Sunday, March 25, 2018

பஹாய்-த்-தாமரை




இன்று விடுமுறை. அதனால் பஹாய் கோவில், மற்றும் கால்காஜி கோவில் பயணம். எம்மதமும் சம்மதம் அதான் பஹாய். அரே பாய். .. :)  அந்தக்கோவிலுக்குள்ள செருப்பு போட்டு போகக்கூடாதுன்னு ஒரு பிளாஸ்டிக் பை குடுத்து அனுப்பினார்கள். சரி அப்புறமா எங்கயாவது வைத்துவிட்டு டோக்கன் போடலாமென்று பாத்தால் அப்படி ஒரு வசதியும் இல்லை. எல்லோர் கையிலும் செருப்புப்பை. அதோடயே உள்ளே நுழைந்தாயிற்று கோவிலுக்குள். இதுக்கு பேசாம கால்லயே போட்ருக்கலாம்ல ..ஹிஹி.. செருப்பை கையில் வைத்துக்கொண்டால் பாவமில்லை போலருக்கு. !

உள்ளே நுழைந்தவுடன் மயான அமைதி. அதைப் பார்த்தாலே ஒரு மதமும் வேணாம்டான்னு ஆயிரும் போலருக்கு. நுறடிக்கும் மேலாக தாமரைக் கோபுரம் (இங்கயும் தாமரைதானா ?!) முழுக்க கண்ணாடிச் சுவர்கள். காற்று பறம் பறமென்று அடிக்குது உள்ளே. மாதா கோவில் போல வசதியாக உட்கார்ந்து கொள்ள மொஸைக்கல்லிலாலான இருக்கைகள். எந்தவித சிலையும், உருவமும், படமும், கற்சிலைகளும் இல்லை கோவிலின் உள்ளே.எங்கும் அமைதி.

உள்ளிருக்கும் பஹாய்ப்பெண்மணிகள்  ஆட்காட்டி விரலை உதடுகளுக்கு குறுக்கே வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். பேசக்கூடாதாம். குழந்தைகளையும் அங்கனமே இருக்கச்சொல்கிறார்கள். எல்லார் கழுத்திலும் தொங்கும் அறிவிப்பு பட்டையில் பஹாய்த்தாமரை மலர்ந்திருக்கிறது படத்தில். சரியாக 12 மணி. மூன்று பேர் அதில் ஒருவர் பெண். மேடை போன்ற இடத்தில் வந்து பெரிய புத்தகங்களை எடுத்து வந்து மைக்கை தம் உயரத்துக்கேற்ப சரி செய்துகொண்டு பேசத் தொடங்கினர்.  



முதலில் வந்தவர் பஹாய் மதத்தின் வசனங்களை ஓதினார். ஏழு முறை எதிரொலிக்கிறது அது பக்கச்சுவர்களில் பட்டு. எண்ணிக்கொண்டிருந்தேன். எதிரொலி கட்டுப்பாடில்லாத தியான மண்டபம் போல. அவரின் குரல் மட்டுமே நூறடி உயர தாமரையில் பட்டு எதிரொலித்து என் காதுகளை வந்தடைந்தது. பின்னர் வந்தவர் புத்தமதத்தின் வசனங்களை கச்சாமி கச்சாமி என தெரியவருமாறு ஓதி அமர்ந்தார். பின்னர் வந்த ஒற்றைப் பெண்மணி பகவத் கீதையிலிருந்து சுலோகம் ஓதினார். அவர் குரலும் பக்கச்சுவர்களிலும் தாமரையிலும் பட்டுத்தெறித்தது.

கூட்டத்தை அடைகாக்க வந்த பஹாய்ப்பெண்மணிகள் இன்னமும் ஆட்காட்டி விரலை உதட்டிலிருந்து எடுத்ததாக தெரியவில்லை. எல்லா நாட்டவரையும் சரளமாக பார்க்க முடிந்தது. ஆங்கில அறிவிப்பை ஒரு வெள்ளைக்காரரே செய்தார். கோவிலுக்கு உள்ளே போய் என்ன செய்வது என்று இதுவரை எனக்குப் பிடிபடவேயில்லை. இந்தக்குழப்பத்திலேயே இம்மதம் இன்னமும் வளரவேயில்லை போலிருக்கிறது.



