Saturday, February 26, 2011

பிடித்த தருணங்கள்



திண்ணையில் வெளியான எனது கவிதை

பிடித்த நபர்களுடன்
விலாவரியாகப்பேசிவிட்டு
ஆசுவாசமாக அமர்ந்திருக்கும் தருணங்கள்

கண்களாலேயே கவிதை
பாடிவிட்டு பிறகு அதை நினைத்து
அசை போடும் தருணங்கள்

நீண்ட பயணத்தில்
முன்பின் அறிமுகமாகதவர்களிடம்
பொதுவான விடயங்களைப்பற்றி மட்டும்
பேசிக்கொள்ள இயலும் தருணங்கள்

மொழி புரியாதவர்களின் கூட்டத்தில்
நினைத்ததை சொல்ல இயலாது
அவர்களிடம் வெறுமனே புன்னகைத்து
மட்டும் வைக்கும் தருணங்கள்

நீண்ட நாள் பிரிந்த உறவை
மீளச்சந்தித்தும் அனைத்தையும் உரையாட
முடியாமல் போகும் தருணங்கள்

உரையாடிக்கொண்டே செல்கையில்
கூட வந்தவர் பின் தங்கிவிட
கூட்டத்தில் தான் மட்டும்
தனித்து விடப்படும் தருணங்கள்

கடந்த காலத்தினை நினைத்து
நிகழ் காலத்தில் அசைபோட இயலாமற் போகும்
சூழல் அனுமதியாத தருணங்கள்

ஏதும் நினையாது
அமைதியாய் இருக்க நினைத்து இயலாமலே
போகும் தருணங்கள்

அனைத்தும் அறிந்தவர் போலிருப்பவரிடம்
அடக்கமாகப்பேசிவிட்டு பின் அவரைப்பற்றி
அறிந்த பின் வெறுப்புரும் தருணங்கள்

நினைத்தது அனைத்தையும்
கவிதையாய் வடித்து பத்திரிக்கையில்
வெளிவர எதிர்பார்த்து அவை திரும்பி
வரும் தருணங்கள்


.

Saturday, February 19, 2011

எந்திரன்




எனக்கும் என் பெர்ஸனல் அசிஸ்டென்ட் அசிமோவுக்கும் எப்பொழுதாவது விவாதங்கள் நடப்பதுண்டு.எப்பொழுதுமே முடிவுகளை எனக்கு இணக்கமாகவே கொண்டு வருவது தான் என் வழக்கம்.ஆனாலும் அசிமோவ் தான் தோற்றுப்போய்விட்டேன் என்று ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை.அடுத்த முறை உங்களைப்பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அவனுக்கிடப்பட்ட வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிடுவான்.அன்றும் இதே மாதிரிதான்.அதற்கு முன்னால் அசிமோவ் யாரென்று சொல்லிவிடுகிறேன்.

அசிமோவ் தனக்கிடப்பட்ட எந்தப்பணியானாலும், எத்தனை முறை திருப்பித்திருப்பிச் செய்யச்சொன்னாலும், சளைக்காது செய்து முடிக்கும் ஸ்டீல் காலர்.ரோபோட்டை விடக் கொஞ்சம் உயர்ந்த க்ளோன்.எனது சொந்தப்பணிகளை மற்றும் என்னைக் கவனித்துக்கொள்ள என்னால் படைக்கப்பட்டவன். நானோ கொஞ்சம் கொஞ்சமாக அவனில்லை என்றால் எந்தப்பணியையும் செய்ய இயலாது எனத்தள்ளப்பட்ட நிலையில் உள்ள , தேசிய அறிவியல் கழகத்திலிருந்து கட்டாய ஓய்வு தரப்பட்டுகழட்டி விடப்பட்டு- வீட்டில் தள்ளப்பட்ட சுடர் மிகும் அறிவு படைத்தவன்.



வாரத்திற்கு ஒரு முறை என்று நிர்ணயிக்கப்பட்டு, விடாமல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மழை பெய்துகொண்டிருந்தது ,அன்று மத்தியானமும்.வேலைகளை முடித்த அசிமோவ் என்னருகில் வந்து பீடிகையுடன் அமர்ந்தான்.”மழையைப் பற்றி உங்கள் கருத்து ?” என்று கேட்டான்.நானும்ம்மழை பெய்கிறதல்லவா , வாராவாரம்  
அதற்கென்ன ?”என்றேன். “ அதற்கல்ல , பண்டைய காலங்களில் மழைக்கென தவமிருந்து, அதைப்பெற்றபின் பாடி,மகிழ்ந்து, பாராயணம் எழுதிய கதைகளை அறியமாட்டீரா?” என்றான். “ எல்லாம் தெரியும், அதனால் உண்டான பக்கவிளைவுகளை நீ அறிவாயா ? அளவுக்கதிகமாக பெய்ததால் ஊரும் காடும் அழிந்து ஏதோ சில இடங்களுக்கு மட்டும் பயனளித்துக் கொண்டிருந்ததை இன்று நாடு முழுதும் பயனளிக்கக்கூடியதாக மாற்றியது அரிய செயல் அல்லவா ?” என்றேன். “ அத்தனை பேருக்கும் சமமான இயற்கை வளங்கள் கிடைக்க வேண்டுமென்பதிற்காக பூமியை இருபத்துமூன்றரை டிகிரி சாயத்துவைத்தவனை அறிவீர்களா?” நான் வாயடைத்துப்போனேன், முடித்தவன் மீண்டும் நறுக்கெனப் புட்டு வைத்தான்படித்தவன் தவறு செய்தால் ஐயோ என்று போவான்

அவசியத்திற்கு அதிகமான நினைவகத்தை இவனுள் வைத்தது தவறு என மனதில் நினைத்துக்கொண்டேன். “ வாரத்திற்கு ஒரு மழை என என்று அமைத்து பருவகாலங்களைக் குலைத்து , பறவை இனங்கள் யாவையையும் தானாக அழிந்து போகச்செய்து, தாவர ஜீன்களின் சங்கதியை மாற்றி ,…..ம்….இன்னும் இது போல எத்தனையோ ..இதற்கெல்லாம் அனுமதி கொடுத்தது யார்? மனிதனைக்காட்டிலும் அறிவு படைத்த உயிர் இல்லாததாலா ?”என அடுக்கிக்கொண்டே போனான் அசிமோவ். “ இவையெல்லாம் அறிவியலின் வளர்ச்சிகள், எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதின் முடிவுகள்என்றேன். “அல்ல அதுவல்ல , இது அதிகப்பிரசிங்கித்தனம்.”என்றான் அவன். “உனக்கு இவ்வளவு கற்றுக்கொடுத்ததே என் தவறு.“கற்றுக்கொடுத்தது உங்கள் தவறல்ல,சரியான நேரத்தில் அதை உங்களுக்கெதிராக நான் பயன்படுத்துவதுதான் தவறாகத் தெரிகிறது.

இருபதாம் நூற்றாண்டின் எச்சங்கள் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் தொடர்கின்றன.கலைகளும், பண்பாடுகளும், மொழியும் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. முகமிழந்து போவதில் ஏன் உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் ?, பருவ மாற்றங்களே இல்லாத காலத்தில் யாரால் எழுத முடியும் ? ‘குளிர் காலம் வந்துவிட்டால் என்ன,வசந்தம் வெகு தொலைவில் இல்லைஎன்று ? சூடு பிடித்துக்கொண்டது. இவன் இன்று ஒரு முடிவோடுதான் இறங்கியிருக்கிறான் என்று நினைத்துக்கொண்டேன். “ ஏழ்மை முதுமை இவை யாருக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காக என் தலைமையில் இவை அனைத்தும் ஒருங்கமைக்கப்பட்டன.” கான்க்றீட் முகத்தில் ஏளனச் சிரிப்போடுஒருவனுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும், இருக்க கூரையும் கொடுத்து விட்டால் போதுமா  ?அவசியத்தேவையான மனத்தையும் , அதனுள் உண்டாகும் உணர்ச்சிகளையும் அறவே வடிகட்டி விட்டு?!” நெஞ்சுப்பகுதியில் பேட்டரி வைத்திருப்பவன் மனதைப்பற்றி பேசுகிறான்.

திருப்பி அவங்க ஊழலும்,ஏமாற்றமும் நிறைந்த காட்டுமிராண்டி சனநாயகத்துக்கு தான் போவாங்க..மனசுக்கும் உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுத்தா!” “ மனுஷன மனுஷனே ஆளறதுக்குப் பேரு காட்டுமிராண்டித்தனம்னா இப்ப மனசற்ற இயந்திரங்களுக்கு அடிமையாயிருக்கிறதுக்கு என்ன பேர் வெப்பீங்க..?”

