Saturday, April 30, 2011

இயற்கையை ரசியுங்கள் - பாரதி

இயற்கையை ரசியுங்கள் - பாரதி



கரிய நிறமான காகம் கா..கா..என்று கத்தும். மரக்கிளைகளில்,வானவெளியில்,அதிகாலைப் பொழுதினில்
காகம் தன் கூட்டத்தாரோடு சேர்ந்தே திரியும்.
நாலாபுறமும் சுதந்திரமாய் பறந்து செல்லும்.
தேவி பராசக்தி விண்ணில் செம்மையான கிரணங்களை
காட்டி சூரியனாய் வந்து உதிப்பாள்.
தென்னை மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி
கீச்சுக்குரலில் பாடித் திரியும்.
சின்னஞ்சிறு குருவி விண்ணில் வட்டமடித்திடும்.
பருந்து மெல்ல வட்டமிட்டவாறே நெடுந்தொலைவு சென்று பறக்கும்.
தெருவில் இரை தேடித்திரியும் சேவல் ""சக்திவேல் '' என்று கூவித் திரியும்.
செம்மை ஒளி வீசி பகலை வெளிச்சமாக்கிய கதிரவன்
மாலையில் மறைந்து விடும்.
மயக்கும் மாலை வேளையில் நிலவு தன்
அமுதக்கிரணங்களை பொழிய ஆரம்பிக்கும்.
இந்த ரம்மியமான மாலை நேரத்தில், என் அன்பிற்குரியவளும்
உச்சிமாடத்தின் மீது ஏறி வந்து கண்ணுக்கு இனிமை சேர்த்திடுவாள்.
மனமே! வானில் திகழும் மணித்திரளான நட்சத்திரக் கூட்டத்தை
கண்டு இன்பம் கொள்வாய்.
நிலவையும், வான்நட்சத்திரங்களையும் கண்ணால் கண்டு மனதால்
உண்டு களிப்பதை விடவும் வேறொரு செல்வம் உலகினில் உண்டோ?
தென்னை மரக்கீற்றில் "சலசல' என்று சத்தமிடும் பூங்காற்றின்
மீது குதிரைச்சவாரி போல ஏறிக் கொண்டு
உலகம் சுற்றி வந்து இயற்கையின் இன்பம் காணுங்கள்.
பண்ணோடு இசைத்து பாடி களித்திருங்கள்.



.


Wednesday, April 27, 2011

தற்போதைய சந்தை நிலவரம்


கீற்று இணைய இதழில் எனது கவிதை


லெனினை வாங்கியாகிவிட்டது,
சே' ஏற்கனவே
பிராண்ட் நேமில் இருக்கிறார்,
காந்தியை உருவாக்கியவர்களே
அவரைக் கொன்று விட்டனர்,
சதாமை தூக்கிலிட்டு அழித்தாயிற்று,
கடாஃபிக்கெதிராக சிலுவைப்போர்
நடந்து கொண்டிருக்கிறது,
லேடனைக் கண்டுபிடித்துவிடலாம்,
---
ஜூலியன் அஸாஞ்சே' வை
மட்டும் என்ன செய்வது
என்றுதான் தெரியவில்லை...!


.

Saturday, April 23, 2011

எப்ப போவீங்க..?




திண்ணையில் வெளியான கதை


“ எப்ப போவீங்க மாமா “ அவன்தான் கேட்டுக்கொண்டிருந்தான், எனது அக்கா பையன் மூணாவது படிக்கிறான்.” என்னக்கா கேக்றான் இவன் ?” “சும்மா இப்டித்தாண்டா வர்றவங்ககிட்டல்லாம் கேட்டுக்கிட்டே இருப்பான்.வீட்டுக்கு யாரும் வந்துறக்கூடாது,உடனே கேக்க ஆரம்பிச்சுடுவான் “எப்ப போவீங்க எப்ப போவீங்கன்னு”எவ்வளவோ சொல்லியாச்சு,கேக்கமாட்டேங்கிறான்.என்ன செய்றது என்றாள் அக்கா சலிப்பாக. “சின்னப்பையன் தானக்கா,புரியாமத்தான கேக்றான், பரவால்ல விடு” “தம்பி , நான் சாயங்காலம் ஏழு மணிக்கு போவேன்..” ஆமா ஏன் கேக்குற?”இல்ல சும்மாதான் மாமா கேட்டேன்.” “பெரிய இவரு கேக்க வந்துட்டாரு, இவனுக்கு நாளைக்கு ஹிந்திப்பரீட்ச இருக்கு, அதுக்கு ஒழுங்கா புத்தகத்த எடுத்துப் படிடான்னா கண்ட கேள்வில்லாம் கேட்டுக்கிட்டு..?! “ “இருக்கா நீ வேற அவனத்திட்டாத, “தம்பி, மாமாவுக்கு நல்லா ஹிந்தி தெரியும்,பாம்பேல ரொம்ப வருஷம் இருந்துருக்கான், புரியாததெல்லாம் கேட்டுக்க, நாளைக்குப் பரீட்சைக்கி புண்ணியமாப்போகும் “ என்றாள் அக்கா.அவன் புத்தகத்தை எடுக்க ரூமுக்குள் சென்றான்.அக்கா காப்பி எடுக்க அடுக்களைக்குச் சென்றாள்.

“ஏக்கா , அத்தான எங்க காணோம் ?” அவருக்கு ஏதோ கம்பெனில யூனியன் தகராறாம், அதான் ராப்பகல்னு பாக்காம , கம்பெனியெ கதின்னு கெடக்காரு.வீடுன்னு ஒண்ணு இருக்கு,பொண்டாட்டி புள்ளக எல்லாம் ஒரு பொருட்டே இல்ல அவருக்கு.,வருவார் நீ காப்பியக்குடிச்சுட்டு போய்க்குளிச்சுட்டு இந்தப்பயலுக்கு ஹிந்தி கொஞ்சம் சொல்லிக்குடு,பாஸ் பண்றானானு பாப்போம் இந்தத்தடவயாவது..” ஏங்க்கா என்னாச்சு ? “ “மாமா , அந்த டீச்சர் பீஹார்லருந்து வந்துருக்காங்க,அவங்களுக்கு தமிழே தெரியாது, எல்லாத்துக்கும் தமிழ்ல என்ன சொல்றது, எப்டிக்கேக்றதுன்னு எங்ககிட்டயே கேட்டுக்கிட்டு இருப்பாங்க,” சிரிப்பு தாங்கவில்லை எனக்கு. “வெறும் ஹிந்தில தான் பேசுவாங்க இங்கிலீஷும் சரியா வராது, செமக்கேலி பண்ணுவோம் நாங்க, அவங்களுக்கு ஒண்ணும் புரியாம மண்டய மண்டய ஆட்டிக்கிட்ருப்பாங்க..” “அப்ப உருப்பட்டாப்ல தான், தமிழ்ல அர்த்தம் சொல்லிக்குடுத்தாதானே புரியும் , அவளும் பசங்களுக்கு ஏதாவது புரியுதா இல்லயான்னு தெரியாம ஏதோ எடுக்குறா, இவனுங்களும் படிக்கிறாங்ய…”

என்ன பாடம் தம்பின்னு புத்தகத்த வாங்கிப்பாத்துக்கிட்டிருந்தேன்.ஏதோ ஒரு வண்டு ரொம்பத்திமிரா நடந்துக்கிட்டதாவும்,காட்டுல ராஜா மாதிரி நெனச்சிக்கிட்டு சிங்கத்தயே சீண்டுற மாதிரியும் கத போய்ட்டுருந்தது. “ எனக்கு புரியுது மாமா,ஆனா சில ‘செண்டென்ஸ்’ தான் புரியல, நீங்க கொஞ்சம் ‘எக்ஸ்ப்ளைன்’ பண்ணுங்கன்னான்.சரின்னு முழுக்கதயையும் படிக்க ஆரம்பிச்சேன்.

அத்தானுக்கு மில்லில் வேலை.ஃபிட்டராக வேலைக்கு சேர்ந்தவர்,அவரது குணத்தால் இன்னும் மேலே போக இயலாமல் தங்கிவிட்டார்.கறார் பேர்வழி.வந்த சண்டய ஒருபோதும் விடமாட்டார்.மில்லுக்குள்ள ‘சண்டியர்’னு பட்டப்பேர் அவருக்கு உண்டு.அக்கா பாவம் ஒரு பொண்ணயும், பையனையும் பெத்து வெச்சுக்கிட்டு இவரோட தெனம் மாரடிச்சிக்கிட்டிருக்கா.

என்ன ‘ஹிந்தி’ ட்யூஷன் எப்டிப்போயிட்டுருக்கு ? நீ குளிச்சிட்டு வந்திருடா,இட்லிக்கு இன்னிக்கு அக்கா கையால சாம்பார் வெச்சுருக்கேன்.சாப்டுட்டு அப்புறம் உங்க ட்யூஷன ஆரம்பிங்க என்றாள் அக்கா.உங்க அத்தான் எப்ப வருவாங்கன்னு தெரியல, தேவையில்லாத வம்பெல்லாம் வெலக்கி வாங்கி வெச்சுக்கிட்டு இருக்கார்.வீட்டுல பொண்ணு பெரியவளாயிட்டாளே,கொஞ்சம் காசு பணம் சேர்த்து நக,நட்டு வாங்கிப்போட்டு கல்யாணம் பண்ணிக்குடுக்கணுமே, இந்தப்பயல நல்ல படிப்பு படிக்க வெக்கணுமேன்னு கொஞ்சமாவது நெனப்பு இருக்கா அவருக்கு.?எப்பப்பாரு யூனியன், தகராறு,மேனேஜ்மெண்ட்டோட சண்ட, இதே பொழப்பா போச்சு, காலைல ஆறு மணிக்குப்போனவர் , பாரு இப்ப மணி பதினொண்ணு ஆகப்போகுது இன்னும் காணோம்.ஊத்தி வெச்ச இட்லியெல்லாம் ஆறிப்போச்சு. “வருவார்க்கா, ஏன் அத்தாண்ட்ட ‘செல்’ இல்லியா ”, பொண்டாட்டி புள்ளகளப்பத்தி நெனப்பே இல்லாதவருக்கு, செல் கையில தங்குமா, எங்கயோ தொலச்சிட்டார், இதோட ரெண்டு,மூணு செல்லு காணாமப்போச்சு.”சரிக்கா, வந்துடுவார் , எங்க போயிடப்போறார்” எனறு சொல்லிகொண்டே , “தம்பி, இது வர நான் சொல்லிக்குடுத்தத படிச்சிட்டிரு, மாமா குளிச்சுட்டு வந்துருவேன்’னு சொல்லிக்கொண்டே குளியலறையில் புகுந்தேன்.

வண்டு பறந்து வந்து மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சிங்கத்தின் கன்னத்தின் மீது அமர்ந்தது.உறங்கிக்கிடந்த சிங்கம் ,வண்டின் குறுகுறுப்பை உணர்ந்து தன் வலக்காலால் ஓங்கி அறைந்தது தன் கன்னத்தில்.சட்டெனப்பறந்த வண்டு சிங்கத்தின் உடலில் அமர்ந்து கொண்டது.அடித்த இடம் காயமானதை உணர்ந்தது சிங்கம்.பிறகும் வண்டு கொட்டாத வரை அமைதியாகவே கிடந்தது சிங்கம்.உடலிலமர்ந்த வண்டு தன் வேலையைக் காட்டத் தொடங்கியது.இப்போது உடலில் இருக்கும் வண்டை விரட்ட அடித்தது, வண்டு லாவகமாக மேலே பறந்து செல்ல உடலில் அடி பலமாக விழுந்தது.

சிங்கம் உடலை ஒரு முறை உதறிவிட்டு , பிடரியை சிலிர்த்துக்கொண்டு மீண்டும் படுத்துக்கொண்டது.சும்மா இராத வண்டு சிங்கத்தின் கண்ணிமைக்கு அருகே தாழ்வாகப்பறந்தது.ஏகக்கோபம் கொண்ட சிங்கம் சரேலென ஓங்கி அடித்ததில் அதன் கண்ணில் இருந்து ரத்தம் வழியத்தொடங்கியது.இப்படி தன்னையே அடித்துக்கொண்டு காயப்படுத்திக்கொண்ட சிங்கத்தைப்பார்த்து ,வண்டு கேட்டது. “ என்னை இந்தக்காட்டின் ராஜா என ஒத்துக்கொண்டால் நான் உன்னை தொல்லை செய்ய மாட்டேன் என்றது.தன் கைகளாலேயே அடி வாங்கி அலுத்துப்போன சிங்கமும் அதற்கு ஓத்துக்கொண்டது.பெருமை தாங்காமல் அங்கிருந்து பறந்து சென்ற வண்டு , அந்தப்பக்கமாக வந்து கொண்டிருந்த யானையைப்பார்த்து,” எனக்கு வணக்கம் சொல்..ஏனென்றால் நாந்தான் இந்தக்காட்டின் ராஜா, அதை அந்த சிங்கமே ஒத்துக்கொண்டது’ என்றது.இவ்வளவு நேரம் நடந்ததைப்பார்த்துக்கொண்டிருந்த யானை தும்பிக்கையை உயர்த்தி வாழ்த்துச்சொல்லி விலகிச்சென்றது.

டெலிஃபோன் மணியடித்தது,அக்காதான் எடுத்து பேசிக்கொண்டிருந்தாள்.குளித்து விட்டு தலை துவட்டியவாறே வெளியே வந்தவன் , “என்னக்கா அத்தான் தான் பேசினாரா ? “ இல்லடா, அவர் எங்க பேசப்போறார், இந்த நாலாவது வீட்டு பணிக்கர் வைஃப் , அவங்க பொண்ணு இன்னும் ட்யூஷன் விட்டு வர்லயாம், அதான் இவளும் வந்துட்டாளான்னு கேட்டு போன் பண்ணுச்சு.இருந்தாலும் அந்த மலயாளிக்கு சந்தேகம் ஜாஸ்தி. பெத்த புள்ள மேலயே.நொடிக்கொருதரம் எல்லா சினேகிதி வீடுகளுக்கும் போனப்போட்டு தொல்ல பண்ணீருவா. சரி , நீ சாப்டுட்டு உங்க ஹிந்தி ட்யூஷன ஆரம்பிங்க என்றாள். என்ன தம்பி எதுவர படிச்சிருக்க, “ யானை தும்பிக்கையை தூக்கி வாழ்த்து சொன்னது “ வர,,சரி சரி இப்ப வர்றேன் மாமா , சாப்டுட்டு அப்புறம் கதயத்தொடங்கலாம்.

சிங்கமும் , யானையும் தனக்கு அடி பணிந்து விட்ட மிதப்பில் பறந்து சென்று கொண்டிருந்தது வண்டு.வழியில் தென்பட்ட மிருகங்களையெல்லாம் வணக்கம் சொல்லச்சொல்லி இம்சை செய்தது.இவை யாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த நரி அதற்கொரு பாடம் கற்பிக்க நினைத்து வண்டின் அருகில் சென்றது. ‘ஏய் நரி , எனக்கு வணக்கம் சொல்ல வந்திருக்கிறாயா ?” “ ஆம் ராஜா, ஆனால் இந்தக்காட்டில் ஒருவன் உங்களை ராஜாவென ஏற்றுக்கொள்ள மாட்டானாம். அவனை ஒரு கை பாருங்கள் என்றது.”யாரவன் ..அந்த சிலந்திதான் என்றது நரி.சிலந்தி அப்போது தான் தன் வலைப்பின்னலை முடித்து விட்டு இரைக்கெனக் காத்துக்கொண்டிருந்தது.

அக்காதான் போன் பண்ணிக்கொண்டிருந்தாள், யாருக்குக்கா, அந்த ட்யூஷ்ன் க்ளாஸுக்குத்தான், என்னக்கா நீயுமா..? “ இல்லடா உனக்கு ஒண்ணும் தெரியாது ,அந்த ட்யூஷன் வாத்தியார் கொஞ்சம் சபலிஸ்ட், இவளே ரெண்டொரு தடவ ஜாடமாடயா எங்கிட்ட சொல்லிருக்கா.அதான் விசாரிச்சேன்.இப்பதான் க்ளாஸ் முடிஞ்சு எல்லாரும் கெளம்பிப்போய்ட்டதா சொல்றார்.அவள் கூறி முடிப்பதற்குள் காலிங்பெல் ஒலித்தது.

உங்க அத்தான் தான் வந்திருப்பார்னு நெனக்கிறேன், இரு நானே கதவத்திறக்கிறேன்னு சொல்லிக்கொண்டே அக்கா தான் திறந்தாள்.வந்தது அத்தான் இல்ல, இவள் தான். “ என்னடி ட்யூஷன் முடிஞ்சிருச்சான்னு அக்காவின் கேள்விக்கு பதிலேதும் கூறாமல் விறுவிறுவென ரூமுக்குள் சென்று விட்டாள்.” ஏண்டி ஒன் மாமன் வந்துருக்கான் , அவனப்பார்த்து வாங்க, எப்ப வந்தீங்கன்னு ஒரு வார்த்த கூடக் கேக்கலியே “ விடுக்கா” அவ கேக்கலன்னா என்ன இப்ப ? அவ ஏதோ படிக்கிற டென்ஷன்ல வந்திருப்பா.

அவள் உள்ளே போனதும், இவன் ..மாமா..அக்காவுக்கு ஸ்கூல்ல பட்டப்பேரு என்னான்னு தெரியுமா ? “செம்மறி ஆடு” . ஏண்டா “ செம்மறி ஆடு”ன்னு வெச்சாங்க, தலயக்கவுந்துகிட்டே போவாள்ல எப்பவும் அதனாலதான்னு சொல்லிச்சிரிச்சான். அதோட அந்த ஆனந்த் பய தான் பேரு வெச்சுருக்கான், அவங்க ஊர்ல ஒரு ஆட்டுக்கு அக்கா பேரு தானாம் , அதான் அக்காவ “ஆடு”ன்னு கேலி பண்ணுவாங்ய. “ டேய் ஒழுங்கா படிக்க மாட்ட, இப்ப வந்தேன்னா அடி விழும்டா” ன்னு குரல் வந்தது உள்ளேயிருந்து.

சரி அத விடு, நம்ம வண்டு கத என்னதான் ஆச்சு , பாப்போம்..வண்டு சிலந்தியத்தேடிப்போச்சு, நரி பேச்சக்கேட்டுக்கிட்டு. சிலந்தியப்போய்ப்புடிக்கிறேன்னு வகையா அதோட வலையில மாட்டிக்கிச்சு வண்டு.வலையில் மாட்டிக்கொண்ட தன் கால்களை பலம் கொண்டு இழுக்க இழுக்க மேலும் மேலும் அவை தீவிரமாக ஒட்டிக்கொண்டன.இதைக்கண்ட சிலந்தி விரைந்து வந்து வண்டைத்தாக்கிக் கொன்று தின்று முடித்தது.

மீண்டும் டெலிஃபோன் மணி அடித்தது.உங்க அத்தானாதான் இருக்கும், இரு என்றவள் எடுத்துப்பேசப்பேச அவள் முகம் மாற ஆரம்பித்தது.”டேய் ,என்னவோ சொல்றாங்கடா பாருடா என்றவளின் குரல் என்னைக்கலவரமாக்கியது. “ இங்க குடு”ன்னு ரிசீவரை வாங்கியவன் , வந்த செய்தி கேட்டு செய்வதறியாமல் திகைத்தேன்.அத்தானோட கம்பெனில யூனியன் தகராறுல கைகலப்பாகி , உயிருக்கு ஆபத்தான் நெலயில அத்தான ஜி.ஹெச்.ல சேத்துருக்காங்களாம்.பெருங்குரலெடுத்து அழத்தொடங்கிய அக்காவையும் , பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தேன்.

என்ன சார்? எந்த வார்டு , “இல்ல இப்ப யாரையும் பாக்க முடியாது , இது போலீஸ் கேஸு,” சார் இவங்க அடிபட்டவரோட மனைவி, “ யாரா இருந்தாலும் முடியாது சார், “வாக்குமூலம் வாங்கிக்கிட்டிருக்கார் இன்ஸ்பெக்டர், எல்லாம் முடிஞ்சா தான் உங்கள அனுமதிக்க முடியும், சாரி சார் ரொம்பத்தொல்ல பண்ணாதீங்க.கொஞ்சம் அப்பால போயி ஒக்காருங்க, கூப்டும்போது வந்தாப்போதும்”

அருகில் நின்று கொண்டிருந்த மில் தோழரை அணுகி விசாரித்தேன்.அவர் உடுப்பிலும் முழுதும் ரத்தக்கறைகள். “ இல்ல தம்பி, சார் ரொம்பக்கோவக்காரர், அதோட அடங்கவும் மாட்டார், சின்னதா ஆரம்பிச்ச பிரச்னையை நல்லா உருவேத்தி விட்டு,ஜி.எம்.மையே பணிய வெச்சுட்டார், அதோட நின்றுக்கலாம், சூப்பர்வைஸர் கிட்டயும் வலியப்போயி ஜி.எம்.மையே போட்டேன் நானு,என்னைய மரியாதையா நடத்துங்கன்னு மிரட்டிருக்கார்.அவர் பலம் இவருக்கு தெரியாது. சரி ஏதோ இன்னிக்கி போனாப்போகட்டும்னு அவரும் விட்டுட்டார். சூப்பர்வைஸர் ரூம விட்டுவெளியே வந்தவர், போறவாரவன் கிட்டயெல்லாம் எனக்கு சலாம் போடு,இனிமே நான் தான் இந்தக்கம்பெனிலன்னு ரொம்பத்திமிரா பேசிக்கிட்டே போயிருந்திருக்கார். இவர எப்படா போடலாம்னு காத்துக்கிட்டிருந்த ஒருத்தன், வலிய அவர்கிட்ட போயி நைச்சியமாப்பேசி , அந்த டூல்ஸ் செக்ஷன்ல இருக்கிற தன்ராஜூ உங்கள மதிக்கிறதே இல்ல சார், என்னான்னு கேளுங்கன்னு உசுப்பேத்தி விட்ருக்கான், இவரும் அதப்புரிஞ்சுக்காம அவங்கிட்ட போயி வம்பிழுத்திருக்காரு,அவன் கம்பெனிக்குள்ளயே ஆயுதம்லாம் வெச்சுருப்பான், யாரும் ஒண்ணும் கேக்க முடியாது அவன.அதான் பல நாளா கருவம் வெச்சு இன்னிக்குப் போட்டுத்தள்ளிட்டான்…நம்ம தகுதி, பலம் தெரிஞ்சு நடக்கணும் தம்பி, இப்டி எல்லாரையும் பகைச்சுக்கிட்டா என்னாச்சுன்னு பாத்தீங்களா ? எங்க கொண்டாந்து விட்ருக்கு பாருங்க இப்ப…..?” என்றவாறு முகம் பொத்தி அழுதார்.

அக்கா வராண்டாவில் போடப்பட்டிருந்த பெஞ்ச்சின் ஒரு மூலையில் , மகனையும் , மகளையும் கைக்கொரு பக்கமாக அணைத்தபடி உட்கார்ந்திருந்தாள்.” என்னடா என்னதான் சொல்றாங்க ? இப்போதைக்கி பாக்க முடியாதா ? இல்லக்கா, உள்ள ஸ்டிட்சிங் நடந்துக்கிட்டிருக்காம், அது முடிஞ்சவுடனே பாக்கலாம்னு சொல்லிருக்காங்கன்னு” சமாளித்தேன்.

வார்டு பாய் குரல் அனைவரையும் பதற வைத்தது, “ இங்க யாருங்க, சுந்தரத்தோட மனைவி,உள்ள போய்ப்பாருங்க “ என்றான். “ அடி பலமா நெஞ்சுப்பகுதில பட்டதில அளவுக்கதிகமா ரத்தம் வீணாகி காப்பாத்த முடியாமப்போச்சு, சீக்கிரமா ஃபார்மாலிட்டீஸ முடிச்சிட்டு “ பாடி”ய வீட்டுக்கு எடுத்துட்டுப்போயிருங்க என்றார் டாக்டர். தொப்பியைக்கழற்றியவாறே இன்ஸ்பெக்டர், சார் நீங்க யாரு, கொஞ்சம் உங்களையும் , குடும்பத்தையும் விசாரிக்க வேண்டிருக்கு.அப்புறமா வீட்டுக்கு வாறேன் என்றவாரே அவரும் விலகிச்சென்றார்.பேண்டேஜ் கட்டுகளுடன் உடலெங்கும் ரத்தம் பரவிக்கிடந்த அத்தானின் உருவத்தையே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு,அவர்கள் சொன்ன எதுவும் காதில் விழவில்லை.

போஸ்ட்மார்ட்டம் முடிந்து, ஏற்கனவே சுற்றப்பட்டிருந்த துணிக்கட்டுகள் , மேலும் இறுக்கப்பட்டு பொட்டலமாக நடுக்கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தார் என் அத்தான்.அவருக்குக்கொஞ்சம் தள்ளி ,அந்த ஹிந்திப்புத்தகம் காற்றில் சலசலத்துக்கொண்டிருந்தது.அவரையே பார்த்துக்கொண்டிருந்த என்னை, “மாமா நீங்க எப்ப போவீங்க? “ என்று கேட்டுக்கொண்டிருந்தான் தம்பி.மணி ஏழடித்து ஓய்ந்தது.


.

Saturday, April 16, 2011

முகவெளி

முகவெளி

என் பேச்சாலும் எழுத்தாலும்
பலருக்கும் பரிச்சயமான
என் முகம் எப்போதும்
என்னுடையதாய்
இருப்பதில்லை.
என்னுடையதாய் இருக்கும்
என் இயல்பின் முகம்
பிறருக்கு ஏற்புடையதாயும்
இருப்பதில்லை
மேலும்
முகங்களேயற்ற வெளி
எனக்குப் பரிச்சயமுமில்லை.



முகம்

புகழ்பெற்றவரின் முகச்சாயல்
என்னில் கிஞ்சித்தேனும்
இருப்பதாக உணர்ந்தால்
அவரைப்போலவே
உடையணிகிறேன்

நடை உடை பாவனைகளை
அவர் செய்வது போல்
மாற்றிக்கொள்கிறேன்

அவரைப்பற்றி
பேசுவதிலும்,அவர்
சம்பந்தமான விடயங்களை
தேடிக் கையிருப்பு
வைத்துக்கொள்வதிலும்
தனி அக்கறை
காட்டுகிறேன்

செய்யும் ஒவ்வொரு
செயலிலும் அவரின்
சாயல் தென்படுவதை
உணர்ந்து
அகமகிழ்கிறேன்

அவ்வாறில்லையெனில்
அப்படித் தென்படுமாறு
மாற்றி வைத்துக்கொள்கிறேன்.

என்னில் அவர்
தென்படுவதை
உணர்ந்தவர்கள்
என்னைத்தவிர்க்க
முயல்வதை எண்ணி
வெறுப்பில் குமைவேன்.

எனக்கென ஒரு சுயம்
இருப்பதை
மறந்தே போகிறேன்


.

Monday, April 11, 2011

அமிழ்ந்த கல்



திண்ணை'யில் எனது கவிதை


அமிழ்ந்த கல்

சிறிய அலையையும்
சில நீர்க்குமிழிகளையும்
உனக்குள்
உருவாக்கிவிட்டு
அசையாமல் அமிழ்ந்த
கல்லாகக்கிடக்க எனக்கும்
விருப்பந்தான் உன்னில்.
ஏனெனில்
உருளும் கல்
பாசம் சேர்ப்பதில்லை.

சிலரும் பலரும்

நான் இங்கிருந்த
வரையில் எனக்கு
எது தேவையோ
அதை மட்டுமே
செய்து வந்தேன்
பிறர் எதிர்பார்ப்புகளுக்கு
ஏற்ப அல்ல.
எனினும் சிலருக்கு
என்னைப்பிடித்திருந்தது
பலருக்கு இல்லை.
அந்த சிலரும்
என் போலவே
தனக்குப்பிடித்ததை
மட்டும் செய்து
வந்தனர் போலும்.

நனைக்க/நினைக்க

என்னை
என்னில்
என்னுள்
உன்னால்
நனைக்க

என்னில்
என்னுள்
உன்னை
நினைக்க


.

Friday, April 8, 2011

அண்ணா ஹஸாரே



என்ஜினீயரிங் காலேஜ்
சீட்டுக்கு தகுதியில்லாததால்
ஐந்து லெட்சம் கொடுத்து
சீட் வாங்கினேன்

சாதிச்சான்றிதழ் கிடைக்க
தாசில்தார் அலுவலகத்தில்
பெரும்புள்ளிகளை இனம் கண்டு
அவர்களைக்குளிர்வித்து
விரும்பிய சாதியை
நிரப்பி சான்றிதழ்
பெற்றுக்கொண்டேன்

அரசு வேலைக்கு விண்ணப்பித்து
கிடைக்காததால் நெருங்கிய
உறவினர் உதவி கொண்டு
எம்.பி.யைப்பிடித்து அவருக்கும்
கணிசத் தொகை கொடுத்து
வேலையும் வாங்கிவிட்டேன்

நல்ல கிம்பளம் கிடைக்கும்
துறை பார்த்து , அங்கங்கு
வெட்டவேண்டியதை தாராளமாக
வெட்டி அந்தத்துறைக்கே
என்னை மாற்றிக்கொண்டேன்

இதோ இன்று
அண்ணா ஹஸாரே'வின்
உண்ணாநிலையை ஆதரிக்கச்
செல்லும் வழியில்
ஒரு வழிப்பாதையில் சென்று
அதை மறைக்க ஐம்பது ரூபாய்
ட்ராஃபிக் போலீஸுக்கு
கொடுத்து சரிக்கட்டினேன்

ஏதோ
கரப்ஷனை ஒழி[ளி]க்க
என்னாலான
உதவி.


