Thursday, November 19, 2020

கொரோனா டெஸ்டிங்

 


கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப்பிறகு எச்டிஎஃசி வங்கிக்கு சென்றேன். போயே ஆகணும்ங்கறதால. வழியில் வழக்கம் போல சொற்ப சனம் தான் நடமாடுது. வழியில் எட்டாவது வரை கற்பிக்கும் ஒரு கார்ப்பரேஷன் பள்ளி நிரந்தரமாக மூடப்பட்டு மரத்தின் இலைகள் எல்லாம் உதிர்ந்து கிடக்கிறது. எப்போதும் வாய்ப்பாடு சத்தம் கேட்கும் அந்தப்பக்கம் போகும் போதெல்லாம். கொஞ்சம் எட்டிப் பார்த்தால் பிள்ளைகளெல்லாம் ஒன்றுக்கொன்று அடித்து விளையாடிக் கொண்டிருக்கும். இப்போது கதவு துருப்பிடித்து அடைத்துக் கிடக்கிறது. ஒரு ஏரோநாட்டிகல் காலேஜ் ஒன்று அதனையடுத்து இருக்கும். காவலாளி மட்டும் உட்கார்ந்து கொண்டிருந்தார் அங்கு.

கலாமந்திர் சேலைக்கடை அப்படி ஒரு கூட்டம் அள்ளும் எப்போதும். இத்தனைக்கும் சர்வீஸ் ரோட்டில் தான் இருக்கிறது. பார்க்கிங் வசதி இல்லை அத்தனை கார்களும் ரோட்டில் நிறுத்தி வைத்து ரகளை பண்ணுவார்கள். அந்த இடத்தை கடந்து செல்வதற்கு எப்படியும் பத்து நிமிடம் ஆகிவிடும். இன்றைக்கு ஒரு ஈ காக்கை கூட இல்லை. கடை திறந்து தான் இருக்கிறது. வழியில் போகும் பேருந்தில் ஓட்டுநரைத்தவிர இரண்டே இரண்டு பேர் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து செல்கின்றனர். வங்கி, உள்ளே நுழைய எத்தனித்தேன், கூடவே இருக்கும் ஏடி எம்’மில் வழக்கம் போல பேனா இல்லை. உள்ளே சென்றே ஆக வேணும். எண்ணி நான்கு பேர் அமர்ந்திருந்தனர். அத்தனை பேரின் முகத்திலும் மாஸ்க் இல்லை. ஏசி ஓடிக் கொண்டிருக்கிறது. பெங்களூரில் வெய்யில் இல்லை நான்கு நாட்களாக .வெளியே 22டிகிரி தான். இருப்பினும்.

உள்ளே நுழையும் போது யாரும் கண்டு கொள்ளவேயில்லை. சலான் எழுதிக்கொண்டிருக்கும் போது மெசெஞ்சர் அருகில் வந்து கைகளில் தெர்மாமீட்டரை வைத்துப் பார்த்தார். என்னைத் தொடாமல். ஹ்ம்.. என்றவனை ’ருக்கோ ருக்கோ’ என்று கட்டாயப்படுத்தினார். கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டார். ஒன்றுமில்லை போலருக்கு. ஹிஹி.. சலானை நிரப்பி பெட்டியில் போட்டு விட்டு வந்தேன்.

பிரிட்ஜ் ஏரியாவில் மூன்று இடங்களில் கொரோனா டெஸ்டிங் மையங்கள் ,போறவாறங்கள் எல்லாரையும் ’டெஸ்டிங் மாட்தீரா சார்? சேம் டே ரிசல்ட் பரத்தே’ நிம்தே மொபைல் நம்பர் கொடி’ என்று அழைத்துக் கொண்டிருந்தனர். முழு கவச உடையுடன் அத்தனை உபகரணங்களுடன் அமர்ந்து இருக்கின்றனர். கார்ப்பரேஷன்ல இருந்து வந்திருப்பார்கள் போலும். நான் பிறகு வருகிறேன் என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். இதுவரை டெஸ்டிங் பண்ணவுமில்லை, மாதிரி கொடுக்கவும் இல்லை. அப்பார்ட்மெண்ட் மீட்டிங்கில் ஒரு முறை பேச்சு வந்தது. கார்ப்பரேஷன் கட்டாயப்படுத்துகிறது. பிரிட்ஜ் ஏரியாவில் இருக்கும் அத்தனை அப்பார்ட்மெண்ட் வாசிகளும் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேணும், என்று நாட்களும் குறித்தனர். அப்படித்தவறினால் காவிரி (குடி தண்ணீர்) கனெக்ஷன் நிறுத்தப்படும் என்றெல்லாம் எச்சரிக்கை வந்தது. இப்போது ஒன்றுமில்லை.

இன்றோடு ஒன் இயர் அனிவர்சரியாம் கொரொனாவுக்கு ...ஹ்ம்.. #கொரோனாடெஸ்டிங்

No comments:

Post a Comment