பின்னர் அருகிலேயே கால்காஜி என்ற நம்மூர் காளி கோவில் போல ஒன்று இருக்கிறது. கோழி ஆடு பலி கொடுக்க வேணுமானால் எங்களை அணுகவும்னு ஒரு தேவஸ்வம் போர்டு ஒன்றைப்பார்த்தேன். அதிலிருந்து தான் தெரிந்தது அது காளி கோவிலென. தரையோடு அமர்ந்த உருவம். தரையிலிருந்து அப்படியே புற்று போல எழும்பி நிற்கிறாள் காளி. யாதுமாகி நின்றாய் காளி. உள்ளே போகவே முடியவில்லை. திரும்பி வருவதற்கும் எந்த வழியும் தெரியவில்லை. அப்படிக் கூட்டம் படு கூட்டம். நெருக்குகிறது ஆளை. எம்மதமும் சம்மதம்னு சொல்ற பஹாய் கோவிலில் ஆட்களே இல்லை. இங்கு இவ்வளவு அடிதடி. இங்கும் செருப்புகளைக் கழற்றாது தான் போனேன். எங்கு கழற்றி வைப்பதென தெரியவேயில்லை. கோவிலைச்சுற்றி தெரு. தெரு முழுக்க கூட்ட நெரிசல். பக்கத்திலேயே போக முடியவில்லை. கூட்டத்தை சரிசெய்யும் பேர்வழியிடம் கேட்டேன். "ஸ்வாமி புறம் செல்ல வழியெதுவோவென". "வந்த வழியே திரும்பிச்செல்" என்றார். என்னவோ புரிந்தது போலிருந்தது எனக்கு. திரும்புவதற்கு வழியில்லாது போனால் எவ்வளவு நல்லது. ஹ்ம்...!




சரி டெல்லியில பஞ்சாபி லஸ்ஸீ பிரமாதமாக இருக்குமே என ஒன்றை வாங்கிக் குடித்தேன், 'பினா பரஃப் கி லகானா' என்று கோரிக்கை விடுத்தேன் (ஐஸ் இல்லாம போடுப்பா) ரொம்ப யோசித்துவிட்டு உனக்கு மட்டும் என்ன சிறப்பா என முகத்தை வைத்துக்கொண்டு போட்டுக்கொடுத்தார். ஆஹா. இருப்பினும் அவ்வளவு பிரமாதமில்லை.  குடித்து முடித்து வெய்யிலில் நடந்து மெட்ரோ ஸ்டேஷ்ன் வரை வந்தால் எக்கச்சக்க லைன். வயலட் லைன் மெஜன்ட்டா லைன், ப்ளூ லைன் ஹிஹி.. ரயில் போகும் வழித்தடங்களாம் அவை. தட்டுத்தடுமாறி சீட்டுக்கொடுப்பவரிடம் கேட்டுத்தெரிந்து கொண்டு வந்து சேர்ந்தேன் புக்ககத்திற்கு.
#டெல்லிடயரீஸ்

Friday, March 23, 2018

கார்ப்பரேட் பறவைகள்


விசாலமான கண்ணாடிக்கதவுகள், மூன்று ஆள் உயரத்துக்கும் மேலான அலங்காரக் கண்ணாடிச் சுவர்கள் என சூரிய ஒளியைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் டெல்லி அலுவலகக் கட்டிடம். எப்போதும் காலையில் வரும்போது அதன் மேல் விளிம்புகளைப்பார்ப்பது வழக்கம். நான்கைந்து புறாக்கள் முன்னும் பின்னுமாக அமர்ந்து கொண்டிருக்கும். இன்றைக்கு சாயங்காலம் வேலை முடிந்து திரும்பும்போது , அலுவலக வாயிலில் இரண்டடி நடந்திருப்பேன். கட்டிடம் கண்ணாடிகள் எல்லாம் முடிந்து விசாலமான நடைபாதை. பொத்தென என் முன்னால் ஓரடிக்கும் குறைவான இடைவெளியில் விழுந்தது ஒரு புறா. கால்கள் சுருங்கி உள்ளுக்கு இழுத்துக்கொண்டன. கண் பார்வை மங்குகிறது. மயக்கமுற்று விழுவது போல உடல் தரையில் மெதுவாகச்சாய்ந்தது. எதேனும் சண்டையிட்டு அதில் காயமுற்று விழுந்திருக்கக் கூடும் என நினைத்து மேலே பார்த்தால் அப்படி ஒன்றும் நடந்தமாதிரி தெரியவில்லை.

இருப்பினும் பறக்க ஒரு முயற்சியும் எடுக்கவில்லை அது. நான் மெதுவாக அதனருகே சென்று பார்த்தேன். யாரும் நெருங்கும் அரவம் கேட்டும் படபடக்க வில்லை. மயங்கி விட்டது. ஒன்றும் பிடிபடவில்லை. வெள்ளி மாலையாதலால் எல்லோரும் விரைவில் வேலை விட்டு சென்று விட்டனர். எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. கையிலெடுக்கலாமா , எடுத்தால் கொத்துமா என ஒரு ஐயம். தூரத்திலிருந்து இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் அதனருகே வந்தார். எனக்கு தைரியம் கூடியது . லாப்டாப் பை இரு தோளிலும் மாட்டியிருந்ததால் இரு உள்ளங் கைகளையும் குவித்து அள்ளி அடுத்தேன். அனங்கக் கூட இல்லை. 

அருகில் ஒரு நீரூற்று. யாரும் எப்போதும் பார்ப்பதே யில்லை. எதற்கு அது ? போன தண்ணீரே திரும்ப வந்துகொண்டிருக்கிறது. திரும்பத்திரும்ப. புறாவைக் கையிலெடுத்தவன் நீரூற்று அருகில் சென்று , கொஞ்சம் நீரையள்ளி வாயில் ஊட்டினேன். அதற்கு கிஞ்சித்தும் விருப்பமில்லை போல. தண்ணீர் முழுதும் வழிந்தோடியது. இறக்கைகளை பிரித்துப் பார்த்தேன், வலது இறக்கை தோளில் உட்புறம் குருதி பெருகிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு நினைவும் இல்லை. படபடக்கவே யில்லை. கையில் சூடு பரவியது. மெதுவாக புல் தரையில் அதை வைத்து விட்டேன்.

முன்புறம் அலகு சரிந்தது. இறக்கைகள் இதுகாறும் விரிந்து கிடந்தவை மடங்கி உடலோடு ஒட்ட முற்பட்டது.கால்களைக்காணவே முடியவில்லை. கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக செருகிக்கொண்டது. ஒன்றும் செய்ய இயலவில்லை. எதேனும் கால்நடை மருத்துவர் அருகிலிருந்தால் கொண்டு போய்க்காண்பிக்கலாம் என நினைத்துக் கொண்டேயிருந்த போது கண்கள் முழுதுமாக மூடிவிட்டது. வானத்தையே தன் இறகுகளால் அளக்கும் புறா இறக்கிறது என் கண்ணிமைக்கருகில். என்ன செய்வது ?


பிறகும் என்ன காரணம் இருக்கும் என நிமிர்ந்து பார்த்தேன். மூன்றாளுயரக்கண்ணாடியில் முட்டி மோதி இருக்கிறது வேகமாகப்பறக்க எண்ணி. கார்ப்பரேட்கள் ஒழிக.

.

Tuesday, March 13, 2018

காட்டுத் தீ


ஓராண்டுக்கு முன்பு நண்பர்களுடன் கர்நாடகத்தின் முத்தத்திக் காடுகளுக்குச் சென்றோம். அது காவிரிக்கரை. காடுகள் வழியே செல்லும் வழித்தடம் என்றாலும் அது பாதுகாப்பானது. மேலே இருக்கும் கிராமங்களுக்கு அதுவே வழி. இருப் பினும், வாகனங்களைவிட்டு இறங்கவே கூடாது. ஒலி எழுப்பாமல் ஹாரன் அடிக்காமல் செல்ல வேண்டும் எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர் வனத் துறை அதிகாரிகள். வாகன வேகம் 30 கிலோ மீட்டரைத் தாண்டக் கூடாது எனும் கட்டுப்பாடும்கூட.
மேலே சென்று இளைப்பாறி, காவிரியில் குளித்து எல்லாம் ஆயிற்று. காடுகளினூடே நடந்துசெல்ல நினைத்து வன அதிகாரிகளை அணுகினால், “இதற்கெல்லாம் முன் அனுமதி வாங்க வேண்டும். இல்லை யெனில், உள்ளே நுழையவே இயலாது” எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