குகைகளே வீடாக , செடிகொடிகளே உணவாக, மரவுரிகளே ஆடையாக இருந்தபோது கொஞ்சம் கொஞ்சமாகத் துளிர் விட்ட ஆசை இன்றுவரை தொடர்ந்து அனைத்திலும் ஒரு பிடி மண் அள்ளிப் போட்டுவிட்டுப் போய்விட்டது உங்கள் வாழ்வில், இனி உங்களுக்கு மகிழ்ச்சி,துக்கம் எதுவுமில்லை, உங்கள் அறிவியலால் மரணத்தை வெற்றி கொண்டு என்ன பயன்? மனத்தையும் , அதன் இயல்பான உணர்ச்சிகளையும் அடக்கிக் கட்டுப்படுத்தி வைத்துவிட்டு ? ஊர்ந்து ஊர்ந்து வந்து எங்களைப்போல் மாறி விட்டீர்கள்,” “ஆமாம் மனிதனாக இருப்பதில் ஏன் அவ்வளவு கசப்பு ?” என்று வியப்புற்று வினவினான்.

ஏதோ ஒரு ரசாயன மாற்றம் உண்டானது போல் தோன்றிற்று எனக்கு.அதோடு முதன் முறையாக விவாதத்தில் தோற்று விடுவேனோ என்ற பயமும். “ முடிவாக என்ன தான் சொல்ல வருகிறாய் ?” “ சுருதி குறைந்த தொனியில் நான் இவ்வளவு நேரம் வாதிட்டு என்ன பயன் ?முடிவெடுக்க மீண்டும் இயந்திரத்தின் உதவியை நாடுகிறீர்களே?..ம்முடிவெடுக்க வேண்டியது நீங்கள் தான்என்றான்.ஆனால் அவன் கூறியதில் ஒன்றுமட்டும் மனதில் வெகுவாகக் காயத்தை ஏற்படுத்திவிட்டது.  
அது ““ படித்தவன் தவறு செய்தால் ஐயோ என்று போவான்என்பது.


.

Monday, February 14, 2011

இது என்ன ?




ஓரிடம் இல்லாமல்
மனம் அலைபாய்வதை
எண்ணிக் கலங்க வைக்கும்.

மனதுக்குள்
ஒத்திகை பார்த்தவை
நிகழ்வில் பிறழ்வதை
எண்ணி மயங்க வைக்கும்.

அடக்க முயற்சித்தும்
தனக்குள்ளேயே பீரிட்டுக்கிளம்பும்
நேரில் சொல்ல இயலாததை
மனதுக்குள் பேசிப்பார்த்துக்
கொள்ளத்தோன்றும்.

உறுதியாகத்தெரிந்த பின்னும்
தயக்கம் வந்து தடுக்கும்.
பேசப்போகும் முதல் வார்த்தை
என்னவாயிருக்க வேண்டுமென்று
தீர்மானித்தது வெறும்
உளறலாகவே முடியும்

கற்றறிந்த மொழியும்
உன்னைக்கைவிடும்
வார்த்தைகளே இல்லாமல்
வெறும் கண்களாலேயே
புரியவைத்தால் என்ன
என தனக்குள்ளேயே
கோபமும் கொள்ள வைக்கும்.

தூரத்தில் இருந்து
பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சி
அருகில் வந்தால்
உள்ளூர பயமாய்
உருவெடுக்கும்.

அருகாமைச்சூழலில்
கிளர்வுறும் மனது
அடுத்து இருந்தால்
அதிர்வுறும்

ஒத்திப்போடுவதிலும்
தள்ளிப்போடுவதிலும்
தற்காலிக மகிழ்ச்சி
கொள்ள வைக்கும்.
அவ்வாறு
தள்ளிப்போடுவதையும்
ஒத்திப்போடுவதையும்
எண்ணி மறுகணமே
வருந்தவும் வைக்கும்.

தன்னைக்கவனிப்பது
தெரிந்தால்
வழமைக்கு மாறாகத்
தன் இயல்பிலின்றி
சில செயல்களைச்
செய்ய வைக்கும்.

பிறர் கூடியிருக்கும்
வேளையில்
தன்னைத் தனித்துக்கண்டு
கொள்ளச்செய்வதற்கு
உரத்த சிரிப்பை
உறுதுணையாக்கிக்கொள்ளும்.

.

Saturday, February 12, 2011

கேள்வியும் பதிலும்!



யூத்ஃபுல் விகடனில் எனது கவிதை


நீ பதிலளிக்கிறாயா
என எதிர்பார்த்துக்
காத்திருப்பதில்லை
என் கேள்விகள் -
அவை எவ்வாறேனும்
தொக்கி நிற்பினும்
எனக்கு சம்மதமே.

நீ எதிர்க்கேள்வி
கேட்கிறாயா என்று
எதிர்பார்த்து
என் ஆமோதிப்புகளும்
அவசர மறுத்தல்களும்
இல்லை

பதிலேதுமளிக்காத
உன் மௌனத்தை
எவ்வாறாகிலும்
எனக்குப் பிடித்த வகையில்
என்னால்
மொழியாக்கம்
செய்து கொள்வதே
எனக்குப் போதுமானதாய்
இருக்கிறது

இவ்வாறாகவே
நமக்கிடையேயான
உரையாடலில் தொடர்ந்தும்
இருப்போம் -
ஏனெனில்
உண்மையற்ற
நிழலுருக்களுடன்
உரையாடுவதில் எனக்கு
ஆர்வம் இருப்பதில்லை

மேலும்
இப்போது எனக்கு
அது இல்லாமல்
முடியாதெனவும்
ஆகிவிட்டிருக்கிறது.


.

Wednesday, February 9, 2011

கடம்


 திண்ணை இணைய இதழில் எனது சிறுகதை

"செக்கா தருவீங்களா ? இல்ல கேஷா ?" அதிரடியாக ஆரம்பித்தார் அவர்.ஆனால் முகத்தில் அந்த பாவனை இல்லை.முன்னால் அமர்ந்திருந்த பெரியவரின் முகம் உணர்ச்சியற்று இருந்தது." இல்ல நான் என்ன சொல்ல வர்றேன்னா ?' " நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம் சார்,ஏதோ பெரியவங்க பாத்து கூட்டிட்டு வந்திருக்கீங்க..அதனால தான் கொஞ்சம் மரியாதையோட பேசிட்டு இருக்கேன் இல்லன்னா..?"

அதிக கூட்டமில்லை ரெஸ்டாரண்டில், மிதமான ஏ.சி.காற்றை வீசிக்கொண்டிருந்தது.மங்கிய ஒளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் அமர்ந்திருந்தனர்.இவர் தன் மனைவியுடன் அமர்ந்திருந்தார்.எதிரே பெரியவரும் அவர் அருகில் அந்தப்பையனும்,பெண்ணும் உட்கார்ந்திருந்தனர்.சற்றுத்தள்ளி இன்னொரு மேசையில் நடுத்தர வயது மதிக்கத்தக்க இருவர் அமர்ந்திருந்தனர்.

"இந்தப்பயலுக்கு நான் எவ்ளவ் செஞ்சிருப்பேன்னு தெரியுமா உங்களுக்கு?" அவரேதான் தொடர்ந்தார்."இவரோட அக்காவ கட்டி வெச்ச நாள்லருந்து இவர் எங்க கூட வந்திட்டார் சார், அப்போ சரியாப் பேசக்கூடத் தெரியாது இவருக்கு. (பேச்சில் தெலுங்கு வாடை அடித்தது.) இவ அம்மாவும் கஷ்ட ஜீவனம் தான் சார்.அப்பா இறந்தபோனவுடனே தையல் மெஷின வெச்சிகிட்டு நாலு பேருக்கு துணிமணி தச்சிக் கொடுத்தி (அப்படித்தான் சொன்னார் ) ஏதோ அவங்களால முடிஞ்ச அளவு நகையும் பணமும் சேத்தி எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க, சென்னையில இருக்காருன்னு சொல்லி பையன எங்ககூட அனுப்பி வெச்சாங்க சார் இவங்க அம்மா".இவர படிக்க வெச்சி,வளத்தி ஆளாக்கி விட்டிருக்கோம் சார் இன்னிக்கு., கொஞ்சமாவது நன்றி "விஸ்வாஸம்" இல்ல சார் இவங்ககிட்ட. " நீங்க சொல்றது சரிதான்" என்று இழுத்தார் பெரியவர். "கொஞ்சம் பொறுங்க சார், நான் பேசி முடிச்சிடறேன்" என்று அவர் வாயை அடைத்தார்." ஸ்கூல் ஃபீஸ், பஸ்ஸுக்கு காசு,அப்புறம் சாப்பாடு எல்லாம் நாங்க தானே சார் குடுத்தோம்."

