Tuesday, June 25, 2019

காற்புள்ளி அரைப்புள்ளி

பாவெ’யின் வாராணசி வாசித்துக் கொண்டிருந்தேன். ஓசூர் செல்லும் பயணவழியில்.அத்தனை நெருக்கமான சொற்கள், இடைவிடாது பொழியும் மழை போல. பத்தி பிரிக்கவேயில்லை. அத்தியாயங்கள் இல்லை. அநியாயம். ஒன்றவே இயலாத படியான கதை சொல்லும் பாங்கு. காற்புள்ளி அரைப்புள்ளி ஏன் முற்றுப்புள்ளியைக்கூட தேட வேண்டியிருக்கிறது. இப்படி ஏன் எழுத வேணும்?

யாரையேனும் பார்த்து போலச்செய்ய எழுதும் முறையா இல்லை பாணியே அது தானா? இது போன்ற செறிவான, கருத்துப் பொதிகளை வாசித்ததில்லை. ஓரிடத்தில் கூட கதா பாத்திரங்கள் தமக்குள் உரையாடலே நிகழ்த்தவில்லை. ஆசிரியர் அதற்கான இடம் கொடுக்கவேயில்லை. நான் சொல்வேன் நீ கேள் (வாசி ) என்ற பாங்கு. இதை எப்படி சகித்துக் கொள்வது ? இல்லை எனக்குத்தான் இது புதிதாக இருக்கிறதா ?

கவிதைப்புத்தகங்களை வாசித்ததுண்டு. அவற்றில் முட்ட முழுக்க எதுவும் விளங்காது. இல்லை நினைவில் விழுந்து கிடக்கும் சில கவிதைகள் காலப்போக்கில் புரிந்து விட வாய்ப்புண்டு. இங்கு அதுவும் நிகழுமா என ஐயம். இருப்பினும் 67 பக்கம் வரை வாசித்து விட்டேன். இனியும் ஒரு நூறு பக்கம் தேறும். முனைப்புடன் அமர்ந்து வாசிக்க ஏதுவாயில்லை. புதினங்கள் ஏதும் வாசிக்காதவன் இல்லை நான். எஸ்ரா, ஜெமோ, சாரு, புதுமைப் பித்தன், இன்னபிற சிறுகதைகளை அழியாச் சுடர்களில் வாசித்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஒன்றிப்போய்.

அருந்ததிராயின் பரிசு பெற்ற புதினத்தை அதன் ஆங்கில மூலத்தில் வாசித்த அனுபவம் இருக்கிறது. அவரும் இருபது பக்கங்களுக்கு தான் சொல்லியது போக பிறகே கதை மாந்தர்களைப்பேச விடுவார். இங்கோ அதுவும் இல்லை. #வாராணசி

No comments:

Post a Comment