Sunday, March 28, 2021

இசைவிருது

 திரையிசை இப்போது கொஞ்சம் சுணங்கித்தான் கிடக்கிறது. மெச்சூரிட்டி இல்லாத இசை பெருகிவிட்டது. அதற்கான தளங்கள் உருவாகாமலில்லை. இருப்பினும் மேம்பட்ட தரமிக்க இசை என்பது தென்னகத்தில் இல்லை எனவே சொல்லலாம். ராசைய்யா தமது பொற்காலங்களிலிருந்து ஓய்ந்து விட்டார். ரஹ்மானியாக்களின் காலமும் கடந்துவிட்டது.  சிறுவர்களை முன்னிறுத்த மாஜா, யாழ் என அமைப்பை உருவாக்கி இருக்கிறார். கொஞ்சம் தேக்க நிலை இருக்கிறது என்பது உண்மைதான். இதுகாறும் திரைப்படத்திற்கென பின்னணி இசையில் இருந்து வந்த முக்கியத்துவமும் அதை முழுமையாகக் கொடுக்க நினைக்கும் இசை அமைப்பாளர்களும் அருகி விட்டனர் என்பதே உண்மை.

யாரும் எதிர்பார்க்காமலில்லை. வந்துவிழும் இசையை அமைதியாக கடந்து சென்று கொண்டு தானிருக்கிறோம் மேலும் பழைய இசையை நமக்குள் அசை போட்டுக்கொண்டே என்பதே உண்மை. இன்னமும் ஒரு ஆர்ப்பாட்டக் கால, கட்டுடைக்க முயலும், மேலும் இதயத்தை அறுத்து உள்ளிருந்து நீர் கசிய விடும் இசையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு தானிருக்கிறது தென்னகம். இன்னார் செய்கிறார் இன்னாரால் இயலவில்லை எனச்சுட்டுவதற்கு எனக்கு விருப்பமில்லை. இருப்பினும் மேம்போக்கான இசையே போதும் என்றாகி விட்டது போன்ற ஒரு தோற்ற மயக்கம் நிலவுவது உண்மைதான். யாருக்கும் நேரமில்லை எனற கருத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. மேலும் மென்மேலும் திறப்புகள் இருக்கின்றன, மிகச்சில மற்றும் குறுகிய வாய்ப்புகள் என்ற முற்காலம் போலல்லாது இப்போது  அவையனைத்தும் பெருகிவிட்டது. தரம் இல்லை. கூடவே கட்டற்ற சந்தையும் ஒரு பிழை.

முன்பு தென்னக இசை வடநாடுசென்றடையவில்லை என்ற காரணத்தினால் சிற்சில சமரசங்கள் செய்து கொண்டு இசைத்தவை அவரை சர்வதேச சந்தை வரை இட்டுச்சென்றது. ஒரே பாடலை முழுத் துணைக்கண்டமும் கேட்கவேணும் என்ற சந்தை மனப்பான்மை காரணமாக இசைக்கப்பட்ட பாடல்கள் மண்ணுக்குரியதாக அல்லாது மண்ணை விட்டகன்ற ஒன்றாகக்கருதி ஒதுக்கப்பட்டது கண்கூடு .

இப்போதைய இளம் இசையமைப்பாளர்களும் அதே பாணியில் சர்வதேசச் சந்தையை மனதில் இருத்தி இசைத்துக்கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. வேறுபாடுகள் காண்பிக்க வேணும் என்றெண்ணி நிலத்திற்கொவ்வாத இசையை கொண்டு வந்து சேர்ப்பதில் என்ன பெருமை இருந்து விடப்போகிறது ? ரிமோட்டின் அடுத்த பொத்தானை அழுத்தினால் என்னால் அந்த தேசத்து இசையை அதன் பாரம்பரியத்தில் வளர்ந்த ஒருவனால் இசைக்கப்படுவதை  என்னால் காண இயலுமே? அதையே கொடுக்க இவர் எதற்கு? வெற்றிப் பாணிகளில் சிக்கிக்கொண்டு புதியதைக்கொடுக்க இயலாது தமக்குள் உழன்றுகொண்டிருக்கும் இவர்கள் தாமே மறுப்பர் விருதுகளை.
#இசைவிருது

Thursday, March 4, 2021

Sharp Flute கொக்கி

 புல்லாங்குழல் மனிதனின் ஆதி இசைக்கருவி. அதில ராசைய்யா செய்யாத சேட்டையில்லை. நத்திங் பட் விண்ட்’ல ஒரு ஃபுல் சிம்ஃபொனியே போட்டுருப்பார். அத எழுத ஆரம்பிச்சா பதினஞ்சு பக்கம் எழுதனும். அது வேணாம். இப்ப எல் வைத்தியநாதன் வாசித்த ‘மால்குடி டேஸ்’ முகப்பு இசை கேட்ருப்பீங்க. எத்தனை காலமானாலும் மறக்கவே இயலாத இசை அது. ஆர்கே நாராயண் கார்ட்டூன்களும், லக்ஷ்மன் கதையும் ஷங்கர் நாக்’கின் இயக்கமும் ஸ்வாமியின் கிராமத்துக்கே கூட்டிட்டுப்போகும் இசை. மாங்கா அடிச்சது, சைக்கிள் ஓட்டி கீழே விழுந்ததுனு ஏகத்துக்கு நம்ம பழைய ஞாபகங்களைக் கிளறி விட்டுவிடும். ரொம்பவே கட்டுப்பட்டித்தனமான அந்தக்காலங்களை நினைவு படுத்தக்கூடியதாக மிருதங்கமும் பின்னில் இசைக்கும்.


