Monday, July 27, 2020

ரஹ்மான்

கொஞ்சம் வளர்ந்துவிட்டால் யாருக்கும் பிடிக்கத்தான் செய்யாது. ஹ்ம் =இதென்ன புதியதா ? இனியும் எனக்கே வாய்ப்பு தரவேணும் என்ற விருப்பத்தை நான் எதிர்பார்க்கவில்லை. அவரைப்போல எத்தனையோ இளைஞர்கள் வரத்துடிக்கும் துறை அது. பெருவாரியான ஆதரவைப் பெறுவது என்பது ரசனையைப்பொருத்த விஷயம். இவருடன் அவர் காலத்தில் வந்த இளைஞர்களின் இசையால் ராசைய்யாவின் வாய்ப்புகள் குறையத்தான் செய்தது. வயதானால் வழி விடவேணும். புதியவர்களை அறிமுகப்படுத்தும் சூழலுக்கு யாரும் எதிராக இருக்க முடியாது.

இனியும் பிறர் கூறும் சூழலுக்குத்தான் இசையமைக்க வேணும் என்ற கால கட்டத்தை எப்போதோ கடந்து விட்டார். தாமாக உருவாக்கலாம். உண்மைக் கலைஞனை யாராலும் தடுக்க இயலாது. தாமாக தனிப்பாடற் திரட்டுகளை வெளியிடலாம். திரையில் தான் இசைக்க வேணும் என்ற கட்டாயமும் இல்லை. இவரே ஒரு சிறு குழுவாக ,வெளி நாட்டவரைப் போல இசைத்துக் கொண்டிருந்தவர் தானே ? எப்பக்கமும் செல்லவியலாதவாறு கட்டுப்பாடுகள், அழுத்தங்கள் கொடுக்கப் படுகிறது , அப்படி செயல்படுத்த தொடங்கியிருக்கிறார்கள் என்றால் அதை எதிர்த்து குரல் கொடுப்பது சரி. அங்கனம் ஏதும் இருப்பதாக தோணவில்லை...ஒரு துறை மட்டுமல்ல, இசை பரந்து விரிந்த வானம் கொண்டது. #ரஹ்மான்

https://www.facebook.com/RamChinnappayal/posts/10217841002165442

Sunday, July 12, 2020

லவ்ஜிஹாத்


சூஃபியும் சுஜாதயும் கண்டு. இதற்குப்பின்னாலுள்ள அரசியலுக்கு நான் போக விரும்பவில்லை. ஒரு காதல் என்ற அளவிலே அணுகலாம். இருப்பினும் இவ்வளவு அழுத்தமாக இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு படம் கூட தமிழில் ஏன் வருவதில்லை. காதலுக்கே கரும்பு வில் கொடுப்பவர் என்று அழைக்கப்படும் பாரதி ராஜா கூட கிறிஸ்துவப் பெண்ணும் ஐயர் பையனும் என்றுதான் எடுத்தார். ஒரு தயக்கம் ஏன் தமிழுக்கு ஏன் இந்த நிலைமை ? 

பரவலாக தமிழில் பேசப்படுவதே இல்லை. டபூ என்று ஒதுக்கி வைக்க, நமக்கெதுக்கு வம்பு என்றளவிலே ஒதுங்கிச்செல்லும் பாங்கு தான் தமிழில். பாட்ஷாவின் நட்பாக கொஞ்சக் காட்சிகளிலேயே இஸ்லாமியர் தோன்றுவார். பின்னர் அவரும் மறைந்து விடுவார். பாவ மன்னிப்பில் கையில் டஃப்லி வைத்துக்கொண்டு ’எல்லோரும் கொண்டாடுவோம்; தான் கடைசியாக ஒரு இஸ்லாமிய கதாப்பாத்திரம் பேசியது. கமலின் பாபநாசத்தில் கூட குடும்பமே மூலக்கதை மலயாளத்திலிருந்து இந்துக்குடும்பமாக மாற்றப்பட்டு வெளிவந்தது. விஸ்வரூபம் பற்றி பேசவே வேண்டாம். இதுவே அந்த சூஃபியாகப் பட்டவன் ஒரு பிள்ளையார் கோயில்ல மணியடிச்சுக் கிட்டு இருந்தவன்னு படத்துல காட்டியிருந்தா இவ்வளவு விவாதங்களுக்கு வழியே இருந்திருக்காது.

