Monday, July 23, 2018

செருப்பக்காரனும் இளம்பெண்ணின் ஆவியும்



பெங்களூர் வாசகசாலை தொடங்குவதற்கான அத்தனை ஆயத்தங்களையும் நானும்,ஸ்ரீனி, செந்தில் மற்றும் தயா,மகேஷ் உடன் விவாதித்து பின்னர் அந்தக்கூட்டங்கள் நடக்கும் போது சென்று கலந்து கொள்ளவியலாமல் போய்விட்டது அத்தனை வேலை தலைக்கு மேல்.ஒவ்வொருமுறை புகைப்படங்களும் ,கட்டுரைகளும் பகிரப்படும் போது ஆஹா இங்க இல்லாமற்போய்விட்டோமே என உணர்வு மேலோங்கும், நேற்று கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு சென்றே விட்டேன். பெங்களூர் தமிழ்ச்சங்கத்திற்கு. மூன்று மணிக்கே போய் அமர நினைத்தேன். நூலகம் திறக்கப்படவில்லை. எதிரே உள்ள அல்சூர் ஏரிக்கரையில் அமர்ந்து ‘உன்னதம் சிறப்பிதழை’ வாசித்துக்கொண்டிருந்தேன். இப்போது தான் நேரம் கிடைத்தது.

மணி நான்கானதும் மெல்ல ஏரிக்கரையிலிருந்து வெளிவந்து தமிழ்ச்சங்கத்துள் நுழைந்தேன். மேலே மூன்றாம் மாடியின் நூலகம் திறக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன, இரண்டொருவர் ஏற்கனவே வந்து விட்டிருந்தனர். பின்னர் செந்திலும் ஸ்ரீனியும் வந்து சேர்ந்தனர், ஒருங்கிணைப்பாளர் தாமு அனைவரையும் வரவேற்று பின் சுஜாதா நிகழ்ச்சிகளை துவங்கி வைத்தார். அறிமுகம் முடிந்த பின்னர் கதை பற்றிய விவாதம் தொடங்கியது. நேற்றைய தலைப்பில் மூன்று சிறுகதைகள் வாமணிகண்டனின் ஒன்று, பின்னர் லைலாவின் ஒரு கதை, பின்னர் அபிலாஷ் சந்திரனின் ஒரு கதை.விவாதித்த அனைவரும் அவைக்கூச்சமின்றி பேசினர், எனக்கு மகிழ்ச்சி. முன் பின் அறியதோர் முன்னில் இத்தனை விவாதப்பொருளை எடுத்துக்கொண்டு பேசுவது என்பது என்னைப்பொருத்தவரை கொஞ்சம் கடினமான விஷயந்தான். புது மாப்பிள்ளை ஹிந்து விநோதும்,மற்றும் நணபர் திருஞானம் திரு’வும் என் பின்னில் அமர்ந்து அமைதியாக விவாதங்களை கவனித்துக் கொண்டிருந்தனர். 



கதை எழுதிய ஆசிரியர் என்ன சொல்லவருகிறார் எதைக்குறிப்பிட்டு அதன் உள்நோக்கம் என்ன, அக்கதை வாசிப்பவனின் மனதை எங்கனம் பாதிக்கும் என்றெல்லாம் பல வித கோணங்களில் ஒன்றினை அலசுவது என்பது மிகச்சிக்கலான விஷயம். பேசுவோர் கதையை ஒன்றுக்குப்பலமுறை வாசித்து பொருளுணர்ந்து விட்டே மேடையேறினர் என்பது கண்கூடு. அலுவலகத்தில் கூட்டங்களில் பேசுவது என்பது எளிது ஏனெனில் அனைவரும் திரட்டப்பட்ட ஆட்களல்ல, ஒரே தொழில் நுட்பத்தில் தம்மை பிணைத்துக்கொண்டு சற்றேறக்குறைய ஒரே விதமான புரிதலோடு, சமவிகிதத்திலான அறிவோடும் அமர்ந்திருப்பர். (Targeted Audience)  இங்கோ அங்கனமில்லை. பலதரப்பட்ட பார்வையாளர்கள், என்னைப்போன்ற கொஞ்சமேனும் எழுதுபவர்கள், பிரபல எழுத்தாளர்கள் தீவிர வாசகர்கள் என பலவகை, அனைவரையும் ஒருங்கே அமரவைத்து ஒரு கதைப் பொருளை விவாதிப்பதென்பது கடினமான விடயம் தான்.மேடையிலிருந்து விவாதித்த மூன்று பேருமே தாம் உணர்ந்த விஷயங்களை வெகுவாகவே பேசி கைதட்டல் வாங்கினர். 

சிறிது நேரங்கழித்தே அபிலாஷ் சந்திரன் வருகை புரிந்தார். அவரை நான் நேரில் பார்ப்பது இதுவே முதன்முறை. அவரின் திருட்டுச்சாவி என் வலைப்பூ வாசிப்புப் பட்டியலில் ஆண்டுக்கணக்கில் பூக்களை கொண்டு வந்து கொண்டேயிருக்கும் அதன் வாயிலாக அவர் எனக்கு மிகவும் பரிச்சயமானவர். தமது சிறுகதையை விவாதப் பொருளாக்கியதில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. அக்கதை உருவான விதம் பற்றி பேசினார். ’வைக்கம் முகம்மது பஷீரின்’ ஒரு சிறுகதையை வாசித்ததாகவும் அதன் தாக்கத்தில் இந்த மர்மக்கதையை எழுதியதாகவும் கூறினார். பேய் வசிக்கும் வீட்டில் குடியேறும் ஒரு எழுத்தாள செருப்பக்காரனின் (இளைஞனின்) கதை. கிணற்றில் தன் கணவனாலேயே தள்ளிக் கொல்லப்பட்ட ஒரு இளம்பெண் பேயாக உலவுவதாக கதையின் போக்கு. இதை உணர்ந்து தம்மை ஒப்புக்கொடுத்து அதை விரட்ட எந்த முயற்சியும் எடுக்காது கூடவே வசிக்கவைக்கும் இளைஞனை அதற்கு பிடித்துப் போய்விடுகிறது. இப்படிப்பட்ட பேயுலவும் வீடு என்பதால் சல்லிசாக வாடகைக்கு கொடுக்கப்பட்டது என்பதை அறிந்து மலைக்கிறான் செருப்பக்காரன்.



ஒரு நாள் மழை அடித்துப்பெய்கிறது.வழக்கம்போல வீடு இருளில் மூழ்குகிறது. ஒரு சிறு மெழுகு திரியை ஏற்றிவைத்துவிட்டு ஏதேனும் உண்ண வாங்கி வர வெளியேறுகிறான் இளைஞன். அந்த நேரம் அவனின் அறைக்குள் புகும் அந்த இளம்பெண்ணின் பேய் அவன் எழுதி வைத்திருக்கும் கதைகளை வாசிக்கும் வண்ணம் அறை முழுக்க பரப்பி வைக்கிறது. திரும்பி வந்து பார்ப்பவனுக்கு அதிர்ச்சி. மெழுகு திரி இன்னமும் அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது. 

இந்தக்கதையை மையமாக வைத்து அவர் எழுதிய சிறுகதையை ஒரு இளம்பெண் கைகளை ஆட்டியும்,முகத்தில் பெரும் மகிழ்ச்சிப் பெருக்கோடும் விவாதித்தார் அபிலாஷ் அமைதியுடன் அமர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தார்.காத்துக்கிடந்த வயிற்றுக்கும் சிறிது தேநீர் வழங்கப்பட்டது கூடவே சில பிஸ்கோத்துகளும். கூட்டத்திலிருந்தும் பல கேள்விகள் கிளம்பின.