அப்புறம் யுவன் இசைத்த ஆரண்யகாண்ட பின்னணி இசையில் வெளிவந்த ‘கொடுக்காபுளி சென்று கஞ்சா பவுடரை மறைத்து வைத்த காதை’( Kodukkapuli goes and hides the Powder ) யில் கேட்டு மகிழ்ந்த காலம் ஒன்று. (எங்கய்யா போனீரு யுவன்..இருக்கிற பிரச்னைகளெல்லாம் சீக்கிரமா முடிச்சிட்டு திரும்பி வாருமய்யா... கனகாலமா காத்துக் கொண்டிருக்கினம் நாங்கள் ) அதில அவ்வளவு ஷார்ப்பா தொட்டால் குருதி வரும்படியான ஷார்ப்பில் இசைத்த இசைக்கோவை அது. நிறைய ஸ்பானிஷ் டச்சுடன் இசைத்தது. மனதில் உடனே பதிந்துபோகும் மறக்கவியலாத இசை அது. இத்தனை ஷார்ப்பில் ராசைய்யா இசைத்ததுண்டா என எனக்கொரு சந்தேகம் எப்போதும் உண்டு. எப்போதும் மெல்லிய உணர்வுகளைத் தூண்டக் கூடியதாகத்தான் அவரின் குழல் இசைக்கும். ‘புத்தம் புதுக்காலை’, ‘நிலவு தூங்கும் நேரம்’, ‘குழலூதும் கண்ணனுக்கு’ என இவையெல்லாமே எல்லாமே கொஞ்சி நம்மை உறங்கவைக்கும் அல்லது கிறங்க வைக்கும். ஒரு குரூரம் எப்போதும் இருக்காது அவரின் குழலோசையில்.

ஆனால் இங்கு யுவனின் குழல் குரூரத்தை இசைக்கிறது. எல்லாமே ஷார்ப் நோட்ஸ்களைக்கொண்டு இசைத்தால் குத்திக்கிழிக்கத்தான் செய்யும். திரைப்படமே கொஞ்சமும் ஈவிரக்கமில்லாதவர்களின் பின்னணி. அதனால் இசையும் அங்கனமே. அதிலும் ஒரு சிறிய பையன் அந்தப் பௌடரைக் கொண்டு செல்வதால் விளையாட்டுத்தனமும் இருக்கும்.

இப்ப தம்பி அனிருத் இசைத்த ‘கொக்கி போட்டுத்தான் சிக்க வெச்சுட்ட’ (காக்கி சட்டை) பாடலில் ஏறக்குறைய அதே போலான ஷார்ப் நோட்ஸ் கொண்ட குழல் பாடல் முழுக்க இடையிடையே பத்து செகண்டுகளுக்கு இசைத்து காதலின் கூர்மையை குழலில் ஷார்ப்பாக காட்டியிருக்கிறது. 1:22 to 1:32,1:48 to 2:00,3:11 to 3:22 , 3:33 to 3:44 , நான்கு இடங்களில் ஒலிக்கும் அந்தக்குழல். இதுவரை பின்னிலேயே இசைத்துக்கொண்டிருக்கும் அந்த ஷார்ப் குழல் 1:48 லிருந்து 2:00 வரை முன்னில் வந்து இன்னமும் ஆழமாகத்தைக்கும் நம்மை. ஆனாலும் எதற்கு இத்தனை ஷார்ப் ? காதலில் மென்மை தானே முக்கியம்?

அழுத்தமாக தைக்கவேண்டி இசைத்திருப்பார் போலும். பாட்டு என்னவோ சாதாரண ராப் ஸ்டைலில் அவர் ஏற்கனவே செய்து செய்து சலித்த பாணியானாலும் இதுபோன்ற சின்னச்சின்ன சில்லுண்டி விஷயங்களிலும் அவர் காட்டும் சிரத்தை 🙂 அதோடு நிறைய அரேபியன் டச்சோடும் மிக்ஸ் ஆகி ஒலிக்கிறது இந்தப்பாடல். கேட்டு மகிழுங்கள் குழலோசை..அதுவும் கொஞ்சம் ஷார்ப்பாக 🙂 #sharpflute

https://www.youtube.com/watch?v=k-JRooUtKxs
– மால்குடி டேய்ஸ் முகப்பு பாடல்/இசை L Vaidyanathan

http://youtu.be/5TYZx1Xuxoc?t=7m49s - ஆரண்யகாண்டம் flute piece

http://youtu.be/Lz5X2R-YaOw
கொக்கி போட்டுத்தான் – காக்கி சட்டை