Monday, September 12, 2011

"மச்சி, ஓப்பன் த பாட்டில்"


உயிரோசை'யில் வெளியான திரை விமர்சனம்

பணம் மட்டுமே குறிக்கோளாய்க்கொண்ட ஒரு சமூகம். அதையே இந்தப்படத்தைப் பார்ப்பவருக்கும் எடுத்திருப்பவர்களுக்குமான மையக்கருத்தாக வைத்து,எப்படியேனும், வலிக்காமல், அதற்கென பெரும் முயற்சி என்று எதுவும் செய்யாமல் , குறுக்கு வழியில்"Easy Money"யை அடைந்து விடத் துடிக்கும் ஒரு கூட்டம் என்ற எதிர்மறை எண்ணங்கள் கொண்ட நால்வர் – ‘அஜித்' தோடு ஐவர்,என ஒன்று கூடிச்சேர்ந்து கொண்டு யாருக்கோ சொந்தமான பணத்தை அடித்துச் செல்லுவதைக் கொஞ்சம் மிரட்டலாகவே சொல்லியிருக்கிறார் வெங்கட் பிரபு. பணம் , பணம் , பணம் இதுவே தாரக மந்திரம்.

காதோரத்தில் சிறிது நரை கூடினாலும் , கிழப்பருவம் எய்திடாத அஜித். அதற்குக் கட்டியம் கூறும் வகையில், த்ரிஷா , அவர் அப்பாவிற்குத் தெரியாமல் மடியில் வைத்திருக்கும் கையை அழுத்தி, சொல்லவேண்டாமெனத் தடுத்தும் "நாற்பது" என்று உண்மையைச் சொல்லும்போது ," Life begins at forty" என்று தாமும் அந்த வயதிலேயே வாழ்க்கை என்று சொல்லக்கூடிய வ்கையில் ஒன்றை ஆரம்பித்ததை , உறுதி செய்து கொள்கிறார் ஜெயப்ரகாஷ்.

Betting Illegal Money-யைக் கொள்ளயடித்தல் என்ற ஒரு வரிக்கதைக்கு Knot மிகச்சரியாக வந்திருக்கிறது பிரபு வெங்கட்டிற்கு, கோவா'வில் சொதப்பியதை இங்கே சரி செய்துதான் இருக்கிறார். எனினும் பணத்தைக் கொள்ளையிடத் திட்டமிடும் காட்சிகளில் ஆயாசம் வருவதைத் தவிர்த்திருக்கலாம்.

இன்னும் பத்து ஆண்டுகளில் எட்டப்போகும் வயதை, இப்போதே தான் நடித்த படங்களின் எண்ணிக்கையால் அடைந்து விட்ட தல யின் தற்புகழ் பாடாமல், வராண்டா முழுக்க அவர் தன் சொந்தக்கால்களால் நடைபழக விடாமல், நாற்பதுகளில் இருக்கும் அவரின் இயல்பான தோற்றத்தைக் காண்பித்ததற்காக வெங்கட்'டிற்கு நன்றி. 

அஜித்திற்கு இது ஒரு புதிய பரிமாணம் இல்லை , ‘தீனா’, வாலி’, பில்லா போன்ற படங்களில் , ஏற்கனவே செய்த வேடங்கள் தான் என்ற போதிலும், இதில் ஒரு கட்டத்தை அடைந்து பின் அதைக்கடந்தும் விட்டிருக்கிறார்.வாய் விட்டுச்சிரிக்கும் வில்லன்களின் Last Laugh-ஐ படம் முழுக்க , அனுபவித்து நிறைய சிரித்து , நம்மையும் சேர்ந்து மகிழ வைக்கிறார் அஜித்.

லட்சுமி ராயை வீட்டிலிருந்து துரத்துவது, த்ரிஷாவிற்குத் தெரியாமல் அதை அவர் மறைக்கப் படும்பாடு, த்ரிஷா அவரின் மனைவியோன்னு கொஞ்ச நேரம் நம்மள திண்டாட வைக்கும்போது , குடித்து விட்டுத் தினமும் , ஒருத்தரோடு படுக்கைக்கு வந்து, காலையில் எழுந்து நேத்து யார் எங்கூட வந்ததுன்னு போர்வையை விலக்கிப் பார்ப்பது, இனிமே அதிகமா குடிக்கக்கூடாதுன்னு தனக்குத்தானே சொல்லிக் கொள்வது,அடுத்த நாள் தான் பணத்தை எடுக்கப் போகும்போது , என்னவெல்லாம் நடக்கும்,அந்த நால்வர் அணி எப்படி செயல்படும், எதிர்வினையாற்றும் என்று, செஸ் போர்டில், கையில் ஒரு சிகரெட்டை வைத்துக்கொண்டே நமக்கு சொல்லும் காட்சிகள், ‘தல'டா...!

த்ரிஷாவிடம் பேசும்போது கண்களில் துளியும் வில்ல'த்தனம் தெரியாமல் அஜித் பார்த்துகொள்வதும், காதல் மயக்கத்தில் த்ரிஷா அதைக் கண்டே பிடிக்காமல் போவதும் கவிதை.அதே த்ரிஷா , தந்தை ஜெயப்ரகாஷை அஜித் காரிலிருந்து தள்ளிவிட்டு விட்டுப் போகும், அவரின் வில்லத்தனம் புரிந்த பின்னர் அதே கண்களில் இருந்து விடும் கண்ணீர்த்துளிகள் இன்னுமொரு காதல் கவிதை.

ஒவ்வொரு தடவையும் அஜித்தான் வைபவ்'வைக் காப்பாற்றுகிறார். எனினும் சந்தேகத்தின் பேரில் ஜெய்ப்ரகாஷிடம் பிடிபட்ட அவரைக் காப்பாற்றி கொண்டு வந்து விட்டு, பின் அவரையே போட்டுத்தள்ள நினைத்து துப்பாக்கியைத் தூக்கிப்பிடித்துகொண்டு, ஒனக்காகப்போயி, ஜெயப்ரகாஷை மிரட்டிப்பணிய வெச்சேனேன்னு வெறுப்பின் உச்சக்கட்டத்தில் சொல்ற இடம், Simply Superb. Hats Off Ajith.

"அம்பத்தஞ்சு வருஷ உழைப்பை, அஞ்சு நிமிஷத்தில அடிச்சிட்டுப்போகலாம்னு பாத்துட்டானே, என் கையால அந்தப்பயல வளத்து, ஒன்னக்கல்யாணமும் பண்ணி வெச்சதுக்கு, எங்கிட்டயே doublecross பண்ண நென்னச்சததாம்மா தாங்கிக்க முடியல"ன்னு அஞ்சலிகிட்ட சொல்லும்போது "பசங்க"ல அப்பாவா வந்த ஜெயப்ரகாஷ் கிட்டத்தட்ட இங்கே அதே உறவுமுறையில் வளர்த்த வைபவ்விற்கென மிளிர்கிறார்.

வழக்கமா வெங்கட்பிரபு படத்தில இருக்கிற கோஷ்டில ஜெய் இல்லாத குறையைத்தீர்க்க வந்த ,கிட்டத்தட்ட அவர் முக அமைப்பிலயே இருக்கும் மஹத்,இருக்கிற ஐநூறு கோடிய மூணாப்பிரிக்கிறது கஷ்டம், கணக்கு சரியா வராதுன்னு சொல்லி , ப்ரேம நீயே போட்டுத்தள்ளுன்னு சொல்லும்போது , பரத்தையாக நடித்திருக்கும் லட்சுமி ராயின் கண்களில் தெரியும் மிரட்சி, அதே பணத்த ரெண்டாப்பிரிக்கிறதும் கஷ்டம்னு ,எங்க இவன் நாளைக்கு நம்மளயே போட்டுத் தள்ளிருவானோன்னு நினைத்து, பின்னாடி அதே மஹத்தை சுட்டுத்தள்ளும்போது அந்த வசனத்தை அவர் வாயால் சொல்லுவதைத் தவிர்த்து , காட்சிகளில் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். அதே போல, கடைசிக்காட்சிகளில், பணம் வைத்திருக்கும் வேனை மோதவிட்டு, பின் அஜித்'திடம் உனக்காகத்தான் இதெல்லாம் செஞ்சேன்னு அவர் சொல்லும் போது, 'நடிக்கிறத', இன்னும் கொஞ்சம் நல்லா நடிச்சு'க்காட்டியிருக்கலாம்.

வைபவைக்காப்பாற்றும் முதல் காட்சிகளில் , சண்டை கொஞ்சம் நீண்ண்ண்ண்டுதான் போய்விட்டது, வெட்டி, சுருக்கிகாட்டியிருந்தால் இன்னும் Crisp ஆக வந்திருக்கும். ப்ரேம் ஐஐடி ஸ்டூடண்ட், அதுவும் கோல்ட் மெடலிஸ்ட் என்று கூறும்போது அந்தப்பாத்திரத்தின் பின்னணியில் இருக்கும் நகைப்பிற்கான குறியீடு முழுமை பெறுகிறது.

ஆக்க்ஷன் கிங்கிற்கு அதிக வேலையில்லை. அவ்வப்போது அஜித் நடக்காத நீண்ட வராண்டாக்களில் தானாக நடப்பதும், ப்ரஸ்ஸிடமும், குறைந்த ஒளியில் சகபோலீஸ்காரர்களிடம் பேசுவதும்,விவாதிப்பதும், பின்னர் கடைசிக்காட்சியில் கொஞ்சம் அவர் உருவத்திற்கும், முன்னர் செய்து காட்டிய ஆக்க்ஷன் சாகஸங்களுக்கும் கொஞ்சமும் சம்பந்தமேயில்லாமல் சிறிய துப்பாக்கி கொண்டு சண்டை போடுவதுமாக கழித்திருக்கிறார்.இரண்டு பெரிய ஹீரோக்கள் இணைந்து நடிப்பது என்பதைத்தமிழில் மேலும் சாத்தியமாக்கியிருப்பதைத்தவிர வேறொன்றும் பெரிதாக அவர் செய்து விடவில்லை.

James Bond படங்களில் , பெண்களுக்கு, அவர்கள் Heroine-ஆகவே இருந்த போதிலும் , அதிக வேலையிருப்பதில்லை, எனினும் இங்கு , சற்றேறக்குறைய எதிர்மறையான இந்த Bond படத்தில் அஞ்சலிக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

யுவனைப்பற்றிக் கூறாமல் இந்த ஆட்டம் ஓயாது. Johan Sebastian Bach'ன் Conerto No1 in A Minor BWV1041 'ஐ வெகு தீவிரமான , 'கரணம் தப்பினால் மரணம்' என்ற சண்டைக்காட்சிக்கென இசைத்திருப்பது அவ்வளவு இறுக்கத்திலும், பரபரப்பிலும் அந்த உணர்வைத்"தல" க்குக் கொண்டு செல்வதில்லை என்பதை , பார்க்கும் நமக்கும், நடித்திருக்கும் 'தல'க்கும் Bach-ன் Symphony-யால் விளங்கவைக்கிறார் யுவன். Italian முறையிலான இந்த Concerto , Fast-Slow-Fast Arrangement என்று அழைக்கப்படும் Ritornello Structures வகையைச்சேர்ந்தது. படத்தில் இந்தக் குறிப்பிட்ட காட்சி அமைப்பில், முதலில் Slow Motion-ம்,பிறகு அதிவேக சண்டை என்றும் அலைக்கழிக்கப்படும் காட்சிகளுக்கு வெகு தெளிவாகவே தெரிவு செய்து இசைத்திருக்கிறார் இந்த இசைக்கோவையை. 

