Thursday, January 16, 2020

காக்கைப்'பெண்டுலம்'

இதே போன்ற ஒரு பொங்கல் தினத்தில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் என நினைக்கிறேன். நண்பர் ஸ்ரீனி அழைத்தார். சமத்துவப் பொங்கல் இங்க நீலசந்திரா’வில மார்க்சிய தோழர் மாரி ,செளரிராஜன் எல்லாம் கொண்டாடுவாங்க அங்க போகலாம் என்றார். சரி என்று கிளம்பி விட்டேன். இடையில் ஸ்ரீனி அழைத்து இல்ல எனக்கு இன்னும் நேரம் ஆகும் என்றவர் வேலையை முடித்து விட்டு பின்னர் அழைக்கிறேன் என்றார். அதுவே மதியத்துக்கு மேலாகிவிட்டது. ஒருவழியாக தேடிச்சென்று பார்த்தால் அதெல்லாம் பத்து மணிக்கு முன்பேயே முடித்துவிட்டோமே என்றார். பொங்கல் வைத்து முடித்த அடுப்புகளில் இன்னமும் நெருப்பு தணியவில்லை. ஆங்காங்கே இலைகளும் மிஞ்சிய மஞ்சள் துண்டுகளும் சிதறிக்கிடந்தன. 

இப்ப என்ன பண்றது? சமத்துவப்பொங்கல் சாப்பிடலாம் என்ற ஆசையில் நேரம் அனைத்தையும் தின்றுவிட்டது. ஸ்ரீனிக்கு சரியான பசி, வா ராம் பக்கத்துல எதாவது கடை இருக்கிறதான்னு பார்க்கலாம் என்றார். பைக்கை எடுத்துக் கொண்டு சென்றோம். பொங்கல் தினம் எல்லா சாப்பாட்டுக் கடைகளும் மூடிக்கிடந்தன. ஹ்ம்.. எல்லாம் என் வேலையால வந்த வினையென நொந்து கொண்டவருக்கு ஒரு முஸ்லீம் ஓட்டல் மட்டுமே திறந்து பசியாற்றக் காத்துக் கொண்டிருந்தது.

ஓட்டலின் வெளியே க்ரில்லில் நான்கு நான்கு கோழிகள் தம் தலையை இழந்து வெற்றுடம்பாக தணலில் சுற்றிக்கொண்டிருந்தன. அப்படி நான்கு வரிசைகளில் மோட்டார் வைத்து சுழல விட்டதைப்பார்த்துக்கொண்டு நின்றேன். என்ன ராம் உள்ள போய் சாப்டலமா ? என்றவரிடன் ஏங்க , பொங்கலும் அதுவுமா இப்படியா என்றவனிடம் பாருங்க எனக்கு செமப்பசி எதாவது உள்ள இறங்கினாத்தான் நடக்கவே முடியும் போலருக்கு என்றார். சரி வேறு வழியில்லை என்று உள்ளே போய் சரிக்கட்டு கட்டிவிட்டு வெளியில் கிடந்த பெஞ்சில் அமர்ந்து ஆசுவாசப் படுத்திக்கொள்ள அமர்ந்தோம்.

அப்போது தான் பார்த்தேன். சாலையின் எதிர்புறத்தில் ஒரு அடர்த்தியான மரங்களடர்ந்த காம்ப்பெளண்டில் ஒரு மரத்தில் இருந்து ஒரு காக்கை தலைகீழாக தொங்கிக்கொண்டு அலைந்து கொண்டிருந்தது. யாரோ விட்ட பட்டம் அறுந்து அதன் நூலில் கால்விரல்கள், நகங்கள் சிக்கிக்கொண்டு விடுவிக்க இயலாமல் அலைகிறது. பார்த்தால் ஒரு பெரிய கடிகாரத்தின் பெண்டுலம் போல ஒரு ஐம்பது மீட்டர் ஆரத்தில் அலைந்தது. இருப்பினும் விடா முயற்சி எப்படியேனும் அந்த நூலை அறுத்துவிட்டு பறந்து விட மாட்டோமா என இறக்கைகளை படபடவென அடித்துக்கொண்டு . பட்டத்தின் கயிறு மேலுள்ள மரக்கிளையில் வலுவாக சிக்கிக் கொண்டதில் அங்கிருந்து தொங்கும் பெண்டுலமாக காக்கை மாட்டிக்கொண்டு அலைந்து கொண்டிருந்தது.

மேலே இரண்டு மூன்று காக்கைகள் அமர்ந்து கொண்டு என்ன செய்வது என வழி தெரியாமல் அலையும் நண்பனை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டு கரையாது கல்லென சமைந்து போயிருந்தன. ஸ்ரீனி அங்க பாருங்களேன் என்றவனை , அட ஆமா காக்கா ,போய் மாட்டிக்கிச்சு போலயே என்றவரை அழைத்துக் கொண்டு சாலையைக்கடந்து அந்த காம்ப்பெளண்டு சுவர் அருகே சென்றேன். மேலே ஏறி உள்ளே செல்லலாம் என்றால் மதில் சுவரில் முழுக்க கண்ணாடிச் சில்லுகளைக் கொண்டு வேலி போல் அமைத்திருந்தனர். கால் வைத்தால் குருதி கொட்டுவது உறுதி. மேலே ஏறவும் முடியாது. பின்னர் எங்கனம் காக்கையை காப்பாற்றுவது என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது , வேண்ணா இந்த காம்ப்பெளண்டை சுற்றிப் பார்ப்போம் ஏதேனும் உள்ளே செல்ல வழியிருக்குமாவெனப் பார்க்கலாம் என ஸ்ரீனி அழைத்தார். நானும் சென்று பார்க்க நடந்தேன். 

கதவு இருந்தது ஆனால் பழங்காலப்பூட்டு ஒன்று வலுவாகப்போடப் பட்டிருந்தது. இதுக்கு சாவி தேட்றதுக்குள்ள காக்கா போய்ச்சேர்ந்துரும் ராம் என்றார். பின்னரும் நடந்து முன்னர் நின்று கொண்டிருந்த சாலைப் பக்கத்திலேயே வந்து நின்று கொண்டோம். நாங்கள் இருவரும் எதோ முயற்சி செய்கிறோம் என்றறிந்து , சாலையில் பைக்கை ஓட்டிச்சென்ற ஒரு இளைஞர் நின்று பார்த்து விட்டு அவரின் நண்பரை அழைத்தார். கொஞ்ச நேரம் கழிந்து அவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு இதுக்கு என்ன சார் பண்றது என கழிவிரக்கத்துடன் பைக்கை எடுத்து சென்றுவிட்டார். 

சாலையில் இரண்டு போலீஸ்காரர்கள் ரோந்து சென்றவர்கள் எங்களோடு நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு முயற்சியும் செய்யவில்லை. ஸ்ரீனி எதோ சொல்லிப்பார்த்தார், அவர்கள் அதற்கு எந்த வித இசைவும் தெரிவிக்கவில்லை. நாங்களிருவரும் பின்னர் போலீஸும் இருந்ததால் சாலையில் நடமாட்டத்தில் சுணக்கம் வந்து பலர் நிற்பதும் காக்கையைப் பார்ப்பதும் பின்னர் தமக்குள் எதோ பேசிக்கொண்டு கலைவதுமாக இருந்தனர். நாங்கள் சாப்பிட்ட ஓட்டல் முதலாளியும் எங்களுடன் வந்து சேர்ந்துகொண்டார். இது காலைலருந்து இப்டி அலையுது சார் பாவம் என்றார். இன்னமும் அவர் க்ரில்லில் பதினாறு கோழிகள் தணலில் சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றன. இங்கிருந்து பார்த்தாலே எனக்கு தெரிந்தது. 

போலீஸ்காரர்கள் அங்கிருந்து நழுவிவிடத் தலைப்பட்டனர். தெளிவாகவே தெரிந்தது. என்னாலியன்ற முயற்சியாக ப்ளூ க்ராஸின் நம்பர்களை கூகிளில் தேடிக்கொண்டிருந்தேன். ஒரு நம்பரும் சிக்கவில்லை. மேலும் அன்று விடுமுறை நாளென்பதால் ஒரு நம்பரிலும் யாரும் பதில் சொல்வாரும் இல்லை. ரிங் போய்க் கொண்டே தானிருந்தது. மாலையாகிவிட்டது. வெளிச்சம் குறையத்தொடங்கி விட்டது. காக்கை இன்னமும் தமது பெண்டுல ஆட்டத்தை விட்டதாகத் தெரிய வில்லை. இத்தனை வலுவாகவா இருக்கும் அந்தக்கயிறு. இங்கிருந்து பார்த்தால் எந்தக்கயிறும் தெரியவில்லை. இருப்பினும் காக்கை சுதந்திரமாக பறக்கத்தான் முடியவில்லை. 

அப்போது தான் அந்த பெஸ்காம் (பெங்களூர் மின்வாரியக்கழகம்) மாருதி வேன் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. வண்டியின் மேல் ஏணியும் பின்னர் வடக்கயிறும் இருப்பதை தூரத்திலேயே கவனித்துவிட்டேன், மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி. ஸ்ரீனி வண்டி வருது பாருங்க என்றேன். வந்து இறங்கியவர்கள் போலீஸ்காரங்கதான் சொன்னாங்க இங்க காக்கா மாட்டிக்கிட்டு இருக்கிறதா என்றவர்கள் எங்களின் பதிலை எதிர்பாராமல் ஏணியை மதில் மேல் சாய்த்து விட்டு, கொண்டு வந்து சாக்கை மெதுவாக இட்டு மதிற்சுவரில் நடந்து அருகிலிருந்த மரத்தின் மீது ஏறிவிட்டனர். 

மேலிருந்த காக்கைகள் சப்தமிட்டன. மெதுவே ஒவ்வொரு மரமாகத் தாவி ஒருவாறு அந்தக்காக்கை மாட்டிக் கொண்டிருந்த கிளையிற்சென்று அந்த மந்திரக்கயிற்றை அறுத்துவிட்டார். என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. சரேலேனப் பறந்த காக்கை தடுமாறி உள்ளேயே விழுந்தது. காலை முதல் மாலை வரை பெண்டுலம் ஆடியதில் களைத்துப் போயிருக்கும், பின்னர் ஒரு விசிறலில் பறந்து மேலெழும்பியது , அருகிலிருந்த நட்புக் காக்கைகளும் ஒரு சேரப்பறந்தன.

அந்தச்சாலையையே அந்த மகிழ்வுத்தருணம் ஒட்டிக் கொண்டது போலும். எதோ தாமே விடுபட்டு விட்டதைப்போல கைதட்டி கொண்டாடினர். நானும் தான். அப்போது தான் அந்த கடைக்காரர் காலைலருந்து எல்லாரும் பார்க்கவும் செல்வதுமாக இருந்தனர்,ஆனால் யாருக்கும் இப்படி உதவணும்னு தோணலையே என்றார்., நானும் இதுபோல ஒரு மந்திரக்கயிறால் கட்டப்பட்டுத் தானிருக்கிறேன், என்னை விடுவிப்பது யார் என....ஸ்ரீனியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன் .

No comments:

Post a Comment