ஐம்பதாண்டுகள் திராவிடம் இறைமறுப்பை மட்டுமே பறைசாற்றிக் கொண்டிருந்தது. பொதுவுடைமை மட்டுமே மதம் சம்பந்தமான குறுகிய மனப்பாங்கை வென்றெடுத்திருக்கிறது. இன்னமும் வேறொரு மதம் சார்ந்த பெண்ணை மணம் முடிப்பதில் தான் சினிமா சுழன்று கொண்டிருக்கிறது என்பது பத்தாம் பசலித்தனம். இருபத்தியோராம் நூற்றாண்டிலும் தொடரும் நமது சாபக்கேடு.

படத்தைப்பற்றி என்ன சொல்ல? அந்தப்பெண் ஏற்கனவே அபிநயித்த அத்தனை படங்களிலும் சிறப்பில்லை. இங்கும் அதுவே, நன்கு நடனமாடத் தெரிந்த ஒரு மங்கையை தேர்ந்தெடுத்திருக்கலாம். காதல் ஓவியம் ராதா போல தடுமாறுகிறார். ஒரு ஈர்ப்பு வரவேயில்லை. வாய் பேசாத கதாபாத்திரம் என்றால் சாவித்திரி போன்றோருக்கு லட்டு தின்னக் கொடுத்தது போல ஆகும். அத்தனையையும் அபிநயித்துக் காட்டி மனதைக்கொள்ளை கொண்டு விடுவார்.கண்களில் ஏக்கம், நடையில் துவளல், சைக்கிள் ஓட்டிச்செல்கையில் நளினம் எதுவுமே இல்லை. சூஃபியை மிமிக் செய்வதாக நினைத்துக் கொண்டு பெருவிரல் ஊன்றி நிற்க முயல்கிறாள், தடுமாறி விழுகிறள், நடனமங்கைக்கு இஃதுவொரு பெரிய விஷயமா ? நம்ப முடியவில்லை. தேய் வழக்கில் தான் சொல்லியாக வேணும். குருவி தலையில் பனங்காய்.

சூஃபியாக அபிநயித்தவன் கொள்ளாம். அந்த பாத்திரத்துக்கேயான உடல்மொழி. ஃபக்கீர் போல, சூஃபி இயற்கையை ரசிப்பவன். கப்ரீஸ்தானில் (மயானம்) விழுந்து கிடக்கும் பழங்களைத் தின்பவன். (யாரும் தொடக்கூட மாட்டார்கள்) இதொக்க செய்யாணுங்கில் வேறே மார்க்கங்களுண்டு என்று க்ளாரினெட் முதியவர் கூறுகையில் அவனின் முக பாவம். ”இருபத்தியரண்டு எண்ணு இத்தற பங்கியாயிட்டு பறையுன்னது லோகத்துல ஆத்யமாயிட்டு ஞான் கண்டது” என்று சொல்லும் போது என்ற சிலச்சில நகாசுகள். அத்தனையிலும் அற்புதம்.

இசை பற்றி சொல்லியே ஆகவேணும். இந்த படத்திற்கு எனக்கென்னவோ ரஹ்மான் இசைத்திருக்க வேணும் என்றே படம் முழுக்கத் தோணியது அவரே ஒரு சூஃபி தான். எனக்கு அத்தனை இந்த அரேபிய/சூஃபி இசையில் பரிச்சயமில்லை. இருப்பினும் அவர் இசைத்த டெல்லி6 அர்ஸியான் பாடல், மற்றும் அந்த ’குன் ஃபாயா குன்’ பாடலெல்லாம் இந்த வகையில் (ஜானர்) ’யூங் ஹி சலா சல்’ (இந்தப்பாடலே சூஃபி இசையின் மீளுருவாக்கம் தான் ) இல் வரும் அந்த கைலாஷ் கேரின் குரலில் ஒலிப்பவை, ’க்வாஜா மேரே க்வஜா’ எல்லாம் அந்த இசையின் உச்சம் என்றே சொல்வேன். மதம் சார்ந்த இசை என்றெல்லாம் ஒன்றும் இல்லை. சூழலில் வளர்ந்தவர்கள் தழுவிக் கொள்வது தான் என்னைப்பொருத்த மட்டில். 