.

Tuesday, April 5, 2011

தாங்கல்

திண்ணை'யில் எனது கவிதை

எதையும் கடந்து செல்லுதல்
என்பது முடிவுறாப்பயணத்தின்
மூலம் மட்டுமே சாத்தியமெனில்
பாதி வழிப்பயணத்தில்
தங்கிவிட்ட என்னிலிருந்து
எதுவும் தானாகச்
சென்றால் மட்டுமே
அவை எனைக்கடந்து
செல்லுதல் சாத்தியம்.

உண்மையில்
என்னை எதுவும் கடந்து
செல்வதில்லை
காய்ந்த நீரோடையின்
வடுக்களைப்போல அவை
தங்கித்தான் விடுகின்றன.

என்றாவது பயன்படும்
என எடுத்துவைத்த
ஒரு சிறு குண்டூசியைப்போல
அவை இன்னமும் என்னுள்
தைத்துக்கொண்டு தானிருக்கின்றன.


.

Saturday, April 2, 2011

நாலு பேருக்கு நன்றி

உயிரோசையில் வெளியான  எனது சிறுகதை






எங்க சார் போணும்?”ஆட்டோவ. நிறுத்தி ஆமமாதிரி தலயமட்டும் வெளியே நீட்டிக் கேட்டார்.
"டி.எம்.எஸ்." 
 எவ்ளவு சார் தருவ?"
"நீங்க சொல்லுங்க"
பார்க்க வயதானவர் போலிருந்தார். உள்ளே சாதாரண சட்டையும் , அதுக்கு மேல காக்கி உடுப்பும் அணிந்திருந்தார். "அறுபது ரூபா குடுசார்" மத்தவன்லாம் எம்பது நூறுன்னு கேப்பான், நான் நியாயமா கேக்கறேன். இந்த ஆபீஸ் போற டயத்துல அதுவும் மவுண்ட்ரோட்ல சவாரி போறதுன்னா எவ்ளவு செரமம்னு உனக்கு தெரியாது சார்."ஏறிக்கோ". 
வண்டி நந்தனம் சிக்னலைத் தாண்டி சென்று கொண்டிருந்தது. அவரேதான் பேசிக்கொண்டே வந்தார்."இதே ஆட்டோவ வாடகைக்கி விட்டிருந்தேன் சார் , எடுத்தவன் ஒழுங்கா ஓட்றானான்னா, தெனம் தண்ணி அடிக்கிறான்சார் , அதொட வந்து வண்டி எடுக்கிறான் சார், அதுனாச்சும் பரவால்ல, பொண்டாட்டியும் சேத்துக்கிட்டு தண்ணி அடிக்கிறான் சார்.குடும்பமே பேஜாரு.அதோட நானே திரும்ப வண்டிய எடுத்து ஓட்டஆரம்பிச்சுட்டேன். ஒரு தொழில் பக்தி வேணாம் ? அதுலருந்துதான் காசு வருது, கும்பிடாட்டியும் பரவால்ல , ஒரு மரியாத இருக்கணும் சார், காசும் ஒழுங்கா குடுக்கிறதில்ல, எல்லாத்தயும் தண்ணிலயே வுட்டுர்றான் சார். அதான் வேணவே வேணாம்னு சொல்லி அனுப்பிட்டேன். கொழந்த குட்டிய காப்பாத்தறதுக்கு தொழில் செய்யணும், ஒரு பயபக்தி வேணும், ஒண்ணுமே கெடியாது சார், அவங்கிட்ட".
"என்னப்பாத்தா எத்தினி வயசாகுது சார்?" 
அவரே சொன்னார்
"அம்பத்திஏழு." இன்னிக்கு வரைக்கும் ஒரு கெட்டபழக்கம் இல்ல சார். சிகரெட், தண்ணி, பீடி ஏன் பாக்கு கூடப் போடறதில்ல சார், அதான் பசங்க எல்லாம் இன்னும் எளமயாவே இருக்க"ன்னு சொல்வானுங்க!" பிறகு அவரே சங்கோஜத்தில் சிரித்துக்கொண்டார்.
"பேமிலி இருக்குது , ஒழக்கிற காசக் கொண்டு போயி பொண்டாட்டி கைல குடுத்துருவேன் சார். அவ பாத்து செலவுக்குன்னு குடுக்கறதக் கூட செலவளிக்க மாட்டேன் சார். அப்டி அவ சேத்து வெச்சகாசில இந்த ஆட்டோவ சொந்தமா வாங்கிட்டேன் சார்.
இந்தக்காலப் பயலுவளுக்கு எங்க என்னா தெரியுது ,கைல நாலுகாசு வந்தா ஆடறானுங்க. இல்ல, எல்லாத்தியும் குடிச்சே அழிக்கிறானுங்க."
தேனாம்பேட்டை சிக்னலில் வண்டிநின்றது.
"என்னா வெயில் சார்." காக்கிச்சட்டையின் காலரை உள்ளே அணிந்திருந்த சட்டையோடு சேர்த்துப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பேண்ட் பாக்கெட்டிலிருந்து துணியை எடுத்து கழுத்தைச் சுற்றி துடைத்துக் கொண்டார்.சிக்னல் விழுந்து வண்டி கிளம்பிய போது பக்கத்தில் ஒரு ஆட்டோ உரசிச்சென்றது .
 "ஏய் ஆறுமுகம்" அந்த ஆட்டோ டிரைவர் திரும்பிப் பார்த்தார்.
"நம்ம நாலாவது தெரு ஆடிட்டர் இல்ல, சிவசங்கரன் இன்னிக்கு காத்தால போய்ட்டாராம்ப்பா, வா இப்ப சவாரி எறக்கி விட்டுட்டு ஒருமால வாங்கிப் போடலாம்"
"எனக்கு நியூஸ் தெரியாதுண்ணே , போய்ட்டு வந்துருவோம்" ணே என்றபடி விலகிச் சென்றது அந்த ஆட்டோ.
"தம்பி, அந்த ஆடிட்டரு ரொம்ப நல்லவர்ப்பா, டெய்லி காலைல வீட்டுக்குப் போயி அவர ரெடி பண்ணி, பாவம் அவரால நடக்கமுடியாது, குச்சி வெச்சுதான் நடப்பார். அவரக் கூட்டிட்டுப் போயி ஆபீசுல விட்டுட்டு திரும்பக் கூட்டிட்டு வருவேன் சார். நல்ல மனுசன் சார், இந்த ஆட்டோ வாங்கறப்போ இருந்த சிக்கல்லாம் சரி பண்ணிக் குடுத்தார்பா, நன்றி விசுவாசம் மறக்கக்கூடாது, அதான் உங்கள எறக்கி விட்டுட்டு அங்க போலாம்னு இருக்கேன்" என்றார்.


"பேச்சுலர்ஸ் ரூமக் கூட்டறது ஈஸின்னு நெனச்சு ,வேலக்கு ஒத்துக்கிட்டா இந்தப் பசங்க கண்ட எடத்திலயும் குப்பயப் போட்டுவெச்சு, நாலு வீட்டுக்குப் போய் மிச்ச வேலயப் பாக்கவிடாமப் பண்றானுவளே ?!" சலித்துக் கொண்டாள் வேலக்கார ஆயா. நோக்கியா சார்ஜர், நேத்து தின்னு போட்ட சிப்ஸ் பாக்கெட், ஓரத்தில கொஞ்சம் சிகரெட் துண்டும் அதோட சாம்பலும், முடிசுத்திக் கெடந்த பஸ் டிக்கெட்டும் ஒரே தள்ளாகத் தள்ளினாள் துடைப்பத்தை வைத்து. "தம்பிகளா, வேலக்கு போறப்ப ,சன்னக்கதவ சாத்தி வெச்சிட்டுப்போங்கப்பா ,காத்து இல்லாத குப்பைய எல்லாம் கொண்டுவந்து உள்ள கொட்டுது ,அப்பால அத்தையும் சேத்துக்கூட்ட வேண்டியிருக்கு." 
யாரும் கண்டுகொண்டது போல தெரியவில்லை.
 அவரவர் வேலைக்குக் கிளம்புவதில் மும்முரமாயிருந்தனர். "எண்ணூறு ரூபா மட்டும் வாங்கத் தெரியுது , வேல பாக்கறதுன்னா மட்டும் சலிப்பு." உள்ளுக்குள் முனங்கிக் கொண்டான். குளித்துவிட்டு வெளியே வந்தவனோ, ஈரத்தோடு குப்பையை மிதித்துக் கொண்டே உடைமாற்றச் சென்றான்.
"ஏய்தம்பி, கண்ணு தெரியலயா உனக்கு, இப்பதானே கூட்டிவெச்சிருக்கேன், அதுல போய் ஈரக்கால வெக்கிறியாப்பா?"
"ஆயா",
"என்னப்பா ?"
"இல்ல நாங்க இந்த வீட்டக் காலி பண்ணிட்டு வேற வீடு போலாம்னு இருக்கோம்."
"பக்கத்திலதான், ரெண்டு தெரு தள்ளி கொஞ்சம் அந்த வீட்டுக்குப் போயி சுத்தம் பண்ணிக் குடுத்தீங்கன்னா நல்லாருக்கும்".
"அங்க யாருப்பா இருக்கறது ? பேமிலியா ?"
"இல்ல ஆயா , எங்கள மாதிரி பேச்சுலர் பசங்கதான். அவனுங்க வேற ஊருக்குப் போறாங்களாம், அதான் காலி பண்றாங்க கொஞ்சம் அங்க போயி வீட்டக் கூட்டி பெருக்கி, கழுவி விட்டீங்கன்னா நல்லாருக்கும், அப்றம் தொடர்ந்து அங்கயே தெனம் வந்துருங்க."
"சரி தம்பி" என்றவள் அனைத்துக் குப்பைகளையும் அள்ளி பிளாஸ்டிக் கவரில் உள்ளே அமுக்கி வைத்துவிட்டு , கைப்பிடி ரெண்டயும் ஒண்ணா சேத்து முடிச்சுப் போட்டு தூக்க வசதியாக வைத்துவிட்டுச் சென்றாள்.
பிறகு சாயங்காலம் வந்தவளிடம் கேட்டான்.
 "என்ன ஆயா, புதுவீடு கழுவிவிட்டீங்களா ?
"இல்ல தம்பி, அந்தப் பசங்க இன்னிக்குதான் காலி பண்றாங்களாம், அவங்க போகட்டும், அப்பால கழுவிவிடறேன்."
"இல்ல, ஏன் சொல்றேன்னா இப்பவே கழுவி விட்டீங்கன்னா காலைல வரை காஞ்சிரும், அப்பறம் நாங்க போறதுக்கு வசதியாயிருக்கும்ன்னுதான்."
"உங்களுக்குப் புரியல தம்பி ,யாரும் வீடுகாலி பண்ணவுடனே கழுவிவிடக் கூடாது. அந்தப் பசங்க நாலு எடம் போயி வாழ வேண்டியவங்க, அதனாலதான் இன்னிக்குப் பொழுது கழியட்டும். நாளைக்கி காத்தால போயி உனக்குக் கழுவி ரெடியா வெச்சிருக்கேன்"
"ஏன் காலைல ?"
"இல்லப்பா, எழவு விழுந்த வீட்லதான் எல்லாம் தூக்கிட்டுப் போனவுடனே கழுவிவிடுவாங்க , அத சொல்லவேணாம்னு பாத்தா , ஐய வாயக் கிண்ட்றியேப்பா ?"