எனக்கு எவ்ளவ் வருமானம் வருதுன்னு தெரியுமா? கார்பெண்டர் கான்றாக்ட் எடுத்து ஏதோ நாலு பில்டிங் கெடச்சாதான் உண்டு,நான் என்னா வேல பண்றேன்,எப்டி காசு வருது, எவ்ளவ் கஷ்டம் இருக்கு காசு வர்றதுல, இதெல்லாம் தெரியாம வளத்தோம் சார்.ஏதோ நான் கொண்டு வர்றத வெச்சி என் மனைவி ஆக்கி போடுவாங்க சார்".பெரியவர் அவரையும், அவர் மனைவியையும் மாறிமாறிப் பார்த்தார்." நீங்க என்னா முறை வேணும் சார் பொண்ணுக்கு?" சித்தப்பா முறை. ம்....உங்க வீட்டிலயும் இது போல நடந்தா விட்டிருவீங்களா சார்? என் புள்ளயப்போல வளத்தேன்.காலேஜுக்கு ஃபீஸ் கட்டணும்,புத்தகம் வாங்கணும்னு கடைசி நாள் சொல்வார் இவர்" உட்கார்ந்திருந்த பையனைக்காட்டி சொன்னார்.எங்கயோ போய் எப்டியோ கடம் வாங்கி கொண்டு வந்து முழுசா கொடுப்பேன் சார் இவர்கிட்ட.அதெல்லாம் எங்கருந்து வருதுன்னு தெரியாது சார் இவருக்கு." இப்ப நான் கேக்கறது கடம்" தான் சார் ( கடனைத்தான் அப்படி சொன்னார்), என்னவோ இவர் இப்போ கொஞ்சம் நல்லா சம்பாதிக்கிறார் ( அந்த 'ம்'மையும் 'ப்'பையும் அழுத்தி சொன்னார்), அதனாலே காசு பணம் சேர்ந்திடுச்சின்னு வந்து டிமாண்ட் பண்ணலே, உதவிதான்.அதுவும் கடம்' தான் சார் கேக்றேன்..இத வாங்கி நாங்க என்ன ஊர் சுத்தவா போறோம்? ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் கூரை மேலருந்து ஒழுகுது, இப்போ மழை கொஞ்சம் அதிகமாவே தான் பெய்யுது..ஏதோ அந்த ஷீட்ட மாத்தி புதுசு போடுவேன்..ரெண்டுபேர் படுத்தா ஒருத்தர் நிக்கற மாதிரிதான் இருக்கு வீடு.வசதியாதான் இருந்தோம்..இப்போ நிலம சரியில்ல." கடம்" வாங்கித்தருவீங்களா சார்?"

பெரியவர் முஸ்தீபுடன் பேச விழைந்தார்.இடையில் சர்வர் வந்து" ஏதாவது ஆர்டர் குடுக்கறீங்களா சார்" என்றான்.விடாது பேசிக்கொண்டிருந்தவர் 'பெரியவருக்கு' ஒரு காப்பி மட்டும் ஆர்டர் பண்ணார்.சர்வர் இடத்தை விட்டு நகர்ந்ததும் , பையன் 'சித்தப்பாவை' சைகையாலேயே பேச வேண்டாம் எனத்தடுத்தான்.அவன் முகம் கொஞ்சம் குழைந்து இருந்தது.சித்தப்பா இனி பேசப்போவதில்லை என்பது போல் முதுகை பின்னுக்கு இழுத்து சோபாவில் சாய்ந்து கொண்டார்.மேசையில் வைத்திருந்த முன்னங்கைகளை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டார். அந்தப்பெண் எந்தச்சலனமுமில்லாமல் பையனைக் கண்களாலேயே 'ஏன்' என்பது போல் பார்த்தாள்.அவளிடம் "அவர்" பேசி முடிக்கட்டும் என்றான் அவன்.

அவரும் அவர் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.பேச்சு சரியான திசையில் பயணிப்பது குறித்து மனைவிக்கு கொஞ்சம் சந்தோஷம் முகத்தில் தெரிந்தது.சற்றுத்தள்ளி அமர்ந்திருந்த இருவரும் சித்தப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தனர்.சித்தப்பா தன்னை சோபாவுக்குள் புதைத்துக்கொண்டு இன்னும் இவர் என்னல்லாம் பேசுவார் என்ற சிந்தனையோடு மூக்குக்கண்ணாடியைக்கழற்றி ஒருமுறை கர்ச்சீப்பால் துடைத்துவிட்டு , பின் தனது வாயால் ஊதி அணிந்து கொண்டார்.

"நான் என் வொய்ஃப்க்கு உண்மையா இருக்கணும்னு நினைக்கிறவன் சார்,அது போல அவரும் வொய்ஃப்கிட்ட நடந்துகிடணும்னு ஆசைப்படறேன்.மூணு நாள் பட்டினி போட்டா எங்க அக்கான்னு இவர் சொல்றார், அதிக்கி முன்னாடி நாங்க ரெண்டுபேரும் எத்தினி நாள் சாப்டாம இருந்திருக்கோம்னு தெரியுமா சார் இவருக்கு?" முடிக்கும் போது குரல் கம்மியது.

எல்லோருடைய முகமும் உணர்ச்சியற்றிருந்தது போலவே தோன்றியது.அங்கு அமர்ந்திருந்த அனைவரிடமும் ஏதோ ஒரு சோகம், அது பொதுவானதாக இருந்ததை தெளிவாக உணர முடிந்தது.அனைவருக்கும் அவரவர் கருத்தை, சொல்ல நினைப்பதை சொல்லிவிடவேண்டும் என அவசரம் இருந்தாலும்,அதை சொல்ல எத்தனிக்கையில் வேகம் சற்று குறைந்தே காணப்பட்டது,பிறகு பேசுபவரே தொடர்ந்து பேசட்டும் என்று மௌனமாகினர்.சில சமயம் சொல்ல ஆரம்பித்து மென்று முழுங்கியவையே அதிகமாக இருந்தது.

"சார் காப்பி" அனைவரின் கவனத்தையும் திருப்பியது சர்வரின் குரல்.சர்வர் வந்து மேசையில் வைத்துவிட்டுப்போனதை 'பெரியவர் சித்தப்பா'வின் முன் நகர்த்தி " குடிங்க சார்" என்றார் அவர். சித்தப்பா அந்தக்காப்பியைக் குடிக்க விருப்பமே இல்லாமல் உடலை முன் கொண்டுவந்து கோப்பையின் கைப்பிடியை மட்டும் பிடித்து எடுக்கையில் சிறிது நடுங்கிய விரல்கள் காப்பியை சாசரில் சிந்தி விட்டது."பார்த்து பார்த்து" என்றார் அவர்." இல்ல ஒண்ணுமில்ல" என சமாளித்தார் சித்தப்பா.காப்பியைக் குடிக்க ஆரம்பிக்கும் போது, தொடர்ந்தார் அவர் " இவருக்கி வேலை கெடச்சப்போ பி.எஃப்" க்கு நாமினி பேர்ல எங்க பேர் தானே போட்டார், அப்போ அதுக்கு மட்டும் நாங்க வேணும்,அதே நாங்க கஷ்டப்படும்போது உதவணும்னு தோணலியா ?இத்தினி நாளா அக்காவும்,மச்சானும் என்ன பண்றாங்க,எப்டி சமாளிக்கிறாங்கன்னு கொஞ்சமாவது நெனச்சிப்பார்த்திருப்பாரா இவரு ?எங்க அப்பா,அம்மா இருந்திருந்தா கல்யாணம் பண்ணி வெச்சிருப்பாங்கன்னு சொல்றார்,நாங்க எங்க புள்ள மாதிரிதானே வளத்தோம்", இப்டி ஒரு பேச்சு என்னிக்கு இவர் வாயிலருந்து வந்துதோ அன்னிக்கே எங்க ரெண்டு பேரையும் கொன்னு போட்டார் சார் இவர்.

அந்த வார்த்தையைக்கேட்டவுடன் அனைவரும் அதிர்ந்தனர்.அவருக்கும் அவர் மனைவிக்கும் ஒன்றும் புரிபடவில்லை.சித்தப்பா உடைந்துவிடுவார் போலிருந்தது.அவரால் இயலவில்லை, எப்போது பேச்சை ஆரம்பிக்க நினைத்தாலும்,'அவர்' அல்லது வேறு யாராவது தடுத்துக்கொண்டே இருந்தது,மிகவும் கஷ்டப்படுத்தியது. அவசரமாக சித்தப்பா காப்பிக்கோப்பையை சாஸரில் வைத்தது அந்த ஏ.சி.ரூமில் சப்தத்தை ஏற்படுத்தியது.அந்தப்பெண் "சித்தப்பா" என்று கொஞ்சம் சத்தமாகவே சொன்னாள்.திரும்பிய "சித்தப்பா' ' ஒன்றுமில்லை ஒன்றுமில்லை , எனக்கூறிக்கொண்டே கப்பையும் சாஸரையும் ஒருங்கே வைத்தார்.

ரெஸ்டாரண்டின் ஏ.சி.அறை சிறிது சூடாக மாறிக்கொண்டிருப்பது போல உணர்ந்தனர்.

"ரெண்டு வருஷத்துக்கு முன்னால உங்க பொண்ண இழுத்துக்கிட்டு ஓடினவருக்கு இப்ப மட்டும் எங்களப் பாக்கணும்னு தோணிச்சா ? ஏன் எங்ககிட்ட சொல்லிட்டு செஞ்சிருக்கலாமே ?" பேசிக்கொண்டிருந்தவரை சித்தப்பா இடை மறித்து "அப்டி எல்லாம் தப்பா பேசாதீங்க சார்" எனக்கூறும்போது குரல் உடைந்தது.

தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த "அவருக்கு' இப்போது தான் சமாதானமாகியது போலிருந்தது.அடுத்தவன துக்கத்திலயும், அவனோட வருத்தமான முகத்தையும்

பார்க்கிறதுல என்ன ஆனந்தமோ தெரியல.

"எங்க வீட்டுப்பொண்ணு ஒண்ணும் இவன இழுத்துக்கிட்டுல்லாம் ஓடல,எங்க எல்லார்கிட்டயும் சொல்லிட்டுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டா" என்றார் சித்தப்பா. தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த "அவருக்கு" அவமானம் பிடுங்கித்தின்றது. "அப்போ எங்கள ஒரு பொருட்டாக்கூட மதிக்காம சொல்லாமக் கொள்ளாம கல்யாணம் பண்ணிக்கிட்டாரா இவரு?" ஏ.சி.யிலும் வியர்த்தது அக்காவுக்கு, முகத்தை அழுந்தத்துடைத்துக்கொண்டாள்.மேற்கொண்டு என்ன பேசுவது என்று தட்டுத்தடுமாறி பின் அவரே தொடர்ந்தார்.

"இதே மாதிரிதான் சார், இவரோட அண்ணனும் ஸாஃப்ட்வேர் கம்பனியில வேலை கிடச்சி அமெரிக்கா போறேன்னு எங்களுக்கு போற அன்னிக்கு மொத நாள்தான் சார் சொன்னான்.ஏன் இந்த மாதிரி நடந்துக்கிறாங்கன்னு புரியல சார்" அங்க போய் கூட வேலை பாத்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டார் , எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை.அண்ணனும் தம்பியும் ஏன் இப்டி பண்ணாங்க சார்? சரி , ஏதோ கல்யாணம் பண்ணிட்டு ஸந்தோஷமா ( அந்த "ஸ"வையும் "ந்தோ" வையும் கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னார்) இருக்கிறான்னு பார்த்தா , சம்பாதிக்கிறத அவங்க மாமியார்கிட்ட கொடுத்துடணுமாம்,ஏதோ கொஞ்சம் பார்ட்டி, பியர்னு செலவு பண்ணதுக்கு, சொல்லாம செலவு பண்ணதுக்கு,வீட்டில ஒரே சண்டையாம், இப்போ பொண்டாட்டி புர்சன் கிட்ட சரியாப் பேச்சு வார்த்தை கிடயாது." அதான் சார் சொல்றேன், இந்த 'லவ் மேரேஜ்' கண்றாவியே கூடாதின்னிட்டு.

"அவன் கிட்ட பணம் கேட்டப்போ இப்டி சொன்னான் சார், ஏதோ எனக்கு பணம் குடுக்க முடியாதின்னிட்டு காரணம் சொல்ற மாதிரிதான் சார் இருக்கு சரி அவன விடுங்க,தூரா தேசத்தில இருக்கான்,உதவ முடியல,பாக்க முடியலன்னா ஒத்திக்கலாம், இவருக்கு என்னா சார்? எங்கள ரெண்டு எட்டு பாக்கறதில என்னா கொறஞ்சுபோய்டுவார்?"

சர்வர் திரும்ப வந்து குடித்துவிட்டு வைத்த கோப்பையை எடுத்துக்கொண்டு "வேறே ஏதும் வேணுமா சார் ?"என்றான்.சைகையாலேயே வேண்டாம் என்றார் அவர். ஏ.சி.காற்றுக்கு அடுக்கி வைத்திருந்த டிஷ்யூ பேப்பர்கள் சிறிது அசைந்து கொடுத்தன.அந்தப்பெண் தனது கைப்பையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.பையன் ஏதையோ பறி கொடுத்தது போல வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.சித்தப்பா தனது இருக்கையில் நெளிந்து கொண்டார்.

"முடிவா சொல்லுங்க சார்" எவ்ளவ் தருவார்னு,ஒரு இருபதாயிரம் இருந்தா கூரைய மாத்திக்குவேன். "ஏன் சார் நான் இவ்ளவ் பேசறேன், உங்களுக்கு எதித்து பேசணும்னு தோணலியா? சும்மாவே ஒக்காந்திருக்கீங்க? குத்தம் செஞ்ச நெஞ்சு குறுகுறுக்குதா சார் ? பணத்த மட்டும் வாங்கிக்கொடுத்திட்டீங்கன்னா அடுத்த ட்ரெயினப் புடிச்சு நான் பாட்டு போய்ட்டே இருப்பேன்,நீங்க உங்க வேலயப்பாத்துட்டு போய்ட்டே இருக்கலாம்" " இவரு காலேஜிக்கு பைக்கில தான் போவேன்னு சொன்னதிக்கிகூட பணம் குடுத்திருக்கேன் சார்" கேட்டுப்பாருங்க இல்லன்னு சொல்லமாட்டார்"

உடைந்தே விட்டார் சித்தப்பா." சார் எங்க பொண்ணோட பையன் ரெண்டு நாள் முன்னாடி பைக்கில போறப்போ ஆக்ஸிடெண்ட்டாகி , நிறய ரெத்தம் வீணாகி ஸ்பாட்லய பொண்ணு செத்துட்டா சார்.பையனுக்கு கொஞ்சம் உள்காயந்தான்.இடது கையில கொஞ்சம் அடிபட்டிருக்கு. சம்பவம் நடந்த அன்னிக்கே உங்ககிட்ட தகவல் சொல்லிறணும்னு பையன் வற்புறுத்தினான் சார், நாங்க தான் எப்டி சொல்றதுன்னு தெரியாம , உங்கள இன்னிக்கு நேர்ல கூப்டோம்.இப்போ ரெண்டு நாள் ஆகுது சார் இது நடந்து" என்றார்.சூழ்நிலை கலவரமாகியது.அவரும் அவர் மனைவியும் திடுக்கிட்டு பையனைப்பார்த்து விட்டு " அப்ப இந்தப் பொண்ணு ?" , இவ அவளோட தங்கச்சி,நானே வந்து அவங்ககிட்ட சொல்வேன்னு கூடவே வந்துட்டா சார் உடனே தகவல் சொல்லாததுக்கு மன்னிக்கணும்"துக்கம் தாளாமல் சித்தப்பா விக்கித்து அழத்தொடங்கினார்.

ஏற்கனவே எழுதி வைத்திருந்த செக்'கை சர்வர் வைத்துவிட்டுப்போன பில் கவரின் கீழே செருகி வைத்தான் பையன்.பில்லோடு சேர்ந்து செக்'கும் ஏ.சி. காற்றில் சிறிது அசைந்தது.ஹோட்டல் சூப்பர்வைசர் இவர்களருகே வந்து" சார் இன்னிக்கு ஃப்ரைடே , அதுவும் ஈவ்னிங் டைம், கஸ்டமர்ஸ் அதிகமா வருவாங்க , கொஞ்சம் சீக்கிரமா கெளம்புனீங்கன்னா நல்லாருக்கும் " என்றார்.


.

Sunday, February 6, 2011

முகங்களற்ற வெளியில்...


 கீற்று இணைய இதழில் எனது கவிதை

என் முகங்களைக்
களைந்து பயணிக்கிறேன்
முகங்களற்ற வெளியில்...
அங்கு இருவர்
பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது.
கூர்ந்து கவனிக்க முயற்சித்தேன்
அவர்கள் பேசிக்கொள்ளும் மொழி
எனக்கு புரிபடுவதாயில்லை
முகங்களேதும் இல்லாததால்
அடையாளம் காணுதலும்
இயலாமற்போனது
இறுதியில் கபகபவெனச்சிரித்தான் ஒருவன்
சப்தமேதுமின்றி முடங்கிப்போனான் ஒருவன்
சிரித்தவனும்
முடங்கிப்போனவனும்
யாரென அறிய இயலவில்லை.
களைந்த முகம்
மீளத்திரும்பியபோது
சிரித்ததும் முடங்கியதும்
யாரெனப்புரிந்தது.


.

Friday, February 4, 2011

விட்டாச்சு லீவு


 வல்லினம் ஃபெப்ரவரி'2010 இணைய இதழில் எனது சிறுகதை.


“ஆகு, ஆகு”ன்னு பீச்சாங்கைப் பெருவெரல தரயில ஊணி சோத்தாங்கையிலிருந்த கோலிக்குண்டை, பீச்சாங்கையின் மோதிரவிரலுக்கு பக்கத்து வெரல்ல பொருத்தி, அந்த வெரலப்பின்னுக்கு இழூ……த்து எதிருல இருந்த என்னோட குண்டைக் குறி பாத்து அடிச்சான் செல்வா.