இங்கும் ஒரு அற்புத தருணம் வருகிறது. அவர் தன்பாட்டில் கிளாரினெட் இசைத்துக் கொண்டிருக்க இவள் அபிநயம் பிடிக்கிறாள். அந்தப் பகுதியை மட்டும் சிறு துண்டாக ஆக்கி சிலர் யூட்யூபில் வெளியிட்டிருந்தனர். மன்னிக்கவும் என்னைக் கவரவில்லை அது. ஜீவனில்லை அதில். என்ன காரணம் , இந்த எதிர்பார்ப்பிற்கும் வெகு கீழே அபிநயித்த அந்தப் பெண்ணா இல்லை, அந்த சூஃபி இசைத் தொகுப்பினை தேர்ந்தெடுத்த இசையமைப்பாளரா ? காரணம் தெரியவில்லை. இந்த இடம் சூழல்தான் படத்தின் மையக்கரு. அவள் அவன் பால் ஈர்க்கப்பட்டதனால் அந்த இசையை இன்னமும் கேட்டு ரசித்து உயிருள் பொதிந்து வைக்க ஆசைகொண்டு அபிநயிக்கிறாள். இயக்குநர் நினைத்த அத்தனையையும் விளங்கிக் கொண்டு எதிர்பார்ப்புடன் அமர்ந்து ஆவலாக பார்க்க முற்பட்டவனுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. தமிழில சூஃபிகளும் , இசை ஞானிகளும் இருக்கிறாங்கப்பா.. பயன்படுத்துங்க....

மிகச்சரியாக தமக்கிட்ட பணியினை சிறப்பாக செய்தவர் கணவனாக வரும் ஜெயசூர்யாவும் அந்த வெட்டியானாக நடித்தவரும்,அமைதியாக தம் கண்ணில் எந்தச்சலனமுமின்றி புறத்திலிருந்து வரும் எதுவும் தம்மை பாதிக்காது என்று படம் முழுக்க உலவும் அந்த சூஃபியும் #லவ்ஜிஹாத்


.

Sunday, July 5, 2020

விண்வெளிப்பயணம்


’ட்ரேஸி கால்ட்வெல்' விண்வெளி வீரர் , பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியைப் பார்வையிடுகிறார். ஒரு முறை இது போன்ற விண்வெளிப் பயணங்களுக்கு சென்று திரும்பி வரும் அனைவரும் சொல்லி வைத்தாற் போல மிகவும் ஆன்மிகப்பற்றாளராக மாறிவிடுவதாக ஒரு கணிப்பு இருக்கிறது. சென்ற மாதம் ஸ்பேஸ் எக்ஸ் விண்ணில் ஏவிய தமது ராக்கெட்டை முழு இரவும் உட்கார்ந்து யூட்யூப் நேரலையில் பார்த்துக்கொண்டு இருந்தேன். எல்லாம் எங்கனமாவது இங்கிருந்து விடுபட்டுவிட் மாட்டோமா என்ற ஆதங்கம் தான் அங்கனம் யோசிக்க வைக்கிறது. எனினும் சென்று வந்தவரோ நேரெதிர் மன நிலையில் இருக்கின்றனர் மீதமுள்ள வாழ்நாள் முழுதும். 

க்ராவிட்டி படம் முழுக்க விண்வெளி நிலையப் பிரச்னைகளை வைத்து எடுக்கப் பட்ட படம். அதில் ஏகப்பட்ட குளறுபடிகளில் தலைவி சான்ட்ரா புல்லக் தனியாக மாட்டிக்கொள்வார். முழுக்க முழுக்க மனப்பிறழ்வில் அவருக்கு வரும் கனவில் ஜார்ஜ் க்ளூனி சொல்வார் ‘இங்கு உன்னை யாராலும் தொந்தரவு செய்ய இயலாதென’ உண்மைதானே ,இங்கிருந்து அங்கு வரை செல்ல முடிந்தாலல்லவா தொல்லை தர முடியும். இருப்பினும் ஒருவாறு தப்பிப் பிழைத்து பூமியில் ஒரு நதியில் வந்து விழுவார் சிறு பாராச்சூட் மூலம். நீந்திக்கடந்து எழுந்து வரும் தருணத்தில் அந்த கரையின் ஈரமணலை அள்ளிப் பிடிப்பார். தம் உள்ளங்கையால் ...ஹ்ம்.. அதான் பூமி நமது இல்லத்தின் மீதான பற்று. #விண்வெளிப்பயணம்

.