Thursday, June 16, 2016

நெருப்புடா...


நெருப்புடா - perfect rock, சரணங்களில் rap effect- பெர்ஃபெக்ட் ராக்' கேட்க யாருமில்லை என்பதால் கொஞ்சம் ராப்'கலந்தே இப்போதெல்லாம் இசைக்கின்றனர். முழு ராக்'கில் இசைத்திருக்கக்கூடாதா என ஏங்கவைக்கும் பாடல்.

'பொதுவாக என் மனசு தங்கம்' பாடல் தான் வணிக நாயகனுக்கு இன்று வரை முகப்புப்பாடலாக இருந்தது. ( இடையில் வந்த  ஆர்ப்பாட்ட இசை தளபதியில் வந்த 'ராக்கம்மா கையத்தட்டு' ) கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது 'நெருப்புடா'. இடையில் ரஹ்மான் இசைத்த 'ஒருவன் ஒருவன்' கூட வழக்கமான ராசைய்யாவின் பாணியை ஒத்தது தான்.

அந்தக்காலங்களில் எம்ஜியாருக்கென முகப்புப்பாடல்கள் இசைத்த அத்தனை இசையமைப்பாளர்களும் ஒரே போன்ற பாணியை கைக்கொண்டனர் என்பதே உண்மை. எமெஸ்வி, கேவி மஹாதேவன் என யாருடைய பாடலைக்கேட்டாலும் ஒரே பாணியில் இசைத்திருப்பர். முதன் முறையாக கட்டுடைத்து ராக்/ராப்'பில் இசைத்திருக்கிறார் சநா. இப்பொது கொஞ்ச நாட்களுக்கு முன்னர் விஐபி'யில் தனுஷுக்காக தம்பி அநிருத் இசைத்திருந்தார் இதே பாணியில் ( வேலை இல்லாப்பட்டதாரீ ) . யுவனின் வானம் படத்தில் 'ஹூ ஆம் ஐ' பாடல் மற்றும் 'மெளனம் பேசியதே' படத்தில் 'சின்ன சின்னதாய்' பாடல் எல்லாம் மற்றும் தரண் குமார் இசைத்த விரட்டு படத்தில் இடம் பெற்ற ‘போதும் போதும்’ என்ற பாடல். ராக்' இசையை முயற்சி செய்தவை எனக்கூறலாம். இருப்பினும் யாரும் நெருங்கமுடியாத அளவு ஆர்ப்பாட்டம் இங்கு.

முக்கியமாக சில நண்பர்கள் குறிப்பிட்டது போல வழக்கமான எஸ்பிபி/மனோ என யாரையும் அழைக்காது புதுக்குரல்/முரட்டுக்குரல் ஒலிக்கிறது. வாயசைப்பு என ஏதும் இல்லையென்ற போதும் பின்னில் இசைக்கவும் இது போன்ற உறுதியான முடிவை எடுத்த சநாவுக்கும் ரஞ்சித்துக்கும் நன்றி அடுத்த கட்ட நகர்வு இது. இனியும் இது போன்ற பாடல்களை முகப்பிசைக்கென இசைத்தால் தான் உண்டு என ஓங்கி அறையும் இசை.

0:43,01:49,02:10,02:32,03:04 இந்த இடங்களில் பத்து செகன்டுக்கும் கூடுதலாக தளர்வுடன் இசைக்கும் அந்த எலெட்ரிக் கிட்டார் தந்திகள் நாயகனுக்கு வயசானாலும் இன்னும் மவுசு  குறையவில்லை என பறைசாற்றுகிறது. ஆர்ப்பாட்டமாக இசைக்கும் அந்த ரிதம் கிட்டார் 0:31லிருந்து 0:41 வரை அதிர வைக்கும் இசை. ராக்' கிட்டாரின் இலக்கணம் அது.இத்தனை உறுதியுடன் இத்தனை வேகமும் அதிரடியும் தமிழ் தாங்கும் என இசைத்திருக்கிறார். மடை கொண்டு அடைக்கவியலாத வெள்ளம் போல் எங்கும் நிற்காது சீறிப்பாயும் காட்டாற்று இசை.

01:28,03:13 -இல் அந்த சீழ்க்கை/விசில் ஒலியைப்பற்றிக்குறிப்பிட்டே ஆகவேண்டும். எல்லோரும் இப்பொது அதை பயன்படுத்துவதேயில்லை. சீழ்க்கை ஒலியைப் பயன்படுத்தியது ஒரு ரெட்ரோ ஃபீல் கொண்டுவரும் என்பதற்காகவே இசைத்திருக்கலாம். ஆமப்பா , ரஜினியே ஒரு ஆன்டிக் பீஸ்தானே மச்சி.. 'நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்' பாடல் முழுக்க கூடவே பாடியதே கடைசியாக நாம் கேட்டது அந்த சீழ்க்கை ஒலி, இப்போது கேட்க வாய்த்திருக்கிறது.பொதுவாக சீழ்க்கை ஒலியை அதிரடி இசைக்கென பயன்படுத்துவது என்பது ஒத்து வராத விஷயம்.இத்தனை மென்மை எங்கனம் ஆர்ப்பாட்டத்துடன் பொருந்தும்? ...ஹ்ம்..நாயகனின் கதா பாத்திரம் அங்கனம் இருக்கலாம் ...பார்ப்போம். ! #நெருப்புடா

