Wednesday, October 31, 2018

'ரெட் ஹேட்'


'ரெட் ஹேட்' (Red Hat) நிறுவனத்தை ஐ பிஎம் (IBM) வாங்கிவிட்டது . ஒரு ஷேருக்கு 180 டாலர் கொடுத்து மொத்தமா வாங்கிப் போட்டுவிட்டது. இப்ப விலை 116 டாலர்லதான் இருக்கு ஒரு ரெட்ஹேட் ஷேர்.  கிட்டத்தட்ட பதினோரு மடங்கு விலை கொடுத்து உள்ள இருக்கிற அத்தனை பேரையும் கிட்டத்தட்ட பில்லியனாராக்கி விட்டான். சரி அதுக்கு இப்ப என்ன ? வழக்கமா எல்லா ஐ.ட்டீ. நிறுவனங்கள்ல நடக்கிற டேக் ஓவர்/அக்வையர் தானேன்னு சும்மா இருந்துவிட இயலாது. மைக்ரோசாஃப்ட் என்கிற மைட்டி மலையோட மோதி ஜெயிச்ச ஒரே நிறுவனம் ரெட் ஹேட் மட்டுந்தான். இயக்கச்செயலி சந்தையில் (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) தன்னை மிஞ்ச ஆளே கிடையாதுன்னு மார்தட்டிக்கொண்டிருந்த நிறுவனம் பில் கேட்ஸோடது.  திறந்த ஆணை மூலத்தின் மூலமா (Open Source) ஒரு இயக்க செயலியை உருவாக்கி அதை வெற்றிகரமாக கார்ப்பொரேட் கூட மோதத்துணிந்த நிறுவனந்தான் ரெட் ஹேட். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திலும் மைக்ரோஸாஃப்ட்டின் சர்வர்களூடன் ரெட்ஹேட் சர்வர்களும் இருந்தே தீர வேண்டிய அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சி. ஒரு கட்டத்தில் 85 சதமான சர்வர்கள் ரெட்ஹேட்/லினக்ஸ் சர்வர் மயமாகிவிட்டது.

ஐபிஎம்'மிடமும் ஒரு லினக்ஸ்/யுனிக்ஸ் இருக்கிறது, அது அத்தனை புகழ் பெறவில்லை. என்ன செய்யலாம் என நினைத்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ரெட்ஹேட்டை வளைத்துப்போடுவது என்ற எண்ணத்துடன் காரியம் கச்சிதமாக முடிக்கப்பட்டிருக்கிறது. இப்போது அதை ஐபிஎம் வாங்கின செய்தி அறிந்ததும் திடுக்கிடத்தான் செய்கிறது. இனியும் திறந்த ஆணை மூலத்தை இத்தனை முனைப்புடன் வெற்றிகரமாக மேலும் லாபத்துடன் எடுத்துச்செல்லவென  யாரும் இல்லை என்பதே உண்மை. இதே ரெட்ஹேட் (சிவந்த தொப்பி) கொஞ்சம் கம்பூனிச சிந்தனையுள்ள நிறுவனம். எதிர்ப்பினைக்காட்ட அந்தக்காலத்தில் சிவப்பு தொப்பியை அணிவது வழக்கம். அதையே தனது கம்பனியின் லோகோவாக வைத்துக்கொண்டு சவால் விட்டுக்கொண்டிருந்த ரெட்ஹேட் இப்போது வாங்கிப்போடப்பட்டு விட்டது. அத்தனை பேரின் கவலையெல்லாம்  இனியும் இதே முனைப்புடன் ஐபிஎம் திறந்த ஆணை மூலத்தை தொடருமா என்பதே. லினஸ் டோர்வால்ட்ஸின் திறந்த ஆணை மூல ஐடியா வெகுவாக புழக்கத்தில் கொண்டு வரப்பட்டது ரெட்ஹேட் நிறுவனத்தின் மூலந்தான். இன்னமும் லினஸ் டோர்வால்ட்ஸின் திறந்த ஆணை மூலப்பொருள் கொண்டே ரெட்ஹேட் சர்வர்கள் கட்டமைக்கப் படுகின்றன.

கொஞ்ச நாட்கள் முன்புதான் மைக்ரோசாஃப்ட் 'கிட்ஹப்'(GitHub)பை வாங்கிப்போட்டது. அப்போதே சாவு மணி தொடங்கி விட்டது தமக்காக எந்த ஒரு மென்பொருள் ப்ராஜெக்டையும் உருவாக்கி அழகு பார்த்து அதை பிறருக்கு கொடுத்து மகிழ்வது என்ற உன்னதம் மங்கிப் போகப்போகிறது . கிட்ஹப் மட்டுமே உலகின் பல லட்சக்கணக்கில் மென்பொறியாளர்களை இணைக்கும் ஹப். இப்போது முதலுக்கே மோசம்.  மைக்ரோசாஃப்ட்டின் உள் எண்ணங்கள் என்னவென்பது உள்ளங்கை நெல்லிக்கனி. எவரையும் அழித்தொழிப்பது. மடங்காதவரை விலைக்கு வாங்குவது. ஹாட்மெயிலின் கதை எல்லாவரும் அறிந்ததே. இப்போது எவருக்கேனும் ஹாட்மெயிலில் (hotmail) அக்கவுன்ட் இருக்கிறதா? 90களின் இறுதியில் அதை வாங்கிபோட்டு அதன் புகழை கெடுத்து குட்டிச்சுவராக்கியது மைக்ரோசாஃப்ட். அதே போல் வின்டோஸ் ஃபோன் என்ற பேரில் 'நோக்கியா'வை ஒன்றுமில்லாமல் ஆக்கியதும் இதே பில் கேட்ஸின் நிறுவனந்தான்.  குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல கிட்ஹப் ஆகியிருக்கிறது.

பற்றாக்குறைக்கு இப்போது ஐபிஎம் ரெட்ஹேட்டை வாங்கி விட்டது. இனியும் திறந்த ஆணை மூலம் என்பதெல்லாம் கனவு தான் போலிருக்கிறது. சைனா ஹாங்காங்கை தமதாக்கியவுடன் இத்தனை காலமும் ஹாங்க்காங் எப்படி இயங்கி வந்ததோ அதே போல இனியும் ஐம்பது ஆண்டுகளுக்கு இயங்கும் என்ற அறிக்கை இப்போது எங்கிருக்கிறது என்று தேடித்தான் பார்க்க வேணும். அதே கதை தான் ரெட்ஹெட்டுக்கும், கிட்ஹப்புக்கும் வாய்க்கும்.

எனது நிறுவனம் நிர்வகிக்கும் சர்வர்களில் 80 சதமானம் ரெட்ஹேட் வெளியிடும் சென்ட் ஓஸ் என்ற திறந்த ஆணை மூல சர்வர்கள் தான். பத்தாண்டுகளுக்கு புதுப்பிக்கும் உரிமை அனவைருக்கும் இலவசம். (இயக்க செயலி மட்டுந்தான் , அதனுள் இயங்கும் மற்ற ஆப்களுக்கு இல்லை ) இப்போது அப்ஸ்ட்ரீம் எனப்படும் மேல்நோக்கிய புதுப்பித்தல்கள், அவ்வப்போது கிடைக்கும் பழுதுநீக்கிகள் எல்லாவற்றிற்கும் கொட்டிக்கொடுத்து தான் சரி செய்து கொள்ள வேணும்.

இந்தக்கட்டுரை மட்டுமல்ல, நானெழுதும் அனைத்து எழுத்துகளும் சென்ட் ஓஸ்(Cent OS) எனப்படும் திறந்த ஆணை மூல கணினி மூலமே எழுதப்படுகிறது. எனது டெஸ்க்ட்டாப் எப்பவும் சென்ட் ஓஸ் தான். இனியும் இதைப்போலவே தொடருமா என்ற ஐயம் எனக்குள் அன்றே தொடங்கி விட்டது. உபுன்டு (Ubuntu) இருக்கிறதே அதில் எழுதலாம் தான். இருப்பினும் வழமையையும் பழக்கத்தையும் மாற்றிக்கொள்வது அத்தனை எளிதில்லை. அலுவலகத்தில் ரெட்ஹேட்/சென்ட் ஓஸ் என புழங்கியே பழகி விட்டது.

ஐபிஎம்மின் செய்திக்குறிப்பில் அத்தனை தெளிவில்லை. திறந்த ஆணை மூலம் இனியும் இதே வேகத்துடன் தொடருமா என்பது ஐயம் தான். மேலும் ரெட்ஹேட்டின் மேகக்கணினி அமைப்புகளை மட்டுமே வாங்கி இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். இன்னும் பலரோ இல்லை முழு ரெட்ஹேட்டுமே விலை பேசப்பட்டு விற்றுவிடப்பட்டது என்று. இதை நியாயமான விலையில் உள்ளுரில் ஆட்டோ/கார் ஓட்டிக்கொண்டிருந்த முகவர்களை மொத்தமாக ஓலா/ஊபர் அள்ளிக்கொண்டு போனதுடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.'





Sunday, October 21, 2018

நாற்குழிச்சதுரங்கம்



வரும் விமர்சனங்கள் காட்டும் அத்தனை ஹைப் இல்லை படத்தில். படத்தில் பெண்கள் காட்டும் கெத்து புதிது. எப்பவாவது சொர்ணாக்கா'வை மட்டுமே பார்த்து வந்த நமக்கு , சூழல் கருதி குரலுயர்த்தி,முஷ்ட்டி காட்டும் பெண்கள்.ம்..நல்ல காட்சிகள். இயல்பில் இப்படி பெண்களை நாம் சந்திக்கத்தான் செய்கிறோம். அநீதி கண்டு பொங்கி ஒலிவாங்கிக்கென ஆக்ரோஷமாக பேசும் பெண்களை இப்படம் பேசவில்லை. எக்கச்சக்க கதா பாத்திரங்கள். இருப்பினும் யாரும் தனித்தனியாக நிற்கவில்லை. கதையில் சூழலில் அனைவருக்கும் தேவை,அவரவர் இடம் இருக்கிறது. தனுஷின் இளமைக்கால முகம் அவர் நடித்த இந்திப்படத்தை(ராஞ்சனா) நினைவூட்டுகிறது. அதே முகம்,களை,ஒப்பனை எல்லாம். ஹிப்பி வைத்து,பெல்பாட்டம் போட்டுக்கொண்டு தடித்த ஃப்ரேம் கொண்ட குளிர் கண்ணாடிகளுடன் கேங்ஸ்ட்டர்ஸ்..80களின் ரசினி பட எதிரிகளை நினைவூட்டுகிறது நிசத்தில் சிறையில் போய் எடுத்தனரா..இல்லை செட்ட்'டா என வியக்க வைக்கும் கலைஇயக்கம்.!.

சாலிடெர் டீவி,சுவரில் பான்ட்ஸ் விளம்பரம், ரோஜா பாக்கு,பின்னர் இரட்டை இலைக்கான தேர்தல் போஸ்ட்டர்கள், ஆல் இன்டியா ரேடியோவின் செய்திகள்,பின்னில் பாயும் புலி போஸ்ட்டர், மூன்றெழுத்து மட்டும் வைத்து பின்னர் எண்கள் கொண்ட பைக்குகள் என 80களை அப்படியே கண்ணில் கொண்டு வருகிறது காட்சிகள். இறங்கி வேலை பார்த்திருக்கின்றனர். இளமைப்பருவம் ராஞ்சனா கெட்டப் என்றால் நடுத்தர வயதில் கொடி கெட்டப் தனுஷுக்கு. ஒவ்வொரு வசனமும் அவரே பேசுவது போல தோன்றுகிறது. இது வெற்றி மாறன் எழுதிக்கொடுத்துப்பேசுவது போலத்தோன்றவேயில்லை எனக்கு.





ஹார்பரில் இரவில் வைத்து பொருள் கொண்டுபோய் வைத்து அங்கேயே கொன்றுபோடும் காட்சி,அத்தனை இரவிலும் அவ்வளவு தெளிவாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு காட்சியும் அது இரவில் நடப்பதாக இருப்பினும் எவ்வித குழப்பமுமின்றி தெளிவாக அமைந்திருக்கிறது. படத்தின் பாதி வரை வெறும் ஆண்களை வைத்தே ஓட்டி இருப்பது சலிப்பு.

"என் பாசையே புரியலை, என் லைஃப் எப்படி ஒனக்குப்புரியப்போகுது ?, சின்ன ஆங்க்கர் தானே அம்மாம்பெரிய கப்பலை நிக்க வெக்கிது ?, என்னை என்ன தேவடியான்னு நெனச்சியா? ராஜன் பொண்டாட்டிடா" பொட்டில் தெறிக்கும் வசனங்கள்.கதை சொல்லும் பாணி நான் லீனியர் என்ற போதிலும்,பார்வையாளனுக்கு எவ்வித சிரமுமின்றி தெளிவாக விளங்குதல் சிறப்பு. விடாது ஒலிக்கும் வசவுகள், பாசாங்கில்லாத வசனங்கள் என பரிமளிக்கிறது. பொண்ணு பார்க்க போகும் காட்சி, நான் கூப்ட்டா வந்துரும், அதான் பயமா இருக்குன்னு சொல்ற தனுஷ்.நெகிழும் அந்த அப்பா.ஆஹா..

அமீர் இத்தனை குள்ளமா? டூட்ஸியின் தமிழ்ப்பதிப்பை விட அடக்கி வாசித்திருக்கிறார். பாரக்க அசப்பில் டி ராஜேந்தர் போலவே தோன்றுவது எனக்கு மட்டுந்தானா? அதற்காகவே டீ ஆரின் பாடலை அவர் திருமணத்தில் ஒலிக்க விட்டிருக்கிறார் சந்தோஷ். 'சொல்லாமத்தானே இந்த மனசு துடிக்குது :) அடிக்குரலில் பேசி தம் நிலைப்பாட்டை விளக்கும் அந்தக்காட்சி போதும். பின்னர் இரவில் ஓட்டலில் அமர்ந்து தம்மைப் போடுவதற்குத்தான் என்பதை அறிந்ததும் களைத்து சேரில் முழுதுமாக தம்மை சாய்த்துக்கொண்டு..ஆஹா. நானே செட்டில் பண்ணி விடுவேனேடா என்று மன்றாடுகிறார். பிடிக்க வந்த காவல் அதிகாரியை உடுப்புகளை அவிழ்த்துவிட்டு படகில் பயணிக்க வைக்கும் காட்சியில் வணிக நாயகன் ராஜன் அமீர்!




சந்தோஷ் பற்றி பேசியே ஆக வேண்டும். அந்த காரம் போர்ட் போட்டி சிறைக்குள் நடக்கும் காட்சியில் இறங்கி அடித்திருக்கிறார். சம்பவம் செய்ய மணித்துளிகள் எண்ணப்படுவது போல இசை. பாடல்கள் ஆங்காங்கெ பின்னில் ஒலிக்கவிட்டு அத்தனை முக்கியத்துவம் தரப்படாததில் கவலை கொள்ளாது பின்னணி இசையில் களம் இறங்கியிருக்கிறார். 80களின் பின்னணி இசை,பின்னர் 2000ம் ஆண்டுகளின் இசை, பின்னர் நவீனம் என புகுந்து விளையாட அனுமதி கிடைத்திருக்கிறது. கானா' மட்டும் எப்போதும் பாடலாம் போலிருக்கிறது. அறிமுக ஐஸ்வர்யாவின் காட்சிகளில் கானா கலக்குகிறது. எங்கு அடக்கி வாசிக்க வேணும், எங்கு ஆர்ப்பாட்டம் தேவை என்பதெல்லாம் புரிந்து வைத்து இசைத்த பண்பட்ட முதிர்ச்சியான இசை.

ஆன்ட்ரியாவின் பழிவாங்கும் முறை, அயன் ரான்ட் எழுதிய 'ஃபொன்டன் ஹெட்' கதையின் தலைவி எதிரியின் உடனே எப்போதும் இருப்பாள். தலைவனுடன் இருந்தால் எப்போதும் அவளே ஒரு பொறாமையின் இலக்காக இருக்கக்கூடும், அவனை வெற்றியை அடைய முடியா இலக்கில் விட்டுச்செல்லும் என்ற நோக்கில் எதிரியுடனேயே பயணிப்பாள். வெற்றி பெற்றவுடன் தலைவனுடன் சேர்வாள்.! 




அன்பு, பத்மா, சந்திரா, ராஜன், குணா, செந்தில் என அத்தனை கதாபாத்திரங்களின் பெயர்களும் ஒரு முறை படம் பார்த்ததில் மனதில் பதிந்துவிட்டது. அரிதான நிகழ்வு. இருந்தாலும் நான் லீனியர் கதை சொல்லலில் வாய்ஸ் ஓவர் எதற்கு ?..இந்த வாய்ஸ் ஓவர் எல்லாம் எஸ்.ரா'வுக்கு ரொம்ப பிடித்த விஷயம். நான் சொல்றேன் நீ கேளுன்னு :) மக்களுக்கு புரியாது போய்விடும் என்ற பயமா வெற்றி மாறன் ?!