Friday, April 30, 2010

குழம்பிய குட்டையில் சில மீன் கள்

பெய்யற மழையில் தலையைச்சாய்த்து ஆடும் நாணல்
அதில் உட்கார நினைத்து விழ எத்தனிக்கும் போது பறக்கும் சிட்டுக்குருவி
குழம்பிய குட்டையில் சில மீன் கள்
மழை பெய்து முடிந்தவுடன் வரும் மண்வாசம்
இலையில் ஒட்டிக்கொண்ட கடைசி மழைத்துளி
பூத்திருக்கும் ரோஜா
கொஞ்சம் நிலவு
அது அலைஅலையாய்த் தெரியும் தேங்கிய மழை நீர்
உடைந்த முட்டைக்கூட்டை அலகால் ஏந்திக்குடிக்கும் காக்கை
கொஞ்சம் மேலே எப்போதாவது தெரியும் அரை(குறை) வானவில்
அதைப்பார்க்க மேகத்திலிருந்து சிறிது எட்டிப்பார்க்கும் சூரியன்
தெரு நாய்ச்சண்டை
சேவலின் கூவல்
அழகான சரியான கால இடை வெளி விட்டு கத்தும் செம்போத்து
நவ்வாப்பழம் கடிக்கும் அணில்
அதைத்துரத்தும் இன்னும் சில அணில்கள்
வெண்டாவி அத்து வரும் வேளையில் தென்னைமரத்திலிருந்து
வரும் அண்டங்காக்கையின் சத்தம்
வேப்ப மரத்து மூலிகைக்காற்று
என்னதான் இடியே விழுந்தாலும் அலுங்காமல் குலுங்காமல் நடக்கும் சேற்று எருமைகள்
அதன் மேல் அமர்ந்திருக்கும் குருவி
அவை கலக்கிய குட்டையில் மீண்டு வரும் நீர்க்குமிழிகள்
வெண் கொக்கு(குருட்டுக் கொக்கு)
தூரத்துக்கோயிலில் இந்த இடை வெளியில் அடுத்து அடிக்கும் என எதிர்பார்த்து
ஆனால் நின்று போகும் மணியோசை
வியர்க்கும் போது வீசும் இளந் தென்றல்
காலை மட்டும் நனைக்கும் என எதிர்பார்த்து தூக்கிப்பிடித்த உடையின்
விளிம்புகளையும் தொட்டுச்செல்லும் கடலலை
எல்லாம் பேசிமுடித்த பிறகு கிளம்பிய வண்டி சிறிது சுணங்கி நின்ற பிறகு
என்ன பேசுவது என்று தெரியாமல் ஜன்னல் கம்பிகளையும் சிறிது எக்கி எஞ்சினையும்
பார்த்துவிட்டு மீண்டும் அனுப்ப வந்தவரின் முகம் பார்க்கும் அந்த சில நொடிகள்

Saturday, April 24, 2010

"பெல்ஜியம்" கண்ணாடி.

'ஐயா இங்கயே இறக்கி வெச்சிரட்டுங்களா?' என்று கேட்டவாறு அந்தப்பழைய கால ஃப்ரேம் போட்ட ஒரு தாத்தாவின் படத்தை இறக்கினார்.நான் அதை முன்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்.பழய வீடு காலி பண்ணி சொந்தமாகக் கட்டிய வீட்டில் குடிபுக அன்று அனைத்து ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருந்தன.நல்ல வேலைப்பாடு கொண்ட ஃப்ரேம்..வளைவு வளைவுகளாக..அதில் யானைகள் துதிக்கையைத்தூக்கியவண்ணம் நடை போட்டுக்கொண்டிருந்தன.ஒரு புறம் சேடியர் புடை சூழ ராஜபவனி.நாலு இஞ்ச் ஃப்ரேமிற்குள் இத்தனை வேலைப்பாடுகளும்.சில இடங்களில் பூச்சி அரித்துக் காணப்பட்டது.எங்கோ கலைப்பொக்கிஷ அரங்கில் அல்லது மியூசியத்திலிருக்க வேண்டிய படம் அது.தப்பித்தவறி எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டது,பழய காலத்து (அம்மா சொல்வது போல் பெல்ஜியம் கண்ணாடி!)..கண்ணாடி முன்புறம் ,சரியாகத்துடைக்கப் படாததால் சில இடங்களில் மங்கிக்காணப்பட்டது,..பழுப்பேறிய ஜீன்ஸும் ,லகோஸ்ட் டிஷர்ட்டுமாக , நான் முன்னின்று அழகு பார்த்துக்கொண்டிருந்த போது, "இந்தப் படத்தையெல்லாம் மாட்றதுக்கு எடம் ஏது ? பேசாமத் தூக்கி பரண் மேல போட்டுவைங்க" ...மனைவியின் குரல் எனைக்கலைத்தது,,!வீடு ஒதுங்க வைத்துக்கொண்டிருந்ததால் சட்டையிலும் ஜீன்ஸிலும் அழுக்கு,அதோடு அந்தப்படத்தின் முன் நின்று கொண்டிருந்தேன்..ஏதோ ஒன்று எனை ஈர்த்தது...பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமெனத் தோன்றியது.



பிறகு வேலை வேலை, வீடு பூரா ஒதுங்கவைத்ததில் நேரம் போனதே தெரியவில்லை..தாத்தா பரண் மேல் அமர்ந்து கொண்டார்.நன்கு துணியைச் சுற்றி மூடி வைத்துவிட்டேன்.ஆனாலும் உள்மனம் ஏதோ ஒன்று சொல்லிக்கொண்டே இருந்தது..."நல்ல அங்க வஸ்திரமும்,சில்க் ஜிப்பாவும்,தங்க ஜரிகை வேஷ்டியும்,வாக்கிங்க் ஸ்டிக்கின் கைப்பிடியில் கழுகுமுகம் வழுவழுவென இருந்த வெண்கலப்பூண்" இவை எல்லாம் மீண்டும் மீண்டும் நினைவிலேயே இருந்து கொண்டிருந்தது,ராத்திரிப் படுக்கப்போகும் போது மனைவியிடம் கேட்டேன்."அந்தப் படத்தில் இருக்கிறவர் யாருன்னு தெரியுதான்னு ,,அடடா இன்னும் அந்தப் படத்தைப் பத்திதான் சிந்தனையா ?..பேசாம லைட்டை அணைச்சிட்டுத் தூங்குங்க" என்றாள்..


காலையில் எழுந்து அலுவலகம் கிளம்பிச்சென்றேன்..வேலையில் மனம் லயிக்கவில்லை...வழக்கமான என்றைக்கும் உள்ள வேலைதான்.இழுத்துக்கொண்டிருந்தது..எப்படா மணி ஐந்தாகும் என்று எதிர்பார்த்து பின் கிளம்பிவிட்டேன்.நேரே வீட்டிற்கு வந்தால் "என்ன ஐயா இன்னிக்கு சீக்கிரமே வந்துட்டப்ல இருக்கு ?" "ஆமா ..வேலை முடிஞ்சிருச்சி..அதான்.." என்று கைத்துண்டை எ டுத்துக்கொண்டு குளியலறைப்பக்கம் சென்றேன்.தாரை தாரையாக நீர் ஊற்றியது...மேலிருந்து..நினைவில் இன்னும் தாத்தாவின் படம்..யோசித்துப்பார்த்ததில் அது ப்டமாகத் தோன்றவில்லை எனக்கு.ஏதோ பிம்பம் போலத் தோன்றியது...குளித்து முடித்து விட்டு வெளியே வந்து காப்பியை வாங்கிக்குடித்துக் கொண்டே கேட்டேன்..."அந்தத் தாத்தா படம் எத்தனை நாளா நம்ம வீட்டில இருக்கு ?"..." அது ரொம்ப நாளாவே இங்கதான் இருக்கு..அவர் வேற யாருமில்ல .எங்க தாத்தாதான்...ரொம்ப படாடொபமா வாழ்ந்தவர்..நிலக்கிழார்..சொத்து ஏகப்பட்டது..ஆனா எல்லாத்தையும் தானதர்மம்னு தொலைச்சிட்டார்.கடைசியில மிஞ்சினது இது ஒண்ணுதான்..அதை மரச்சட்டமெல்லாம் போட்டு ஃப்ரேம் பண்ணி வெச்சிட்டோம்..அவர் போய் இப்போ ரொம்ப நாளாச்சு...ஆமா இதெல்லாம் ஏன் கேக்கறீங்க.."என்றாள்..."இல்ல சும்மாதான்னு " சொல்லி சமாளித்தேன்....நான் மார்க்கெட் போய்ட்டு வர்றேன்னு சொல்லிட்டு கிளம்பி சென்று விட்டாள்....உடனே பரணில் ஏறி துணியை விலக்கிவிட்டுப் பார்த்தேன்.அதில் தாத்தா கொஞ்சம் கொஞ்சமாக மறையத்தொடங்கியிருந்தார்..எனக்கு என்னவென்று புரியவில்லை.கீழே இறங்கி விட்டேன் உடனே.....


