Friday, May 27, 2011

நிர்வாணா

கீற்று /உயிரோசையில் வெளியான கவிதை

எனது கழிவறையை
நானே கழுவுகிறேன்

அவ்வப்போது
உண்ணா நோன்பிருக்கிறேன்
உடல் மெலிவதற்கு

பருத்தி ஆடைகளை
தேடி அணிகிறேன்
வெய்யிலைத் தணிக்க

கழி ஒன்று வாங்கி
வைத்திருக்கிறேன் பாசத்தில்
வழுக்காமலிருக்க

உடம்பிலுள்ள உப்புக்கென
துள்ளல் நடையும் பயில்கிறேன்

எத்தனை முறை அடி விழுந்தாலும்
அனைத்தையும் வாங்கிக்கொண்டு
அமைதியாகத்தானிருக்கிறேன்

இனமே அழிக்கப்பட்ட போதும்
வன்முறை தீர்வாகாது
என்று கூறித்திரிகிறேன்

இப்போது
அரையினும் கூடுதல்
நிர்வாணம் காண்பித்து
சுதந்திரமும் வேண்டி நிற்கிறேன்

யார் சொன்னது
நான் காந்தியை
மறந்து விட்டேனென்று..?! 



.

Saturday, May 21, 2011

சுயபரிசோதனை

திண்ணையில் எனது கவிதை


உன்னை அதிகம்
துன்புறுத்தியிருக்கிறேனா ?
அது என் சுயத்திற்கு
மகிழ்வைத்தந்திருக்கிறது

உன்னை அதிகம்
காயப்படுத்தியிருக்கிறேனா ?
அது என் சுயத்திற்கு
மருந்து போடுவதற்கு
பயன்பட்டிருக்கிறது.

உன்னை அதிகம்
உதாசீனப்படுத்தியிருக்கிறேனா ?
அது என் சுயத்திற்கு
செருக்கைத்தந்திருக்கிறது.

உன்னை ஒரு புழுப்
போல் நடத்தியிருக்கிறேனா ?
அது எனக்குள் இருந்த
மிருகத்திற்கு உணவாகியிருக்கிறது.

என்னிலும் பார்க்க
உன்னை மேலெழும்ப விடாமல்
அமிழ்த்தியிருக்கிறேனா ?
அது எனது சுயத்தைக்
கூறுபோடுவதிலிருந்து
தப்பிக்க வைத்திருக்கிறது.

எனக்கென உன்னை
உருக வைத்துப்பார்ப்பதில்
என் சுயம் இன்னமும்
தனது இடத்தை,இருப்பை
வலுவாகவே தக்கவைத்துக்கொள்கிறது.

ம்...
பிறர் அடக்கி ஒடுக்கப்படுவதிலும்
ஒரு இன்பம் இருக்கத்தான்
செய்கிறது என்பதை
என் சுயம் உணர்ந்துகொள்வதில்
மீள் பரிசோதனையின்றி
அது தன் வேலையைத் தொடர்ந்து
நடத்திக்கொண்டுதானிருக்கிறது.



.

Wednesday, May 18, 2011

சொல்லில்லாமல் மொழியில்லாமல்...


காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்



.

Saturday, May 14, 2011

கூடு


 காட்சி இணைய தளத்தில் வெளியான கவிதை
 
 எப்போதும் தண்ணீர் சிந்திக்கிடக்கும் முற்றம்,
அவ்வப்போது தலையை சாய்த்து
அடுக்களைக்குள் ஏதேனும் உள்ளதா
என நோட்டம் விடும் காக்கை
அமரும் உடைந்த நாட்டு ஓடு,
அந்த ஓடுகளைச்சரி செய்கிறேன்
பேர்வழி என்று அவற்றில்
பதுங்கியிருந்த தேளிடம் வாங்கிய கடி,
அடுக்களைப் பரணியில் கிடக்கும் உளுத்துப்போன
விறகுகளிலிருந்து உதிரும் மஞ்சள் பொடி,
முற்றத்தில் காரை பெயர்ந்த
தொட்டியின் நீரில் யாருமில்லா
சமயத்து குளித்து கும்மாளமிடும் குருவிகள்,
அருகில் உள்ள வேப்ப மரத்தின் பூக்கள்
காற்றில் பறந்து வந்து விழுந்து கிடக்கும்
சுற்றுக்கட்டு தாழ்வாரங்கள்,
சுற்றி வந்து ஓடிப்பிடித்து விளையாடிய
தாழ்வாரத்தின் தூண்கள்,
தாழ்வார மூலையில் சற்று வீசி ஆட்டினால்
முனகும் ஊஞ்சல்,
எப்போதும் இருட்டியே கிடக்கும் அறைகள்,
அவ்வப்போது கையை கதவு நிலைக்கும்
தலைக்கும் இடையே வைத்து
உயரத்தை அளந்து பார்த்துக்கொண்ட நிலைகள்,
ஓயாம நிலைலயே நிக்காதே என
பாட்டியிடம் வாங்கிய வசவுகள்,
மார்க் ஷீட்டைக் காட்டப்பயந்து
ஒளிந்து கொண்ட பீரோ மூலை,

- என அந்தக்கூட்டிலும்
  கொஞ்ச நாள் இந்த உயிர்
  நிலை கொண்டிருந்தது.


