Sunday, May 13, 2018

கண்ணம்மா




கண்ணம்மா – பூவே செம்பூவே’ பாடலின் அடியொற்றி இசைத்தது. தொடர்ந்து கேட்கும் போது புரிபடும். அது அழிக்கவியலாத பாடல். படத்தில் அதற்கான காட்சியமைப்பையும் யாராலும் மறக்கவியலாது :)  இங்கு கடைசியில் மழை பெய்யுது,பாடகருக்கு தெளிவான குரலும், வார்த்தைகளும் வரவேண்டுமென்பதற்காக குழைவு இல்லாது போனது ஒரு பெரும் குறை. பூவே செம்பூவே’யில் ஏசுதாஸின் குரலில் இருந்த குழைவு, அனிச்சமலர் போல,இங்கோ கொஞ்சம் காட்டுப்பூப்போல இருக்கிறது. 

கண்ணம்மா கண்ணம்மா’ என்ற சொற்களில் மட்டுமே குழைவு காட்டுகிறார் பாடகர். கூட ஒரு பெண்மணியும் தீக்‌ஷிதா பாடியிருக்கிறார். அவர் குரல் இன்னமும் ப்ளண்ட்’ (Blunt) ஆக கொஞ்சமும் பாடலின் உணர்வுக்கு கிஞ்சித்தும் பொருத்தமின்றி ஒலிக்கிறது. தமிழறியாப் பெண்மணி போல (சந்தோஷின் மனைவியாமே இவர்?) .சொற்களின் முடிவும் தெளிவும் கருதி திறந்து பாடுகிறார். இதுபோன்ற பாடல்களுக்கு அது சரி வராது. உயிர் தொட நினைக்கும் பாடலை (Soul Touching Song) உளம் கூட தொட விடாது அந்நியமாக்குகிறது இருவரின் திறந்த முறையிலான பாடும் முறை, .(Open Singing) .இந்த தீக்‌ஷிதா ’பிஸ்ஸாவில் டிஸ்கோ வுமன்’ மற்றும் இறுதிச் சுற்றில் ’ஏ சண்டக்காரா’ பாடினார். இது போன்ற மதுபானக்கூடப் பாடல்களுக்கு வேணுமானால் இவர் குரல் பொருத்தமானதாக இருக்கும். 

வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க எண்ணி ஜெபா தமது கிட்டாரின் தந்திகளை மெதுவாகவே அழுத்துகிறார். எனது குரு இப்படீல்லாம் அழுத்தினா முன்னால உக்காந்திருக்கவங்களுக்கு கூட கேட்காது என்பார். 

பாடலின் துவக்கத்தில் ஆரம்பிக்கும் கிட்டார் மற்றும் வரிகள் ஓடியபின் தொடரும் பியானோவின் விசைப்பலகை அழுத்தங்களும் அச்சசல் பூவே செம்பூவேதான். அடியிழை நாதம். எது மனதின் ஆழத்தில் கிடக்கிறதோ அது தான் மேலெழும்பி  வரும். ‘கண்கள் இரண்டால்’ பாடலின் அடி நாதம் ’சின்னக் கண்ணன் அழைக்கிறான்’. அது போலத்தான் இதுவும். பாடல் முழுக்க ப்ரோக்ராம் செய்யப்பட்ட விதம் ’பூவே செம்பூவே’ தான். முதலில் ஆரம்பிக்கும் கிட்டாரின் இசைக் குறிப்புகளை இங்குமங்கும் மாற்றி ஒன்றிரண்டு குறிப்புகளை மாற்றிப்போட்ட போதும் ‘பூவே செம்பூவே’ தான் வந்து விழுகிறது. 

சந்தோஷுக்கென ஒரு ஸ்டைல் இருக்கத்தான் செய்கிறது. மெட்ராஸில் ‘நான் நீ’ பாடலை ராசைய்யாவின் ’நானே நானா யாரோதானா’ பாடலின் இன்ஸ்பிரேஷனில் செய்திருந்தார். ( இந்த இன்ஸ்பிரேஷன் என்ற சொல்லை வைத்துக்கொண்டு என்ன மாயாஜாலம் வேணுமானாலும் செய்யலாம். எழுத்தாளனுக்கு ‘பொயட்டிக் லைஸன்ஸ்’ போல.) அதுபோல இங்கும். ஜாஸ் டச் கொடுத்தால் மென்மை வந்துவிடும் என எண்ணியிருக்கிறார் சநா!