லைலாவின் சிறுகதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, உண்மையைச் சொல்லவேணுமென்றால் நான் விவாதத்திற்கென எடுத்துக்கொள்ளப்பட்ட  ஒரு சிறுகதையைக்கூட வாசிக்கவில்லை கூட்டத்திற்கு சென்று வெறுமனே அமர்ந்து கொண்டிருந்தேன். அக்கதை பாலியல் வன்புணர்வைப்பற்றின ஒரு பெண்ணின் பார்வையில் அமைந்த சிறுகதை. ஒவ்வொருவரும் தமக்கு முன்னாளில் நேர்ந்த வன்கொடுமையை பற்றி விவாதித்தனர். கீர்த்திகா என்னிடம் அவரின் மொபைலைக்கொடுத்து இப்ப வாசிங்க, வாசிச்சிட்டு போய் பேசுங்க என்றார், என்ன இது விளையாட்டு இப்ப இயலாது என்று மழுப்பி வைத்தேன். பெண்ணை போகப்பொருளாகவே பார்த்துப்பழகிய ஆண் வர்க்கத்தின் மன விகாரங்களை எடுத்துச்சொல்லி அதை அறவே களைய முற்படும் விவாதமாக அரங்கேறியது. பேருந்தில் பயணிக்க வேணுமெனில் ஒரு சிறிய ஊசியைக்கூடவே கொண்டு போகும் சிறுபெண்களின் உணர்வைப்பற்றி கீர்த்திகா பேசினார். முழுக்க நேரலை விவாதமாகவே கதை கதைக்கப்பட்டது.

ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் தம் கதை தம் முன்னால் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு  காரசாரமாக விவாதிக்கப்படும் போது உண்டாகும் மகிழ்ச்சி ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாயின் மனநிலை.

முடிவில் தாமு கூட்டங்களை நடத்த/ஒருங்கிணைக்க தன்னார்வப் பணியாளர்கள் வேணுமென வேண்டுகோள் விடுத்தார். கூட்டம் கலைந்தது.அடுத்த வாரத்திற்கென கதைத்தெரிவுகள் பற்றிய பேச்சோடு.



கலைய முற்பட்ட கூட்டத்தில் அபிலாஷிடன் பேசினேன். அவர் பெங்களூருக்கு வந்தது, பின்னர் அதன் குளுமையில் எழுதவியலாமற் போனது பற்றி பேசினேன். ‘வெம்மை’யில்லாததால் எழுத இயலவில்லை எனக்குறைப்பட்டுக்கொண்டிருந்தார் தமது முகநூற்பதிவில் முன்னாளில். இப்போது எப்படி எனக்கேட்டேன், இல்லை இந்தக்குளுமை இன்னமும் நேரங்கழித்தும் எழுத உதவுகிறது சென்னையில் எப்போதும் வியர்த்து களைத்துப்போகும் இங்கு அங்கனமில்லை. என்று மகிழ்வுடன் பேசினார். அப்ப இங்கேயே இருந்து விடுங்கள் என்றேன். சிரித்துக்கொண்டார். பின்னர் எனது செல்பேசி எண்ணை வாங்கிக் கொண்டார்.அவரின் கதையை கைகளை ஆட்டி ஆட்டி பேசிய இளம்பெண் , உங்க கல்லூரியில் கரெஸ்பாண்டென்ஸில் இந்தக்கோர்ஸ் இருக்குமா என்றவாறே அப்வரைப்பின்தொடர்ந்துகொண்டேயிருந்தார்.


இருப்பினும் கதைத்தெரிவுகள் இன்னமும் நேர்த்தியானதாக எடுத்துக்கொள்ளப்பட வேணும் என்பது எனது உணர்வாக இருந்தது. ஆழமான உட்பொருளுள்ள கதைகளை எடுத்து விவாதித்தால் இன்னமும் சிறக்கும் என்பது என் உணர்வு. பார்க்கலாம் இனி வரும் கூட்டங்களில் அது நிகழும் என்ற எதிர்பார்ப்புடன்….


1 comment: