Tuesday, April 14, 2015

அழைப்புமணி




வீட்டில் அடிக்கடி அழைப்புமணி ஒலித்தது, கதவைத்திறந்து போய்ப்பார்த்தால் யாருமே இருப்பதில்லை. இது எப்போதும் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டேயிருந்தது. யாரெனக்கண்டுபிடிக்கவே இயலவில்லை. என் வீட்டில் மட்டுமல்ல எதிர் வீட்டு மணியும் கூட. இரண்டு பேரும் ஒரு சேரக்கதவைத்திறந்து பார்த்துவிட்டு கொஞ்சம் சிரிப்புடன் மூடி விடுவது வழக்கம். யாராக இருக்கும் ? வேலைக்காரப்பெண்கள் எப்போதாவது தவறுதலாக இரண்டாவது மாடியில் உள்ள வீட்டின் கதவை திறக்க அழைப்பு மணி அழுத்தாது முதல் மாடியில் உள்ள எனது வீட்டிலேயே அழுத்திவிடுவது வழக்கம். திறந்து பார்க்கும்போது அவர்கள் வழிந்தபடி இல்ல மேல் வீடாக்கும்னு நினைச்சேன் என்று சொல்லி மன்னிப்புக்கேட்டுவிட்டுச் செல்வது வழக்கம். அப்படி கொஞ்ச நாள் நினைத்து அவ்வப்போது திறந்து பார்த்து ஏமாந்து போவது வழக்கமாயிற்று. இப்படி ஒரு நன்னாளில் ஒரு தடவை மணி அடித்தது. நானும் வழக்கம்போல் அந்த ‘மணி’யாகத்தான் இருக்கும் என நினைத்து திறக்காமலேயே விட்டுவிட்டேன். பின்னர் இரவில் என் நண்பர் ஃபோன் செய்து என்ன ராம் வீட்டுக்கு வந்து மணியடித்தேன் திறக்கவேயில்லையே என அலுத்துக் கொண்டார். எனக்கு பாவமாகப்போனது. இனியும் என்னைச்சந்திக்க வந்தால் அழைப்புமணிக்குப்பதில் எனக்கு மிஸ்கால் கொடுங்கள் என்றெல்லாம் முன்னேற்பாடு செய்து வைக்கவேண்டிய நிலை வரை போய்விட்டது. இருப்பினும் அந்த அழைப்பு சிகாமணி யார் என்ற ரகசியம் புரிபடவேயில்லை. கீழிறங்கிப்போய் செக்யூரிட்டியிடம் சொல்லிவைத்து விட்டு வந்தேன். ‘தேக்தா ஹூங்க் சாப்’ (பாக்றேன் சார் ) என்று அவனளவிலே என்னைச்சமாதானம் பண்ணி அனுப்பி வைத்தான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் அவள் ‘என்ன பிரச்னை, எதுக்கு இப்ப கீழ போய்ட்டு வர்றீங்க’ என்று கேட்டாள் ‘ஓயாம மணி அடிக்குதில்ல அதான்..செக்யூரிட்டிகிட்டபோய் என்னன்னு பாக்கச்சொல்லிட்டு வந்தோம்’ ‘வந்தோம்னா ‘, நானும் அந்த எதிர்வீட்டுக்காரரும்’ உங்களுக்கும் அந்த ஆளுக்கும் வேற வேலையே இல்லையா ? எப்பப்பாரு மணி மணின்னு, கழட்டிப்போட்றேன் இப்ப, யாரு இங்க வந்து குமியிறா தெனமும்?’ அப்புறம் யாரு வந்து அடிக்கிறான்னு பாக்றேன்’ என்றாள். இவளுக்கு நான் என்ன செய்தாலும் இப்படித்தான் எதாவது நொட்டைச்சொல் சொல்லிக்கொண்டே இருப்பாள்.