ஏன் அப்படித்தெரிய வேண்டும்..ஒருவேளை சரியாகத்துடைக்காததினால் மரத்தூள்களும் தூசியும் பட்டு அதுபோல் தெரிகிறதா?மார்கெட் போனவள் திரும்பி வந்தாள்.."என்ன மறுபடியும் உடம்பெல்லாம் தூசி..பரண்மேல ஏறினீங்களா ? சும்மா கொஞ்ச நேரம் இருக்க மாட்டீங்களே.."ன்னு கத்திக்கொண்டே அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள்...மேலும் அந்தப்படத்தின் மீது ஆர்வம் தொடர்ந்தது..இவளுக்கு இதுக்கு மேலே எதுவும் தெரியாது,,,சும்மா கேட்டதுக்கே இவ்வளவு எரிச்சல் படறப்ப மேலயும் கேட்டுப் பயனில்லங்கற முடிவுக்கு வந்திட்டேன்...எனது இந்த நடவடிக்கை அவ்வப்போது தொடர்ந்தது...விடுமுறை நாட்களில்....


ரெண்டு மாசத்திற்கு பிறகு ஏறிப்பார்த்த போது தாத்தா முழுமையாக மறைந்துவிட்டிருந்தார்...வெறும் மரச்சட்டங்கள் தான் தெரிந்தது.சில இடங்களில் காரை பெயர்ந்து காணப்பட்டது.எனக்கு என்னவென்றே புரியவில்லை...தாத்தா எங்கே காணாமற் போய்விட்டார்...ஒரே யோசனை..குழப்பம்..கீழே இறங்கி வந்து விட்டேன்..யார்கிட்ட இதைப்பத்திக் கேட்கிறது..?யாருக்குத் தெரியும்..?.ஒன்றும் விளங்கவில்லை..



பின்னர் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டேன்..தாத்தா...இல்ல!....மரச்சட்டங்கள் கொண்ட கண்ணாடி இன்னும் பரணில் தூங்கிக்கொண்டிருந்தது.திரும்பி வருவதற்கு ஒரு மாதத்திற்கும் மேலேயே ஆகிவிட்டது..."என்ன என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க..."ம்ம்...இங்க பாரு..என்று காட்டினேன்.."பரணில் உள்ள ஃப்ரேம் போட்ட படம் போல ஒரு சிறிய படமொன்று...ஃப்ரேமில் அதேபோல் யானை வேலைப்பாடுகள்..ஜப்பான் நகரத்தின் வீதி..."ம் ..உங்களுக்கு வேறே எதுவுமே கெடைக்கலியா ?..இன்னும் அந்த தாத்தா படத்த மறக்கல போலிருக்கு..." என்றாள்..மேலே ஏறிப்பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும் இவ இருக்கும் போது எதுவும் நடக்காது..என்று நினைத்துக்கொண்டேன்..


என் பெட்டியைக் குடைந்து கொண்டிருந்தாள் மனைவி.."என்னங்க இது புதுசா வந்திருக்க நாவலா ? என்று ஸ்டீஃபன் ஹாக்கிங்க் புத்தகத்தைக் காட்டினாள்...இல்ல இது " ப்ரீஃப் ஹிஸ்ற்றி ஓஃப் டைம்" வானாராய்ச்சி சம்பந்தப்பட்டது..என்னோட நண்பனுக்கு கொடுக்கறதுக்காக வாங்கிட்டு வந்தேன்.அத உள்ள வை" என்றேன்.


தாத்தா காணமற்போன விபரம் இன்னமும் புரிபடவில்லை.மறுபடியும் மனைவி இல்லாத நேரம் ஏறிப்பார்த்தேன்..இன்னமும் மரச்சட்டங்கள் தான் தெரிந்து கொண்டிருந்தது,எரிச்சல் பட்டு கீழே இறங்கிட்டேன்..தாத்தா தொலைந்த விவரத்தை மனைவியிடம் சொல்லவில்லை...அப்படியே சொன்னாலும் கேட்கக்கூடிய மன நிலையில் அவள் இல்லை.


