இன்னிக்கு சனிக்கிழமை லீவூ :) அதனால ஹஸ்ரத் நிஜாமுத்தீன் போய்ட்டு வந்தேன்.அங்க இரண்டு அவுலியாக்களின்
( தேவதைகள்னு தமிழ்ல சொல்லலாம் ஏஞ்சல்ஸ்) சமாதி இருக்கிறது. டெல்லியில் இந்த இரு சூஃபி ஞானிகள் சமாதிகள் ஒன்றுக்கொன்று அருகிலேயே இருக்கின்றது. ஒரே காம்பவுண்டு. தர்காக்களுக்கு நம்மால் போக முடியும் அனுமதி உண்டு.( கீழக்கரை காலேஜில படிச்சவன்ப்பா :) ) இத்தனை பெரிய புகழ்பெற்ற ஞானிகளின் உறைவிடம் ஒரு சந்துக்குள் இருக்கிறது. நம்பவே முடியவில்லை. கொஞ்சம் தேடிப்பார்த்துவிட்டு பின்னர் விசாரித்து உள்ளே சென்றேன். பூ, போர்த்துவதற்கு ஒரு துண்டு,பின்னர் அவர்களுக்கேயுரித்தான அத்தர்,வாசனைப்பொருட்கள் மற்றும் ஊதுபத்தி எல்லாம் அர்ச்சனைத்தட்டு போல வாங்கிக்கொண்டு (இரண்டு) உள்ளே நுழைந்து நுழைந்து செல்லச்செல்ல இன்னமும் புறாக்கூண்டுகள் போல உள்ளே சென்று கொண்டேயிருக்கிறது. சட்டென நிறுத்தினார் ஒருவர். என்னவென்றேன் , தலையில் ஸ்கார்ப் இல்லையே முதலில் தலை முடியை மறைத்துக் கொள்ளுங்கள், கர்ச்சீப் கட்டிக்கொள்ளுங்க என்றார்.

கூட அழைத்து வந்த இஸ்லாமிய பெரியவர் எங்கருந்து வர்றீங்க என்ன பெயர் என்றெல்லாம் விசாரித்தார். அந்த ஞானிகளின் உறைவிடத்தில் பொறுப்புகளில் இருப்பவர் போல தெரிந்தது அவரின் உடல்மொழி. விபரங்கள் சொன்னேன். இங்கு வருபவர் தொண்ணூறு விழுக்காடு பிற மதத்தை சேர்ந்தவர்கள் தான் பாய் என்றார். தயங்காதீங்க, கொண்டு வந்த பொருட்களை சார்த்துங்க என்றார். எனக்கு அவ்வளவு பழக்கமில்லை. முன்னப்பின்ன இது போன்ற இடங்களுக்கு சென்றதில்லை. பின்னரும் பிறர் செய்வதைப் பார்த்து பார்த்து ஒன்றன்பின் ஒன்றாக செய்தேன். சிறிய கயிறு ஒன்று நாமெல்லாம் கைகளில் கட்டிக் கொள்வோமல்லவா , அது போல ஒன்று, அதை உறைவிடம் சுற்றியுள்ள மார்பிள் ஜாலிகளில் கட்டி வைத்திருக்கின்றனர். என்னையும் அதில் கட்டிவையுங்க என்றார். நீங்க என்ன நினைத்து கட்டுகிறீர்களோ அது உடனே நடக்கும். அவுலியாக்களின் ஆசி கிடைக்கும் என்றார். எனக்கோ இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. எனக்கு என் மேலேயே நம்பிக்கை கிடையாது :) சரி அவர் சொல்கிறாரே எனக்கட்டி வைத்தேன்.
துஆ (பிரார்த்தனை) முடிந்ததும் பின்னர் வெளியே வாருங்கள் எனக்கூறிவிட்டு அவர் வெளியே சென்று விட்டார். உள்ளேயே நின்று கொண்டிருந்தேன். பெண்கள் எல்லாம் வெளியில் அமர்ந்து எதோ ஓதிக்கொண்டிருந்தனர். அந்தச்சூழலே எனக்கு அன்னியமாயிருந்தது. இருப்பினும் எதோ ஒன்று எனை அங்கே நிறுத்தி வைத்திருந்தது.
அமீர் குஸ்ரோ ஒரு பெரிய சூஃபி கவி, அவரின் வாழ்க்கை வரலாறு நான் சிறுவனாக இருந்தபோது தூர்தர்ஷனில் இரவு ஒன்பது மணிக்கு ஒரு பெரிய மெகா சீரியலாகவே வந்தது.( நானும் ஒரு கவிஞன்தான்ப்பா :) ) பாரசீக மன்னன் நாதிர் ஷாவின் படையெடுப்பிலும் தாங்கி நிற்கிறது. இசையால் இறைவனை அடைவது 'கவ்வாலி' பாடல்கள் மூலம் என்பது இஸ்லாத்திற்கு ஒவ்வாத ஒன்று. நம்ம நாயன்மார்கள், ஆழ்வார்கள் போல பெற்றதைப்பாடி இறைவனடி சேர்ந்தவர்கள் இவர்கள். இந்த நிஜாமுத்தீன் சூஃபி ஞானியின் பிரதம சீடர்களில் ஒருவர் அமீர் குஸ்ரோ. மாபெரும் கவிஞர். ஷரியத் சட்டம் சம்மதிக்குமானால் எந்தன் சமாதியில் குஸ்ரோவின் உடலும் அடக்கம் செய்யப்படலாம் எனக்கூறுமளவுக்கு குஸ்ரோவின் கவிதைகளின் பால் அன்பு வைத்திருந்தார் நிஜாமுத்தீன் அவுலியா. சமாதியின் உள்ளில் படமெடுக்க அனுமதியில்லை. வெளியில் வந்தபிறகு நிறைய எடுத்தேன். #டெல்லிடயரீஸ்
.
No comments:
Post a Comment