Monday, November 28, 2011

மர்லின் மன்றோவின் ஸ்கர்ட்



எங்கும் பறக்கும் பட்டாம்பூச்சியின் மாயாஜால  வர்ணங்கள்
பச்சோந்தியின் உடல் வரை நீள்கிறது.

ஆழ்கடலில் இரை  தேடும் மீன்கள் வெளிவிடும் ஒளி
மின்மினிப்பூச்சியின்  வால் வரை எட்டுகிறது.

புலி அடித்துத்தின்ற காட்டுமானின்
இறைச்சியின் வாசம்  என் தட்டு வரை வீசுகிறது.

என்றும் என்  மனதில் ஊறிக்கொண்டிருக்கும்
என் மொழி இன்று  என் வாய் வரை எட்டியிருக்கிறது

எப்போதோ நின்றுவிட்ட  காற்றாலையின் விசிறிகள்
எனது சீழ்க்கை ஒலிவரும் வரை காத்திருக்கிறது.

எங்கோ சுற்றிக்கொண்டிருக்கும் கோள்கள்
எனது அடுத்த காதலியை நான் தேடுவது வரை காத்திருக்கிறது.

பூமியின் அடியாழத்தில் இருக்கும் பெட்ரோலின் வாசம்
நேற்று அடித்துப்போட்ட போராளியின் உடல் வரை அடிக்கிறது.

செறிவூட்டப்பட்ட அணு உலையின் நிணம்
எரிந்து கொண்டிருக்கும் எனது பிணம் வரை எட்டியிருக்கிறது.

மர்லின் மன்றோவின் ஸ்கர்ட்டின் விசிறலில்
எழும்பிய காற்று செல்ஃபோன் டவர் வரை அடிக்கிறது.


2 comments:

  1. தொடக்கம் முதல் முடிவு வரை
    கவிதை சிறக்குது...

    ReplyDelete
  2. தொடர்ந்து வரும் கவிதை வீதி சௌந்தருக்கு
    நன்றி..!

    ReplyDelete