புத்தகம் கேட்டவன் ஊரில் இல்லை..ஊர்ப்பக்கம் யாருக்கோ உடம்பு சரியில்லை என்று சென்றுவிட்டதாக செய்தி கிடைத்தது,இரண்டு மூன்று மாதங்களாகவே அந்தப்புத்தகம் என்னிடத்திலேயே இருந்தது..ஒரு நாள் பொழுது போகாமல் அதை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்..இலகுவான எளிதான ஆங்கிலத்தில் தான் எழுதப்பட்டிருந்தது...வழக்கமாக இந்தமாதிரி நூல்களில் காணப்படும் கணக்குகளோ சமன்பாடுகளோ இல்லாமலிருந்தது பெரிய ஆறுதலாக இருந்தது...கதை போல் சென்று கொண்டிருந்தது...என் நண்பனுக்கு வானாராய்ச்சியில் மிகவும் ஈடுபாடு..டெலஸ்கோப்..பைனாகுலர் எல்லாம் வெச்சிக்கிட்டு மொட்டமாடியே தவம்னு கெடப்பான்..அவ்வப்போது பக்கத்து வீட்டு சன்னலையும் ஃபொகஸ் பண்ணும் அவனது டெலஸ்கோப்..!ரொம்ப சிலாகித்துப் பேசுவான் ஹாக்கிங்க் பத்தி...ஒருவேளை அவனுக்கு இது ஒண்ணுமே இல்லாத விஷயமா இருக்குமோ என இருந்தது இந்தப் புத்தகம்.ஆராய்ச்சிக் கட்டுரையை ஜனரஞ்சகமாக கொடுத்தது போலிருந்தது..சுவாரசியமாகச்சென்று கொண்டிருந்தது,...ஒளி ஆண்டு பற்றிய விளக்கம் என்னை வியப்பிலாழ்த்தியது.


எப்போதும் நாம் பார்க்கும் வான்வெளி மாறாதிருப்பது,நட்சத்திரங்கள் எப்போதும் ஒரே இடத்தில் தோற்றமளிப்பது ஏன் என்பன போன்ற விளக்கங்கள் தெளிவாக இருந்தன..சூரியனை விட்டு வெளியேறும் ஒளி நம் பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகின்றன..இதேபோல் நம்மை விட்டு வெகு தூரத்திலிருக்கும் நட்சத்திரங்களின் ஒளி நம்மை வந்தடைய வெகு நாட்கள்,வருஷங்கள் ஆகின்றன..அதனால்தான் அவை எப்போதும் ஒரே இடத்தில் இருப்பது போல் தோன்றுகிறது..என்ற இன்ன பிற விளக்கங்களும் அதில் எழுதப்பட்டிருந்தது...பிறகு புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன்..ஏன்னா அதற்குப் பிறகு அதிகமான தொழில் நுட்ப விஷயங்கள் எழுதப்பட்டிருந்தது...அதற்கு மேல் படிக்க மனமில்லை...அயர்ச்சி வந்து "எப்படா அவன் வருவான் , அவங்கிட்ட அந்தப் புத்தகத்தை கொடுத்துத் தொலைக்கிறதுன்னு ஆயிருச்சு....புத்தகம் பெட்டிக்குள் தூங்கியது...யானை ஃப்ரேம் பரணிலேயே தூங்கிக்கொண்டிருந்தது..


நாட்கள் ஓடின...தாத்தா படம் பற்றி மறந்தே விட்டேன்..அதன் மேலிருந்த விருப்பமும்,அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் குறையத்தொடங்கி..பரண் ஏறிப்பார்க்கவும் மனமின்றி....ஏறக்குறைய இல்லாமலே போனது...அதில் இப்போது மரச்சட்டங்கள் எல்லாம் மறைந்து போயிருந்தன...அவனது உருவம் லேசாக அலங்க மலங்கலாக தெரியத்தொடங்கியிருந்தது...அதில் அவனது டி-ஷர்ட்டில் இருந்த சிறிய முதலையின் உருவம் தெளிவாகத் தெரிந்தது....