ஸ்பீட் பைக் காட்சியில் இழைத்து இழைத்து, நம்மையும் அஜித் கூடவே பயணிக்க வைக்கும் , அற்புதமான பின்னணி இசை., தீம் ம்யூஸிக்காக படம் முழுக்க வந்து நம்மை சிலிர்க்க வைக்கிறது.அதை "மங்காத்தா ஸிங்கிளாக" முன்னரே வெளியிட்டது அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி விட்டது.

படத்தின் தீம் ம்யூஸிக்கை'யே த்ரிஷா'வை சமாளிக்கும் காட்சிக்கென , மிருதங்கத்தையும், உடுக்கையையும் வைத்து ரீமிக்ஸ் செய்து கொடுத்திருக்கிறார். எனினும் யுவன் இந்த "உள்ளே வெளியே" ஆட்டத்திற்கென ஆரண்ய காண்டத்தை'ப்போல் அதிகம் மெனெக்கெடவில்லை ஓரிரு குறிப்பிட்டு சொல்லும் இடங்களைத் தவிர.படத்தின் பாடல்களுக்கென அதிகம் உழைத்திருக்கும் யுவன்,பின்னணிக்கென பில்லா'வைப்போலவே Second Fiddle-ஏ வாசித்திருக்கிறார் பல காட்சிகளில் (எனினும் படத்தின் பின்னணி இசையில் 'கார்த்திக் ராஜா'வின் பங்கே அதிகம் என்று தோணுகிறது.)

'வாடா பின் லேடா'வில் யுவன், இதுவரை செய்யாத ஒரு முயற்சி, முழுக்க தாள கதியை , சரணங்களில் மாற்றியபோதும் பாடலை விட்டு நம்மை விலகச் செய்யாதிருக்கும் மேஸ்ட்ரோ'த்தனம் அவருக்குள்ளும் புகுந்திருப்பதை தெளிவாகக் காட்டுகிறது.இது யுவனின்தீனா, ‘பில்லா, ‘ஏக"னுக்குப்பிறகான அஜித்'திற்கென்றே உரிய பிரத்யேக இசை.

நோகாமல் உட்கார்ந்து சம்பாதிக்கும் Betting Money-யை , அதேபோல் அதிக சிரமம் எடுத்துக்கொள்ளாமல்,சரியான திட்டமிடலில் , கொள்ளையடித்து தமக்குள் பங்கு போட்டுக்கொள்ளும் இருவரின் கதை'யில் அறம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பதையும், மையக்கருத்தே தவறு என்பதையும், மறைத்து அதைத்தனது வலுவான திரைக்கதையைக்கொண்டு தெளிவாகச் சொல்லிவிடுதலிலும் வெற்றி பெற்றிருக்கிறார் வெங்கட்பிரபு.

இது வரை தான் எடுத்த மற்ற படங்களில் , யுவனைத் தவிர , வேறு எந்த Star Value-வும் இல்லாமல் வெற்றி பெற்றிருந்த (‘கோவா' தவிர்த்து) வெங்கட்பிரபு , இதில் முழுக்க முழுக்க பெரிய தல'களுடன் இணைந்தும் வெற்றி ஈட்டியிருக்கிறார்.! 

ஒரு வரீல இந்தப் படத்த விமர்சிக்கணும்னா "இன்னொரு தடவ" இந்த விமர்சனத்தின் " தல'(லை)ப்பை" வாசிச்சுக்குங்க).

.

2 comments:

  1. அருமையான விமர்சனம், பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. நன்றி தமிழ்வாசி ப்ரகாஷ்..தொடர்ந்து வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்..! :-)

    ReplyDelete