Monday, June 6, 2016

இறைவி‬


மகளிர் மட்டும், அப்புறம் வீசேகர் எடுத்த சில திரைப்படங்கள், பாலச்சந்தரோட சில படங்கள் எல்லாமா சேர்த்து,படம் எடுத்த தன் கதையையும் சேர்த்து அடிச்சு கொழப்பி வெச்சிருக்கார் கார்த்திக். இத்தனை டெலிகேட்டான சப்ஜெக்ட்டை போற போக்கல சொல்லிட்டு போயிறலாம்னு நினைச்சிருக்கார் கார்த்திக். சாரி.எதுவுமே ஒரு ஒழுங்கிலில்லை. நிறைய நல்ல காட்சிகளும் அதைவிடவும் நிறைய சொதப்பல்களுமா அள்ளித்தெளிச்சா போல படம் வந்திருக்கு. கோயிலுக்குள்ள இருக்கும் அம்மன் சிலையை வெளிய எடுக்கிற மாதிரிதான் பெண் விடுதலையும்னு சொல்றார். இவ்வளவு தான் குறியீடு எல்லாம். 

அருள் (சூர்யா) தான் வாழ்ந்திருக்கார். பார்க்கில் விஜய் சேதுபதியுடன் பேசும் காட்சி கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம். இல்ல அருள் உன் படம் வெளிய வரப்போகுது இன்னும் நல்லா சந்தோஷமா சொல்லு, என்ற காட்சி, பின்னர் அந்தப்'பாரில் அடுத்த டைரக்டரைப்பற்றி பேசும் காட்சி,your ex would be's current husband எனும் காட்சி, கமலினிக்கு திருமண நிச்சயதார்த்த காட்சி,ஒவ்வொருமுறையும் அந்த நர்ஸ் வந்து அதட்டி விட்டுப்போகும் ஆஸ்பத்திரிக்காட்சி மற்றும் கடைசிக்காட்சிகள் என வாழ்ந்து தானிருக்கிறார் சூர்யா.வேறு யாரும் நெருங்கவியலாத நடிப்பு. 



மொத்தமாவே எல்லா ஆம்பளைங்களுக்கும் சொல்லி அழறதுக்கு (மட்டும் ) ஒரு பெண் தேவைப்படத்தான் செய்றா. மூணு பேரும் வடிவுக்கரசியிடம் வந்து சொல்லி அழும் காட்சிகள் அதை உறுதிப்படுத்துகின்றன. என்னை எவனுமே லவ் பண்ணல, கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கு எனச்சொல்கிறார் அஞ்சலி. கல்யாணம் ஆகிவிட்ட விசே'வை life is just a f&*^ எனக்கூறி திருப்பி அனுப்பும் மலர். அழகுப்பதுமை கமலினி. நடிக்கத்தான் வரல பாவம்.ட்ரைலர்ல எனக்கு செலின் மாதிரி தெரிந்தது . எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல அருள், உன்கூட இருக்கிறதா இல்ல வேண்டாமான்னு சொல்லும்போது மட்டும் பரவால்ல. ஒனக்கெல்லாம் பொண்டாட்டின்னு ஒருத்தி தேவையாடான்னு சொல்லாத மனைவிகளே தமிழகத்தில் இல்லை.

மழையில் நனைஞ்சா உடைகள் நனைந்துவிடும்ங்கற அளவிலான சுதந்திரம் பற்றி பேசும் பெண்கள். படத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் பெண் குழந்தைகளாகவே இருக்கிறது.

ரொம்ப யோக்கியமா பேசிட்டு கடைசில இவனும் இப்டித்தானான்னு ஆகும் வலுவான பாபி சிம்ஹா கேரக்டர்.அப்புறம் அந்தச்சித்தப்பா, பிறகு .சூர்யா குடித்துவிட்டு அழும் காட்சியில் ராதாரவியின் உடல் மொழி அபாரம்.பிசாசை விட அருமையாகச் செய்திருக்கிறார்.

நீளம் தேவைதான்..இருப்பினும் காட்சி ஒழுங்கின்மையால் போரடிக்கிறது. ஜிகர் தண்டாவில் நான் லீனியர் திரைக்கதை பேசின கார்த்திக்கா இது . இந்தப்படத்தையும் அதே நான் லீனியர் திரைக்கதை கொண்டு வடிவமைத்திருந்தால் எங்கேயோ போயிருக்கும். வழக்கமான திரைக்கதையால் வந்த வினை இந்தச்சலிப்பு. இத்தனை பேசினாலும் படத்தின் கேரக்டர்களின் பெயர் கொண்டு விமர்சனங்கள் எழுதப்படுகின்றன, அதுவே படத்தின் வெற்றி. ஆழப்பதியும் கேரக்டர்கள் நடிகர்களின் பெயரை முந்திக்கொண்டு பேசப்படுமானால் அது வெற்றி தவிர வேறேதுமில்லை. எடுத்துக்காட்டு 'மெட்ராஸ்', 'ப்ரேமம்' போன்ற திரைப்படங்கள். இறைவி என்பதற்குப்பதிலாக 'மனைவி' என்றே பெயரிட்டிருக்கலாம்.

இசை பேருக்குத்தான் சந்தோஷ் நாராயண். ரெண்டு படம் நல்லா வந்தா அப்புறம் சொதப்புறார்.கடற்கரையில் பாடும் பாட்டு/சிறைப்பாடல் என ஒன்றிரண்டு மட்டும் தேவலாம்.

பொண்ணுங்க எப்பவுமே சரியாத்தான் இருக்கிறார்கள். இந்தப்பயலுஹ தான் எப்பப்பாரு தப்பு பண்ணிட்டே இருப்பாங்ய.ஆண் நெடில் பெண் குறில்.

 .