Wednesday, January 4, 2012

Delusional குரு



கற்பனைல நடக்கிறதயும், நனவில நடக்கிறதயும் பிரித்துப்பார்க்க இயலாத ஒருவனின் கதை இந்த (Delusional குரு) மௌனகுரு.(அப்டியே வெச்சுக்கலாம் அதான் நல்லது) "போலீஸ் அவர ஃபாலோ பண்றதாகவும், கண்காணாத இடத்துக்குக் கூட்டிட்டுப் போயி தன்ன என்கவுண்டர் பண்ண முயற்சிக்கிறதாகவும் , அவரா கற்பனை பண்ணிக்கிட்டு தன்னையும் குழப்பிக்கிட்டு, அதோட கூடவந்த இன்னும் ரெண்டு பேர தன் கண் முன்னாலயே போலீஸ் என்கவுன்ட்டர் பண்ணீட்டதாகவும் சொல்லிட்ருக்கார். இத சீக்கிரமே குணப்படுத்தீரலாம், நீங்க நினைக்கிற அளவுக்கு இது பெரிய பிரச்னையில்ல, கல்லத்தூக்கி அடிக்கிற ரகம் இல்ல.பயப்படாதீங்க" அருள்நிதியின் குடும்பத்தாரிடம் மனநல மருத்துவர் சொல்லும்போது நமக்கே கொஞ்சம் சில்லிட்டுத்தான் போகிறது.


"எப்பாடு பட்டாலும் கொஞ்சம் கூட முகபாவனை காட்ட இயலாத ஜென் குரு" போல இருந்த அருள்நிதியா இது என்று நம்மை வியக்கவைக்கிறார்.! இதுவே அவருக்கு முதல் படம்னு சொல்லவைக்கிற மாதிரி அழுத்தமாகவே தன்னை காண்பித்துக்கொண்டு படம் முழுக்க வலம் வருகிறார் அருள்நிதி.இனியாவிற்கு அதிகம் வேலையில்லை, என்னதான் அழகிய சுடிதார் போட்டுக்கொண்டு,கையில் முழுக்க சல்லடையான ஆலிலை இல்லாமல் வந்தாலும் , என்னவோ அந்த உடையில் அவரைப்பார்க்க இயலவில்லை.சேலை கட்டிய தஞ்சாவூரூ மாடத்தி தான் இன்னமும் நம் கண்ணுக்குள் நிற்கிறார்.


அப்பட்டமான, அழுத்தமான ஒரு க்ரைம் த்ரில்லருக்கு என்னென்ன தேவையோ படத்தில் எங்கும் தேடாமல் விரவிக்கிடக்கிறது.இயக்குனர் சாந்தகுமாரின் முதல் படம் என்றே தோன்றவில்லை.அத்தனை நேர்த்தி,காட்சி அமைப்பு, கொஞ்சமும் நம்மை முன்னரே கணிக்கவிடாத திரைக்கதை.மனிதர் பின்னிப்பெடலெடுத்திருக்கிறார். இனியாவை அறிமுகப்படுத்தும் காட்சியில் ஒவ்வொருத்தரின் முகமாகக்காட்டி , நம்மை கொஞ்சம் இருக்கையை விட்டு அசையச்செய்து, கேமரா நமக்கே ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது. பாத்திரத்திற்கேற்ற ஆட்தேர்வு அருமை. போலீஸ் அஸிஸ்டெண்ட் கமிஷனராக வரும் (வ க்வார்ட்டர் கட்டிங்) ஜான் விஜய், சரியான தேர்வு,சொல்லப்போனால் அவர்தான் படத்தின் ஹீரோ போல படம் முழுக்க வியாபித்திருக்கிறார். ஒவ்வொரு அனாவசியக்கொலை நடந்தபிறகும், அதை எங்கனம் சமாளிப்பது,எப்படி எஃப்.ஐ.ஆர் போடுவது என்ற சளைக்காத வில்லத்தனத்துடன் உலா வருகிறார்.

