு இந்தப்பாடட வாசிச்சாதான் தூக்கமே வரும். வாசித்துக்கொண்டிருக்கும் போது ஒரு கலைஞனாக மட்டுமே அந்த சூழலில் இயங்க வேண்டிய கட்டாயத்தில் அந்த கிளாரினெட் கலைஞர். ஹ்ம்...அற்புதம்.

ஒரு முதுமையடைந்த  கீதாரி’யின் இறப்பு. மகன்கள் யாருமில்லை மூன்று மகள்கள் மட்டுமே. அத்தனைபேரையும் மணமுடித்துக்கொடுத்து விட்டு வயது மூப்பில் இறந்து போகிறார். துணைக்கென யாருமில்லை. சந்தையில் கிடைத்த ஒரு சிறுவன் மட்டுமே துணை.அவனுக்கோ ஒரு விபரமும் தெரியாது. அவர் இறந்தது கூட. கடைசி மயானக்காட்சிகள் எல்லாம் கண்ணுக்குள் நிற்கின்றன. முடிவு என்னவோ எனக்கு சம்மதமில்லையெனினும்  விவரித்த விதம், ஊர்க்காரர்கள்,பேண்டு வாத்திய கோஷ்டி தேர்நீர் கொண்டுவந்து கொடுக்கும் சிறுவர்கள் என அப்படியே ஒரு இழவு வீட்டின் கோலங்களை காட்டுகிறது.

https://padhaakai.com/2020/10/05/%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88/