Saturday, January 30, 2021

ஹாம்லெட்

 ஹாம்லெட் பற்றிய காணொளி கண்டேன், நேரடி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது போனது வழக்கம்போல. பாலா பேசிய ‘டான் க்விக்ஸாட்’ நிகழ்வுக்கும் இதே போல நேரங்கழித்து கலந்து கொள்ள வாய்த்தது. இங்கு ஹாம்லெட் பற்றி முதலில் பேசியவர் நவீனா, இத்தனை ஆங்கிலம் எதற்கு? ஒரு வாக்கியத்தில் இரண்டு தமிழ்ச் சொற்களே இருக்கின்றன. மற்றதெல்லாம் இங்கிலீஷ். ஆஹா.. ஷேக்ஸ்பியரின் புனைவுகளையோ நாடகங்களையோ மேற்கல்வியில் படிக்க வாய்ப்பில்லாது போன தொழில்நுட்ப படிப்பு எனது. மேலும் மூலத்தில் வாசிக்கவென செறிவான ஆங்கில அறிவு வேண்டியிருக்குமெனக் கேள்விப் பட்டிருக்கிறேன். அதனால் அருகில் கூட சென்றதில்லை. எளிதாக்கிய பதிவுகள் எங்கும் என் கண்ணில் படவில்லை. இது ஒரு நல்வாய்ப்பெனக் கருதி அமர்ந்தால் அத்தனையும் தங்கிலீஷ். போதும் போதும். அவர் ஆங்கிலப்பேராசியராக கூட இருக்கலாம். அவரின் பின் புலமெல்லாம் ஞானறியேன். செந்தமிழில் பேச வேணும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. (அப்படியே இருந்தாலும் ஆர்வத்துடன் வரவேற்பேன்.)



தமிழ் இலக்கிய கூட்டம் என்று முடிவான பின், தமிழ் மட்டுமே ஒலிக்க வேணும் என்று விரும்புபவன் நான். நாள்தோறும் காலைக்காப்பி முதல் இரவு உணவு வரை ஆங்கிலம் தவிர வேறேதும் பேசவியலாப்பணி எனது. இப்படிப்பட்ட இலக்கிய நிகழ்வுகளே தமிழுக்கு நெருக்கமாக என்னை உணரவைக்கும். எனினும் அவர் முழுக்க ஆங்கிலத்திலேயே உரையாடியிருக்கலாம். ஒரு குற்றமுமில்லை. பாலாவின் கூட்டத்தில் கூட ஒரு பெண்மணி (பெயர் மறந்து விட்டது) இங்கிலாந்தில் தான் வசிக்கிறார். அத்தனை அழகான தமிழில் இதுவரை அறியாத ’க்விக்சாட்’ குறித்த பதிவுகளை சொல்லிக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் அவர் பேச்சாளர் இல்லை அன்று. இங்கோ நிகழ்வைத் தொடர்ந்தும் கேட்கவியலவில்லை என்னால். என் மனதிற்பட்டதை சொல்கிறேன். அது ஆங்கில இலக்கியமாகவே இருக்கட்டும், அழகு தமிழில் பிறமொழி கலக்காது பேசினால் என்ன தவறு? தவிர்க்கவே இயலாத சொற்களை பேசுவதை எதிர்க்கவில்லை. ’மைக்’கை ஒலிவாங்கி என்றெல்லாம் பேசவேணும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை.!

நீரினும் ஆரளவின்றே

 


நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

- குறுந்தொகை
 
இந்தக் குறுந்தொகைப் பாடல் யாரெழுதிய தென்று தெரியவில்லை. ’நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே’ என்று தொடங்குகிறது. எத்தனை ஆழம், எவ்வளவு பெரிது என் நட்பு, காதல்? என்றெல்லாம் சொல்கிறாள் தலைவி. இதே போல கெல்வின் ஹாரிஸ் எழுதி இசைத்த ஒரு ஆங்கிலப்பாடலும் இருக்கிறது. ‘How deep is your love? Is it like the ocean?’ கெல்வின் ஹாரிஸுக்கு குறுந்தொகையும் தெரிகிறதா?! 🙂 இருப்பினும் கெல்வின் பாடலில் இந்த வரி உசிதம் ! “Is it like Nirvana?” நிர்வாணமடைதலைப் போன்ற ஆழமானதா என்ற இந்த வரி நிறைய யோசிக்க வைக்கிறது. இவ்வளவெல்லாம் காதலிக்க முடியுமாங்ணா ?! 🙂

Tuesday, January 12, 2021

என்றும் மாறாச் சார்லி

 

பார்வதி கேரக்டர் பேபீஸ் டே அவுட்( பணிப் பெண்ணிடம் கதை கேட்ட சிறு குழந்தை ஒவ்வொரு இடமாகச்செல்லும் அதே இங்கு பார்வதி செய்வார்) , துல்கர் கேரக்டர் டார்ஸான் ( அழிவின் விளிம்பில் இருக்கும், கைவிடப்பட்ட அத்தனை விலங்குகளையும் தாமே உருவாக்கி வைத்திருக்கும் சரணாலயத்தில் கொணர்ந்து சேர்ப்பார் ) என ரெண்டும் கலந்த கலவை சார்லி. அற்புதமான மேஜிக்கல் ரியலிஸமாக பரிணமித்தது அங்கு அதற்கேயுரித்தான ‘ரா’ வான வடிவத்தில்.. சின்னச்சின்ன வேடத்தில் வருபவரும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்கள். சுவரில் அந்த ஒரு பற்றுக்குறடு தொங்கும் காட்சி மானின் கொம்புகளை உணர்த்தும். துல்கரின் வீட்டில், அதை தொட்டுப்பார்த்து விட்டுச்செல்வார் பார்வதி. எத்தனை பேர் கவனித்தனர் என்று தெரியாது.. மேலும் முதலில் வந்திறங்கும் பார்வதியை தலை முழுக்க பூந்தொட்டியைக் கவிழ்த்துக் கொண்டு பைக்கில் ஓட்டிச்சென்று கொண்டு சேர்ப்பார் துல்கர். இப்படி ஒவ்வொரு காட்சியுமாக இழைத்திருப்பர் சார்லியில். வண்ணக் குழம்புகள் அள்ளித்தெளித்து ஒரு ஓவியனின் சித்திரங்களாக படம் முழுதும் விரவிக்கிடக்கும். 
 
அடிப்படை நிகழ்வுகளை “மாறா”வில் மாற்ற(றா)’ வில்லை தான் 🙂 இருப்பினும் மூலத்தின் சிலிர்ப்பில் ஒரு துளி போலும் இல்லை இங்கு, திருடனும் துல்கரும் ‘போர்த்து’ கழிப்பர் (பன்றிக்கறி). இப்படியெல்லாம் சமரசம் செய்து கொண்டு மூலத்தை ஏன் அழிக்க வேணும்? சார்லியில் அகில உலக அபிநய சரஸ்வதி பராசக்தி பார்வதி’யின் வேடத்தில் ஒரு வில்லி போன்ற முகத்தில் ஒரு கதாநாயகி இங்கு. இத்தனை சீரியஸான ஒரு பாவம், தேவையா? உள்ளத்தில் முகிழ்க்கும் ஆவல் கண்களில் தெரிய வேணும் அம்மணி! இத்தனை வயதான ஒரு தலைவன், களைப்பு உடலிலும் முகத்திலும் மண்டிக்கிடக்குறது மாதவனுக்கு. போது மய்யா உங்க பொங்கச்சோறு! #என்றும்மாறாச்சார்லி