சில்லுப்பேந்து போச்சு என்குண்டுக்கு. குழிக்குண்டு வெளயாடிக்கிட்டிருந்தோம். செல்வாவுக்கு “ர” வஆ(ரா)து. சில்லுப்பேந்த குண்ட கையில எடுத்தேன். ”டேய்.. அனங்கிருச்சு... அங்கிருச்சு”ன்னு சொல்லி சண்ட ஆரம்பிச்சிடுச்சி. பரிட்சலீவு விட்டாப்போதும், இந்தக்குண்டு வெளயாட்டுதான். செல்வா, முத்துராசு, மயிலு (வாகனன்), பெரபாகரு, நான், அப்புறம் எப்பவாவது பத்து (பத்மனாபன்)ம் வருவான். கோலிக்குண்டு, பம்பரம், தட்டான் புடிக்கிறது இதெல்லாந்தான் வெளயாட்டு எங்களுக்கு. சண்ட உச்சக்கட்டத்துக்கு போகும்போது பக்கத்துவீட்டு கதவு தெறந்துது. “டேய்... என்னடாது, இந்த மத்தியான நேரத்தில கொஞ்சம் கண்ணசர விடுறீங்களா... பாவிகளா? தொலஞ்சு போங்கடா”ன்னு கெழவி சத்தம் போட்டுச்சு. ”டேய்... சத்தம் போடாம வெளயாடலாண்டா, எல்லாம் இவனால வந்தது, சில்லுப்போனா என்னடா? ஏண்டா குண்ட கையில எடுத்த? அதான் சீரழிஞ்சிடுச்சி.” சரி சரி, சத்தம் போடாம வெளயாடலாம்னு சொல்லி, டேய் உங்குண்ட அதே எடத்துல வெக்கணும்னான் செல்வா. “ஆகு , ஆகு”ன்னு குசுகுசுன்னு சொல்லிக்கிட்டே குண்ட அடிச்சான். கடசீல இருந்த எல்லாக்குண்டும் அடிச்சி அடிச்சி ஒடைஞ்சு போச்சு. சாயங்காலம் ஆயிருச்சு.” “டேய் , நாளைக்கி மறுபடியும் வெளயாடலாம்னு” சொல்லிட்டு அவுஹ அவுஹ வீட்டுக்கு போய்ட்டாங்ய.

இந்தத் தட்டான் (தட்டாரப்பூச்சி) ஏகப்பட்டது வரும் நாங்க வெளயாட்ற எடத்துல. சுத்தீ எருக்கஞ்செடியும், காட்டுச்செடியும், மரமும், ஒரே பொதருமா இருக்கும். எலந்தப்பழ மரம் கூட இருந்திச்சு. முள்ளிச்சனியன் அதிகந்தான் அதில. இருந்தாலும் விடறதில்ல. பறிச்சி பறிச்சி திம்போம். முத்துராசு காயா இருந்தாலும் விட மாட்டான். எல்லாத்தயும் பறிச்சிப்போட்ருவான். ”டேய் நாளைக்கும் கொஞ்சம் இருக்கட்டும்டா”னா விடமாட்டான். பக்கத்திலயே ஒரு கெணறு இருந்திச்சு. தண்ணி கிண்ணி எதுவும் கெடயாது, சும்மா மண்ணு மூடிக்கெடக்கும். அதுக்குள்ள போயி பண்ணி குட்டி போட்டு வெச்சுருக்கும். அதப்போயி சீண்டுவாங்ய, அது “உர் உர்”னு புடுங்க வரும். செனப்பண்ணிக்கி கொஞ்சம் கோவம் ஜாஸ்தி.

தட்டான் புடிக்கிறதுல மயிலு எம்டன். சட்டயக் கழட்டி சுத்துவான். சாயங்கால நேரத்தில கண்ணு மண்ணு தெரியாம சுத்திக்கிட்டிருக்கிற தட்டான் எல்லாம் பட்பட்டுன்னு கீழ விழுந்திரும். தட்டான்ல ஏகப்பட்ட வக, “புலித்தட்டான், கொரங்குத்தட்டான், ஊசித்தட்டான், செவப்புத்தட்டான்”னு. புலித்தட்டான் பாக்கறதுக்கு மஞ்சக்கலர்ல மினுமினுன்னு இருக்கும். ஒடம்பு முழுக்க புள்ளி, புள்ளியா இருக்கும். ஊசித்தட்டான் பச்சக்கலர்ல பாக்க ஊசி மாறியே இருக்கும். ஒற்ற அடியில கீழ விழுந்திரும். கொரங்குத்தட்டான் கன்னங்கரேல்னு நல்லாக் கருகருன்னு இருக்கும். ஆனா ஏன் கொரங்குத்தட்டான்னு பேர் வெச்சாங்யன்னுதான் தெரியல.

இந்தக்கொரங்குத்தட்டானப் புடிக்கிறது தான் கஷ்டம். எமகாதகன் மாதிரி விர்விர்ன்னு பறக்கும். எலயில ஒக்காந்திருக்கும் போது றக்கய ஆட்டாம இருக்கும், செத்திருச்சிங்கற மாதிரி. கையக்குவிச்சு வெரல முன்னுக்கு நீட்டி பட்டும்படாம றக்கயத் தொட்டவொடனே “விர்ர்ன்னு” பறக்கும். வெலவெலத்துப்போகும். ஆனா இந்தப்புலித்தட்டான் சாது. சீக்கிரம் புடிச்சிறலாம். அதப்புடிச்சா விடவே மாட்டாங்ய. பெரபாகருக்கு சேட்ட கொஞ்சம் ஜாஸ்தி, எல்லா றக்கயும் ஒண்ணாச் சேத்துப் புடிச்சிக்கிட்டு கீழ இருக்கிற கல்ல அதோட காலால பொறுக்க சொல்லுவான், இப்டி “கல்லப்பொறுக்கு கருப்பட்டி தாரேன்.. கல்லப்பொறுக்கு கருப்பட்டி தாரேன்..”னு. அதுவும் பாவம் ஒக்காரச்சொல்றாங்யளாக்கும்னு நெனச்சுகிட்டு அந்தக்கல்ல அத்தன காலாலயும் புடிக்கபோகும், பட்டுன்னு மேல தூக்குவான், அது கல்லக் கீழ போட்றும் கனம் தாங்காம. இதயே பண்ணிப்பண்ணி செல சமயம் கல்லோட கனம் அளவுக்கு அதிகமாகும்போது, றக்கயெல்லாம் பிச்சிக்கிட்டு கல்லோட தட்டான் கீழ விழுந்திரும். அதோட அதுகதி சரி. தூக்கிப்போட்றுவான் பெரபாகரு.

மயிலு ஒரு நாளு கொரங்குத்தட்டானப் புடிச்சேபுட்டான். வெரட்டி வெரட்டிப் புடிக்கப்போயி கை, கால்லயெல்லாம் செராய்ப்பு. கடசியா அந்தச்சனியன் எலந்தப்பழ மர உச்சியில போய் ஒக்காந்திருந்தது. கைய லகுவா உள்ள விட்டு புடிச்சுப்புட்டான். நான் கெடச்ச ஊசித்தட்டான கையில வெச்சிக்கிட்டிருந்தேன். ”இத கொரங்குத்தட்டானுக்கு திங்கக் குடுறான்னாங்ய”. ரெண்டும் சண்ட போட்டதில கொரங்குத்தட்டான் தான் ஜெயிச்சிச்சு. செல்வா புதுசு புதுசா டெக்னிக்கெல்லாம் பண்ணுவான். தட்டான் புடிக்கறதில. ”டேய் நீட்டமா, ஒரு கம்பப்புடிச்சிக்கிட்டு அசயாம நின்னோம்னு வெச்சுக்கவேன், அதுல தட்டான் வந்து ஒக்காரும்போது நைசா கீழ எறக்கி புடிச்சிராலம்டா”ன்னுவான். போட்டு மொத்துவாங்ய அவன.

தண்ணிப்பஞ்சம் தான் எல்லா ஊரப்போலவும். முனிசிபாலிட்டி தண்ணி வெய்யில் காலத்துல மக்கர் பண்ணும். அப்ப கொடத்த தூக்கிகிட்டு ஆத்துக்குப்போயி பம்புசெட்டுல தண்ணி புடிச்சு கொண்டாரணும். ஆத்துல தண்ணியெல்லாம் ஓடாது, எப்பவாச்சும் வெள்ளம் வரும்போது மட்டும் தண்ணி ஓடும். நாங்க போயி அத அதிசியமா பாப்போம். அதனால எல்லாம் ஊத்துதான். செல சமயம் நாங்களே ஊத்து போடுவொம். அந்த ஊத்தப்பாத்தாங்யன்னா பம்புசெட்டுக்காரங்ய விட மாட்டாங்ய. மண்ணப்போட்டு மூடிருவாங்ய. அவங்யளுக்கு காசு போகும்ல. அதனால. அங்க போய் வரிசைல நிக்கணும் கொடத்த வெச்சுக்கிட்டு. அதுக்கு சோம்பேறிப்பட்டு நாங்க கொடத்த எல்லாம் வரிசைல போட்டுட்டு ஆத்துக்குள்ள வெளயாடப்போயிருவோம். நம்ம வரிச வர்றப்ப பம்புசெட்டுக்காரன் தண்ணி நெறச்சு வெச்சிருப்பான். போகும்போது காசக்குடுத்துட்டு தண்ணிக்கொடத்த எடுத்துக்கிட்டு போவோம். சைக்கிள்ல பின்னுக்கு கட்டிவெச்சுக்கிட்டு. அப்பறம் புள்ளயாரக்கொண்டாந்து போடறதும் இந்த ஆத்துலதான்.

