Monday, December 12, 2011

காற்று - வசன கவிதை

இதைப்படித்துவிட்டு என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
என்ன ஒரு எள்ளல் , துள்ளல் , எவ்வளவு சொன்னாலும் உறைக்காத
தமிழனுக்கு ஒரு வசைப்பாங்கு..!



மழை பெய்கிறது,
ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது.
தமிழ் மக்கள், எருமைகளைப்போல, எப்போதும்
    ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே
    உட்கார்ந்திருக்கிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள்,
    ஈரத்திலேயே படுக்கிறார்கள்; ஈரத்திலேயே சமையல்,
    ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான்.
ஓயாமல் குளிந்தா காற்று வீசுகிறது.
தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது.
நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள். மிஞ்சி
     யிருக்கும் மூடர் ‘விதிவசம்’ என்கிறார்கள்.
ஆமடா, விதிவசந்தான்.
‘அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை’ என்பது
     ஈசனுடைய விதி.
சாஸ்த்ரமில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி.
தமிழ் நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான
     சாஸ்த்ரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும்
     மறந்துவிட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க்
     கதைகளை மூடரிடங் காட்டி வயிறுபிழைத்து
     வருகிறார்கள்.
குளிர்ந்த காற்றையா விஷமென்று நினைக்கிறாய்?
அது அமிழ்தம், நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல
    உடைகளுடன் குடியிருப்பாயானால்.
காற்று நன்று.
அதனை வழிபடுகின்றோம்.


.

2 comments: