Saturday, May 22, 2010

பறப்பு.

பறப்பு.

தயார்படுத்திக்கொண்டிருந்தேன் 27ஆவது முறையாக.ஏன் இந்தத் தயார்படுத்தலின் போது மட்டும் இத்தனை ஆர்வமும்,பயம் கலந்த எதிர்பார்ப்புமோ தெரியவில்லை.ஆனால் இரண்டும் இருந்தது என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது.


பெட்டியைக்குடைந்தேன்.செல்வதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் சரியாக வைக்கப்பட்டிருந்தாலும் மறுபடி ஒருமுறை எடுத்துச்சரி பார்த்தேன்.ஒரு கணம் மூழ்கிப்போனேன் சிந்தனையில்,ஏன் இந்தப் பறப்பு?ஆனால் அது இல்லாவிட்டால் வாழ்க்கையே அஸ்தமித்துப்போய் விடும் போலத் தோன்றியது.முந்தைய பறப்புகளின் போது இல்லாத ஒரு உணர்வு எனை ஆட்டிப்படைத்தது.


உடையை ஒரு கணம் சரி பார்த்துக்கொண்டேன்.பொத்தான்கள் சரியாகப்போடப்பட்டு வழியில் எந்த வித இடையூறுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் போலத் தோன்றியது.மனதில் ஒரு நம்பிக்கை உண்டானது.


நான் இதைப்போல எத்தனையோ கணங்களை அனுபவித்திருக்கிறேன்.அவைகளை அனுபவிப்பதே சுகம்.அவை அனைத்தும் நடந்து முடிந்தபின் பணி ஏதுமின்றி ஓய்வெடுக்கும் போது சிறிதாக அசை போட்டால் உள்ள சுகமே தனி.ஆனால் அவை அனைத்தும் வேண்டியதாயிருந்தது எனக்கு,


பறப்புக்குப்பின் சென்றடையும் இடத்தைப்பற்றி சிந்தித்தேன்.முந்தைய பறப்புகளின் முடிவாகத்தான் இதுவும் இருக்கும்.மாற்றங்கள் ஏதும் இராது.ஆனாலும் சில நாட்களில் எதிர்கொள்ளும் எதிர்பாராதவைகளைப்பற்றி நினைத்தால் ஒரு கணம் திடுக்கிடும்.


எனைப்போல் அந்த இடத்தை வந்தடையும் மற்றவர்களை நினைத்துப்பார்த்தேன்.அவர்களும் என்னைப்போலவே தயார் படுத்திக்கொண்டு வந்திருப்பார்கள் என்று தோன்றியது.ஆனால் அவர்கள் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாகிவிட்டனர்.இதுவே அவர்களின் பணியாகிப்போனதால்.


எனக்குத்தான் திடுக்கிடும் உணர்வு தலைப்படும்.அதைச்சமாளிக்கும் திறனை சிறிது சிறிதாகப் பெற்றுக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.ஆனால் நானும் மற்றவர்களைப்போல் ஆகி விடுவேனோ என நினைக்கும் போது கவலை தோன்றியது.எதைப்பற்றியும் சிந்தனை இல்லாது வெற்றிடத்தை நோக்குதல்,எதையும் மேம்போக்காக எடுத்துக்கொள்தல்,எத்தனை இடையூறு வந்தாலும் சமாளிப்பதாகக் கூறிக்கொண்டு தள்ளிப்போடுதல், போன்ற செயல்களை செய்யக்கூடிய சோம்பலுற்றவனாக மாறிவிடுவேனோ என்று நினைக்கும் போது..ஆனால் அது தான் நியதி என்றால் என் ஒருவனால் மட்டும் மாற்றி அமைக்க முடியுமா ?


ம்.எதைஎதையோ நினைத்து காலம் தான் விரயமாகிக்கொண்டிருந்தது.ஊர்தியைப்பற்றிக் கவலையே இல்லாமல் இருந்து விட்டேன்.சென்று அதையும் சரிப்படுத்திவிட்டு எனக்கென உள்ள பெட்டியை எடுத்துக்கொண்டு வெளிக்கிளம்பும்போது...


அம்மா கூவிக்கொண்டே வந்தாள்."ஏண்டா ஆஃபிஸுக்கு இந்தப் பறத்தம் பறக்கிற ?.இந்தக்காப்பியக் குடிச்சிட்டுத்தான் போய்த்தொலையேன்"ன்னு...!

2 comments:

  1. //ஏண்டா ஆஃபிஸுக்கு இந்தப் பறத்தம் பறக்கிற ?.இந்தக்காப்பியக் குடிச்சிட்டுத்தான் போய்த்தொலையேன்"ன்னு...!//
    ஆகா ...

    ReplyDelete
  2. நன்றி மால்குடி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..!

    ReplyDelete