Saturday, March 26, 2011

சே' எனது டீஷர்ட்டில்



உயிரோசையில் எனது கவிதை.





வாய்க்காலில் கட்டுக்கடங்காத
பிணங்கள்,
அலையடிக்கும் அலைக்கற்றையின்
எண்ண முடியாத கணக்குகள்,
அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென
அடித்துப்புரண்டுகொண்டிருக்கும்
கொரில்லாக்கள்,
காட்டிக்கொடுப்பதையே
தொழிலாகக்கொண்டு
சமாதானப்போர்வைக்குள்
தன்னை முடக்கிக்கொண்ட
முன்னாள் போராளிகள்,
டிஜிட்டல் பேனரில்
சிரிக்கும் எந்திரன்,
என
எல்லாவற்றையும்
பார்த்துக்கொண்டு
சும்மா தான் இருந்தார்
மோட்டர் சைக்கிளில்
பயணித்தவாறே.
சே'
எனது டீஷர்ட்டில்


.

Wednesday, March 23, 2011

இரண்டாவது கோப்பை

கீற்று இணைய இதழில் எனது கவிதை 

உருவாக்கியபோதும்                                       
ஒன்றாகத்தான் இருந்தன
களிமண்ணாக இருந்தவற்றை
கற்கள் பிரித்து சீர்படுத்தி சுட்டு ,
பின் வேக வைத்து,
வண்ணக்குழம்புகள் பூசி,                                       
ஒன்றாகத்தான் அடைபட்டன
அந்தக் காகிதப்பெட்டிக்குள்
விலையும் அதே                                                  
ஒரு வித்தியாசமுமில்லை.
வாங்க வந்தவனும்                            
வேறுபாடு ஏதும்
பிரித்தறிய இயலாமல்
வாங்கிச்சென்றான்.
அதுவரை கூடவே இருந்த
கோப்பைகள்
பிரித்து வைக்கப்பட்டன.
இரண்டாவது கோப்பையாய்
டீக்கடையில்
புரியாமலே நானும்
அந்தக்கோப்பைகளை
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
அவையும் என்னை.


.

Monday, March 21, 2011

ஞானியின் எதிர்பார்ப்புகள்


திண்ணையில் வெளியான எனது கவிதை

என்
மனம் என் வசப்படுமா
அதோடு பிறர்மனமும் ?

என்
அலைபாயும் எண்ணங்கள் என்னிலிருந்து
அகலுமா?

என்
நிஜத்தேடலை பிறர் அறியாவண்ணம்
பாதுகாக்க இயலுமா..?

சக ஞானியின்
கூட்டத்தைவிட எனக்கு கூடுதல் கூட்டம்
கூடுமா ?

அவ்வாறு
கூடிய கூட்டத்தை என்கட்டுக்குள்
வைத்திருக்க இயலுமா ?

வெள்ளைத்தோலுடையோர் என்
அங்கத்தினராவரா ?

தொலைக்காட்சியின் தொடர்
நிகழ்ச்சிக்கு வாய்ப்புகள் குவியுமா ?

என் சித்துவேலைகள்
ரகசியமாகவே தொடருமா ?

புலித்தோலும் மான்தோலும்
தடைசெய்யப்பட்டதால்
என் ஆசனத்திற்கான
மென்பட்டுப்பூச்சிகளின்
கூட்டுக்கும் தடைவருமா ?

இட்ட வசியமை
கூட்டம் முடியும்வரை கலையாதிருக்குமா ?

எனக்கே
பகுதிகூட விளங்காதிருக்கும் என்பேச்சு
கூடியுள்ளவருக்கு முழுதும் விளங்காமலிருக்குமா..?

கடைசியாக ஒன்று
தன்னை உணர்ந்தவனே ஞானி
என்றநிலை அனைவர்க்கும்
தெரிந்துதான் போகுமா?


.

Tuesday, March 15, 2011

இயல்பில் இருத்தல்

திண்ணையில் வெளியான எனது கவிதை


           இது எனது 75ஆவது பதிவு


என் இயல்பில் இருத்தல்
வெளிக்கொணர்ந்தது
என் எல்லா செயல்களிலும்
மற்றும் சொற்களிலும்
என் இயல்பை.

என் சொல்லையும்
என் செயலையும்
இயல்பில் இருத்தல் தான்
தீர்மானிக்கிறது
சூழல் அல்ல.

என் இயல்பைத்
தீர்மானிக்கும் சூழல்
என் இயல்புக்கு
ஏற்புடையதாயிருப்பதில்லை

.

Saturday, March 12, 2011

உணர்கொம்புகள்


உயிரோசை இணைய இதழில் எனது சிறுகதை





வினைல் தரையில் 18டிகிரிக்கும் குறைவான தட்பவெப்பத்தில் ,காற்றும் சமச்சீராக்கப்பட்ட அறையின் மூலையில் அடிபட்டு மல்லாக்க விழுந்து கிடந்தேன்..வாழ்க்கையில் யாருக்கும் இந்த அளவு அடி விழுந்திருக்கக்கூடாது.மரண அடி என்று நினைத்துக்கொண்டேன்..அடித்துப் போட்டவர்கள் நேரே போட்டிருந்தாலும் பரவாயில்லை.மல்லாக்கப் போட்டதுதான் பிரச்சினை ஆகிவிட்டது..நகரக்கூட முடியவில்லை..ம்...நான் முனகுவதையும் உடம்பிலிருந்து வரும் குருதியையும் பார்ப்பதற்கு யாரேனும் உண்டா ?....ம்ஹூம்...யாருடைய கவனத்தையும் கவரவில்லை..அடி விழுந்தது எதைக்கொண்டு என்பதை ஊகிக்க முடியவில்லை..ஆனால் கனத்த அடிப்பாகம் கொண்ட பொருளால் என்பது மட்டும் தெளிவாக இருந்தது,உணர்கொம்புகளை இடது புறமும் வலது புறமும் ஆட்டி ஆட்டி ஊன்றி எழ முயற்சித்தேன்..அவை முறிந்து விடும் போலிருந்தது....ம்..அப்படியும் முடியவில்லை.அறையில் வேறு யரும் இல்லாததால் , அறையின் குளிர் அதிகமாகிக்கொண்டிருந்தது.

வெளி வந்த குருதி சிறு ஓடையாகித் தேங்கிக்கொண்டியோருந்தது..இதை உருவாக்க நான்பட்ட பாடுகளை நினைத்துப் பார்த்தேன்.கூட்டுக்கண்களிலிருந்து நீர் கசிவது போலிருந்தது,.அடிவிழுந்ததில் இடது புறக் கூட்டுக்கண் சிறிது கலங்கித்தான் விட்டது.

எவ்வளவு சுதந்திரமாக ஆடிப்பாடி அலைந்து கொண்டிருந்தேன்..குளிர்பதன அறையில் எவ்வளவு பத்திரமான இடத்தில் .வெளியே வந்தேன் எல்லாம் தொலைந்தது,...இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்யமே..இப்போது நினைத்துப் புண்ணியமில்லை.தனக்கென கொடுக்கப்பட்ட அறையில்,அமைத்துக்கொண்ட இடத்தைவிட்டு ஏன் வெளியே வர வேண்டும்..பிறகு ஏன் இப்படி மரண அடி வாங்க வேண்டும் ?கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால் தேவலை என்று மனம் இளைத்தது...

பெருகி ஓடும் குருதியைக்கட்டுப்படுத்த ஒரு காலைக் கொண்டு வெளி வரும் பாதையை அடைத்துப் பார்த்தேன்....ம்..முடியவில்லை...ஏற்கனவே குருதி பெருகி வெளிவந்ததில் அந்த இடமே நைந்து போயிருந்ததால் வைத்த காலும் அதனுடன் ஒட்டிக்கொள்ள..ஓ...கடவுளே...வைத்த காலை எடுக்க முயற்சிக்கும் போது..அதில் இருந்த சிறிய செதில்களில் ஒன்று குத்திவிட .தீப்பட்ட இடத்தில் வேல் பாய்ந்தது.....ஐயோ..கவனிப்பார் யாருமில்லையா..?

இவ்வளவு மரண வேதனையிலும் ,மகிழ்ச்சி சிறிதாக இழையோடியது..இவ்வாறு அடிபட்டுக்கிடந்த நண்பர்களைத் தாக்கவந்த எதிரிகளை நினைத்துப் பார்த்தேன்.அப்படி யாரும் வரவில்லை..எனக்கு என்பதுதான் அந்த மகிழ்சிக்கோட்டின் காரணம்.இல்லாவிடில் ஒவ்வொருவனும் அளவில் சிறியவனாக இருப்பினும் பளு இழுப்பதில் மன்னர்கள்.உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் கூரான் பற்களால் கொத்தி தன் உடம்பின் பாரத்தைப் போல் பல மடங்கை இழுத்து
ச் செல்வர்.ஆராட்டி பாராட்டி வளர்த்த உடல் பிய்த்துக்கொண்டு போகப்படுவதை தன் கண்களாலேயே காணும் அந்த காணச்சகிக்காத காட்சி எனக்கு நிகழவில்லை இன்னமும்.இருகண்களையும் நிலைனிறுத்த முயற்சி செய்து தோற்றுபின் வலப்புறக்கண்ணை மட்டும் நிலை நிறுத்தி அறையை சுற்றி நோட்டமிட்டேன்.அலங்கமலங்கலாகத் தெரிந்தது..ம்...நன்கு பராமரிக்கப்பட்ட அறை..அதனால்தான்.

அறையின் குளிர் அதிகமாகிக் கொண்டிருந்தது.உடலின் சூடு சரியான அளவை விட்டு சிறிது இறங்கி விட்டது..போலிருந்தது.பயம் பிடித்துக்கொண்டது.உடம்பில் பட்ட அடிகளால் மரணிப்பதை விட ..மனத்தில் உள்ள பயத்தால் மரணிப்பது...கொடுமை.நிகழ்ந்து கொண்டிருந்தது..

