Wednesday, October 25, 2017

பிறக்கும்போதே கிழவன்




'யாவரும் பதிப்பகம்' ஜீவகரிகாலன் பகிர்ந்த 'போர்ஹேஸ் எழுத்துகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு வெளியீடு' காணொலிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். போர்ஹேஸ்/ இடாலொ கால்வினோ/சார்த்தர் என்ற பெயர்கள் எனக்கு அறிமுகமானது சில ஆண்டுகள் முன்பாகத்தான். பிரம்மராஜனின் வேர்ட்ப்ரஸ் வலைத்தளத்தில் ஒரு சிலமுறைகள் வாசித்திருக்கிறேன். காணொலியில் குணா, பின்னர் பாலா மற்றும் ஆசிரியர் பிரம்மராஜனும் பேசியவற்றை பார்த்தேன். என்னைபொருத்தவரையில் பேசியவர்களில் கொஞ்சம் ஆதன்டிக்காக பேசியது பாலா மட்டுந்தான் எனத்தோன்றியது. பாலா அதிலிருக்கும் கதைகளைப்பற்றி அதிகம் பேசவில்லை, இருப்பினும் பொதுவாக போர்ஹேஸ் எப்படிப்பட்டவர், எத்தகைய மானுடம் அவர், ஆன்ட்டி மார்டன் (anti modern),எடெர்னிட்டி,இம்மார்ட்டலிட்டி, டைம் என்பன பற்றியே அதிகம் பேசுகின்றன போர்ஹேஸின் எழுத்துகள்.மேலும் பிறக்கும்போதே கிழவனாகப் பிறந்தவர் ;), அவரின்  குணாதிசயங்கள் என்ன என்பனவற்றை விவரித்தார். அவரின் எழுத்துகள் மூலமே இத்தனையையும் அறிய முடிந்திருக்கிறது. சிற்சில பேட்டிகளையும் மேற்கோள் காட்டி பேசினார். மொழிபெயர்ப்பு எங்கனம் ஆரம்பித்தது என்ற விளக்கம் எனக்கு புதிது. இப்படியெல்லாம் சில நிகழ்ச்சிகள் வாயிலாகத்தான்  இப்படிப்பட்ட விஷயங்கள் தெரியவருகின்றன .

குணா தொகுப்பை முழுதுமாக வாசிக்கவில்லை என்பது அவர் பேசிய விதத்திலேயே தெரிந்தது. 'வந்து வந்து என நிறைய வந்(த)து அவர் பேச்சில். இருப்பினும்  போர்ஹேஸ் அவர்தம் சிறு வயதில் வசித்த வீட்டிற்கு சென்றிருந்தேன் என்றார்.தமிழனாகப்பிறந்த அனைவருக்கும் ஒருமுறையேனும் பாரதி வசித்த இல்லத்துக்கு செல்லவேணும் என்ற அவா. அதிலென்ன இருக்கிறது. இருப்பினும் இடம்,காலம், பொருள் எல்லாமே முக்கியமாகத்தான் இருக்கிறது அவன் எழுத்தாளனாயினும் கூட!

நானும் தான் ப்ராக்(செக்கோஸ்லொவேக்கியா) நகரில் சுற்றித்திரிந்த காலங்கள் உண்டு. இருந்தாலும் கஃப்க்கா வசித்த வீட்டைப்பார்க்க ஒருமுறை கூடப்போகவேயில்லை. பல முறை சென்றுவந்த ஜூவிஷ் சினகாக் (கல்லறை)க்குப்பின்னர் உள்ள தெருவில் தான் வசித்திருக்கிறார் என்பது விக்கி மூலமாகத்தெரிய வந்தது. ஏன் போய்ப்பார்க்கவில்லை,,, அப்பல்லாம் எனக்கு எழுத்து/இலக்கியம்/கவிதைகள் மற்றும் இன்னபிற வஸ்துக்களில் பரிச்சயமில்லை. நிறைய மேற்கத்திய இசைக்கூடங்களுக்கு கால்கள் வலிக்க வலிக்க நடந்தே சென்று ரசித்திருக்கிறேன். ஓவியக்கண்காட்சிகளில் பல மணி நேரம் செலவழித்து இருக்கிறேன். புகழ்பெற்ற சார்லஸ் பிரிட்ஜில் தெருப்பாடகர்களின் இசையை கைப்பிடிச்சுவரில் சாய்ந்து நின்றபடியே ரசித்திருக்கிறேன்.

கடைசியாக பேசிய பிரம்மராஜன்,பெரும்பாலும் சம காலத்தில் வசிக்கும் இன்னொரு தலையணை எழுத்தாளரைப்பற்றியே பேசி போரடித்துவிட்டார். ஆல மரத்துக்கும் உச்சி மரத்துக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் எழுதி வைத்திருக்கிறார் என்றார். கல்யாணவீட்டு  மேடைகளில் அரசியல் பேசியது போல எனக்கு தோன்றியது.

பாலா எழுதிய 'துரதிர்ஷ்டம்பிடித்த கப்பலின் கதை'யை ஒரே வாரத்தில் ஷிஃட் போட்டு வாசித்து முடித்தேன். அதே கெதியில் விமர்சனமும் எழுதிஅனுப்பினேன் கரிகாலனுக்கு,கணையாழியில் வெளிவந்தது . இப்போது இந்த புத்தகத்தையும் வாசித்தே ஆகவேணும் என்ற ஆவல் காணொலிகள் மூலம் வந்துவிட்டது. எத்தனை காலம் பிடிக்கும் புரிந்து கொள்ள...பார்க்கலாம். இணையவழி ஆணை கொடுக்கலாமா என்ற யோசனையில்..இப்போது :) 


.

No comments:

Post a Comment