இதே கண்ணம்மா’வை அக்கபெல்லா வெர்ஷனிலும் கொடுத்திருக்கிறார் சந்தோஷ். அக்கபெல்லா வெர்ஷன் என்பது இசைக் கருவிகள் எவற்றின் துணையுமின்றி வெறும் குரலை மட்டுமே வைத்து பதிவு செய்வது. காரோக்கி’க்கு எதிர்ப்பதம் :) இருப்பினும் சின்ன இழையில் கிட்டார் இழைக்கிறது இங்கும். இங்கிலீஷ் பாடல்களில் இந்த ‘அன் ப்ளக்டு’ (Unplugged) வெர்ஷன்ஸ் ரொம்ப பிரபலம். கொஞ்சமே இசைக்கருவிகள் வைத்துக் கொண்டு இசைப்பது பாடுவது. சேனல் விஎச்1’ல் அடிக்கடி இது போன்று மேலை நாட்டு தனிப்பாடற் திரட்டுப் பாடகர்களின் இசைக்கோவைகள் இவ்வாறாக இசைக்கப் படுவதுண்டு.

02:53 ல் துவங்கும் கிட்டார் 03:15 வரை தனி ஆவர்த்தனம். அருமை. இது காறும் பின்னில் இருந்துகொண்டு வரிகளை முந்தவிட்டு வாசித்ததற்கு இப்போது தமக்கென கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தியிருக்கிறர் ஜெபா.

பின்னில் ஹார்மனிக்கென ‘தநநந தந்நந தநநந தந்நந தந்நந’ என ஒலிக்கவிட்டது ’நாசரின் தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ’ பாடலின் பாணி. இந்தப்பாடலின் மீது ரஞ்சித்துக்கு அப்படி ஒரு காதல். சிலரைப்பின்னில் பாடவைத்து இல்லையெனில் தலைவன் தலைவி தனித்திருக்கும்போது ரேடியோவிலாது ஓடவிட்டு என ஆங்காங்கே பொருத்திவிடுவார் தமது படங்களில்.

”வான் பார்த்து ஏங்கும் சிறு புள்ளின் தாகம்” எனப்பாடுகிறார் அந்தப்பெண்மணி.அது ”சிறு புல்லின் தாகம்” என்றுதான் உமாதேவி எழுதியிருக்கவேணும். இருப்பினும் எனக்கொரு ஐயம் சாதகப்புள்’ளை பறவையை மனதில் வைத்துக்கொண்டு எழுதியிருப்பாரோவென .ஏனெனில் அப்படி ஒரு பறவை வெறும் மழைநீரை மட்டுமே உண்டு வாழ்ந்ததாக இலக்கியங்களில் கூறப்படல் உண்டு. ‘மழையை அருந்தும் சாதகப்பறவை போல நானும் வாழ்கிறேன்’ என வைரமுத்து எழுதினார்.  இந்த ஐயம் எனக்கேன் உதித்தது என்றால் பின்னில் வரும் வரிகளில் அவர் அஃறிணையை, மீனைப்பற்றி இங்கனம் எழுதியிருக்கிறார். ’நீரின்றி மீனும் சேறுண்டு வாழும் வாழ்விங்கு வாழ்வாகுமோ’ வென. பாடலைப்பாடும் இந்தத்தமிழறியா(?)ப் பெண் மணிகளும் சில வேளைகளில் அதிகம் யோசிக்க வைத்து விடுகின்றனர் எழுதிய தமிழச்சியையும் வாசிக்கும் கேட்கும் மறத்தமிழனையும் :) :) 

இத்தனை இருப்பினும் ஆற அமர உட்கார்ந்து கேட்கவைக்கும் பாடல் தான் இது.. இதை மாயநதி’யுடன் ஒப்பிட்டு சிலர் எழுதியிருந்தனர். மெலடி வரிசையில் வேணுமானால் இவைஇரண்டும் ஒரு தட்டில் வைக்கலாமே தவிர வேறேதும் ஒப்புமை இல்லை. #கண்ணம்மா

Friday, May 11, 2018

உரிமையை மீட்போம்



உரிமையை மீட்போம் சந்தோஷுக்கு கேரியர் பெஸ்ட்! பாடல் என்னவோ கவ்வாலியில் தொடங்கிய போதும், தொடர்ந்தும் கொண்டு செல்லுதல் அத்தனையும் தமிழ்ப்பாடல் போலவே ஒலிக்கிறது. டெஸர்ட் ரோஸ் போல பின்னில் பதுங்கி இசைக்கும் ஹார்மனி. இசைக்கு முக்கியத்துவம் தராமல் அத்தனையும் வரிகளை முன்னுக்கு கொண்டு வந்து இசைத்திருக்கிறார் சநா.! ஏற்கனவே ’ஆடி போனா ஆவணி’யென இசைத்தார். அதே பாணியில் வெறும் தபலாவையும், பேஸ் கிட்டாரையும் வைத்துக் கொண்டு அவ்வப்போது ஹார்மோனியம் எட்டிப் பார்க்க இங்கு இசை சாம்ராஜ்யம் சநா. சம்மதிக்கணும்டே. இசைச்சூழல் பாம்பேயானதால் சூஃபி, மற்றும் கவ்வாலிக்கு ஒரு தடையும் இல்லை. முதலில் கேட்டவுடன் அட இது கவ்வாலி இசையல்லவா என அடுத்த பாடலுக்கு தாவி விட்டேன்.

ரஹ்மானின் கவ்வாலி,சூஃபி இசை என்பது அதன் ஒரிஜினல் பாங்கில் இசைப்பது. குன் ஃபாயா குன், இன்னமும் எத்தனையோ பாடல்களைச்சொல்லலாம். இத்தனை நிமிடங்களில் முடித்தாகவேண்டும் என்ற கட்டாயமின்றி பாடும் வரை பாடு என்ற பாங்கில் இசைப்பது. லயித்தலெல்லாம் உளப்பாங்கைப் பொருத்த விஷயம். இங்கும் பாடல் ஆறு நிமிடத்துக்கும் மேல் வரை நீடிக்கிறது..இங்கு சநா அதை கொஞ்சம் ராசைய்யா பாணியில் இசைத்திருக்கிறார். எனில் அதன் ஒரிஜினல் இசைப்பாணியை இரவல் எடுத்துக்கொண்டு அதை தமிழ் ரசிகர்களை மனதில் வைத்து ‘இது “சநா”வின் பாடல் என இசைப்பது. இது மொத்தமும் ராசைய்யாவின் பாணி. அப்படியே கொள்ளை கொண்டு போகிறது.

இதே போல யுவன் ஒரு பாடலை இசைக்க முற்பட்டார் ( அப்படித்தான் சொல்ல வேணும்) அஞ்சான் படத்தில் ”காதல் ஆசை யாரை விட்டதோ” வென. அது கொஞ்சம் காதலுடன் இசைத்தது. இறைவனுக்கென பாடும் கவ்வாலி/சூஃபி இசை எங்கனம் காதலுக்கு பொருந்தும் என எண்ணியதால் யாராலும் ரசிக்க இயலாமலே போய் விட்டது. எனக்கு அத்தனை பிடிக்கவில்லை அந்தப்பாடல். எல்லாம் ஒன்று தானே என விவாதிக்கலாம். காதல், கருணை, பக்தி எல்லாம் உருகி வழியும் உணர்வு தானே என அப்படி இல்லை. காதலில் காமம் கலந்து விடும். பிறகெங்கே அதில் பக்தி?

இங்கு நிலமே உரிமை’ என்பது ஆதங்கத்தில் ஒலிக்கிறது. வீறு கொண்டு எழுந்து போராடி பின் எழும்பவியலாது தோற்று, தம்மை ஆசுவாசப் படுத்திக்கொள்ளவும் மீண்டும் எழுந்து போராடவும் அறைகூவல் இது. உள்ளுக்குள் இருக்கும் வருத்தம் தொனிப்பதற்கு பக்திரசம் பொருந்தும்.

நிலமே உரிமை. அதுக்காகத்தானே ஈழத்தில் அத்தனை போராட்டம். இத்தனை காத்திரமான வரிகள் எல்லாம் சினிமாவில் மட்டுமே கேட்க இயல்வது சொய்வு. பாடலில் அடித்து உருட்டும் தபலா உள்ளுக்குள் இருக்கும் அத்தனை துயரத்தையும் துடைத்தெறியும்! அநாவசிய இசைக்கலப்பின்றி, முறையே தீர்மானித்து அற்புதமாக வழங்கப் பட்டிருக்கிறது இந்தப்பாடல். என்னையும் கவ்வாலி கேட்க வைத்துவிட்டார் சநா! அதுவரை குரல்களுடன் பயணித்த தபலா 02:06 லிருந்து தொடங்கி 02:13 வரை தனித்தே பயணிப்பது அத்தனை அருமை. கிஞ்சித்தும் வேகம் தாள கதி மாற்றாது தொடர்ந்து இசைக்கிறது

03:14 ல் தொடங்கும் அந்த ஹார்மனியும் அதைத் தொடரும் சரளி வரிசையும் சிலிர்கக வைக்கும். இந்தப்பாடலை ‘கடையநல்லூர் மஜீத்’ அல்லது ’நாகூர்’இ எம் ஹனீஃபா’ பாடியிருந்தால் இன்னமும் பொருத்தமாக இருந்திருக்கும். பின்னில் இசைக்கும் அந்த அத்தனை ஆலாபனைகளுக்கும் இவ்விருவரின் குரல் சாலப்பொருத்தம். ராசைய்யா ’செம்பருத்தி’யில் ஒரு சோகப்பாடலை கவ்வாலி ஸ்டைலில் இசைத்திருப்பார் ’நட்டநடுக்கடலில் நான்பாடும் பாட்டு’ என்று. அதில் இந்த இடத்தில் ‘’ஆற்றிலே இக்கரையில் நின்று’வென கூவும் ஆலாபனையில் மயங்காதவர் குறைவு.

’போராடடா வாளேந்தடா’ என ’அலைஓசை’யில் விஜய்காந்துக்கென இசைத்தார் ராசைய்யா. நிலமே எங்க உரிமை என ரஜினிகாந்துக்கென இசைத்திருக்கிறார் சநா! அந்தக்காலத்தில் அது ஒரு செம ஹிட் பாடல்.கிளர்ந்தெழும் இசை கொண்டது. இன்றும் இசைத்தால் வீறு கொண்டு எழும் அத்தனை உணர்வுகளும். அந்தப்பாடலில் ராசைய்யா இடை இசைக்கென ‘ஒயிலாட்டத்தின் இசையைக் கொடுத்திருப்பார். இங்கு சநா, சூழலுக்கென உகந்தவாறு கவ்வாலியை கையிலெடுத்திருக்கிறார். கொஞ்சம் இரண்டு பாடல்களையும் கூடவே ஒலிக்கவிட்டுப்பாருங்களேன் உங்களுக்கே புரிபடும்.
சின்னப்பொறியே பெரும் அனலாகுமே சிங்க இனமே எழுமே’ என பாடிக்கொண்டே வரும்போது இடையில் நிறுத்துவார் இசையனைத்தையும், கொஞ்ச நேரத்தில் நாமே நம்மையறியாமல் பாட ஆரம்பித்து விடுவோம் ‘ போராட்டா ஒரு வாளேந்தடா வென அது தான் போராட்டத்தின் வெற்றி.

எனக்கென்னவோ ரஞ்சித் இந்த “போராடடா”வையே மனதில் வைத்துக்கொண்டே உரிமையை மீட்கச் சொல்லியிருப்பார் எனத்தோணுகிறது 

”வண்ணங்களத்தீட்டு
இது வானவில்லின் கூத்து
அட சொந்தம் எது கேட்டா
அந்த விண்மீன்களைக்காட்டு
கதவில்லாத கூட்டில்
கனவுகள் ஏராளம் உண்டு
உரிமைக்கு ஒன்றாகும் வீட்டில்
விடுதலை எப்போதும் உண்டு.”


#
உரிமையைமீட்போம்
!.