‘அடிச்ச பணத்த பங்கு போட்டுக்கிட்டா லைஃப்ல கம்ஃபர்ட்டபிளா செட்டில் ஆயிடலாம்,என்ன சொல்றீங்க என்று கூடவந்த நான்கு போலீஸ்காரர்களையும் ஆசை காட்டி மயக்குவதாகட்டும்’, ‘இல்லய்யா அவன் வேற பையன் போலருக்கு, நீங்க கூட்டிட்டுப்போன அந்த மூணு பேரையும் போடவேணாம் , விட்ருங்க என்று அசால்ட்டாகச் சொல்லுவதாகட்டும்’, ‘அந்தப்பயல ஜாக்கிய வெச்சு அடிச்சது பின்மண்டையில , அதக்கொஞ்சம் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல மாத்தி எழுதணும்’ , ‘அந்தப் பழனியம்மா கையில காசே இல்லாட்டாலும் வீணா நீதி நியாயம்னு பேசிக்கிட்டு வீம்புக்கு முறுக்கிக்கிட்டுத்திரியிற கேஸு’ ‘என்று கையை நம்பியார் போல பிசைந்துகொண்டு பேசுவதாகட்டும் என அத்தனை காட்சிகளிலும் ஜான் விஜய் கலக்குகிறார்.


என்கவுண்ட்டரிலிருந்து தப்பி வந்து ஃபாதரிடம் பேசிவிட்டு, பிறகு வீட்டுக்கு வது அம்மாவையும், இனியாவையும் பார்த்துவிட்டு உங்களையெல்லாம் விட்டு ரொம்ப விலகிப்போய்டுவேனோன்னு பயமாயிருக்கு என்று சொல்லும் காட்சியிலும்,. மனநல மருத்துவமனையில் ஒவ்வொரு தடவையும் மருந்து தெளிந்து எழும்போது,நான் எங்க இருக்கேன்னு வழக்கமா எல்லா சினிமாலயும் கேக்றமாதிரி இல்லாம, இப்ப டைம் என்னான்னு தெளிவா கேக்கும்போதும் அருள்நிதி நம்மை ஆழம் பார்க்கிறார்.ஆஸ்பத்திரியிலிருந்து தப்பி வந்து தன்னிலை விளக்கம் கொடுக்கும் காட்சியில் கிழமை மாறாமல், அதை அவரின் அண்ணன், தவறாகச் சொல்லும்போதும், அதைச்சரியாக்கி சொல்லவைத்ததில் அருள்நிதிக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை இயக்குனர் விளக்கியிருக்கும் காட்சி அருமை. ஒரு தடவ பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கி போய்ட்டு வந்தாலே, அதுக்கப்புறம் ஊர்ல கேக்ற கேள்விக்கும்,பாக்ற பார்வைக்கும் பதில் சொல்லமுடியுமாடா ஒன்னால, ஏண்டா என்னய இந்த நெலமக்கிக் கொண்டு வந்து விட்டீங்கன்னு கதறும் காட்சியில் அருள்நிதி நடிப்பின் அடுத்த கட்டத்துக்கு வெகுவாக நகர்ந்து செல்கிறார்.

படம் முழுக்க பாத்திரத்திற்குத்தேவையான அடிக்குரலிலேயே பேசி நம்மை ஒரு வழியாக்குகிறார்.’நாலு வருஷத்துக்கு முன்னால ஒரு பையன் அந்த ரூமில தூக்குப்போட்டு செத்துப்போய்ட்டான், அதான் அந்த ரூமக்குடுக்க கொஞ்சம் யோசனையாயிருக்கு’ என்று ஃபாதர் சொல்லும்போது , நமக்கு ஏற்படும் சிலிர்ப்பு கூட அவர் முகத்தில் வராது அதே ஜென்குரு முக பாவத்துடன் அமர்ந்திருப்பது கொஞ்சமும் ஒட்டவில்லை. எல்லா காட்சிகளுக்கும் ஒரே முகபாவம் என்பதை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கஷ்டமாகத்தானிருக்கிறது.

எனினும் ஒவ்வொரு தடவையும் போட்ட ஊசிமருந்து தெளிந்து எழுந்தபிறகும் , அவர் தமக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை கோர்வையாக விவரிப்பது , என்னதான் அவர் ஹீரோவாக இருந்தாலும் பார்க்கும் நமக்கு கொஞ்சம் நம்புவது கடினமாகத்தானிருக்கிறது. தொடர்ந்து தமக்கெதிராக சதி வேலை நடப்பதை தெளிவாகப் புரிந்து கொண்டும் , ஊசி மருந்தின் எஃபெக்ட் தெளிந்தபின்னுமாக , அடிபட்ட புலியாகச் சீறுகிறார் அருள்நிதி.


 "செல்ஃபோன ஆன் பண்ணாலே இருக்குற எடம் தெரியுமா இல்ல ஃபோன் பண்ணாதான் தெரியுமாங்கற" அருள்நிதியின் கேள்விக்கு "தள்ளுவண்டீல இட்லி வியாபாரம் பண்றவன்ட்டயும்,ப்ளாட்ஃபார்ம்ல கடை போட்ருக்கவண்ட்டயும் எவ்ளவ் மாமூல் வாங்கணும்ன்னு கேளு தெளிவா சொல்லுவான், இதெல்லாமா தெரியப்போகுது என்று அந்த பைத்தியம் பதில் சொல்லுவது அந்த அவ்வளவு இறுக்கமான இடத்தில் சிரிப்பை வரவழைக்கிறது..!

கதை அருள்நிதி மற்றும் ஜான் விஜயையுமே சுத்தி வருவதால், இனியாவிற்கு அதிக வேலையில்லை.அழுக்குப்படாத சுடிதாரை அணிந்து கொண்டு ,கையில் ஸ்டெதெஸ்கோப் வைத்துக்கொண்டு வந்து செல்கிறார் நம் மனதில் ஒட்டாமல். அன்பேசிவத்திற்குப்பிறகு திரையில் தோன்றும் கர்ப்பிணி போலீஸாக உமா ரியாஸ் அருள்நிதியைச்சுற்றி சதி வேலை நடப்பதையும், அதிலிருந்து அவரை விடுவிக்க தன் சுமையோடு அருள்நிதியின் உள்ளச்சுமையையும் சேர்த்து சுமந்து கொண்டு படம் முழுக்க வந்து நம்மைக்கவர்கிறார்.என்னால இனிமே எதுவும் செய்யமுடியாதுப்பா, ஜான் விஜயிடமே இந்தக்கேஸ ஹாண்டில் பண்ண சொல்லி மேலிடம் உத்தரவு என்று சொல்லும் போது அவரின் மேலிடத்திற்குப்பணிந்து போகும் தன் கையாலாகத்தனத்தை வெகு சிறப்பாகக் காட்டிருக்கிறார். ‘எம்மகனுக்கு புத்தி பேதலிச்சுப்போச்சா, எங்களக்கூடத்தெரியலங்க்றான்’ என்று அருள்நிதியின் அம்மா சுஜாதா அவரோடு சேர்த்து நம்மையும் அழ வைக்கிறார்.


இசையமைப்பாளர் தமனுக்கு சொல்லிக்கொள்ளும் படியான ஏதும் அமையவில்லை.மிகச்சரியாக பாடல்களில் ஒன்றைக்கூட தேற விடாமல் பார்த்துக்கொள்கிறார். ஏறக்குறைய இதே போலான க்ரைம்த்ரில்லர் படமான "ஈரம்" படத்திற்கு இசை அமைத்தது போலவே இதற்கும் இசை அமைத்திருப்பது போலக்காட்டிக்கொள்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் அந்தப் பைத்தியம் சாவிக்கொத்தை நேக்காக தூக்கிக்கொண்டு ஓடி வரும் காட்சியை சொல்லலாம். ஓடி வந்து பிறகு அத்தனை சாவிகளையும் முயற்சி செய்து அருள்நிதியின் அறையைத்திறந்து முடிக்கும் வரை என இருக்கை நுனிக்கு இட்டுச்செல்லும் காட்சிக்கு வலுவான உரம் சேர்க்கும் பின்னணி இசை.பிற இடங்களில் வழக்கமான இம்மாதிரியான க்ரைம் த்ரில்லர்களின் இசையமைப்பையே கொடுத்திருக்கிறார். சலிப்புத்தான் வருகிறது.

படத்தில் பெரிய குறைகள் என்று ஏதும் தென்படவில்லை.முதல் அரை மணிநேரம் படத்தை காந்தத்தின் இரு நேர் துருவங்களை இணைக்கும்போது அவை வலிய விலகிச் செல்வது போல, நம்மை வலுக்கட்டாயமாக இருக்கவைக்க ஒவ்வொரு காட்சியையும் கட்டி இழுத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். மேலும் திமிரு, ராம் மற்றும் சேது படங்களின் சாயல் இருப்பதைத் தவிர்க்க இயலவில்லை.

முந்தைய படத்தில் ஜென்குரு போன்று அடிக்குரலில், அமைதியாக ஆர்ப்பாட்டமே இல்லாமல் நடித்துக்காட்டிய அருள்நிதிக்கு இந்த Delusional குரு ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை.




.

2 comments: