Saturday, November 26, 2022

The Courtesan: An Enigma

நேற்றிரவு ஒரு இசை/பாடல்/நடன நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். கொஞ்சம் அல்ல நிறையவே பழைய நடன அசைவுகள் கொண்ட நிகழ்ச்சி. முழுக்க முழுக்க வடநாட்டின் ஹிந்துஸ்தானியும், கதக் மற்றும் கஸல் பாடல்கள் ஆடல்கள் என அப்படியே ரெட்ரோ எஃபெக்ட்டுக்கு ஆளைத்தூக்கிக் கொண்டு போய் விட்டது. என்ன ஆச்சரியம், ஏழு மணி நிகழ்ச்சி The Courtesan: Enigma-க்கு அரங்கு நிறைய ஏழரை ஆகி விட்டது.

இது போன்ற நடனங்கள், அக்காலத்திய முகலாய அரசர்களால் வெகுவாகப் புகழப்பட்டு அதற்கென அரங்கங்கள் அமைத்து என வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டிருக்கிறது. இருப்பினும் இது போன்ற அரங்குகளில் ஆடுவோரை ‘இழிகுலத்தார்’ பரத்தைகள் என்றே அழைத்திருக்கின்றனர். (நம்ம ஊரில் சதிராட்டம் போல.) . அதிகம் இதுபோன்ற நடனங்கள் இப்போது வழக்கில் இல்லை எனலாம். பெரும்பாலும் கதக் நடனத்தின் கூறுகளே அதிகம் தென்பட்டது எனக்கு.(அத்தனை  பரிச்சயமில்லை எனினும்) நிகழ்வை ஒருங்கிணைத்து, நடனங்கள் அமைத்து, பாடல்களை தெரிவு செய்து என பெரும் பணி ஆற்றியிருக்கிறார் மஞ்சரி சதுர்வேதி என்ற நடனக்கலைஞர். அவரே அத்தனை நடனங்களையும் மேடையில் ஆடினார்.

அரங்கத்தைப்பற்றி சொல்லவே வேண்டாம். படங்கள் திரையிடுவ தாகட்டும். நாடகங்கள் அரங்கேற்றுவதாக இருக்கட்டும், (இடாகினி மாய அரத்தம் - பூபதியின் நாடகம் இங்கு தான் பார்த்தேன்) இது போன்ற இசை/நடன நிகழ்வுகள் நடப்பதாகட்டும் எல்லாவற்றிற்கும் பொருத்தமான இடம் பெங்களூர் இண்டர்நேஷ்னல் செண்டர்.

’நீஷா சிங்’ என்ற நடிகை, அவ்வப்போது மேடையில் தோன்றி பின் வரும் ஆடல்/பாடலினைக்குறித்து தூய ஆங்கிலத்தில் ..( ஹ்ம். உண்மையில் ஆங்கிலத்தில் தான் உரையாற்றினார். இப்படிக்கும் இருவரும் லக்னோ’வை இருப்பிடமாகக்கொண்டவர்கள்.!) உரை நிகழ்த்தினார். பாடல் உருவான விதம், அதை 1800களில் யார் ஆடினது, எந்த அரண்மனையில் இது நிகழ்ந்தது, ஆடற்கலைஞர் யார் என அந்த ஆடற்கலைஞரே நம்முன் வந்து சொன்னது போல கூறினார். நான் இன்னார், இந்த இடத்தில் இது பாடப்பட்டது என்பது போல கூறியது வெகு சிறப்பு. குரல் பின்னிலிருந்து ஒலிக்காது நம்முன்னிருந்து அமர்ந்துகொண்டு கூறிக் கொண்டிருந்தார்.

ஒளிவிளக்குகள் பற்றி சொல்லியே ஆகவேண்டும். நாடகமேடைகளில் பெரு வெளிச்சம் தரும் விளக்கு களின் முன்புறம் பல நிறங்களைக்கொண்ட காகிகதங்களை ஒட்டி காட்சியின் போக்கிற்கேற்ப ஒளிர்ந்து, அணைத்து நம்மை நாடகத்தோடு ஒன்றச் செய்வர். இங்கு ஒளி வெள்ளம் ஒரு விளக்கில் பல வண்ணங்களாக, பல LED பல்புகளைக் கொண்டு வட்டமிட்டு விழுகிறது மேடையில் அதன் உள்ளில் அமர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட சினிமா’வைப் போல ஆனால் இங்கு அத்தனையும் நேரடியாக. எதுவும் பதிவு செய்து மறுஒளிபரப்பு போலின்றி அத்தனையும் நேரலையாக. ஆஹா..! புகைப்படங்கள் எடுத்தேன், எனினும் அந்தக்காட்சிக்கு பொருந்த வேணும் என்பதற்காக சாம்பிராணிப் புகையை மேடையெங்கும் சுழல விட்டதால் புகை மண்டிவிட்டது புகைப் படங்களில்! சாயங்கால வேளை, மற்றும் இரவு, நிலவு கொஞ்சும் இரவு என விளக்கு அமைப்புகள். காணக்கண் கோடி வேண்டும். பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அக்காலத்துக்கே நம்மை அழைத்துச் சென்று விடும் விளக்கு அமைப்புகள்.

