Wednesday, April 25, 2012

நான் இப்போது கொல்லப்படப்போகிறேன்







நான் இப்போது கொல்லப்படப்போகிறேன்
என்று அவன் என்னிடம் கூறினான்

துப்பாக்கி முனையை உற்று நோக்கிக்கொண்டே
கடைசியாக கொஞ்சம் இனிப்பு வேண்டும்
என அவனிடம் யாசித்தேன்

எவ்வளவோ முயற்சி செய்தும் அவை எதையும்
செயல்படுத்த இயலாமல் வகையாக மாட்டிக்கொண்டோமே என்று
பிறர் அறியாவண்ணம் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

என் காதலியின் புகைப்படத்தை அருகில்
வைத்துக்கொள்ள அனுமதி கேட்டேன்.

கடைசியாகச் சென்று வந்த வெளியூரின் அடையாளங்களை
மீள நினைவு படுத்திப்பார்த்தேன்.
அல்லது முன்னெப்போதோ தாவி வந்து அமர்ந்த உன் ஆட்டுக்குட்டியின்
அரவணைப்பை ஞாபகப்படுத்திக்கொண்டேன்.

நண்பர்களுடன் கழித்த நாட்களை எண்ணிப்பார்த்துக்கொள்ள
கால அவகாசம் கேட்டுப்பார்த்தேன்.

அல்லது நான் இல்லாது போகும் இந்த உலகை இப்போதே காண
ஏதேனும் வழி உள்ளதா என எனக்குள் யோசித்துக்கொண்டேன்.

என்னைத்தவறுதலாக அழைத்து வந்துவிட்டீர்கள் , அது நான் அல்ல
என்று கடைசி நேர யாசிப்புகளைத்தொடங்க எத்தனித்தேன்.

எப்படியாகிலும் தப்பிவிடவேண்டும் என்று பதைபதைத்து
அடுக்கடுக்காக பள்ளி ஆசிரியரிடம் வழக்கமாக கூறும்
பொய்க்காரணங்களை அடுக்க முயற்சி செய்தாலென்ன என்று
உள்ளுக்குள் குமைந்துகொண்டேன்

கணநேரத்தில் புத்தனாகி மரணதண்டனை இவ்வுலகில் 
இல்லாதொழிக்கப்படவேண்டும் என்று கூச்சலிடலாம் என்று எண்ணினேன்

எந்தச் சூழ்நிலையிலிருப்பினும் தமது அகங்கார மனப்பாங்குடன்
சுடவந்தவனின் காதலியை இன்று மட்டும் சுவைக்க வேண்டும் என்று
அவனிடமே எள்ளல் செய்ய நினைத்து எனக்குள் சிரித்துக்கொண்டேன்.
இத்தனை அகக்கேள்விகளும் கேட்டு அதன் பதிலை
எதிர்பார்த்துக்காத்திருப்பதை விட ஒரு தோட்டாவில் சாய்த்துவிடு
என்று அவனுக்கே கட்டளை பிறப்பித்தாலென்ன ?

என் கூட வந்தவர்களையெல்லாம் ஏற்கனவே சாய்த்துவிட்டாயா
என்று கேட்டு எல்லோரும் போய்விட்டனர், நிம்மதியென அகமகிழலாமா
என்று கூட நினைத்துக்கொண்டேன்

கடைசி நேரத்தப்பித்தலுக்கென முயற்சி செய்கிறேன் பேர்வழி
என்று கருதி அவனிடமுள்ள துப்பாக்கியைப்பாய்ந்து பிடுங்க
முயற்சி செய்தாலென்ன ?

அல்லது எல்லாம் அறிந்தவன் போல இந்தத்துப்பாக்கியால்
சுடவேண்டுமெனில் இத்தனை தொலைவிலிருந்து
மட்டுமே சுடவேண்டும் என தொழில்நுட்பங்களைக்கூறி
அவனைத்திசை திருப்ப முற்பட எத்தனித்தேன்

அளவுக்கதிகமாகப் பேச்சுக்கொடுத்து அவன் கவனத்தைக் கலைத்து
இந்த உயிர்ப்பலியிலிருந்து தப்பித்துக்கொள்ள வழிகளைத்தேட முயற்சித்தேன்.

அல்லது என்னைக்கொன்றுவிட்டு எங்கனம் நீ தப்பிப்பாய் என்று
கேட்டு அவனையே கொஞ்சம் நிலைகுலையச்செய்ய நினைத்தேன்.

இந்தக்கொலையை ஆவணப்படுத்த ஏதேனும் முயற்சிகள் நடக்கின்றனவா
என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றேன்

என்னைக்கொன்றுவிட்டு இவ்வுலகில் நிம்மதியாக வாழமுடியுமா
என்று வழக்கமான வசனங்களை அவன்முன்வைக்கலாம்
என எண்ணினேன்

வெறுமனே கொல்லப்போகிறேன் கொல்லப்போகிறேன்
என்று போக்குக்காட்டி என்னைப்பயமுறுத்திவிட்டு என்னில்
அந்த மரணபயத்தை கண்கூடாகப்பார்த்த மகிழ்வில்
இனியும் இவனால் தமக்கு எந்த ஆபத்தும் இல்லை எனக்கருதி
அப்படியே விட்டுவிட்டுச்சென்றுவிட மாட்டானா என்று
கழிவிரக்கத்தில் அழத்தொடங்கினேன்

நாளைய செய்தித்தாள்களில் எனது உயிரற்ற உடலைக்கண்டு
பிறர் தம்மீது அனுதாபப்படுவர் எண்ணி உள்ளுக்குள் மாய்ந்துபோனேன்
 
மேற்கூறிய எதுவுமின்றி
நமக்கு விதித்தது இவ்வளவுதான் என்று
எனக்குள் இறுகிப்போய்
அமைதியாக மரணத்தை எதிர்கொள்ளத்தயாரானேன்
கதவு சார்த்தப்பட்டது
துப்பாக்கியை அவன் உயர்த்திப்பிடித்தான்.



9 comments:

  1. மரண பயம் என்னையும் தொற்றிக்கொண்டது .

    ReplyDelete
  2. பயத்தால் நான் நடுங்கிக்கொண்டிருக்கிறேன்.. :-)

    ReplyDelete
  3. பயந்துட்டேன்...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. பயந்தும் வாழ்த்திய ரெவெரிக்கு நன்றி..

    ReplyDelete
  5. சோமா

    சாகப்போகிற தருணத்தில் சுட வந்தவனுக்கு இலஞ்சமாக என்ன தரலாமென யோசிப்பதை விடுத்து கண்டதை யோசிப்பதில் பளிச்சிடுகிறீர்கள்..நீங்கள் கவிஞர்தானென்று...நல்ல நகைச்சுவைக் கவிதை..

    ReplyDelete
  6. இப்படியான மரணங்கள் கைகோர்த்துத் தோள்சாய்ந்து பயந்து பிரிந்த தருணங்கள் ஞாபகம் வருகிறது !

    ReplyDelete
  7. விலக்கவும் விளக்கவும் இயலாத தருணங்கள் ஹேமா..

    ReplyDelete
  8. எப்படியாகிலும் தப்பிவிடவேண்டும்

    ReplyDelete
  9. அது அத்தனை சுலபமில்லை @ ராஜராஜேஸ்வரி :-)

    ReplyDelete