Friday, November 29, 2019

#விலங்குகள்

வீட்டிற்குள் பாம்பு நுழைந்தபோது எதுவும் செய்யத் தோணவில்லை. எங்கே நம்மைக் கொத்தி விடுமோ இல்லை தீண்டி செயலிழக்கச் செய்து விடுமோ என்ற அச்சம் தான் பரவிக் கிடந்ததே தவிர அந்தச் சூழலை எங்கனம் கையாள்வது என்ற ஒரு உத்தி போலும் தோணவில்லை. எப்போதாவது இயக்கும் புகைபோக்கி விசிறியில் குட்டி போட்டு வைத்திருக்கும் எலிகளைப் பிடித்து தின்ன வந்து, தவறுதலாக வீட்டின் பரணில் அமர்ந்து கொண்டது. கீழிருந்த ஒரு பங்காலி கிராமத்து காவலாளி சொன்னது இன்னமும் என் நினைவில் நிற்கிறது. நீங்க அந்த பாம்புக்கு தீங்கு நினைக்காத வரை, அது மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடாத வரை அது உம்மை ஒன்றும் செய்யாது. அதன் நோக்கம் வேறு என்று. பிறகு அவரின் துணையுடனேயே யாருக்கும் எந்த கெடுதலுமின்றி வெளியே அனுப்பி வைக்கப் பட்டது. எலி வராமப் பாத்துக்குங்க , பாம்பு விரட்டுவதற்கு வேலையே இருக்காது என்றார்.

அதே போல மழைக்காலப் பூனை ஒன்று ஏகப்பட்ட குட்டிகளை வீட்டின் உள்ளடங்கிய உப்பரிகையில் ஈன்று வைத்து விட்டு ஒவ்வொரு முறை கதவைத் திறக்கும் போதும், எங்கே இவன் தமது குட்டிகளுக்கு எந்த ஆபத்தையும் செய்து விடுவானோ என்ற பயம் அதன் கண்ணில் தெரிவதை பல முறை பார்த்திருக்கிறேன். கொஞ்சம் நாட்கள் இங்கனம் பழகிப் போனதும் தம் நான்கு கால்களில் வலது முன்னங்காலை மட்டும் திருப்பிப் போட்ட ’ட’ போல மடித்து வைத்துக் கொண்டு உள்ளடங்கிய கண்களோடு என்னிடம் இறைஞ்சி நிற்கும். பிறகு தான் புரிந்தது ‘ நான் உன்னை என் நண்பனாக கருதுகிறேன், தாக்காதே’ என்று கூறுவதாக. அதன் பிறகு குட்டிகளை நான் கை கொண்டு தூக்குவதை ஒரு போதும் தடுத்ததில்லை.

இதெல்லாம் வீட்டுக்குள்ள வர்றது அபசகுனம் தம்பி. அதுக்கு ஒரு எலெக்ட்ரானிக் ரெப்பெல்லண்ட் ஒன்று இருக்கிறது அதை வாங்கி பிளக்கில் செருகி வைங்க, அதிலருந்து வர்ற அல்ட்ராஸொனிக் வேவ்ஸ்’னால ஒரு பொட்டு பூச்சி வராது என்றார் மேல்வீட்டு அங்கிள். அதிலிருந்து அவரிடம் பேசுவதையே விட்டு விட்டேன். 

விலங்குகள் நம்மிடம் அவர்களின் மொழியில் தொடர்பு கொள்ளத்தான் செய்கின்றன. நமக்குத் தான் புரிவதில்லை. இயற்கையை விட்டு வெகு தூரம் சென்று விட்டதைப்போல உணர்கிறேன். #விலங்குகள்

No comments:

Post a Comment