நடனங்கள் எல்லாம் ’உம்ராவ் ஜான்’ போன்ற ஆடலுக்கு உரித்தான சினிமாப் படங்களில் இருந்தது போலவே அமைந்திருந்தது. (எனக்குத் தெரிந்த ஒரே படம் அதுதான்..இந்த வகைகளில் ) ஒரு பாடல் முழுக்க மஞ்சரி அமர்ந்தே அடவுகள் பிடித்துக்கொண்டிருந்தார். எழுந்து கொள்ளவே இல்லை. கிட்டத்தட்ட 15 நிமிடம் இருக்கும் ஒரு பாடல்.! பின்னரும் ஆடி பாடி என மேடை முழுக்க அவருக்கே சொந்தம் என சுழல்கிறார். முழு அர்ப்பணிப்பு இல்லையெனில் இதெல்லாம் சாத்தியமில்லை.

அன்றைய பெரும்பாலான ஆடற்கலைஞர்கள் , இஸ்லாமிய சமூகத்தினராகவே இருந்தது. இல்லையெனில் , இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்களாகவே அமைந்திருந்தது ஒரு ஆச்சரியம். அதில் ஒரு ஆடற்கலைஞர் ஆர்மீனியா நாட்டைச் சேர்ந்தவராம். (அந்தக் காலத்திலேயே இருபதினாயிரம் இந்திய ரூபாய்கள் செலவளித்து தம் பூனைகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்..! 🙂 ) அடவுகள், நடன அசைவுகள் எல்லாம் கதக், பெரும்பாலும் உடலை வளைத்து, பெரு முயற்சி செய்து என்றெல்லாம் இல்லாது, வெகு சுலபமான ஸ்டெப்ஸ்களை மட்டுமே வைத்து ஆடினார்.(ஒரு வேளை ஆட்டமே அப்படித் தானோ என்னவோ… நம்மைப்போல பரதநாட்டியம் பார்த்தே பழகிய ஆட்களுக்கு அப்படித் தோன்றும்)

இந்த நடனங்களை ‘முஜ்ரா’,’கோட்டா’ என்ற அவச்சொல்லலாலேயே கூறிப்பழகி விட்டனர். (அந்தப்புற நடனவகைகளில் சேரும் இது) இங்கு ஆடிய ஆடற்கலைஞர் மஞ்சரி இது போன்ற நடனங்களை ஆடப்போகிறேன் இந்தியா முழுதும் என்றதும், அவர்தம் தோழர்களெல்லாம் உனக்கென்ன பைத்தியமா , இதைப்போய் ஆடப்போகிறாயா என கேலி பேசினர் என்றார். பாம்பேயில் டான்ஸ் பார்களில் சில இடங்களில் இந்த வகை நடனங்கள் ஆடப்படுகிறது இன்றும். நமக்கு பார்க்கும்போது அப்படி ஒன்றும் ஆபாச சுழிவுகளோ, இல்லை மயக்கவைக்கும் அசைவுகளோ இல்லை. இருப்பினும் இந்த நடனத்துக்கு அப்படி ஒரு பெயர் விழுந்து விட்டது.

மஞ்சரி கடைசியில் பேசினார். அவரும் ஆங்கிலத்தில் தான் பேசினார். இன்றைக்கு சினிமா நடிகையருடன் எல்லோரும் செல்ஃபி எடுத்துக் கொள்ள ஆசைப் படுகிறோம் அல்லவா, இதே அளவு புகழும் பணமும் பெற்றவர்கள் தான் அன்று ‘கோட்டே’வில் ஆடியவர்கள் என்று. என்ன ஒன்று ஆடிய இடம் தவறு. இது போன்று பெங்களூர் இண்டர்நேஷ்னல் செண்டரோ, என்.சி.பி.ஏ (National Center for Performing Arts)வோ அக்காலத்தில் இல்லை. இருந்திருப்பின் அவர்களும் சமுகத்தில் மதிக்கத்தக்கவர்களாக இருந்திருப்பர் என்றார்..தினமும் ஆறு மணிநேரம் பயிற்சி , இன்றும், எடுப்பதாகவும் , இந்த நிகழ்வுக்கென கிட்டத்தட்ட ஐந்தாறு நாட்கள் தொடர்ந்து ஆடிக் கொண்டு இருந்ததாகவும் கூறினார். பின்னர் சினிமாவில் ஆடத்தொடங்கி யிருக்கின்றனர் , இந்த நடனக் கலைஞர்கள், அவ்வழித்தோன்றலில் ஒருவர் தான் மிகவும் புகழ் பெற்ற பாலிவுட் நடிகை ‘நர்கீஸ்’. மேலும் இது போன்ற ஒரு நடன நிகழ்வுக்கு அரங்கு நிறைந்து போனது குறித்து மிகவும் மகிழ்ந்து போனார் மஞ்சரி.

No comments:

Post a Comment