பிறகு நானும் அந்த எதிர்வீட்டு நண்பருமாகப்பேசி வைத்துக்கொண்டு வீட்டிலிருக்கும் நேரங்களில் கதவைத்திறந்தே வைப்பது என்று முடிவெடுத்தோம். குளுரு இங்க போட்டுத்தாக்குது. இதுல கதவவேற திறந்து வைத்தால் ? என்ன செய்வது..யார் அந்த தொந்தரவாளி எனக்கண்டுபிடிக்க இதை விட்டால் வேறு வழியில்லை.! கதவைத்திறந்து வைத்த நேரங்களில் ஒரு போதும் மணி ஒலிப்பதில்லை. இருப்பினும் என் எதிர்வீட்டு நண்பர் இன்னமும் சலித்துக்கொண்டார். உங்க வீட்டிலயாவது பரவாயில்லையே காயத்ரி மந்திரம்தானே ஒலிக்குது அத நாள் பூராக்கேட்கலாமே,என் வீட்டில டிங்க் டிங்க்னு துருப்பிடிச்ச இரும்புல கல்லக்கொண்டு அடிக்கிற மாதிரில்ல கேட்டுத்தொலையுது ? என்றார். ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு எனக்கு. இப்படி திறந்துவைப்பதும் பின்னர் மூடிவிடுவதுமாகவே கழிந்தது. நண்பர்கள் எல்லோருக்கும் மிஸ்கால் கொடுக்கச்சொல்லி விட்டதால் கொஞ்சம் நிம்மதி. இருப்பினும் கேபிள்காரர், டோக்கன் கொடுக்கவந்த பால்காரர் எல்லாம் வழியில் பார்த்து என்ன சார் கதவயே தெறக்க மாட்டேங்கறீங்க எனச்சலித்துக் கொண்டனர். அப்படியா அன்னிக்கி நான் வீட்டிலேயே இல்லையே என்று சொல்லிச்சமாளித்தேன்,

சில நாட்களாக அந்த மாயமணி அடிப்பது நின்றே போய்விட்டது. அப்பாடா தொல்லை விட்டது என அலுவல்களில் மூழ்கிவிட்டேன். ஒரு வாரம் கூட ஆகியிருக்காது. மீண்டும் தொடங்கிவிட்டது. ஒரு நாளைக்கு பத்து முறையாவது வீட்டில் காயத்ரி மந்த்ரம் ஒலித்துக்கொண்டேயிருந்தது. என்னடா செய்வது எனத்தெரியாது விழித்தேன். செக்யூரிட்டியிடம் என்ன சேதி எனக்கேட்டு வரலாம் எனக்கீழிறங்கிச் சென்றேன். அங்கே ஏற்கனவே எதிர்வீட்டு நண்பர் ஆஜர். என்னையும் பார்த்தவுடன் செக்யூரிட்டிக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அப்பார்ட்மெண்ட்டுக்குள் வருவோர் போவோர் , அங்கு குடியிருப்போர் தவிர, எல்லோரும் கையொப்பம் இட்டு செல்வது வழக்கம். அதையெல்லாம் சரி பார்க்கச்சொன்னேன், அப்படி ஒரு ஸ்ட்ரேஞ்சர்ஸும் வருவது போல தெரியவில்லை. இண்டெர்நெட் கனெக்ஷன்காரர்களும் அவ்வப்போது எலக்ட்ரீஷியன்/ப்ளம்பர் தவிர யாரும் வந்ததாக தெரியவில்லை. இந்தத்தடவை மந்த்லி மீட்டிங்கில் இதைப்பற்றி பேசுவது என முடிவு செய்துவிட்டு இருவரும் மேலேறி வந்தோம்.

அந்த ஃப்ளோரில் வேறு யார் வீட்டிலாவது மணி ஒலிக்கிறதா என விசாரித்துப்பார்த்தேன். அப்படி ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை என்றனர். எனது வீடும் அந்த எதிர்வீடும் மாடிப்படிகளுக்கு மிக அருகில் இருப்பவை. ஆகவே மணியடித்து கதவு திறப்பதற்குள் விறுவிறுவெனப் படியேறிச்சென்று விடுவது மிகவும் எளிது. அதனால்தான் எங்கள் வீட்டில் மட்டும் கேட்கிறது என்ற முடிவுக்கு வந்தேன். ஹ்ம்.. அதுவும் தவறு. இரண்டு நாட்கள் கழித்து மாடிப்படிகளுக்கு அப்பால் இருக்கும் நண்பரும் வந்து என்னிடம் கேட்டார். சார் நீங்க என் வீட்டுக்கு வந்தீங்களா இன்னிக்கு என்றார், இல்லையே ஏன் என்றேன் .இல்லை என் வீட்டிலயும் அப்பப்ப மணி அடிக்குது சார் ஆனா வெளிய வந்து பாத்தா ஆளக்காணோம் என்றார். அப்போது தான் எனக்கு கலவரமாகியது. ஹ்ம் ஒரு வேளை எதாவது பிசாசா இருக்குமோ என்று. அதை அவரிடம் சொல்லவில்லை. ஏதோ சமாதானம் சொல்லி அவரை அனுப்பிவைத்து கதவை மூடிய இரண்டு நிமிடங்களுக்கெல்லாம் அழைப்பு மணி அடித்தது. எனக்கோ கிலி. ஓ அப்டித்தான் இருக்குமோ என. இருப்பினும் கதவுக்கு வெளியே நிற்பவரைப்பார்க்க உதவும் லென்ஸ் வழி பார்த்தேன். வெறுமனே காரிடாரின் வெளிச்சம் மட்டுமே தெரிந்தது. இருப்பினும் திறந்து பார்க்க பயம். கொஞ்சம் நேரம் போகட்டும் பின்னர் திறக்கலாம் எனக்காத்திருந்தேன். அரை மணி கழித்து, மெதுவாக கதவு திறக்கும் ஒலி போலும் எனக்கு கேட்காதவகை திறந்து பார்த்தேன். வழக்கம் போல் யாருமேயில்லை. பின்னர் அன்று முழுதும் மணி ஒலிக்கவேயில்லை.

இதை எனக்கு எதிர்வீட்டு நண்பரிடம் சொல்லக்கூடப்பயமாக இருந்தது. அவர் இரவெல்லாம் விளக்கு வைத்துக்கொண்டு என்னைப்போல் கதை/கட்டுரை என வாசித்துக்கிடப்பவர், அவரிடமும் இந்த தெரிந்த பிசாசைப்பற்றிச்சொன்னால் பாவம் மனிதர் கலவரமாகிவிடுவாரோ என்று. நம்ம பயம் நமக்குள்ளயே இருக்கட்டும் என விட்டுவிட்டேன். மாடிப்படிக்கு அப்பாலிருப்பவரிடம் இரண்டொருமுறை கேட்டேன். இப்பவும் மணி அடிக்கத்தான் சார் செய்யுது ஆள்தான் யாரென்று தெரியல என்று சின்ன எதிர்பார்ப்புடன் சொன்னார். இருந்தாலும் அந்த ஒரு வாரம் மணி ஒலிக்காமல் இருந்தது ஏன் என்பதுதான் மர்மமாயிருந்தது எனக்கு.

பள்ளிக்குச்செல்லும் சிறு பிள்ளைகள் மேற்தளத்தில் அதிகம். அவர்களில் யாரேனும் இதைச் செய்திருக்கக் கூடும் என்ற நினைப்பும் வராமலில்லை. இருப்பினும் தொடர்ந்தும் இங்கனம் செய்ய என்ன அவசியம், எதோ ஒன்றிரண்டு முறை அடித்துவிட்டுப்போவதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளலாம். இப்படித் தொடர்ச்சியாகவா ? ..ஹ்ம்.. பல இரவுகளில் எப்போதாவது மணி ஒலிக்குமோ என்றெல்லாம் விழித்திருந்ததும் உண்டு. எதிர் வீட்டுக்கார நண்பரும் சலித்துப்போய் விட்டார். என்ன சார் இது எப்பப்பாத்தாலும் அடிக்கிறாங்க்ய என்று. படாரெனக்கதவைத்திறந்து சில நாட்களில் ஓடிச்சென்றும் பார்த்தார் காரிடாரில். பின்னரும் யாரும் கிடைக்கவில்லை. ஆளரவமேயில்லை. களைத்துப்போய் வெளியில் நிற்கும் என்னிடம் எதுவும் சொல்லாமல் தன் வீட்டுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார் என் கண்களைச்சந்திக்க விருப்பமின்றி.

இது எதோ யக்ஷிணி வேலையாகத்தானிருக்கும் என்பது எனக்கு உறுதியானது. எங்கள் அப்பார்ட்மெண்டிற்கு எதிர்ப்புறம் லேடீஸ் பீஜி ஹாஸ்டல் இருக்கிறது. அங்கிருந்து ஏதேனும் ஒரு மோஹினிப்பிசாசு வந்து இப்படி விளையாடுகிறதோ என்ற எண்ணமும் கூட எனக்கு வந்தது. உள்ளவளே வரப்போறதில்லை இதுல மோஹினிப்பிசாசு வேறயா ?..ஹ்ம்,.? அப்டியே வர்றதா இருந்தாலும் ஏன் மணியடிச்சிக்கிட்டு வரணும்,அதுகள்லாம் அப்டியே காத்தோட காத்தா தானா உலவவில்ல செய்யும் ?என்ன எழவுடா இது என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.

மாத்திரையெல்லாம் ஒழுங்காப்போட்டுக்கிறீங்களா ராம்’ என்றார் டாக்டர். கண்ட்டினுவஸா போட்டுக்கிட்டு தான் இருக்கேன் டாக்டர். விடக்கூடாது சரியா என்றவர் இன்னும் கொஞ்சம் மாத்திரைகள் எழுதித்தாரேன் அதையும் சேர்த்தே போட்டுக்குங்க என்ன ? என்று பரிவாகப்பேச நினைத்தவரின் குரல் அதிகார தொனியிலேயே ஒலித்தது. டிப்ரெஷன் குறைந்திருக்கா ? இல்லை இப்பவும் என்னன்னவோ நடக்குதுன்னு நீங்களா தனியாப்பேசிக்கிறீங்களா என்று கேட்டார். அறைக்குள் நானும் அவளும் மட்டும் டாக்டரிடம் கன்ஸல்ட் செய்ய வந்திருந்ததால் ‘இல்லை சார் அப்டீல்லாம் இப்ப பேசறதில்லை’ வேணா இவகிட்டவேணா கேட்டுப்பாருங்களேன் என்றேன். அந்தச்சேர் பக்கம் திரும்பியவர் பெருமூச்சு விட்டவாறே என் கண்களையே இமைக்காமல் உற்று நோக்கினார். எப்ப உங்களுக்கு பேசவோ இல்லை எதாவது அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்கிற மாதிரி தோணினாலோ எனக்கு ஃபோன் பண்ணுங்க சரியா ? எப்ப வேணாலும் உங்க ஃபோன நான் அட்டண்ட் பண்ணுவேன். சங்கோஜப்படாம எங்கிட்ட சொல்லுங்க என்றவர் கையெழுத்திட்டு என் கையில் நீட்டினார் அந்த பிரிஸ்கிரிப்ஷனை. பேப்பரையே உற்று நோக்கிக்கொண்டிருந்தவனை நோக்கி ‘காயத்ரி மந்த்திரம் இன்னும் கேக்குதா ராம் ‘என்றார். ஆமா டாக்டர் இப்பவும் கேட்கத்தான் செய்யுது’ என்றேன். கூடுமானவரை தனியா இருக்காதீங்க ,யார் கூடவாவது இருக்க முயற்சி பண்ணுங்க என்றார். எனக்கு ஏதும் விளங்கவில்லை அவர் கடைசியாகச்சொன்னது.

வீடு திரும்பியவுடன் எனது ஸ்மார்ட்ஃபோனில் காமராவை ஆன் செய்துவிட்டு கதவின் மேலே பொருத்திவைத்தேன் அந்த இரவில் யார் தான் மணி அடிப்பது என்று எப்படியாவது ரெக்கார்ட் ஆகட்டுமே என்று. காலையில் எழுந்து முதற்காரியமாக கதவைத்திறந்து மேலே பார்த்தேன். அது எப்பவோ ஓடிக்களைத்து ஸ்க்ரீன் லாக் ஆகி பேட்டரி தீர்ந்துபோய்விட்டிருக்கிறது. எடுத்து உயிர்ப்பிக்க முயன்றேன் பேட்டரி சார்ஜரில் கொஞ்ச நேரம் இட்டுவைத்து, ஹ்ம்,, ஒன்றும் பதிவாகவில்லை. குமிழ் பல்பின் ஒளியில் அத்தனையும் இன்ஃப்ராரெட் போல ஏகத்துக்கு வெளிச்சம் மங்கிப்போய் ஒன்றுமே தெரியவில்லை. ரெக்கார்டிங் டைம் மட்டும் சில நிமிஷங்கள் ஓடித்தீர்ந்தது.

உடனே கிளம்பி நான்காவது மாடியிலிருக்கும் செக்ரட்டரியைப்பார்க்க எண்ணி படிகள் ஏறி அவர் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன். தூக்கக்கலக்கத்தில் எழுந்து வந்தவரிடம் ‘சார் அமானுஷ்யமான நடவடிக்கைகள்லாம் எங்க ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல நடக்குது என்றேன். அப்படீன்னா என்றார். அவர் தெலுகு பேசும் நபர். பிசாசு சார் , என்றேன்.. ஐயோ தேவுடா ..எங்க எங்க என்றார். எங்க ஃப்ளோர்ல சார் என்று ஆரம்பித்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னேன். சோஃபாவில் சரிந்து உட்கார்ந்து கொண்டார். உடல்மொழி அவர் முழுதுமாக கலங்கிப்போயிருப்பதை உறுதிசெய்தது. இப்ப என்ன செய்யலாம் ? என்று பாவமாக கேட்டார். ச்ச பெரிய மனுஷன இப்படிக் கலக்கிட்டேனே என்ற ஆதங்கம் வேறு எனக்கு. என்ன செய்வது ?..ஹ்ம்.. சிசிடீவி கேமரா இன்ஸ்ட்டால் பண்ணலாம் சார் என்றேன். ஹ்ம்.. அதுக்கே எவ்ளவ் செல்வாகும் என்றார். ரெண்டு கேமரா போதும் சார். ஃபர்ஸ்ட் ஃப்ளோர் காரிடார்ல என் வீட்டை ஒட்டி ஒண்ணு அப்பால அந்த எதிர்ப்புறத்தில ஒண்ணு வெச்சு ஆன் பண்ணிட்டு 24 மணி நேரம் ரிக்கார்ட் பண்ணினா யாரு என்னான்னு தெரிஞ்சுரும் சார் என்றேன். சரி மீட்டிங்க்ல இதப்பத்தி பேசும்வோம் என்றவர் , எங்க ஃப்ளோர்ல இது மாதிரில்லாம் நடக்கிறதில்லையே என்று சந்தேகத்தைக் கிளப்பினார். ஃப்ளோர் ஃப்ளோரா தாவி வரும் போலருக்கு சார், அடுத்தவாரம் உங்க வீட்டு மணி கூட அடிக்கும் சார் என்று ஆருடம் சொன்னேன். என் கவலை எனக்கு.

அவரிடம் பேசி முடித்த எனக்கு நான்காவது ஃப்ளோரில் இருந்து படிகள் மூலம் கீழே இறங்க ஒரு தயக்கம், லிஃப்ட்டை இயக்கினேன். மெயிண்ட்டன்ன்ஸ் பண்ணி எத்தனை நாளானதோ தெரியவில்லை. கீச் கீச் எனக்கத்தியது. எண் ஒன்றை அழுத்தியதும் கொஞ்சம் லிஃப்ட்டின் பாடியே ஆடியது. கொஞ்சநேரம் கழித்து அழுத்திய எண் ஒளிர்ந்தது, அப்பாடா என்றிருந்தது. ஒரு வேளை ரிப்போர்ட் பண்ணச்சென்ற விவரமறிந்து என்னை லிஃப்ட்டுக்கு உள்ளேயே அந்த மோஹினிப்பிசாசு முடக்கப் பார்க்கிறதோ என்ற எண்ணமும் ஆட்டிப்படைத்தது. அதற்குள் எண் மூன்றை எல்..டி காட்டிக்கொண்டிருந்தது, இது ஏன் இவ்வளவு நேரம் எடுக்கிறது என நினைத்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் லிஃப்ட் மேலே நோக்கி செல்ல ஆரம்பித்தது. உள்ளே எரிந்து கொண்டிருந்த விளக்கு அணைந்துவிட்டது. லிஃப்ட்டுக்குள் காற்றாடியும் வேலை செய்யவில்லை. இத்தனை பெங்களூர் குளிரிலும் எனக்கு வியர்க்கத்தொடங்கியது. ஒரு நாளும் நான் லிஃப்ட் பாவிப்பதேயில்லை. (முதல் மாடியில் இருக்கும் எனது வீட்டிற்கு வர பத்துப்படிகளே கீழிருந்து). இப்ப எதற்காக ஏறினேன் லிஃப்ட்டில். ஒரு முப்பது படிகள் இறங்க முடியாதா...ச்சை ,,என்ன ஆகப்போகுதோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஐந்தாவது ஃப்ளோரில் மொட்டை மாடியில் போய் நின்றது. கதவு தானாகத் திறந்தது. சிரித்துக்கொண்டே உள்ளே வந்தார் அந்த ஐந்தாவது மாடி ஆசாமி, ஒரு நாளும் அவரை நான் பார்த்துகூட இல்லை. ஒரு அறிமுகமில்லை. என்ன சார் இன்னிக்கு ஐந்தாவது மாடிக்கு விசேஷமா வந்துருக்கீங்க என்றார். பேசுவதற்கு எனக்கு நா எழவில்லை. அழுத்திய ஒன்றாம் மாடிக்குச்செல்லாமல் இது அஞ்சாவது மாடிக்கு வந்தது எப்படி என்ற பயமே இன்னும் தெளியவில்லை. இதில் இவரது நலம் விசாரிப்பு வேற.

தொடர்ந்தும் அவரே பேசினார். உங்களை மன்த்திலி மீட்டிங்ல பார்த்திருக்கேன்.ஜிம்ல வொர்க் பண்ணிட்டு வர்றீங்களா , ஏன் இவ்வளவு வியர்க்கிறது என்றார். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு , இல்லை நான் அழுத்திய முதல் எண்ணுக்குப்பதில் அஞ்சாவது மாடிக்கு எப்படி லிஃப்ட் என்றேன்.. அதுவா , அது லிஃப்ட் ப்ரோக்ராம் பண்ணும் போது சரியா பண்ணாமல் விட்டதால இப்டி ஆயிருச்சு, மூணாவது ஃப்ளோர்லருந்து அஞ்சாவதுக்கு வந்துருக்குமே என்றார். ஆமாம், ஹ்ம்,,அதான் கீழ இறங்கும்போது யாராவது லாஸ்ட் ஃப்ளோர்ல பட்டன் ப்ரஸ் பண்ணினா நேர அஞ்சாவது மாடிக்குத்தான் லிஃப்ட் வரும் எனக்கூறிச்சிரித்தார்.
லிஃப்ட் ஆப்பரேட்டர்ஸ்கிட்ட ரிப்போர்ட் பண்ணி வெச்சிருக்கு எங்க வர்றானுங்க, ஆஃபீஸ் லிஃப்ட்டுன்னா ஒடனே அட்டண்ட் பண்ணுவானுங்க இது அப்பார்ட்மெண்ட் லிஃப்ட் தானே அதான் என்று அலுத்துக் கொண்டார். ஒரு வழியாக முதல் மாடிக்கு லிஃப்ட் வந்ததும் அவசர அவசரமாக இறங்கி வீட்டுக்கு வந்து விட்டேன்.

வீட்டுக்குள் வந்ததும் பார்த்தேன். அவள்தான் ரெண்டு ஸ்டூல் போட்டு மேலேறி நின்றுகொண்டு காலிங்பெல்லை என்னவோ செய்துகொண்டிருந்தாள். ‘இப்ப அத என்ன செய்ற’ ‘ பேட்டரியக்கழட்டி வெக்றேன், அப்பத்தான் எவ்வளவு அடிச்சாலும் உள்ளே காயத்ரி மந்த்ரம் ஒலிக்காது’ என்றாள். கைகளில் பேட்டரியோடு இறங்கினாள். காலிங்பெல்லின் பின்புறம் திறந்துகொண்டு பேட்டரி இடும் இடங்கள் காலியாகியிருந்தன.

மன்த்திலி மீட்டிங்க்ல எல்லோரும் ஆஜர். வழக்கமா வர்ற அந்த எதிர்வீட்டு நண்பர் வரவில்லை. என்ன காரணமோ தெரியவில்லை. செக்ரட்டரி காரணத்தைச்சொல்லாம ( அவருக்கும் சொல்லப்பயம் போலருக்கு) ஃப்ர்ஸ்ட் ஃப்ளோர்லருந்து சீசீட்டீவி கேமரா ஃபிக்ஸ் பண்ணனும்னு ரிக்வெஸ்ட் வந்திருக்கு. எதுக்கு எதுக்கு என பல பேர் கேட்டனர். இல்லை ஷூஸ் எல்லாம் திருடு போகுதாம், அதோட வெச்சிருந்த காஸ்ட்லி ஸ்மார்ட்ஃபோன்ஸ்கூட காணாமப்போச்சுன்னு ஜி4-லருந்து ரிப்போர்ட் வந்திருக்கு அதான் என்று இழுத்தார்.

ஷூ ராக்’கை வீட்டுக்குள்ள வெச்சுக்கவேண்டியது தானே, இதுக்காகல்லாம் அசொசியேஷன் பணத்தை வேஸ்ட் பண்ண முடியாதுன்னு ஒரே கூச்சல். செக்ரட்டரி என்னையே பார்த்தார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.நாலு மாசமா காரிடார்/கார் பார்க்கிங்க் காமன் ஏரியா எலக்ட்ரிக் பில்லைக் கட்டலைன்னு ஃபீஸ் கட்டைய பெஸ்காமிலருந்து பிடுங்கிவிட்டு போனான், அடிச்சுப்பிடிச்சு இப்பதான் போய்க்கட்டீட்டு வந்துருக்கு,இருக்கிற குமிழு ட்யூப்லைட்டெல்லாம் ஊறி எடுத்துட்டு சிஎஃப்எல் பல்பு போட்டா எலக்ட்ரிக் பில்லை இன்னும் குறைக்கலாம்னு தீர்மானம் போட்டதுக்கே இன்னும் பணம் சேங்ஷனாகலை இதுல இவனுகளுக்கு சீசீட்டீவி வேறே கேக்குதா என மூன்றாவது ஃப்ளோர் அம்மணி கூவினார். அவளின் கணவர் ‘மணி தேவையில்லாம அடிக்குதுன்னா கழட்டி வீசுங்க தம்பி அத விட்டுட்டு இன்னும் அசோசியேஷனுக்கு செலவிழுத்து விடாதீங்க’ என்று அம்மணிக்கு இங்கும் சப்போர்ட்டாக பேசினார்.

செக்ரட்டரி ஒன்றுமே சொல்லாமல் அடுத்த ரிக்வெஸ்ட் என தாவிவிட்டார். மவனே நீ இப்படி தாவிட்டியா, மோஹினிப்பிசாசு ஒரே தாவலா தாவி ஒன் வீட்டில மணி அடிக்கும்போது தெரியும்டி ஒனக்கு என உள்ளுக்குள் கறுவிக் கொண்டேன். யாரும் எனது கோரிக்கையை சட்டை செய்யவேயில்லை, சப்பென்று போய்விட்டது. அவனவனுக்கு பிரச்னை வரும்போதுதான் தெரியும் என நினைத்துக்கொண்டு மீட்டிங்கிலிருந்து பாதியிலேயே எழுந்து வந்துவிட்டேன். மோஹினிப்பிசாசு மணியழைப்பு என்னை விடாமல் இன்னமும் உறுத்திக்கொண்டேயிருந்தது.

இப்ப எங்க போய்ட்டு வர்றீங்க’ என்றாள். மேலே நம்ம செக்ரட்டரியிடம் போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணிட்டு வந்தேன். இப்படி தொடர்ந்துக்கிட்டிருந்தால் எரிச்சலா இருக்குல்ல அதான் என்றேன். ஹ்ம்.. என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை என்னிடம். உள்ளே வந்தவனுக்கு அந்த மணியை திருப்பி மாட்டிவிடவேணும் என்றே தோணியது. யாரடிப்பது எனக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற உந்துதலில். மேலேறி பேட்டரிகளை இட்டு மூடி காலிங்பெல்லை முன்புறம் திருப்பி வைத்துவிட்டு இறங்கும்போது அவள் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

அடுத்த நாள் கீழிறங்கிச்செல்லும்போது செக்யூரிட்டி என்னை ‘சாப்’ என்ற மெல்லிய குரலில் அழைத்தான். ‘க்யா ஹுவா?’ என்றேன். நமுட்டுச்சிரிப்போடு ‘கண்டுபிடிச்சுட்டேன் சாப்’ என்றேன். என்ன, அதான் சாப் மணியடிக்கிறது யாரூன்னு .. என்று கூறிச்சிரித்தான். அடப்பாவி யாரது என்று ஆச்சரியம் தாங்காமல் கேட்டேன். ‘திக்காத்தா ஹூங் சாப்’( காமிக்கிறேன் சார்) என்றவன், சாயங்காலம் நாலுமணி வாக்கில வீட்டுக்கு திரும்புவீங்களா சாப் என்றான். ஏன் , இல்லை எல்லார் வீட்டிலயும் யாரு மணியடிக்கிறதுன்னு காமிக்கிறேன் என்றான். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஹ்ம்..சரி மூணு மணிக்கே வந்துர்றேன் என்றேன். இல்லை சாப் நாலு மணிக்கு வாங்க என்றான், சொல்லிவிட்ட போதிலும் எனக்கென்னவோ துளிக்கூட நம்பிக்கையில்ல அவன் பேச்சில். இருந்தாலும் சரி வந்துவிடுகிறேன் என்று அவசரமாக கிளம்பி விட்டேன்.

மூன்று மணிக்கே இருப்புக்கொள்ளவில்லை எனக்கு.வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு விரைவாகவே வீடு திரும்பினேன். எனக்காக செக்யூரிட்டி ஆவலாக காத்திருந்தான்.என்ன சாப் வந்துட்டீங்களா.. இருங்க ஒண்ணு சொல்றேன் கேக்கணும் என்றான். என்ன , நீங்க மேலே ஏறி இரண்டாவது மாடிப்படில நின்னுக்குங்க, நான் கூப்பிடும்போது வந்தாப்போதும் என்றவன் என்னைப்போகுமாறு பணித்தான். சரி இவன் சொல்வதைக்கேட்போம் என நினைத்து இரண்டாம் மாடியின் படிகளில் ஏறிக்கொண்டு எங்கள் வீட்டுக்கதவுகளை பார்க்க வசதியாக நின்றுகொண்டேன்.

அப்போது அப்பார்ட்மெண்ட்டின் கதவருகே ஒரு வேன் வந்து நிற்கும் ஓசை கேட்டது. யாரோ ஒருவர் இறங்கியதும் கதவு மூடி வேன் சென்றுவிடும் ஒலியும் தெளிவாகக்கேட்டது. அதன் பின்னர் ஒரு ஜோடி ஷூ ஒலி நெருங்கி வர வர எனக்குள் பதட்டம் அதிகரித்தது,.மெல்ல மெல்ல முதல் மாடிக்கான படிகளில் அந்த ஷூ ஒலி ஏறிவந்தது. முதல் மாடியை அடைந்ததும் அந்த ஷூ ஒலி மெல்லக்குறைந்து விரல்கள் என் வீட்டு அழைப்புமணியை அழுத்திவிட்டு எதிர் வீட்டு நண்பரின் சுவிட்சிலும் அழுத்தியது. வேகமாக கீழிறங்கி வந்து பார்த்தேன். ‘அங்கிள்’ என்று கூவியவாறு ஓட்டம் பிடிக்கப்பார்த்தான் அந்த மூன்றாவது ஃப்ளோரில் வசிக்கும் பொடியன் ஒருத்தன். எனக்குச்சிரிப்பு மாளவில்லை. அவனுக்கோ பிடிபட்டு விட்டோமே என்ற பயமும் சிரிப்பும் கலந்து ஃப்ளோர் கலகலத்தது.

ஆமா ஏன் மணியழுத்திட்டு நிற்காமல் ஓடினாய் எனக்கேட்டதற்கு, “இல்ல அங்கிள் எங்கள் வீட்டில காலிங் பெல் சவுண்டு ரொம்ப நல்லாருக்கும், அதனால ஓயாம அழுத்தி அழுத்தி வெப்பேன், அம்மாவுக்கு அது பிடிக்காது,அதனால அம்மா காலிங் பெல்லையே கழட்டி வெச்சிட்டாங்க அதான் உங்க வீட்டில எப்பவும் அடிக்கிறேன் என்றான்.

அதன் பின்னர் அவன் எப்போதும் காலிங் பெல்லை அநாவசியமாக அழுத்துவதேயில்லை. எப்போது வந்து பார்த்தாலும் யாரேனும் என்னைப்பார்க்க வந்திருப்பவரே அழுத்தியதாக இருக்கும். வெளியில் என்னைப் பார்த்தால் செக்யூரிட்டியும்,அவனும் சேர்ந்தே சிரிப்பார்கள். பின்னர் அவனின் அப்பாவிற்கு மாற்றலானதால் வீடு மாறிச்சென்றுவிட்டனர். ஓய்ந்தே போனது எனது அழைப்புமணி. சில மாதங்களுக்குப்பிறகு செக்கரட்டரியிடம்,அந்த சீசீட்டீவில்லாம் வேண்டாம் சார் எதற்கு வீண் செலவு என்று கூறிவிட்டேன். கொஞ்ச நேரம் எந்த வித உணர்ச்சியுமின்றி என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார் அவர்.

இவையெல்லாம் நடந்து முடிந்தபிறகு வெகுநாட்கள் கழித்து அந்த அழைப்புமணி மீண்டும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அதுவும் சரியான கால இடைவெளியில் விடாமல் எப்போதும் அடித்துக் கொண்டேயிருக்கிறது. கதவின் லென்ஸ் வழியாகப்பார்த்தேன். சிஎஃப்எல் பல்பு வெளிச்சத்தில் மங்கலான ஒரு உருவம் நிற்பது போலத் தோன்றியது எனக்கு. திறந்து பார்க்கிறேன்... யாரையும் காணவில்லை.

இப்ப யாரைப்போய்ப்பார்த்தீங்க என்றாள் அவள். இல்ல மணியடிச்சுதே அதான்’ என்றேன். ‘மணியா அதக்கழட்டி அந்தப்பையன் கிட்ட கொடுத்தனுப்பி எத்தனையோ மாசம் ஆச்சே’ என்றாள் அவள். அதே நேரத்தில் என் செல்ஃபோனில் காயத்ரி மந்திரம் ரொம்பவும் சத்தமாகவே ஒலித்தது,டாக்டர் தான் பேசினார். ‘என்ன ராம் எப்டி இருக்கீங்க, அப்பாயின்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிருக்கீங்க இன்னிக்கு ,ஆனா இன்னும் வரலையே, டைம் வேற ஆயிட்ருக்கு வர்றீங்களா’ என்றார்.




.