"பேங்ளூர், பேங்ளூர்" சார் பேங்ளூரா சார்
 நல்ல ஏ.சி.வண்டிசார், காலைல அஞ்சுமணிக்கிக் கொண்டு போயி எறக்கி விட்றுவாங்க சார் , டிக்கெட் வேணுமா சார்?" கூவிக்கூவி அழைத்துக் கொண்டிருந்தான் .சென்ட்ரல் ஸ்டேஷன் எதிர்ப்புறம் வரிசையாக ட்ராவல் ஏஜென்சிகள். ப்ளாட்பாரத்தில் நின்றுகொண்டு தோள்பையோடு போவோர் வருவோரையெல்லாம் கையைப் பிடித்து இழுக்காத குறையாகக் கூவிக் கொண்டிருந்தான்.
"எங்க சார். இப்பெல்லாம் நேர வந்து டிக்கெட் வாங்கறாங்க எல்லாம் கம்ப்யூட்டர்லயே பண்ணிவிட்டிர்றாங்க சார் , நமக்கு போணி ஆவறதில்ல, ஏதோ கடைசி நேரத்தில கெளம்பறவங்க மட்டும் வந்து நிப்பாங்க.
"சார், இங்க, அதுலயும் எனக்குக் கெடிக்கிற ஷேர் கொஞ்சந்தான் , தினத்துக்கு ஒருவேள சோறு துண்ணவே பத்தாது."
"ஹைதராபாத் போணுமா சார் ?" பெரியவர் இவனை வலுக்கட்டாயமாகக் கையைப் பிடித்து விலக்கிவிட்டுச் சென்றார். "ஒரு சீட்டுக்குப் பத்தோ, இருபதோ கூட வர்றது கஷ்டம்தான் சார். சாயங்காலம் ஏழுமணிக்கு ஆரம்பிச்சா ஒம்போது, ஒம்போதர வரைக்கும்தான் சார் தொழிலு., அப்பால எல்லாவண்டியும் நெறஞ்சிடும் , மூடிட்டுப் போக வேண்டியதுதான்".
 "க்யா பையா, அப்னா டிக்கிட் பக்கிநஹி ஹுயி?"
"இல்ல சார் சீட் நம்பர் ஒண்ணு ரெண்டு போட்டு வெச்சிருந்தேன் ,கடைசி நிமிஷத்துல ட்ராப் ஆயிடுச்சி சார், உங்கிட்ட அன்ரிசர்வ் டிக்கெட் இருக்கு, கோச்ல ஏறி ஒக்காந்துக்குங்க ,அந்த ரெண்டு சீட்டும் காலியாத்தான் இருக்கு, டி.டி.ஆருக்குக் கொஞ்சம் வெட்டினீன்னா உனுக்கே கன்ஃப்ர்ம் பண்ணிக் கொடுத்துடுவாரு, வழக்கமா வர்ற நம்ம டி.டி.ஆர். இன்னிக்கு லீவு போட்டார், அதான் டிக்கெட் கரெக்ட் பண்ண முடியல. கமிஷன் துட்டு எனக்கு வேணாம், செய்யாத வேலக்கி துட்டு வாங்கமாட்டேன்."
"பேசிக் கொண்டே இருந்தவனை அவனது சகா வந்து இடித்தான்.
"ஏண்டா என்ன ஆச்சு?"
"அவன் அங்கயே கெடக்கறாம்ப்பா, சாப்ட்டு நாலுநாள் ஆவுதுன்னு சைகைலயே சொல்றான். உடம்பு எங்கயோ நல்லா அடிவாங்கினமாதிரி கெடக்குது, வாயிலருந்து ஒரு வார்த்த வரமாட்டேங்குது, பாத்தாலே பாவமா இருக்குடா." 
 "என்னா பண்றது. நாலு காசு இன்னிக்குப் பாத்தா ஏதுனா வாங்கிக் கொடுத்து டாக்டராண்ட அழச்சிக்கிட்டு போகலாம் , வருமானம் இன்னிக்கு டல்லாத்தான் இருக்கு,ம்என்ன செய்ய?"
"கோயம்பத்தூர் மூணு டிக்கெட் இருக்குமாப்பா?"
  "இருக்குதுசார், ஆனா வண்டி இங்கருந்து இல்ல, டிக்கெட் போட்றேன், நம்ம பிக்கப் வண்டி வரும், அதுல ஏறி கோயம்பேடு போய்ட்டீங்கன்னா , அங்கருந்து கோயம்புத்தூர் பஸ், போறீங்களா சார் ?"
"அதெல்லாம் சரி, பஸ் எப்டி வசதியா இருக்குமா ?
"நெஜம் சொல்றேன் சார் , வோல்வோல சீட் காலி இல்ல. இந்த வண்டி சுமாராத்தான் இருக்கும் , ட்டூப்ளஸ் ஒன்,.சி.இருக்கு சார் வண்டில, உங்கிட்ட பொய் சொல்லி அனுப்பிவிட்டுட்டு என்னால நிம்மதியா தூங்க முடியாது சார், தொழில் தர்மம் வேணும் சார், அதான், வேணும்னா சொல்லு சார், பிக்கப் வண்டி பத்து நிமிசத்துல வந்துரும், போட்றவா ?" அவர் ஒத்துக்கொண்டார்.
"ஆச்சு, இன்னிக்கு ஏதோ மூணு டிக்கெட், கொஞ்சமாவது காசு பாக்கலாம். பாவம், அந்தப் பையன், கடய மூட்னவொடனே போகணும்."
 "என்னாச்சு , யாரு அந்தப் பையன் ?"
"தெர்லசார் யாருன்னே, எங்கிருந்தோ வந்தான், கைல ஒரு பேக் கூட இல்ல,எவனோ கம்மினாட்டி பேக்க அடிச்சதோட ஆளயும் அடிச்சுப் போட்டுட்டு ஓடிட்டான் போலருக்கு. இந்தப் பையனால நடக்கவே முடியல, நாங்க தங்கற எடத்துல படுக்க வெச்சிருக்கோம் சார், ரெண்டு நாளா கெடக்கான் சார். ஒழச்சு திங்க வக்கில்லாம கண்டவனயும் அடிச்சு, ஒதச்சு, சுளுவாத் துண்ணனும்ங்ற கூட்டம் இன்னும் இருக்கு சார் இங்க.என்னவோ பேர் சொன்னான் சார், வாய் கொளர்றதால ஒண்ணும் புரியல, பாவம், அடிபலமா விழுந்திருக்கும் போல, படுத்தே கெடக்கான் சார்.அதான் கடய மூட்னவுடனே போகலாம்னு இருக்கேன்." 


.