Monday, November 15, 2010

காதலனின் எதிர்பார்ப்புகள்

திண்ணை இணைய இதழில் [ ஞாயிறு நவம்பர்'14 ] வெளியான எனது கவிதை.

காதலனின்
எதிர்பார்ப்புகள்
அதிகம் ஒன்றுமில்லை..

என்னை
மட்டும் நேசிப்பாயா ?

என்னை
அதிகம் காக்கவைக்காமலிருப்பாயா ?

என்னை நோக்கி
மையமாக சிரிக்காமலிருப்பாயா ?

என்னைப்பற்றி
சந்தேகப்படாமல் இருப்பாயா ?

நான் பிற பெண்களுடன்
சிரித்துப்பேசுவதை சாதாரணமாக
எடுத்துக்கொள்வாயா ?

நான் கொடுத்த
பரிசுப்பொருட்களை பத்திரமாக வைத்திருப்பாயா ?

சின்னஞ்சிறு ஊடல்களை
பெரிதாக்காமல் இருப்பாயா ?

என்னுடன் பட்டும் படாமல்
இருப்பதை தவிர்ப்பாயா ?

என்னால் இயலாதவற்றை
என்னில் சுட்டிக்காட்டாமலிருப்பாயா ?

என் காதலை
காமத்திற்கு மட்டுமென நினைக்காமலிருப்பாயா ?

என் சங்கேதக்குறியீடுகளை
சரிவரப் புரிந்து கொள்வாயா ?

எனது ரகசியங்களை
உன்னில் பாதுகாப்பாயா ?

என் தன்மானத்தை
சீண்டாமலிருப்பாயா ?

எனது நடவடிக்கைகளுக்கு
வேறு அர்த்தம் கற்பித்துக்கொள்ளாமலிருப்பாயா ?

கடைசியாக ஒன்று
என் அப்பா பார்த்த
மாப்பிள்ளையை கல்யாணம்
செய்து கொள்ளப்போகிறேன்
என்று என்னிடம்
சொல்லாமலிருப்பாயா..?!


.

No comments:

Post a Comment