.

Monday, May 9, 2011

வானம் - மனிதம்

வானம் - மனிதம்





தனது தம்பியைத் தேடி அலையும் ஒரு நடுத்தர வயது முஸ்லீம்,ராணுவத்தில் சேர மறுத்து பாடகனாக விரும்பும் ஒருவன்,தனது ஆடையை எப்போதும் தானே நெய்ய இயலாத ஒரு நெசவாளி,அடுத்த மாசம் சேர்த்து தாரேன் என்று சொன்னாலும் இணைப்பைத் துண்டித்து செல்லும் ஒரு சாதாரண கேபிள் டிவி'க்காரன், தனது துணை திருநங்கை உயிருக்கென  எத்தனை முறை வேணாலும் உங்ககூடப்படுக்கிறேன்னு , சுகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்கிது பாரய்யான்னு சொல்ற ஒரு பரத்தை, இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு யுவனின் பலமான பின்னணி இசையோடு எல்லை தாண்டி வந்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் க்ரிஷ்.

வானம் கூறுவது மனிதமும் மனிதாபிமானமும் தான்.மனிதாபிமானமே அற்றுப்போன சமூகத்திற்கு , அதை உணரும்படியான சம்பவங்கள் தமது வாழ்வில் ஏற்பட்டால் ஒழிய ,அதைப்பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாத மனிதர்களைப்பற்றி , விலாவரியாக , சற்றும் விறுவிறுப்பு குறையாமல் சொல்லியிருக்கிறது திரைப்படம்.

ராணுவத்தில் சேர மறுக்கும் பரத் அதற்காகக்கூறும் காரணம்  நமது மனதைத்தொடுகிறது.தம்பியைத்தேடி அலையும் பிரகாஷ்ராஜின் கண்களில் உண்மையும்,அவரின் பரிதவிப்பும் நம்மை அந்தச் சமூகத்தின் மீதான பார்வையை முற்றிலுமாக புரட்டித்தான் போடுகிறது.தனது நண்பியின் உயிரைக்காப்பாற்ற எத்தனை முறை வேணாலும் உங்ககூடப்படுக்கிறேன்னு , வேறு எதையும் கொடுக்க இயலாத பரத்தையாக நடித்திருக்கும் அனுஷ்கா மீது நம்மையறியாமல் பரிதாபம் ஏற்படுவது  இயற்கை.

பல சம்பவங்கள் அதை கதாபாத்திரங்களுக்கும் ,பார்க்கும் நமக்கும் மனிதாபிமானத்தை உணர்த்த தவறவில்லை.

காதலிக்காக 5ஸ்டார் ஹோட்டல் பார்ட்டிக்கென, நெசவுத்தொழிலாளியிடம் பணத்தை திருடும் சிம்பு , திருந்தி அதைத்திரும்ப அவர்களிடமே கொடுக்கும் போது இறுகிப்போன முகத்துடன் கண்களாலேயே மன்னிப்பு கேட்கிறார்" உங்க பணம் உங்க கிட்ட" என்று சொல்லும் போது குரல் உடைவதை தவிர்க்க இயலாமல் நம்மையும் சிறிது அசைத்துப்பார்க்கிறார்.அப்படி நடந்து கொள்வதற்கான சம்பவங்களையே இது வரை சந்தித்திராத சாதாரண மனிதனாக பரிமளிக்கிறார்.

பிறரைப்பற்றி கவலை இல்லை , யாராவது அவர்களுக்கு உதவுவார்கள் என
விட்டேற்றியான மன நிலையிலிருக்கும் பரத், காதலர் தின எதிர்ப்பாளர்களிடம் மாட்டிக்கொண்டு தவிக்கையில் வழியில் ஓவர்டேக் செய்து கொண்டு கடுப்பேற்றி விட்டு வந்த சிங்'கின் உதவியால் காப்பாற்றப்படும் போதும், பிறகு ஆட்டோ விபத்தில் காயப்படும் பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க எடுத்துச்செல்லும் போதும்  அதுவரை அப்படிப்பட்ட நிகழ்வுகள் தனது வாழ்வில் நடந்திராததை உணர்ந்து கண்ணீர் மல்கும் காட்சிகள்.

தீவிரவாதி தான் என உறுதியாக நம்பி , தற்செயலாக நடக்கும் சம்பவங்களைக்கோர்த்து வைத்துக்கொண்டு பிரகாஷ்ராஜை தீவிரவாதிகளின் செல்'லில் தள்ளும் இன்ஸ்பெக்டர் ,குரானைத்தூக்கிப் பிடித்துக்கொண்டு அங்கு தஞ்சமடைந்திருக்கும் அனைவரையும் காப்பாற்றும் ஹாஸ்பிட்டல் நிகழ்வுக்குப்பின்னர் தனது தவறை உணர்ந்து அவரைக் கையெடுத்து கும்பிடும்
காட்சி என நெகிழ வைக்கிறார் இயக்குனர்.

நீதான் கெட்டுப்போயிட்ட, அந்தப்பொண்ணு வாழ்க்கையையும் கெடுக்காத என்று வசவும் சிம்புவின் பாட்டி என எதார்த்தங்கள் நிறைய தெரிகிறது படமெங்கும்.ஏழை நெசவுத்தொழிலாளியாக நடித்திருக்கும் சரண்யாவிற்கு அந்த கதாபாத்திரம் அவருக்கென நெய்தது போல அமைந்திருக்கிறது.(எனினும் அவரை அதே போன்ற பாத்திரங்களுக்கேயென முத்திரை குத்தி வரும் போக்கும் சிறு குறையே.)

வேண்டுமென்றே தவறாகவே கணக்குப்போடும் முதலாளி பிணையாகப் பிடித்து வைத்திருக்கும் தனது பேரனை மீட்டெடுக்க செல்லும் தாத்தா, தனது பேரனை வைத்தே கணக்கு சொல்லச்சொல்லி அவனை மீட்டு வரும்போது , முதலாளி "காதல்" தண்டபாணி "பய நல்லாக்கணக்கு போட்றான்யா, நல்லாப்படிக்கட்டும்" என்று வழியனுப்பி வைப்பது ...

என தம்மை உணரவைக்க மனிதாபிமானச்சம்பவங்கள் ஏதும் தமது வாழ்வில் நடந்திராத வரை அதை உணராதவர்களைப்பற்றி அழுத்தந்திருத்தமாக சொல்லியிருக்கிறது திரைப்படம்.அதற்கென வாய்ப்பு கிடைத்தும் திருந்தாத இந்த ஜென்மங்களையும் காட்டத்தவறவில்லை இயக்குனர்.
 " அனுஷ்காவை பார்ட்டிகளிடம் கூட்டிச்செல்லும் டிரைவர், மருத்துவமனை மீதே தாக்குதல் நடத்த வரும் பிரகாஷ்ராஜின் தம்பி,பணம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டிருக்கும் கிராமத்து டாக்டர்,போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு வருபவரிடம் கிடைத்ததைச்சுருட்டிக்கொளும் போலீஸ்காரர் ராதாரவி ".

படம் நெடுக அவ்வப்போது வந்து செல்லும் " தெய்வம் வாழ்வது எங்கே ?" என்று யுவனும் தம் பங்குக்கு நம்மைக் கட்டிப்போடுகிறார்.

பெரிதாகக்குறை என்று தெரியாவிட்டாலும், இது மொழி மாற்றப்படம் என்று சில இடங்களில்/காட்சிகளில் தெளிவாக தெரிவது , தவறை உணர்ந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் பிழைத்திருக்க சிம்புவை(சிம்புவுக்காகவாவது உயிர் பிழைக்க வைத்திருக்கலாம் ) இறப்பது போலக்காட்டியிருப்பது என்பது போன்ற சிறு குறைகள் மட்டுமே சுட்டிக்காட்ட உகந்தவை.



வானம் - மனிதம்.

Saturday, May 7, 2011

புதிய ஏற்பாடு


திண்ணையில் வெளியான எனது கவிதை

எனது எண்ணங்கள்
என்னால் வடிவமைக்கப்படுவதில்லை.

எனது கருத்தாக்கங்கள்
யாராலோ கூறப்பட்டு எனக்குள்
ஊறிக்கிடக்கின்றன.

எனது சித்தாந்தங்கள்
எங்கிருந்தோ எனக்குள் புகுத்தப்பட்டவை.

எனது சிந்தனைகள்
திட்டமிட்டு,வெகுவாகவே
முன் ஒத்திகையுடன் சரிபார்க்கப்பட்டு
பிறரால் என்னுள் செலுத்தப்பட்டவை.

எனது செயல்கள் பிறரால்
என்னைக்கொண்டு செய்விக்கப்படுபவை.
எனது முயற்சிகளின் முடிவுகள்
பிறரின் முந்தைய முடிவுகளையொத்தே
அமைகின்றன , அது
வெற்றியாயிருப்பினும் அல்லது
தோல்வியாயிருப்பினும்.

சுயசிந்தனையில் முடிவெடுத்து
புதிதாக ஒரு விஷயத்தைச்
செய்ய முற்படுகையில்
அது வெகுவாகப்பிறரால் அல்லது சிலரால்
ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது
மறுக்கப்பட்டவையாகவே இருக்கிறது.

நான் தான் முதலில் பிறந்தவன்
என்று கூறிச்செல்கையில்
ஏற்கனவே அவ்வாறே
கூறிக்கொண்டு சென்ற கூட்டம்
ஒன்று எனைப்பார்த்து தனக்குள்
நகைத்துக்கொண்டிருந்தது.

என இவையனைத்தையும்
உணர்ந்த பின்னும் அதையே
தொடர மனவிருப்பின்றி
அயற்சியுருகையில்
அவ்வாறே ஏற்கனவே
அயற்சியுற்ற ஒரு கூட்டம்
என்னையும்
தன்னுடன் சேர்த்துக்கொண்டது.


.