Sunday, June 9, 2019

ஒளிப்பதிவாளன்


பாம்பேயில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, தங்கியிருந்த வீட்டின் அருகில் ஒரு மராட்டி தேநீர்க்கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தார். எப்போதும் அங்கு ஒரு தேநீர் அருந்திவிட்டே லோக்கல் ட்ரெயினைப் பிடிக்கச்செல்வது வழக்கம். ஒரு நாள் எனது யாஷிகா கேமராவை (பழைய ஃபிலிம் ரோல் போட்டு படம் எடுக்கும்) எடுத்துக்கொண்டு சும்மா படம் எடுக்கவென்று அலைவது வழக்கம். அதைப் பார்த்துவிட்டு என்னிடம் தயங்கித்தயங்கி தம்பி, என்னை ஒரு படம் எடுங்களேன், டீ போடுவது போல, ஃபோட்டோக்ராஃபரைக் கூப்பிட்டால் நிறைய காசு கேட்கிறான் என்றார். சரி நில்லுங்க என்றபோது , கரண்டியை நன்கு பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்தார். 

சாலையில் போய்க் கொண்டிருந்தவர்கள் ஃப்ரேமிற்குள்ளும் வந்து போய்க்கொண்டிருக்க, கொஞ்சம் பொறுங்க என்றேன்..இருப்பினும் சமாளித்துக்கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டேயிருந்தார், சரியான தருணத்தில் அவரும் கரண்டியும்,மட்டும் ஃப்ரேமிற்குள் வந்துவிட ஒரு க்ளிக். அதன் பிறகு ரோல் நிறைந்தவுடன் , டெவெலெப் செய்து பிரிண்ட் எடுத்து அவரிடம் ஒரு நாள் கொடுத்தேன். வாங்கிப்பார்த்தவர் முகத்தில் அன்றைய சாயா முழுதும் ஒரே மணிநேரத்தில் விற்றுத்தீர்ந்தது போல சந்தோஷம். அன்று எனக்கு ஒரு காப்பி கிடைத்தது கூடுதல் சீனியுடன் இலவசமாக...! பிறகு சில நாட்கள் கழித்து அவரின் பக்க சுவரில் ஃப்ரேம் செய்து மாட்டி வைத்தார். சாயா குடிக்க வருபவர்களிடம் பெருமையாக அதைக் காண்பிக்கவும் செய்வார்.

நானும் தொடர்ந்து படங்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறேன் நேஷனல் ஜியோக்ரஃபி புகைப்பட போட்டிக்கு , ஒரு போதும் எனக்கு அத்தனை மகிழ்ச்சி கிடைத்ததில்லை, அந்த சாயாக்கடை நண்பரின் முகத்தில் இருந்ததை விட.! எனது பழைய ரோல்களை தேடிப் பார்த்ததில் ஒருபோதும் அந்த நெகட்டிவ் கிடைக்கவில்லை. அவரின் சிரிப்பும், அந்த காப்பியின் சுவையும் இன்றும் அழியாப் புகைப்படம் போல என்றும் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது.

No comments:

Post a Comment