Sunday, March 26, 2023

சிகரத்தில் ஏறு..!

 


போன வியாழக்கிழமை (26 மார்ச்) BIC-ல ஒரு பதினோரு குறும்படம் போட்டுவிட்டாங்ய...ஆமா.. பதினோரு படம்..ஒற்றையடீல...ஹிஹி... எல்லாம் புதன், வியாழன் இதுமாதிரி நட்டநடு வார வாக்கில போட்டுத்தள்றதே வழக்கம். ஹிஹி.. உகாதிக்கு மறுநாள்ங்கறதால கூட்டம் இருந்ததுன்னு சொல்லலாம். ஒண்ணொண்ணும் பத்து/இருபது/ அல்லது ஆகக்கூடுதல் முப்பது நிமிடப்படங்கள் மட்டுமே.. அதான் ஒரே இரவில் அத்தனை படங்களும் திரையிட முடிந்தது.

சில படங்கள் அற்புதம். சில படங்கள் நெஞ்சைப்பிசைந்து இருக்கையை விட்டு அகல விடாது இருத்தி வைக்கும், சில படங்கள் சாகசம் என பதினொன்றும் ஒவ்வொரு வகை. மூன்று படங்கள் என் நெஞ்சைத் தொட்டவை. திரையிட்ட அத்தனையும் மலையேற்றம் பற்றிய படங்கள்.

From My Window

மாற்றுத்திறனாளி இளந்தாரிப்பெண் ஒருத்தி. மூளை வளர்ச்சி குன்றியவர். சக்கர நாற்காலி விட்டு எழுந்துகொள்ளக்கூட இயலாது. அவர் தாய்மொழியான ஆங்கிலம் பேசுவது வீட்டிலுள்ளோர்க்கு மட்டுமே விளங்கும். பத்து சொற்களைச்சொல்லி முடிப்பதற்குள் அவருக்கு பெரும் மலையேற்றம் செய்தது போல உடல் களைத்துப்போகும். ஒரே பொழுது போக்கு அவரின் அறையிலிருக்கும் சன்னல் வழித்தெரியும் மிக உயர்ந்த மலை. அவரின் அவா எல்லாம் அந்த மலை மீது எப்படியேனும் ஏறிவிட வேணும் என்பதே. .... சாத்தியமா? அவரின் ஆசையறிந்து ஒரு மலையேற்றக்குழுவினர் அவருக்கு ஊக்கமளிக்கின்றனர். நாம அந்த மலையில் ஏறுவோம் ஒரு நாளென.

கிட்டத்தட்ட மூன்று சிகரங்கள்
13,000 அடி, 8000 அடி, மற்றும் 11,000 அடியென. அதில் ஏதேனும் ஒன்றில் ஏறலாம் என நாள் குறித்து காலை ஐந்து மணிக்கு எழுந்துகொண்டு குழு புறப்படுகிறது. இவர் தம்முடைய சக்கர நாற்காலியில் தான் இருக்கிறார். வாலண்டியர்ஸ் இருவர். தம் தோளில் பட்டிகள் கட்டிக்கொண்டு அந்த வண்டியினை இழுத்துக் கொண்டு செல்லவென. முறை மாற்றிக் கொள்கின்றனர் வழியில். கிட்டத்தட்ட ஏழாயிரம் அடி ஏறியாகிவிட்டது.

அனைவருக்கும் சோர்வு
. இருப்பினும் அந்தக்குழு அசராது அந்தப் பெண்ணிடம் நாம் இன்னமும் ஏற வேணும், சோர்வடைதல் கூடாது என அறிவுரை. அவரோ 13,000 அடி இன்னமும் ஏறவில்லையா எனக்கேட்டு கலாய்க்கிறார். ஒரு சிறுசெய்தி. அந்தக்குழுவிலிருக்கும் அத்துணை பேரும் ஏதோ ஒரு வகையில் மாற்றுத்திறனாளியே.! முடிவில் அந்தப்பெண் 13,000 அடி சிகரத்தை தம் சக்கர வண்டியிலேயே சென்று ஏறி முடித்தார். இந்தக்குறும்படத்திற்கு பல விருதுகள் கிடைத்திருக்கின்றன.

Link Sar

இரண்டாவது படம், மலையேற்றம் 6000 மீட்டர்கள் (18,000 அடிகள் ) பாகிஸ்தானில் இருக்கும் காரகோரம். முழுக்க முழுக்கப் பனி. (எவெரெஸ்ட் 8848 மீட்டர்கள், 25,000 அடிகள்) மிகுந்த அனுபவமிக்க குழு. மூவர். ஏற ஆரம்பித்த முதல் நாள் பனியில் சிக்கி அவரின் கணுக்கால் சுளுக்கு. நகர முடியவில்லை.வீக்கம், முடங்கியது மலையேற்றம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பனி பனி மட்டுமே. அவர்களிடம் அத்தனை முன் தயாரிப்புகள் இருந்த போதிலும் இப்படி ஒரு நிகழ்வு எதோ அசம்பாவிதம் நடக்கப்போவது போல. முடங்கி விட்டது குழு. ஏனெனில் இது அவரின் பத்தாண்டுகால கனவு. எப்படியும் ஒரு மாதகாலம் ஆகும் என அவரே கணிக்கிறார். ஒன்றும் செய்யவியலாது. பாதி தூரம் வரை ஏறியாகிவிட்டது.

கீழிறங்கிச்செல்வதும்
, மேலே ஏறிச்செல்வதும் ஒரே தூரம். என்ன செய்யலாம். பனிப்புயல் வேறு. வழி தவறிச்செல்லவழி வகுக்கிறது. குடிலுக்குள் முடங்கிக்கிடக்கும் குழு. கால் நகற்ற இயலவில்லை. தொடர்ந்து தமக்குத்தாமே ஊக்கமளித்துக் கொள்கிறார். அத்தனையும் பதிவு செய்யப்படுகிறது கேமராவில். ஒரு மாதத்திற்கும் கூடுதலாகிறது காலை அசைக்கவேனும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பேபி ஸ்டெப்ஸ் வைத்து நடந்து பழகி (இறுகிக் கிடக்கும் பனி, இன்னமும் நரம்புகளை இறுக்கத்தான் செய்யுமே தவிர இளகவைக்காது.) இஞ்ச் இஞ்சாக ஏற முற்படுகிறார். அத்தனை மன உறுதி.

எதோ ஒரு உருவம் இப்படி சிக்கிகொள்கிறவர்களை, ஊக்கமளித்து, காதுகளில் இனிய சொற்களைச் சொல்லியும் ,நேரில் தோன்றி வா நாம் நடக்கலாம் என கூடவே வருவது போலவும் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். அப்படி எதோ ஒன்று அவருக்கு உதவியிருக்கக்கூடும். கடைசியில் அடைந்து விடுகிறார் சிகரத்தை.

Breaking Trail

மூன்றாவது என்னைக்கவர்ந்த அதியற்புதமான குறும்படம். கறுப்பினத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் 1200 மைல்களை ( கிட்டத்தட்ட 1900கிமீ) தூரத்தை நடந்தே கடக்கிறார், அது Ice Age Trails என அழைக்கப் படுகிறது அமேரிக்காவில். கால்களால் நடந்தே கடப்பதென்பது அதுவும் நேர் வழியில் அல்ல. சாலை வ்ழியோ இல்லை நடந்து செல்லும் வழியோ அல்ல. முழுக்க முழுக்க பனிபடர்ந்த மலைகளினூடாக. ஒரே ஒரு நாயைத் துணைக்கு அழைத்துக்கொண்டு நடந்தே செல்கிறார். என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு பெண்ணால் அதுவும் 1200 மைல்கள் நடந்தே அதுவும் பனி படர்ந்த மலைகளினூடே தனியாக யாரின் துணையுமின்றி..ஹ்ம்.. இதே கேள்வி அவரிடமும் கேட்கப்பட்டது எனத்தெரிவிக்கிறார். ஒரு நாளைக்கு 20 மைல்கள் என நடக்கிறார். இரவில் குடில் அமைத்து தம் நாய்க்கு உணவளித்து விட்டு அதற்குள் தாமும் உறங்கிக்கொள்கிறார்.

இரவும் பகலும் அத்தனை நீளமில்லை நம் இந்தியாவைப்போல
. ஆதவன் எதோ ஒரு மணிநேரம் தோன்றினால் கூட அற்புதம் நிகழ்ந்துவிடும் என்ற நிலையுள்ள நிலம். அத்தனை தூரத்தை நடந்தே கடக்கிறார் என்ற செய்தி பரவி அவருக்கு கொஞ்சம் உணவு, நீர் என அளிப்பதற்கு இடையிடையே ஆட்கள் நிற்கின்றனர். அவர்களிடம் தேவையானதை வாங்கிக்கொண்டு மீண்டும் தொடர்கிறார் தம் பயணத்தை, அனைத்தையும் வாங்கிக் கொண்டால் யார் தூக்கிச்சுமப்பது? கடைசிக்கு தம் இலக்கை அடைகிறார். தம் கால்களின் உதவிகொண்டு மட்டுமே.அவர் பெயர் எமிலி. கூகிளில் நம் விரல்களால் தேடினால் கிடைப்பார்.

கிட்டத்தட்ட எல்லாப்படங்களையும் அலசிப்பார்க்கும் போது, அடிப்படையாக எனக்குத்தோன்றியது இது மட்டுமே. உடற்தகுதி ஒரு முக்கியமான விஷயமாக தோன்றவேயில்லை. அத்தனை பேரின் விடா முயற்சி, செய்தே தீருவது இலக்கை அடைந்தே தீருவது என்ற நோக்கம், மற்றும் எந்த இடர் வரினும் சோர்ந்துவிடாத மன வலிமை. ஏனெனில் இதில் பங்கு கொண்ட அனைவரும் பெரும்பாலும் தனியாகத்தான் சாதனை செய்திருக்கின்றனர். ஊக்கமளிக்க ஆட்கள் இருந்த போதிலும், இடர்ப்பாட்டு சமயத்தில் கூட இருந்து ஆறுதல்/ ஊக்கமளிக்கவென யாருமே இல்லாத தருணங்கள் தான் முழுக்க முழுக்க.

நாங்களும் எங்கள் நண்பர்களுடன் இங்கு கர்நாடகாவின் சில மலைகளை எங்கள் கால்களால் அளந்து பார்த்திருக்கிறோம். கைவாரா ஹில்ஸ் (பாதை என்ற ஒன்றே கிடையாது, இதுவரை நடந்துசென்ற ஆட்களின் தடங்கள் கொண்டு ஆங்காங்கு கற்கள் கொஞ்சம் ஏறத்தகுந்தவை,) பிளிகிரி ரங்கநாதா ஹில்ஸ், மற்றும் கூர்க்கில் இருக்கும் முகில்பேட்டை (ஆகக்கடுமையானது, ஒரு அடிபோலும் எடுத்துவைக்க இயலாதது) , முத்தத்திக்காடுகள், அந்த்தரகங்கா (இங்கு ஒரு வல்லுநர் குழு வழி நடத்திச்சென்றது) என. இருப்பினும் இப்படி ஒரு சாகச மனப்பாங்கில் மலையேறியது கிடையாது. பார்த்த பதினோரு படங்களும் எதோவொரு வகையில் என் மலையேற்ற நினைவுகளைக் கிளறிவிட மறக்கவில்லை.

#சிகரத்தில்ஏறு

No comments:

Post a Comment