Friday, April 16, 2010

உணர்கொம்புகள்

வினைல் தரையில் 18டிகிரிக்கும் குறைவான தட்பவெப்பத்தில் ,காற்றும் சமச்சீராக்கப்பட்ட அறையின் மூலையில் அடிபட்டு மல்லாக்க விழுந்து கிடந்தேன்..வாழ்க்கையில் யாருக்கும் இந்த அளவு அடி விழுந்திருக்கக்கூடாது..மரண அடி என்று நினைத்துக்கொண்டேன்..அடித்துப் போட்டவர்கள் நேரே போட்டிருந்தாலும் பரவாயில்லை..மல்லாக்கப் போட்டதுதான் பிரஸ்னை ஆகிவிட்டது..நகரக்கூட முடியவில்லை..ம்...நான் முனகுவதையும் உடம்பிலிருந்து வரும் குருதியையும் பார்ப்பதற்கு யாரேனும் உண்டா ?....ம்ஹூம்...யாருடைய கவனத்தையும் கவரவில்லை..அடி விழுந்தது எதைக்கொண்டு என்பதை ஊகிக்க முடியவில்லை..ஆனால் கனத்த அடிப்பாகம் கொண்ட பொருளால் என்பது மட்டும் தெளிவாக இருந்தது,உணர்கொம்புகளை இடது புறமும் வலது புறமும் ஆட்டி ஆட்டி ஊன்றி எழ முயற்சித்தேன்..அவை முறிந்து விடும் போலிருந்தது....ம்..அப்படியும் முடியவில்லை...அறையில் வேறு யரும் இல்லாததால் , அறையின் குளிர் அதிகமாகிக்கொண்டிருந்தது....

வெளி வந்த குருதி சிறு ஓடையாகித் தேங்கிக்கொண்டியோருந்தது..இதை உருவாக்க நான்பட்ட பாடுகளை நினைத்துப் பார்த்தேன்..கூட்டுக்கண்களிலிருந்து நீர் கசிவது போலிருந்தது,...அடிவிழுந்ததில் இடது புறக் கூட்டுக்கண் சிறிது கலங்கித்தான் விட்டது.

எவ்வளவு சுதந்திரமாக ஆடிப்பாடி அலைந்து கொண்டிருந்தேன்..குளிர்பதன அறையில் எவ்வளவு பத்திரமான இடத்தில் ....வெளியே வந்தேன் எல்லாம் தொலைந்தது,...இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்யமே....இப்போது நினைத்துப் புண்ணியமில்லை.தனக்கென கொடுக்கப்பட்ட அறையில்,அமைத்துக்கொண்ட இடத்தைவிட்டு ஏன் வெளியே வர வேண்டும்..பிறகு ஏன் இப்படி மரண அடி வாங்க வேண்டும் ?கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால் தேவலை என்று மனம் இளைத்தது...

பெருகி ஓடும் குருதியைக்கட்டுப்படுத்த ஒரு காலைக் கொண்டு வெளி வரும் பாதையை அடைத்துப் பார்த்தேன்....ம்..முடியவில்லை...ஏற்கனவே குருதி பெருகி வெளிவந்ததில் அந்த இடமே நைந்து போயிருந்ததால் வைத்த காலும் அதனுடன் ஒட்டிக்கொள்ள..ஓ...கடவுளே...வைத்த காலை எடுக்க முயற்சிக்கும் போது..அதில் இருந்த சிறிய செதில்களில் ஒன்று குத்திவிட ...தீப்பட்ட இடத்தில் வேல் பாய்ந்தது.....ஐயோ..கவனிப்பார் யாருமில்லையா..?

இவ்வளவு மரண வேதனையிலும் ,மகிழ்ச்சி சிறிதாக இழையோடியது..இவ்வாறு அடிபட்டுக்கிடந்த நண்பர்களைத் தாக்கவந்த எதிரிகளை நினைத்துப் பார்த்தேன்..அப்படி யாரும் வரவில்லை..எனக்கு என்பதுதான் அந்த மகிழ்சிக்கோட்டின் காரணம்.....இல்லாவிடில் ஒவ்வொருவனும் அளவில் சிறியவனாக இருப்பினும் பளு இழுப்பதில் மன்னர்கள்...உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் கூரான் பற்களால் கொத்தி தன் உடம்பின் பாரத்தைப் போல் பல மடங்கை இழுத்துஸ் செல்வர்...ஆரட்டி பாராட்டி வளர்த்த உடல் பிய்த்துக்கொண்டு போகப்படுவதை தன் கண்களாலேயே காணும் அந்த காணச்சகிக்காத காட்சி எனக்கு நிகழவில்லை இன்னமும்...இருகண்களையும் நிலைனிறுத்த முயற்சி செய்து தோற்றுபின் வலப்புறக்கண்ணை மட்டும் நிலை நிறுத்தி அறையை சுற்றி நோட்டமிட்டேன்..அலங்கமலங்கலாகத் தெரிந்தது..ம்...நன்கு பராமரிக்கப்பட்ட அறை..அதனால்தான்...

அறையின் குளிர் அதிகமாகிக் கொண்டிருந்தது...உடலின் சூடு சரியான அளவை விட்டு சிறிது இறங்கி விட்டது..போலிருந்தது..பயம் பிடித்துக்கொண்டது...உடம்பில் பட்ட அடிகளால் மரணிப்பதை விட ..மனத்தில் உள்ள பயத்தால் மரணிப்பது...கொடுமை...நிகழ்ந்து கொண்டிருந்தது..

மீண்டும் ஒட்டிக் கொண்ட காலை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்...அதைப்பகீரதப் பிரத்னம் செய்து வெளியே எடுத்துவிட்டேன்..எனது மரண ஓலம் அறையின் சுவர்களில் எதிரொலித்தது...ஆனால் அதைக் கேட்பதற்குத்தான் யாருமில்லை..காலை அதி வேகத்துடன் எடுத்ததால் , குருதி வெளியேறி பலகீனமான உடம்பு பலமுறை துள்ளியது...அடிபட்ட இடம் மீண்டும் மீண்டும் தரையில் மோதி ...மோதி...இதற்கு மேல் என்னால் நினைக்க இயலாமல் நினைவிழந்தேன்...எவ்வளவு நேரம் இப்படியே கிடந்தேன் என்று தெரியவில்லை...

அறைக்குள் யாரோ வரும் சத்தம் கேட்டது..கலக்கத்துடன் விழிப்புத்தட்டியது...இரண்டில் ஒன்று எப்படியும் நடந்துவிடும் என நினைத்துக்கொண்டேன்..ஷூ ஒலிகள்....சரக்..சரக்...என அருகில் வந்து தேய்ந்து நின்றன..." டேய் ...எவண்டா இங்க கரப்பான்பூச்சிய அடிச்சுபோட்டது....ச்ச..வர வர இந்த ஆஃபிஸில சுத்தங்கறதே இல்லாமப்போச்சு..." என்று ஷூவால் எத்தப்பட்டதில் அந்த அறைக்குள் இருந்தே வீடுபேறு அடைந்தேன்...!

Saturday, April 10, 2010

குடை

அவசர அவசரமாக அனைவரும் இயங்கிக் கொண்டிருந்தனர்..கடிகாரம் மட்டும் ஆறு மணியை வெகு சாவகாசமாக நெருங்கிக்கொண்டிருந்தது..அவர்களின் அவசரத்திற்குக்காரணம் மழை..காலையிலேயே போக்கு காட்டிக்கொண்டிருந்தது.மத்தியானம் தரையிறங்கி ,இப்போது மாலையில் விஸ்வரூபமெடுத்திருந்தது...என்னத்த மழ வரப்போகுதுன்னு நெனச்சு குடையை எடுக்காது வந்தது மெத்தனம்..சரியாகப் பிடித்துக் கொண்டது....

ம்..இனி சர்ச்கெட் வரை நடந்து போய் கெடைக்கிற "போரிவலி" லோக்கலைப் பிடித்து...பின் அங்கிருந்து நடந்து...இந்த மழையில இதெல்லாம் இமாலய செய்கைகளாக தோன்றிற்று எனக்கு...ஒருவாறாக வேலையை முடித்துவிட்டு கிளம்பினென்..மழை போராடிக்கொண்டிருந்தது..நீர்த்திவலைகளே கண்ணுக்குத் தெரியாமல் சின்டஃஸ் டேங்க்கை கவிழ்த்தது போல் கொட்டிக்கொண்டிருந்தது...

"ஜல்தி சலோ பாய்"..பின்னாலிருந்தவன் நெட்டித்தள்ளாத குறையாய் இடித்துக்கொண்டு முன்னே றினான்..ஈறாஸ் தியே ட்டர் வாசலிலிருந்து ரோட்டைக் கிராஸ் பண்ணுவதற்குள் தெப்பமாக நனைந்திருந்தேன்..... கையிலிருந்த டைரி நல்லவேளை பிளாஸ்டிக் கவர் நனையவில்லை..நாளைக்கான வேலைக்குறிப்புகள்....

ஸ்ட்டேஷனுக்குள் நுழைந்து நாலாவது பிளாட்ஃபார்மில் வந்து வண்டிக்காக காத்திருக்கத்தொடங்கினேன்...கண்ணில் பட்டது குடை விளம்பரம்..வெறுப்பில் வேறுபக்கம் பார்வையைத் திருப்பினேன்..6:25 என கடிகாரம் நேரத்தைக்காட்டிக் கொண்டிருந்தது..மழை இன்னும் சீற்றம் குறையவே இல்லை..ம்...பல நாள் பாவத்தப் பொறுத்துக்கலாம்..ஒரு நாள் புண்ணியத்த பொறுத்துக்க முடியாது...

இண்டிகேட்டரில் "போரிவலி" என வந்ததும் , அனைவரும் போருக்குத்தயாரானார்கள்..ஸீட் பிடிக்க..நானும்தான்...
வந்தது வண்டி..திமுதிமுவென ஏறியது கூட்டம்..இடித்து பிடித்து ஏறி 2ஆவது ஸீட்டைப் பிடித்து(அதிர்ஷ்டம் தான் இன்னிக்கு) அமர்ந்து தலையை ஏற்கனவே பேண்ட்டுக்குள் நனைந்திருந்த கர்ச்சீப் கொண்டு துடைத்துவிட்டேன்..

ஓடிக்கொண்டிருந்தது வண்டி..தாதர் வந்ததும் கூட்டம் செம்மியது...நெருக்கமும் புழுக்கமும்..ஏன் தான் இந்த மழை பெய்கிறதோ என நினைக்க வைத்தது..சன்னல் கதவை வேறு மூடி வைத்திருந்தனர்..சாரல் அடிக்குமென்று....

பார்வையை பக்கத்து ஸீட்களில் ஓட்டினேன்..மும்முரமான சீட்டுக் கச்செரி..பொழுது போகிறது அவர்களுக்கு..தடதடவென ஓடிக்கொண்டிருந்த வண்டி நின்றது சிக்னலில்..மழை நின்ற பாட்டைக் காணோம்...

ஒரு சின்ன விஷயம்..இத்துனூண்டு..வெறுமனே தலைய மட்டும் நனைய விடாம,மற்ற பாகங்களில் விழுகிற மழைத்தண்ணிய தடுக்க இயலாத அல்பம் சின்னக்குடை..இது மனுஷன எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்குது...ச்சீ..நாளைக்கு எடுத்துட்டு வந்தே ஆகணும்...

ஒரு வழியாக "அந்தேரி"யைக் கடந்து "போரிவலி" வந்து சோ)ர்ந்தது...வண்டி..!இறங்கி அவரவர் குடையைப் பிடித்துக்கொண்டு நடையைக்கட்டினர்....எனக்குத் தான் முடியல..அழுகை வந்தது.....

வெள்ளம் போல ரோடுகளில் தண்ணீர் பெருகெடுத்து ஓடிக்கொண்டிருந்தது....அப்போதிருந்தே கவனித்துக் கொண்டிருந்தேன்..காத்துக் கொண்டிருந்தாள் அவளும் மழை நிற்கட்டும் என்று..,ம்...நமக்கு ஒரு துணை என்று அந்த எரிச்சலிலும் ஒரு சந்தோஷம்..

எல்லோரும் போய்விட்டனர் நாளைக்கு காலையில் ஞாபகமாக குடையை எடுத்துக்கொண்டு ஆபீஸ் வருவதற்கு..நானும் அவளும் மட்டும் தான் பாக்கி..சுற்றும் முற்றும் பார்த்தேன்..நப்பாசை..யாராவது குடையில் லிஃப்ட் தரமாட்டார்களா என்று..ம்ஹூம்ம்...குடை எனக்கு இப்போது கிடைத்தற்கரிய தேவாமிருதமாகத் தோன்றியது...

ம்..வருது ஒரு கெழம்...எப்படியாவது பிடிச்சு இதோட போயிரவேண்டியதுதான்னு,....நெனைச்சிக்கிட்டு இருக்கும்போதே கெழம் அந்தப் பொண்ணுகிட்ட போய் இளிச்சு...அவளையும் குடையில் கூட்டிக்கிட்டு போயே விட்டது...

நான் நாளைக்கு குடைய மறந்தாலும் பரவால்ல..சேலையக் கட்டிக்கிட்டு வரணும்னு நெனச்சிக்கிட்டேன்...!