Saturday, October 22, 2011

சவப்பெட்டியில் பூத்திருந்த மலர்கள்




இலையுதிர்காலத்தின் பிற்பகுதியில்
டர்னிப் இலைகள் கருகிப் போயிருந்தன
ஜன்னல் எரிந்து கொண்டிருந்தது.
அறையைப் புகை நிறைத்தது.

ரத்தச் சிவப்பாயிருந்த
ஒரு ரோஜாவின் இதழைப்
பிய்த்துச் சாப்பிட்டேன்
புகைபோக்கியில் புகைக்குப்பதில்
ரத்தம் வந்து கொண்டிருந்தது.

ஸ்தாரே மெஸ்தோ’வின் தெருக்களில்
ஒரு கசாப்புக்காரனிடம்
இரந்து பெற்ற ஒரு ராத்தல்
மாட்டிறைச்சி மெல்லக் காய்ந்து
ஈக்கள் மொய்த்துக்கிடந்தது.

எழுதுவது என்பதே
‘இயற்கையான வகையில்
வயோதிகத்தை அடைவதாகும்’
என்று கஃப்கா என் காதுகளில்
ஓதிக்கொண்டே எழுதியவற்றை
தானே கிழித்துக்கொண்டிருந்தான்

ஸ்லிவோவிஸ்-ஸின் ருசி இன்னமும்
அடி நாக்கில் பிரண்டு
கொண்டுதானிருக்கிறது
ப்ளம் செடிகள் தம்
மலர்களை உதிர்த்து விட்டிருந்தன.

பூ ஜாடியொன்றில் இற்றுப் போன
வெண்மலர் கொத்தொன்று கிடந்தது.
என் கரம் நிர்வாணமாக இருந்தது.
அது குளிர்காற்றில் ஜில்லிட்டுப்பின்
கல்லாய்ச் சமைவதை உணர்ந்தேன்.

வருவோர் போவோரை
உற்று நோக்கிக்கொண்டு
செல்ல வழியறியாது நின்ற பூனை
தன்னாலியன்றவரை சிறிதளவு
ஒலியெழுப்பிக்கொண்டிருந்தது



.

2 comments:

  1. நன்றி புஷ்பராஜ், உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்..!

    ReplyDelete