உள்ளூர் ‘பெரிய கை’யிடம்கூட முயற்சிசெய்து பார்த்தோம். ம்ஹூம்.. நடக்கவேயில்லை. வேறுவழியின்றி, கரையில் அமர்ந்தபடியே பார்த்துவிட்டு வந்தோம். காடுகளுக்குள்ளே நடக்க வேண்டும் என்றால், அதற்கென கானக அதிகாரி/ ஊழியர் ஒருவர் கூடவே வருவார். அதற் கான அனுமதியை ஒருநாள் முன்கூட்டியே வாங்க வேண்டும். எப்படி முயற்சிசெய்தும் நடக்கவேயில்லை.

அதேபோல், சில நாட்களுக்கு முன்பு சித்ரதுர்கா கோட்டைக்குச் சென்றிருந்தோம். கோட்டையைச் சுற்றிப்பார்த்துவிட்டு அருகே உள்ள ஒரு மலை வாசஸ் தலத்துக்குச் செல்ல முயன்றோம். எங்களுடன் வந்த வழிகாட்டி திப்பேசாமி, “தம்பிகளே, அங்க காட்டுக்குள்ள போறதுன்னா முன்அனுமதி வாங்கணும்” என்றார். “கொஞ்சம் முயற்சிசெய்யுங்க” என்று நாங்கள் கேட்டுக்கொள்ள, சரி என்று எங்களுடனேயே பயணித்தார்.

கானக நுழைவு வாயிலில் சொல்லிவைத்தாற்போல கானக அதிகாரி காரைத் தடுத்து நிறுத்தினார். விசாரித்தால், “சுள்ளிகளைத் தீ வைத்துக் கொளுத்திக்கொண்டிருக்கின்றனர். எனவே, அனுமதி இல்லை” என்று சொன்னார்.

 “தம்பிகளா, நான் முன்பே சொன்னேனில்லயா” என்றார் வழிகாட்டி திப்பேசாமி. எனினும், அலுவலகத்துக்குச் சென்று தன்னிடம் இருக்கும் அத்தனை அடையாள அட்டைகளையும் காண்பித்து அனுமதி வாங்கிவந்தார். அவருக்குத் தொல்பொருள் ஆய்வு, அவற்றை உள்ளடக்கிய கானகங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றுள் ஆட்களை அழைத்துச் செல்ல சிறப்பு அனுமதி உண்டு.

பின்னரும் அதே மாதிரியான சிறப்புக் கட்டுப்பாடுகள். 30 கிலோ மீட்டர் வேகம்; ஹாரன் ஒலித்தலாகாது; வண்டியை விட்டு ஒருபோதும் கீழிறங்கக் கூடாது; திடீரென வழியில் வந்துவிடும் விலங்குகளை தொந்தரவு செய்யக் கூடாது என கடுமை யாக எச்சரித்த பின்னரே எங்கள் வண்டிக்கு அனுமதி கிடைத்தது. அதுவும் “எல்லா நானு மேனேஜ் மாடித்தினி” என்று வனத் துறை அதிகாரிகளை திப்பேசாமி சமா தானப்படுத்திய பிறகே எங்களுக்கு அனுமதி கிடைத்தது. 

மேலே சென்று அனைத்தையும் பார்த்துவிட்டுப் பத்திரமாகக் கீழிறங்கினோம். மலையில் ஆங்காங்கே தீ எரிந்து கொண்டுதானிருந்தது. மேலே வன அதிகாரிகள் அமர்ந்திருந்தனர், கண்காணித்தபடி!


'தமிழ் இந்து'வில் 13 மார்ச் 2018ல் வெளியான எனது கட்டுரை.


http://tamil.thehindu.com/opinion/blogs/article23163018.ece 

.

