Monday, July 2, 2012

என் மனம் சொல்லிற்று



தொடர்பு கொள்ள முடியாத
தொலைவில் நீயிருப்பதாக
செல்பேசி சொல்லிற்று

அனுப்பிவைத்த குறுஞ்செய்திகள்
காற்றினில் கரைந்துவிட்டதாக
திரும்பி வந்த தகவல்கள் சொல்லிற்று

கருத்திடமுடியாது உன் பக்கங்கள்
மூடப்பட்டிருப்பதாக
சமூக வலைத்தளங்கள் சொல்லிற்று

மின்னஞ்சல்கள் அடைந்துவிட முடியாத
பெட்டிகளை மட்டுமே நீ வைத்திருப்பதாக
திரும்பி வந்தவை சொல்லிற்று

இருக்கும் உன் திசையை
நீ காட்டமறுப்பதாக
இணையதள வரைபடங்கள் சொல்லிற்று

உன் பெயர் மட்டும் எப்போதும்
சாம்பல் நிறத்தில் பூத்திருப்பதாகவே
அரட்டைப்பெட்டிகள் சொல்லிற்று

இவை அனைத்தையும்
நொடிக்கொரு தரம்
சரிபார்த்துக்கொண்டிருந்தவனிடம்
நினைவிற்கெட்டிய தூரத்தில் தானே
அவள் எப்போதும் இருக்கிறாள் என்று
என் மனம் சொல்லிற்று.


.

2 comments:

  1. சோமா

    அவள் நினைவுக்கு எட்டிய தூரத்தில் இல்லை...உம் நினைவெல்லாம் அவளாகவே இருப்பதால் இருக்கலாம் ;-)

    ReplyDelete