நாங்கல்லாம் ஆத்துக்குள்ள கபடி வெளயாடிக்கிட்டிருந்தோம் அன்னிக்கு. பத்தும் (பத்மனாபன்) வந்திருந்தான். கபடி போரடிச்சு போச்சுன்னா பாலத்துல போற சைக்கிள்காரன, மோட்டார்காரனப் பாத்து கிண்டல் பண்ணி சிரிச்சிக்கிட்டிருப்போம். போற வேகத்துல அவ்ளவா சட்ட பண்ண மாட்டாங்யங்ற தைரியத்துல. அன்னிக்கு கொஞ்சம் ஓவராப்போயிருச்சு. எங்க பள்ளிக்கூடத்தில போசு, போசுன்னு ஒரு வாத்தி. அவரக்கண்டாலே எவனுக்கும் புடிக்காது. சும்மான்னாலும் அடிப்பாரு. ஒரு நாள் நீதிபோதனை வகுப்புக்கு வேற வாத்தி கெடக்கலன்னு இவர அனுப்பிட்டாங்ய. வந்தவரு வேகமா வேதிச்சமன்பாடு அது இதுன்னு போர்டுல பூரா ஏபிசிடி, ஒண்ணு, ரெண்டு எல்லாம் எழுதி அறுத்துத்தள்ளிப்புட்டாரு. அப்ப “பத்த”ப் பாத்து எந்திரிடா, இந்த சமன்பாட்ட போட்றான்னு சொன்னாரு, அவனுக்கு அப்பத்தான் ரெண்டாஞ்சாமம், நல்ல மத்தியானம் மூணு மணி, சத்துணவு தின்னுட்டு (அன்னிக்கு முட்ட வேற) அவனவன் தூக்கத்தில சொக்கிகிட்டு இருக்கப்ப சமன்பாடு, கொமன்பாடுன்னு கேட்டவொடன, போர்டுல போயி ஏபிசிடின்னு என்னத்தயோ எழுதி வெச்சிப்புட்டான். அடி பொளந்துட்டாரு போசு. அதயே கருவம் வெச்சுக்கிட்டு, இவர எப்டியாவது பழிவாங்கணும்னு நெனச்சிவெச்சிக்கிட்டான் பத்து.

போசு சைக்கிள்ல ஒரு தகரடப்பா (கேரியருக்கு சைடுல) வெச்சிருப்பாரு. அதுல “போசு”ன்னு பேர வேற எழுதி வெச்சிருப்பாரு. அன்னிக்கி ஆத்துல மத்தவங்யள கிண்டல் பண்றப்ப இவரு (போசு) சைக்கிளும் வந்துச்சு... தூரத்தில அந்த சைக்கிள் வரும்போதே பத்து அத அடயாளம் கண்டுகிட்டு “டேய் போசு, டேய் போசு”ன்னு ஆத்தே அலர்ற மாதிரி கத்துனான். இந்த மாதிரி கத்திட்டு நாங்க ஆத்துப்பாலத்துக்கு கீழ ஓடிப்போயிருவோம். பாலத்து மேல போறவன் சைக்கிள ஸ்டாண்டு போட்டு நிறுத்திட்டு வர்றதுக்கு கொஞ்ச நேரம் ஆகும். அதுக்குள்ள வேற எங்கன்னாலும் ஓடிப்போயிரலாம்னு தைரியந்தான். அன்னிக்கு கொஞ்சம் ஓவராவே கத்திட்டான் பத்து. இருந்த ஆத்தரத்தையெல்லாம் சேத்து வெச்சுகிட்டு. நாங்கல்லாம் ஓடி ஓளிஞ்சுக்கிட்டோம். பாலத்திலருந்து கீழ பாத்தா அவ்வளவு தூரம் மூஞ்சி சரியாத்தெரியாது. உடனே அந்த போசு வாத்தி சைக்கிள் ஸ்டாண்டப்போட்டுட்டு, எறங்கி வந்து பாலத்துல கைபுடிச்சி நடக்கிற கம்பில கால ஊணிக்கிட்டு எக்கிக் கீழ பாத்தாரு. கடசியா ஓடி வந்தவன் பத்து. மூஞ்சி தொலக்கமாத் தெரியாட்டாலும் ஒரு குத்து மதிப்பா இவந்தான்னு புரிஞ்சிக்கிட்டாரு. பத்து ஒடம்பும் அப்டி. நல்லாப் பத்து ஆள சேத்துப்பண்ண மாதிரி இருப்பான் (அதான் அப்டி பேரு வெச்சாங்யளோ என்னவோ, அவங்ய வீட்ல!)

கொஞ்ச நேரம் நின்னு பாத்த போசு திரும்பிப்போய்ட்டாரு. உள்ள பாலத்துக்குக்கீழ பண்ணி நரகலும், அதோட குப்பை வீச்சமும் தாங்க முடியாம பயஹ வெளியில வருவாங்யன்னு எதிர்பாத்து ஏமாந்துபோய்ட்டாரு. மூக்கப்புடிச்சிக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தோம். நேரம் வேற ஆயிக்கிட்டிருந்தது. அங்க போயி தண்ணிக்கொடத்த வேற எடுக்கணும், சீக்கிரம் போகலன்னா வீட்ல அடி விழும், அது வேற பயம். டேய் செல்வா, எட்டிப்பார்றா போசு போய்ட்டாரான்னு. செல்வா மெதுவா வெளிய போய்ப்பாத்துட்டு, அங்கருந்தே கத்துனான். ”டேய் போசு போய்ட்டார்றான்னு”. சிரிச்சுக்கிட்டே ஓடி வந்தோம் வெளிய. பத்துக்கு மட்டும் பயம் விடவே இல்ல, எங்க இந்தப்போசு நம்மளப் பாத்துருப்பாரோன்னு. ஏன்னா பத்துப்பதினெஞ்சு நாள்ல பள்ளிக்கூடம் வேற தொறக்கப்போகுது.

செல சமயம் ராத்திரிலயும் ஆத்துக்குப்போவோம். அங்க போயி மணல்ல மல்லாக்கப்படுத்துக்கிட்டு அரட்ட அடிச்சிக்கிட்டிருப்போம். அப்ப எரி நட்சத்திரம் வந்து விழுகிறதப்பாத்துட்டு “டேய் நான் தீவாளிக்கி விட்ட ராக்கெட்டு இப்பதாண்ட வந்து விழுகுதுன்னு முத்துராசு சொல்லிக்கிட்டு இருப்பான்”, அத ரொம்ப நாளா நாங்க நம்பிக்கிட்டிருந்தோம். ஆத்துக்கு அந்தக்கரைல தான் சுடுகாடு. “டேய் அந்தக் “குருசாமி”ப்பய ஏண்டா வாத்திகிட்ட அடிவாங்குனான்? அவனா, குடுத்த ரேங்க் கார்ட அப்பாகிட்ட காட்டி கையெழுத்து வாங்கிட்டு, மடக்காம கொண்டு வரணும்னு வாத்தி சொன்னத வெச்சுக்கிட்டு, அதப்பையில போடாம, கைல புடிச்சிக்கிட்டு நடந்து போறப்ப சாக்கடக்குள்ள விழுந்திருச்சு அது, திரும்பி எடுத்துப்பாத்தா அதுல ஒண்ணுமேயில்ல, எல்லாமே அழிஞ்சு போயிருச்சி” அதான் வாத்தி போட்டுத்தள்ளிட்டாரு அவன. ”ம்க்கும், அவன் சும்மாவே எழுத்துக்கு ஒரு புள்ளி வெக்கிறவன் தானடா, அன்னிக்கு போர்டுல போயி எழுதுடான்னா அங்கயும் போயி ஒவ்வொரு எழுத்துக்கும் பக்கத்தில ஒரு புள்ளி வெச்சுவிட்டான். அதான் அன்னிக்கே வாத்தியாரு” ஏன்டா போர்டெல்லாம் அம்மாப்பெத்து வெச்சுருக்கேன்னு?” அடியப்போட்டாரு.

அப்ப அந்த “பாஸ்கரு?”, அது மூதேவி யாருகிட்ட வெளயாடணும்னு தெரியாம, பெரிய க்ளாஸ் படிக்கிற பயஹ போறப்ப, அவன் எப்பவும் செய்வான் பாரு ஒரு சேட்ட, பண்ணிய வயித்தோட சேத்துவெச்சு எத்துவான் பாரு, அப்டி அவங்ய போறப்ப எத்திருக்கான், பண்ணி சாக்கடைல விழுந்த வேகத்துல, சாக்கடத்தண்ணி எல்லாம் அந்தப்பயஹ மேல தெரிச்சி, மவனே அடி பொளந்துட்டாங்யளாம், ஆனா வாயத்தெறக்க மாட்டேங்றாண்டா. இத இந்தக் குருசாமிப்பய தான் எங்கிட்ட சொன்னான். இதக்கேட்டவொடனே சிரிப்புத்தாங்கல மயிலுக்கு.

முத்துராசு பயங்கர டூப்பெல்லாம் விடுவான். ஓவிய வாத்தி மக கல்யாணத்துக்கு சீர் செனத்தியெல்லாம் காகித்துல வரஞ்சே குடுத்துட்டாருன்னு டூப் விட்டான் முத்துராசு... அப்ப மத்த வாத்திகளப்பத்தியும் பேச்சு வந்துது.

எங்களுக்கு ஒரு கணக்கு வாத்தியார் இருந்தாரு. பேரு மீனாட்சி சுந்தரம். எங்கருந்தோ மாத்தம் வாங்கிக்கிட்டு எங்க ஊருக்கு வந்தாரு. அவருக்கு ஒரு கண்ணு மட்டும் கோணிக்கிட்டு மூக்கப்பாத்துக்கிட்டு இருக்கும். அதுனால அவருக்கு “புள்ளயாரு”ன்னு பேரு வெச்சிவிட்டான் மயிலு. பெரபாகருக்கு கணக்குன்னா ரொம்ப இஷ்டம்.ஒண்ணாம் வாய்ப்பாடே தகிடுதத்தம் போடுவான்..! ஒரு தடவ எல்லாரும் கணக்கப்போட்டு முடிச்சிட்டு ரைட் வாங்கறதுக்காக நின்னுக்கிட்டிருந்தோம். எல்லாரும் அவனவன் எடத்துல தான் நிக்கணும், கூட்டத்தோட கோயிந்தா போட்டா அவருக்கு புடிக்காது. பெரபாகருகிட்ட வந்து நோட்ட வாங்கிப்பாத்துக்கிட்டிருந்தாரு. அவன் பக்கத்துல இருக்கிறவனத்தான் புள்ளயாரு பாக்குறாரக்கும்னு நெனச்சி ஒக்காந்துட்டான். புள்ளயாருக்கு கோவம் வந்து “டேய் எந்திர்றா”ன்னு கத்தினாரு. அவனுக்கு இன்னும் அவர் பக்கத்துல இருக்கிறவனத்தான் பாக்கற மாதிரி இருந்திச்சு.”சார் இங்க”ன்னு மேல் பக்கத்த காட்டுனான், அவரு கீழ்பக்கத்துல ரைட் போட்டார், சார் இங்கன்னு கீழ காட்டுனான், அவரு சைடுல ரைட் போட்டார். இதப்பாத்த அவனுக்கு சிரிப்பு மாளல, கெக்கெபிக்கென்னு சிரிக்க ஆரம்பிச்சுட்டான். ஈரக்கொலயிலயே அடியப்போட்டாரு புள்ளயாரு.

அடுத்த நாளு பம்பரம் வெளயாடிக்கிட்டு இருந்தோம். பீச்சாங்கையில பம்பரத்த புடிச்சிக்கிட்டு சாட்டய வடிவா இறுக்கிச்சுத்தி அப்டி விட்டாக்க, சும்மா ரெங்கும் பம்பரம் ஒரு அஞ்சு நிமிசத்துக்கு தரயில. சாட்டைக்கு நுனியில எல்லாரும் ஒரு பெரிய முடிச்சா போட்டு வெச்சுருப்பாங்ய. சுண்டு வெரலுக்கும், மோதிர வெரலுக்கும் எடைல குடுத்து புடிச்சிக்கிடறதுக்கு. நான் நல்லா சோடாடப்பி மூடிய விளிம்பில்லாமத்தட்டி, அது நடுவுல ஒரு ஓட்டயப்போட்டு சாட்டை நுனிவரை கொண்டுவந்து அதுக்குக்கீழ முடிச்சுப்போட்டு வெச்சிருப்பேன். சாட்டயத்தூக்கிப்புடிச்சா நூல்குண்டு மாதிரி இருக்கும். வளவு வளவா இருக்கும் அந்த சோடாடப்பி மூடி.

வெளயாட்டு ஒண்ணும் பெரிய விசயம் இல்ல, தரயில ஒரு வட்டத்தப்போட்டு அதுக்குள்ள ஒரு கட்டயப்போட்டு வெச்சிருப்பாங்ய. பம்பரத்த ரெங்கு விட்டு கட்டய யாராவது வட்டத்துக்கு வெளிய எடுக்கும்போது, மத்தவங்ய வெளிய ரெங்கு விட்டு சாட்டையால கோஸ் எடுக்கணும். (சாட்டய ரெண்டு கையாலயும் நுனிக்கொரு பக்கமாப்புடிச்சிக்கிட்டு, கீழ சுத்திக்கிட்டிருக்கிற பம்பரத்த தூக்கி ஆகாசத்துல போட்டு கையால புடிக்கிறது தான் கோஸ்.) அப்டி கோஸ் எடுக்க முடியலன்னா அவன் பம்பரத்த அந்த வட்டத்துக்குள்ள வெச்சு மத்தவங்ய அது மேலயே குத்துவாங்ய பம்பரத்த ரெங்குவிட்டு. அந்தப்பம்பரம் வெளிய வந்த பிறகும் கோஸ் எடுக்கணும், இதுல தோத்தா அவ்ளவ்தான். பம்பரத்த ஆக்கர் எடுத்துருவாங்ய. ஆக்கர்னா அறுவாள எடுத்துட்டு வந்து பம்பரத்த ரெண்டாப்பொளந்து விட்ருவாங்ய. அத மாதிரி நான் நெறய வாட்டி மத்தவங்ய பம்பரத்த ஆக்கர் வெச்சதனால எங்கூட வெளயாடவே பயப்படுவாங்ய.

பம்பரம் கடயில வாங்கும்போது அதுல ஆணி இருக்காது. சும்மா மொட்டயாதான் இருக்கும். அதுல ஆணி அடிக்கிறதுக்காக, பம்பரம், கோலிக்குண்டு விக்கிற கடைக்கி எதுத்தாப்ல இருக்குற பழய டார்ச்லைட், கொட ரிப்பேர் பண்ற பாய் (முஸ்லிம்) கடைக்கி போவோம். அவரு பம்பரத்த பென்ச் வைஸ்ல செங்குத்தா வெச்சு ஆணி அடிப்பாரு. சில சமயம் ஆணி அடிக்கும் போதே பம்பரம் பொளந்துக்கும். அதுக்கப்புறம் வைஸ இளக்கி, பம்பரத்த படுக்க வெச்சி ஆணிக்கொண்டய ஃபைல்லால தேய்ச்சு கூராக்கி குடுப்பார். பம்பரத்த கீழ விடாம கையிலயே ரெங்க விடுறது ஒரு கலை. எல்லாருக்கும் வராது. பம்பரத்த சுவத்தில பூசியிருக்கிற சுண்ணாம்பு, காவி இதுஹள்ல தேய்ச்சுட்டு, கொண்டயப்பாத்தா அந்தக்காவி கோணல் மாணலாத்தான் இருக்கும், ஆனா அது தரயில அந்தக்காவியோட ரெங்கும்போது கண்கொள்ளாக்காட்சியாயிருக்கும்.

ஆத்தோரத்தில வெளயாடப்போகும்போது, அகஸ்மாத்தா எப்பவாவது, தென்ன மரத்திலருந்து எளநி கீழ விழுந்து கெடக்கும். அதக்கண்டாலே செல்வாவுக்கு ஒரே கொண்டாட்டந்தான். அன்னிக்கி ஒண்ணு கெடந்துச்சி. அத எடுத்து தென்னமரத்துல அடிச்சு அடிச்சே நாரெல்லாம் பிச்சுப்போட்டான். முழுசாத் தேங்கா வர்ற வரைக்கும். ”டேய் முத்துஆ(ரா)சு, போயி கொஞ்சம் பொட்டுக்கள்ள, வே(ர்)க்கள்ள, அப்பஅ(ற)ம் கொஞ்சம் சீனி அதொட ஒரு வத்திப்பெட்டி எல்லாம் வாங்கிட்டு வாடா”ன்னான்.” எதுக்குடா? , நீ வாங்கிட்டு வாடா நான் சொல்ஏ(றே)ன்”. முத்துராசு கொஞ்சம் காசுக்காரப்பய, அவன் அப்பா துபாயில இருக்காரு. எங்களுக்கு அப்பப்ப தீனி சப்ளயர் அவந்தான். முத்துராசு கடைக்குப்போனான். ”டேய் மயிலு, பெஅ(ர)பாகவு(ரு), நீயுந்தாண்டா, கொஞ்சம் சுள்ளி பொஅ(ற)க்குங்கடா”ன்னான். “என்ன மவனே அதிகாரம் தூள் பறக்குது“ன்னு சொல்லிக்கிட்டே பொறக்கிக்கொண்டாந்து குடுத்தோம்.

இன்னிக்கு செல்வா என்னவோ செய்யப்போறான்ங்கறது மட்டும் உறுதி. அதுக்குள்ள முத்துராசு எல்லாத்தயும் வாங்கிட்டு வந்திட்டான். செல்வா எல்லாச்சுள்ளியயும் போட்டு தீய மூட்டுனான்.” டேய் என்னடா செய்யப்போற “ இகு(ரு) இகு(ரு) பாத்துக்கிட்டே இ(ரு)குன்னான். அவன் கையில இருந்த தேங்காயப்பாத்தா கடயில உரிச்ச மாதிரி வழுவழுன்னு இருந்துச்சு. தேங்காய ஒடக்காம அதில இருக்கிற மூணு கண்ணுல ஒரு கண்ணமட்டும் வெரல வெச்சு ஓட்டயப்போட்டான்.” முத்துராசு எல்லாத்தயும் குட்ஆ(றா)”ன்னு வாங்கி வேர்க்கள்ளயவும் பொட்டுக்கள்ளயவும் மாத்தி மாத்தி ஒவ்வொண்ணா ஓட்ட போட்ட தேங்காக் கண்ணு வழியா திணிச்சுவிட்டான். எல்லாம் போட்டு தீந்துச்சு. கடசியா சீனிய உள்ள கொட்டிவிட்டான் செல்வா. சீனி கொண்டாந்த காகிதத்த நல்லா சுத்தி கண்ண அடச்சுவிட்டு, தேங்காய கவட்டக்கம்புல குடுத்து நெருக்கிப்புடிச்சிக்கிட்டு, ஏற்கனவே மூட்டியிருந்த தீயில காட்டுனான்.” என்னடா பண்ற “கொஞ்சநேரம் இ(ரு)குங்கடா"ன்னான். தேங்காய் நார் கருகுற வாசனை அடிச்சுது.

இதுக்கிடயில நான் என்பங்குக்கு கீழ கெடந்த பச்சக்குறும்பைய (சிறு தேங்காய், வளராமல் கீழே விழுந்து விடும்) எடுத்து, அது மேத்தொலிய உரிச்சிப்புட்டு, நாலஞ்சு தென்ன ஓலயப்பிச்சு குச்சி (விளக்குமாற்றுக்குச்சி) எடுத்துகிட்டு, குறும்பைய நல்லா கல்லுல தேய்ச்சுவிட்டு தட்டயா ஆக்கி (பாத்தா சின்னக் கொட்டாங்குச்சி போல இருக்கும்) உரிச்ச ஒரு குச்சிய மட்டும் எடுத்து வளைவா ஆர்ச் மாதிரி பண்ணி, அதக் குறும்பையில குத்தி நிறுத்தி, அதுக்கு நடுவுல நீட்டமா ஒரு குச்சிய செங்குத்தா நிறுத்தி குத்தி வெச்சுட்டு ஒரு ஜாண் அளவு ஒடிச்சு வெச்சிருந்த ரெண்டு குச்சிகள ஆர்ச்சுக்கும், நட்டக்க நடப்பக்கமா நிக்கற குச்சிக்கும் எடயில விட்டு சுத்திக்கிட்டிருந்தேன், “டிக்கி, டிக்கி’ ன்னு சத்தம் வந்துக்கிட்டிருந்துச்சு.

கொஞ்ச நேரம் ஆனப்பிறகு தீயிலருந்து வெளியே எடுத்தான். அப்பறம் மயிலோட சட்டய வாங்கி தேங்காய அதுல வெச்சு சுத்தி, ஓங்கி கல்லுல அடிச்சான் செல்வா. தேங்கா உள்ள நொறுங்குன சத்தம் கேட்டுச்சு. அப்பறம் எடுத்துப்பார்த்தா, உள்ள இருந்த தண்ணில வேர்க்கள்ளயும் பொட்டுக்கள்ளயும் நல்லா வெந்து இருந்துச்சு, தண்ணியவே காணோம். எல்லாரும் பங்கு போட்டு சாப்ட்டோம்…தேங்காயும், கடலயும் சீனியோட கலந்து அம்சமா இருந்திச்சு. “டேய் செல்வா, அம்சம்டா, இதெல்லாம் ஒனக்கு எப்ட்றா தெரியும்?” “அதான் ஐயாவோட மகிம, இப்பத் தெ(ரி)கியுதா?” “ தெகியுது தெகியுது..”ன்னு சொன்னோம் எல்லாரும், அடிக்க வந்தான் செல்வா.

ஒரு வழியா எல்லா லீவும் முடிஞ்சு பள்ளிக்கூடம் தெறந்துட்டாங்ய. ’பத்து’க்கு மட்டும் பயம் நடுங்கிக்கிட்டிருந்திச்சு. மொத நாள் அவன் வரவேயில்ல. ரெண்டானாள் வந்தப்ப மொத பீரியடே ‘போசு’ வாத்தி வந்துட்டாரு. ஒவ்வொருத்தரயா பேரு சொல்லிக்கூப்பிட்டாரு. லீவு நாள்ல ஜேம்ஸ்பாண்ட் வேல பாத்திருப்பாரு போல. கரெக்டா எங்க அஞ்சு பேர மட்டும் கூப்ட்டு நிக்க வச்சாரு. ”அன்னிக்கி ஆத்துல கீழருந்து எவண்டா கத்துனது?” மொனங்கிக்கிட்டே பதில் சொன்னேன் நானு. கையில பணியாரம் குடுத்து அனுப்பிட்டாரு. மத்த எல்லாருக்கும் அடி பொளந்து கட்டிட்டு கடசியா பத்தக்கூப்பிட்டாரு. வாத்தி கேக்கறதுக்கு முன்னாடியே “சார் நான் ஓய்ந்தான் சார் கத்துனேன்” ‘ஓய்’ன்னு கத்தறதுக்கு நீ என்ன ஓநாயாடா’ன்னு சொல்லி ஒடம்பெல்லாம் டின் கட்டி அனுப்பிட்டாரு. “அஞ்சு பேரும் பெஞ்சு மேல ஏறி நில்லுங்கடா” வேற வேற எடத்துல ஒக்காந்துருந்ததால அவன் அவன் எடத்துல ஏறி நின்னோம்.

கட்டடம் ஓட்டுசாய்ப்புதான். அதனால சப்போர்ட்டுக்கு நீட்டமா குறுக்கு வாட்டுல தடியா இரும்புக்கம்பி ஒண்ணு கட்டியிருப்பாங்ய. பத்து நின்னது நாலாவது பெஞ்ச்ல, அவனுக்கு முன்னால பெஞ்ச்ல முத்துராசு நின்னுக்கிட்டிருந்தான். ”எவனும் கீழ எறங்கப்படாது, இன்னிக்கி பூரா நிக்கணும், அடுத்த பீரியட் வாத்தி வந்தாலும் காரணத்த சொல்லிட்டு நிக்கணும்”ன்னாரு போசு. டின் கட்டியும் சேட்ட போகல பத்து’க்கு. வாத்தி பின்னால திரும்பி போர்டுல வேதிச்சமன்பாடு ஆரம்பிச்சிட்டாரு. பத்து அந்த இரும்புக்கம்பிய ரெண்டு கையாலயும் புடிச்சி தொங்கிக்கிட்டு முன்னால நின்ன முத்துராசு முதுகுல லேசா ரெண்டுகாலால எத்திவிட்டான். இத எதிர்பாக்காத முத்துராசு முன்னால விழப்போயி பேலன்ஸ் தடுமாறி ஒக்காந்துருந்த பயஹ மேல விழுந்துவெச்சான். போசு ஒடனே திரும்பி, ”என்னடா சத்தம் இங்க” “இல்ல சார் பேனா கீழ விழுந்திருச்சு”ன்னு சமாளிச்சான் முத்துராசு. அதுக்குள்ள பத்திரமா சாதுபோல கம்பிய விட்டு கைய எடுத்துட்டு நின்னான் பத்து.

ஆச்சு சாயங்காலம், எங்க கிளாஸ அடுத்தது தான் ப்ளேக்ரவுண்டு, வாலிபால் வெளயாட்றேன்னு பந்தத்தூக்கி எங்க க்ளாஸ் ஓட்டு மேலயே போடுவாங்ய. அதுல ரெண்டுவாட்டி ஓடு ஒடஞ்சிருச்சி. வானம் பாத்த பூமி மாதிரி கொஞ்ச நாளக்கி அப்டியே இருக்கும், வெய்யிலும் உள்ள வரும், அதுல பயலுஹ மத்தியானம் சத்துணவு சாப்ட்ட தட்ட காய வெப்பாங்ய. வாத்தி வந்தா” எவண்டா இங்க பத்துபாத்திரம் கழுவிக்காயவெச்சது”ன்னு சத்தம் போடுவாரு. ஓடு மாத்தறதுன்னா வேற யாரயும் போக விட மாட்டாங்ய பத்தும், முத்துராசும். அவங்யளே தான் போகணும்னு அடம் புடிப்பாங்ய.


.