Friday, March 9, 2018

மலைப்புலி



இவர் ஜோதிராஜ். ராக் க்ளைம்பர்... ஆஹா. க்ளிஃப் ஹேங்கர் போல. ஆனால் எந்த கருவிகளும் இல்லாது வெறுங்கைகளால் மலையின் மேல் ஏறுகிறார். சித்ரதுர்கா கோட்டை சுற்றிப்பார்க்க நுழையும் போது , உடலில் பல வெயிட் குண்டுகளை உடலில் சட்டை போல ஏற்றிக் கொண்டு தரையில் சுற்றிக்கொண்டிருந்தார், அறிமுகப் படுத்தினார் கைடு திப்பேசாமி. 'சார் இவர் நேஷ்னல் சாம்பியன் சார்' , எதுல.. மலை ஏறுவதில. " கொஞ்சம் உடல் வெயிட் போட்டதால ஏறும் போது சிரமம் தெரியாம இருக்க உடலில் வெயிட் குண்டுகளை ஏற்றி சுற்றிக் கொண்டிருக்கிறேன் என்றார்.  சரி நாம மலைகளை கோட்டையை சுற்றிப்பார்த்துவிட்டு வரலாம் . வெய்யில் ஏறிவிட்டால் அலைவது கஷ்டம் என்றார் கைடு. அவருக்கு கன்னடம் தவிர மற்ற பாஷைகள் சுட்டுப்போட்டாலும் வராது போலருக்கு. என்னா கைடோ என்னவோ. பின்னரும் கோட்டை முழுக்க சுற்றி சுற்றி கால் கை வலித்தது தான் மிச்சம். திரும்பி வரும்போது ஜோதிராஜ் படிகளில்  அமர்ந்து ஏதோ உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

"உங்களைப்போல கோட்டை சுற்றிப்பார்க்க வருபவர் ஒருவர், இந்த உணவை என்னைப்பார்த்ததும் கீழேயிறங்கிப்போய் எடுத்துக்கொண்டு கொடுத்தார், அதான்"  என்று சிரித்தார். எனக்கோ கால் கை வலி பொறுக்க இயலவில்லை. அவருடன் அப்படியே  மலைப்படிகளில் அமர்ந்து கொண்டேன். எப்போதிருந்து இப்படி மலையேற்றம் ? "சின்ன வயசில தமிழ்நாடு தேனியில காணாமற்போன என்னை ஒரு குடும்பம் எடுத்து சிவமோகா ( கர்நாடகா) வரை கொண்டு வந்து வளர்த்தாங்க. அதிலருந்து இங்கயே நான் தங்கிட்டேன்.  எனக்கென்னவோ இங்கயேதான் இருக்கணும்னு தோணுது. சரியோ தவறோ தெரியல. இந்த கர்நாடக மக்களோடவே இருந்துறலாம்னு தான் நினைக்கிறேன்."

"முகஸ்டாலினை ஒரு முறை சந்திக்க நேர்ந்தது சென்னையில. இப்படி சாதனை பண்றவங்கல்லாம் தமிழ்நாட்ல தான் இருக்கணும். இங்க வந்துருங்க, உங்களுக்கு உதவியா, பயிற்சி மையம் ஆரம்பிக்க தங்க எல்லா வசதிகளும் நான் ஏற்பாடு செய்கிறேன், அதோட நான்கு கோடி ரூபா கொடுக்கிறேன். எல்லாவற்றையும் இங்க இருக்கிற மலைகள்ல பயிற்சி எடுக்கப்பயன்படுத்துங்க என்றார். எனக்கென்னவோ அது சரியாப்படலை. திரும்ப ஷிமோகாவுக்கே வந்துட்டேன். இந்த மக்களோட அன்பு என்னை இங்கயே தங்க வைத்துவிட்டது" என்றார்.




எனக்கு 27 குழந்தைகள் ( அவர்தம் மாணவர்கள்) , இப்ப எல்லொரும் இந்த ஸ்போர்ட்ஸ்ல பங்கெடுத்து நெஷ்னல் சாம்பியன்ஸ் வரை வந்திருக்காங்க என்றார். "சரி அதெல்லாம் இருக்கட்டும். நீங்க என்ன சாதனை பண்ணிருக்கீங்க ? "உலக பத்து இடங்கள்ல எனக்கு மூன்றாவது இடம் , ஒரு முறை 100 அடி உயரத்தை 9 செகன்ட்களில் ஏறி சாதனை, ( அதை யாரும் இதுவரை முறியடிக்கவில்லை), அதோட ஒவ்வொரு ஆன்டும் ஃப்ரான்ஸில் நடக்கும் மலையேறும் போட்டியில் கலந்து கொண்டு பல பரிசுகள் வாங்கியிருக்கேன். இதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து 2020 ஒலிம்பிக்ஸில் சேர்த்துருக்காங்க , அதற்காக பயிற்சி பண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆஹா.. தங்கப்பதக்கம் வாங்கித் தருவது தான் என்னளவில் இப்போதுள்ள ஒரே குறிக்கோள்" என்றார். சுற்றியிருந்த நண்பர்கள் அனைவரும் இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். கொஞ்ச நாள் முன்னால ஜோக் அருவியில் விழுந்துவிட்ட ஒரு மாணவரை நீரின் அடிவரை சென்று ஒரு நாள் முழுதுமாக போராடி மீட்டுக்கொண்டு வந்ததையும் ஆவலாக சொன்னார்.

தமிழும்,கன்னடமும் சரளமாக பொழிகிறது அவரிடமிருந்து.  ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா என்றேன். ஃபோனை என்னிடமிருந்து வாங்கி அவரே எடுத்தார் :) சித்ரதுர்கா கோட்டைக்கு வரும்போகும் அனைவருக்கும் அவரைத் தெரிந்திருக்கிறது. எதோ ஒரு விதத்தில் ஹாய் ஹல்லோ சொல்லிச்செல்கின்றனர். கரிய உருவம். தமிழ் மண்ணிற்கான கட்டுடல். ஏறும் போது கவனம் சிதறாமல் இருக்க காதில் இயர்ஃபோன்கள் செருகிக்கொள்கிறார். கையில் வெள்ளையாக எதோ பொடியைப்பரப்பி உள்ளங்கைகள் முழுக்க பூசிக்கொள்கிறார். (மெக்னீசியம் கார்பனேட் என்றார்). உள்ளங்கைகளில் வியர்க்காதிருக்க இது அவசியம் என்றார்.




எதாவது டயட்ல இருப்பீங்களா என பொதுவாக கேட்டேன். "ஹ்ம்.. இந்த ஸ்போர்ட்ஸுக்கு டயட்லாம் இருந்தா சரியா வராது. உடம்புல 17-18 ஆப்பரேஷன்கள், நான்கு இரும்பு/அலுமினியம் ராடுகள், ஏகப்பட்ட சிராய்ப்புகள், தையல்கள்லாம் போட்டுக்கிட்டு இந்த விளையாட்டை விளையாடுறேன்" என்றார்.

ஜாக்கி ஷான் போல இதே தொழில் இதே வேலை. ஏறுவதும் இறங்குவதும். ஆஹா என வியப்புடன் பார்த்தேன். "இதுக்கே இப்படி ஆச்சரியமா? உங்கள இங்க கூட்டிட்டு வந்தாரே திப்பேசாமி கைடு. அவரும் ஒரு நேஷ்னல் சேம்பியன், ஃபோட்டோக்ராபில. அவர் எடுத்த படங்கள் தான் என்னை உலகெங்கும் அறிய வைத்தது. இப்ப கேட்டராக்ட் வந்ததால படங்கள்லாம் எடுக்கிறதுல்ல. அதோட அவர் 'நாய் வளர்ப்பவர்' எந்த வகை வேணாலும் கேளுங்க கொண்டு வந்து கொடுப்பார்" என்றார். அந்த கன்னடா ஒன்லி துபாஷியா இவ்வளவும் பண்ணுது என நினைத்துக் கொண்டேன்.

என் கண்களில் இருந்த ஆர்வத்தை பார்த்து , "மேலேயேறிக் காண்பிக்கவா" என்றார். ஹ்ம். செய்ங்க என்றேன். "எத்தனை செகன்ட்ல ஏறணும்" என்றார். அந்த மதில் நூறடிபோலும் இருக்காது. கைகளில் வெறுமனே வெள்ளைப்பொடி. உடலில் வேறேந்த கருவிகள் (ஹூக், சங்கிலிம் கயிறு கீழே விழாதிருக்க ) என எதுவும் இல்லாமல் ஏறுவேன் என்றார். எனக்குள் அட்ரினலின் பொங்கியது. நண்பர்கள் ஆசையாய்க்கொடுத்த உணவை கொஞ்சம் சாப்பிட்டு முடித்து விட்டு ஏறிக்காண்பிக்கிறேன். ஐந்து நிமிடம் பொறுங்க என்றவரை பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

பின்னர் தயாரானார்.குறுக்கும் மறுக்கும் நடந்தார் பின்னர் புலி பதுங்குவதைப்போல சிறிது தூரம் வரை மெதுவாக நடந்து சென்றார். வேகமெடுக்கும் விமானம் போல அப்படி விரைவில் ஓடிவந்து சுவரில் பற்றிக்கொண்டு ஏறினார், இமைக்கும் நொடிகளில் கீழே விழுந்து விட்டார். சுதாரித்துக்கொண்டு மீண்டும் கொஞ்சம் பின்வாங்கி , கைகளில் பொடியை பரவவிட்டுக்கொண்டு , வேகமெடுத்து தாவி ஏறினார். மீண்டும் தோல்வி எனினும் கீழே விழவில்லை. பாலன்ஸ் செய்துகொண்டு நின்றுகொண்டார்.



நாயக்கர்கள் 16 ஆம் நூற்றாண்டில் கட்டிய/செதுக்கிய மதில் சுவர், முழுக்க முழுக்க பாறைக்கற்கள். அளவோடு செதுக்கி அடுக்கி வைக்கப்பட்டது போன்ற மதில். பல்லி/உடும்பு போலும் ஏற முடியாத இண்டு இடுக்குகளே இல்லாத மதிற்சுவர். (மராட்டிய மன்னர் சிவாஜி காலத்தில் அவர் கட்டிய ஒரு மலைக்கோட்டையின் பாதுகாப்பை சரிபார்க்க இப்படியான ஆட்களை கொணர்ந்து ஏறச்சொல்லி பார்ப்பது வழக்கம். ஒரு மராட்டி சினிமா கூட வந்தது இந்த மையக் கருத்தைக் கொண்டு.) இதில் எப்படி ஏறுவது. அதுவும் பற்றிக்கொள்ள எந்த வித கருவிகளும் இல்லாது ? ஹ்ம். வியப்போடு அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தோம்.

மூன்றாம் முறை புலி வேகமெடுத்து மதிற்சுவரில் ஒட்டிக்கொள்ளாமல் விரல்,மற்றும் காலில் சாதாரண பூட்சுடன் பற்றிக்கொண்டு ஏறியேவிட்டது. மொத்தம் மூன்று செகன்டுகள் கூட இல்லை. மதிலின் மேல் இறுமாப்பு கொண்டு உலவியது, அனைவரும் கை தட்டினோம். மீண்டும் எதிர்பார்க்காத தருணத்தில் அதே வேகத்தில் பரபரவென கீழிறங்கியது. மீண்டும் உற்சாகம். ஆஹா. செல்ஃபோனில் படம் பிடித்தோம். மொத்தமே 6-7 செகன்ட்கள் தான் ஏறவும் இறங்கவும்! தங்கப்பதக்கம் ஒலிம்பிக்ஸில் நிச்சயம் ! :)  கண்டிப்பா இந்த ஒலிம்பிக்ஸில் தங்கம் வாங்குவீங்க சார் என்றேன், "சார்லாம் சொல்லாதீங்க பிரதர்னு சொல்லுங்க" என்று சிரித்தார்.

எப்போது சென்றாலும் இந்த மலைப்புலி அங்கு தான் சுற்றிக் கொண்டிருக்கும். சந்திக்க தவறாதீர்கள். இவருக்கான ஒரு விக்கிப்பீடியா தளம் கூட இருக்கிறது, எனினும் அதில் செய்திகள் அதிகம் இல்லை.
https://en.wikipedia.org/wiki/Jyothi_Raj





.