மீண்டும் ஒட்டிக் கொண்ட காலை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.அதைப்பகீரதப் பிரத்னம் செய்து வெளியே எடுத்துவிட்டேன்..எனது மரண ஓலம் அறையின் சுவர்களில் எதிரொலித்தது...ஆனால் அதைக் கேட்பதற்குத்தான் யாருமில்லை.காலை அதி வேகத்துடன் எடுத்ததால் , குருதி வெளியேறி பலகீனமான உடம்பு பலமுறை துள்ளியது...அடிபட்ட இடம் மீண்டும் மீண்டும் தரையில் மோதி ...மோதி...இதற்கு மேல் என்னால் நினைக்க இயலாமல் நினைவிழந்தேன்.எவ்வளவு நேரம் இப்படியே கிடந்தேன் என்று தெரியவில்லை.

அறைக்குள் யாரோ வரும் சத்தம் கேட்டது..கலக்கத்துடன் விழிப்புத்தட்டியது.இரண்டில் ஒன்று எப்படியும் நடந்துவிடும் என நினைத்துக்கொண்டேன்..ஷூ ஒலிகள்....சரக்..சரக்...என அருகில் வந்து தேய்ந்து நின்றன..." டேய் ...எவண்டா இங்க கரப்பான்பூச்சிய அடிச்சுபோட்டது....ச்ச..வர வர இந்த ஆஃபிஸில சுத்தங்கறதே இல்லாமப்போச்சு..." என்று ஷூவால் எத்தப்பட்டதில் அந்த அறைக்குள் இருந்தே வீடுபேறு அடைந்தேன்...! 



.

Monday, March 7, 2011

பின்னூட்டங்களும் எதிர்வினைகளும்


கீற்று இணைய இதழில் எனது கவிதை


எல்லாப்போராட்டங்களும்
விமர்சிக்கப்படுகின்றன,
அதில் கலந்து
கொள்ளாதவர்களால்.
ஏனெனில் அதில்
கலந்து கொண்டவர்க்கு
அதைப்பற்றிய
விமர்சனங்கள்
கூறிக்கொண்டிருக்க
அவகாசமிருப்பதில்லை.

எல்லாப்படைப்புகளும்
விமர்சிக்கப்படுகின்றன,
அதன் உருவாக்கத்தில்
பங்கு கொள்ளாதவர்களால்
ஏனெனில் அதை
உருவாக்கியவர்க்கு
அதைப்பற்றிய
விமர்சனங்கள்
கூறிக்கொண்டிருக்க
அவகாசமிருப்பதில்லை.

விமர்சனமற்ற போராட்டங்களும்,
எதிர்வினைகளற்ற படைப்புகளும்
இருத்தல் சாத்தியமா ?

படைப்புகளும்
போராட்டங்கள் தான்
என விமர்சிப்பவர்
ஏனோ அறிவதில்லை.

.

Saturday, March 5, 2011

தன்னிலை

திண்ணையில் வெளியான எனது கவிதை

யாரிடமும் முகம் கொடுத்து
பேசத்தோன்றாது

சதா தனக்குள்ளேயே
யோசித்துக்கொண்டிருக்கத்தோன்றும்

தலைவிரி கோலமாக அலைவதை
கண்டுசொன்னாலும் கவனிக்கத்தோன்றாது

தமக்குத்தாமே சிரித்துக்கொள்வதையும்
பின் அழுவதையும் கட்டுப்படுத்தஇயலாது

சில சமயம் தனிமையே சுகம் என்று
ஒதுங்கிக்கிடக்கவும் தோன்றும்.

பல்துலக்கச்சென்றால் பலமணி நேரம்
ஆவதை கவனிக்கத்தோன்றாது

என்னிலை கண்டு
இலை அடித்தால் சரியாகுமா
என உறவினரும் நினைக்கத்தோன்றும்

இவையெல்லாம்
ஒரு கவிதை எழுத நினைத்தபோது
நேர்ந்தகதி……

யாரைப்பற்றி என மட்டும்
கேட்காதீர்கள்..!


.

Wednesday, March 2, 2011

அவரவற்கான பதுங்கு குழிகள்


 கீற்று இணைய இதழில் எனது கவிதை


லாவகமாகவும்,
தான் கண்டுபிடிக்கப்படக்கூடாத
இடத்தில் தன்னை
மறைத்துக்கொள்ளவும்,
தான் மற்றும் தனக்கே உரிய
இடமாகவும்,
தன் தவறுகளை
மெல்ல அசைபோடவும்,
தன் வெற்றிகளை
அகமகிழவும்,
தனது வெளியாக
அதை உணர்ந்து கொள்ளவும்,
பிறர் தொடர்பின்றி
தனக்குள் அமைதி காக்கவும்,
தான் கொண்ட கருத்தாக்கங்களை
தான் கற்பித்துக்கொண்ட
நியாயங்களை
பிறர் சிதைத்து விடாமல்
பாதுகாக்கவும்,
தன்னியல்பை
பிறர் காணாதிருக்கவும்,
முகமூடியின்றி
தன் இயல்பிலிருக்கவும்,

தன்னாலேயே, தாமாகவே
வடிவமைக்கப்படுகின்றன
அவரவற்கான பதுங்கு குழிகள்.

.