Saturday, October 15, 2011

வெறுப்பு

உயிரோசை'யில் வெளியான கவிதை

அது விருப்பின் எதிர்மறை
என்று எனக்குத்தோணவில்லை.
அது விருப்பில் ஒரு நிலை
என்றே தோணுகிறது

இன்று வெறுத்து ஒதுக்கியது என்பது
என்றோ விரும்பியது மட்டுமே.
இதுவரை காணாததை,
அனுபவிக்காததை,கேட்டிராததை
என்னால் வெறுத்து
ஒதுக்க இயல்வதில்லை

விருப்பின் தெவிட்டு நிலையில்
வெறுப்பு தோன்றுகிறது
எனினும் நிலையெதிர் மாறாகத்
தோன்றுவதில்லை.

வெறுப்பின் உச்சத்தில் இருக்கும்போது
எனது முகம் இருகி விடுவதை
என்னால் தவிர்க்க இயல்வதில்லை
முகத்தின் குருதி முழுதும் வடிந்து
தாடையை விட்டிறங்கி
நெஞ்சிலேயே தங்கி விடுகிறது                                     


விருப்பிலிருந்து நழுவி
வெறுப்பிற்குச்செல்லுதல் என்பது
ஒரு பனிக்கட்டியின் மேல்                                                   

வழுக்கிச்செல்வதுபோல்
அவ்வளவு எளிதாயிருக்கிறது
அதுவே திரும்பும்போது
இருப்பதில்லை.

வாயின் வார்த்தைகளையும்

அது கட்டிப்போட்டு விடுகிறது.
என்னை அந்தச்செயலைத்தவிர
வேறெதையும் செய்ய விடாமல்                     
தடுத்தும் விடுகிறது.

அப்போதெல்லாம்

ஒரு அடிபட்ட மிருகத்தைப்போல
என்னை நான் உணர்கிறேன்
ஒரு குரல் எனக்குள் நடுக்கத்துடன்
களைப்புற்று ஹீனமாக ஒலிக்கிறது.

அதிலிருந்து விடுபட எத்தனிக்கும்

ஒவ்வொரு கணமும்
அதையும் விடவும் பல மடங்கு
வேகத்தில் என்னை
அது உள்ளிழுக்கிறது.
புதைமணல் போல.

என் கால்பாதங்களை

அருவிக்கொண்டு பின்
உடலெங்கும் பரவுகிறது ,
ஆகக்கடைசியில்
அது தன்னையே
மாய்க்கிறது எனக்குள்.

கீழிருந்து மேலாக

இந்தக்கவிதையை
சு'வாசித்துக்கொண்டு சென்றால்
ஒருவேளை உங்களின்
அடிமனதில் இருக்கும்
விருப்பு வெளிதெரியலாம்
நீங்கள் தொடர்ந்து
வெறுத்துக்கொண்டிருக்கும்
ஒரு விஷயத்தின் மேல்.



.

No comments:

Post a Comment