Thursday, October 6, 2022

The Klaus Graf Quartet. - ஜாஸ் ம்யூஸிக்

 

 


நேற்று இரவு ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். ஜெர்மன் ஜாஸ் ம்யூஸிக் ஆர்கெஸ்ட்ரா. தசரா தானே ஆளே இருக்காதுன்னு நினைச்சு ஆறு மணிக்கு மேலே கிளம்பிப்போனேன் (ஏழரைக்கு ஷோ) சென்றடைந்ததும் வாசல் கார் பார்க்கிங் வரை குய்யூ வரிசை. அடச்ச.. தசரான்னா கோயிலுக்கு போங்கடா...இங்க ஏண்டா வர்றீங்க? ஆறரையிலிருந்து நின்று கொண்டிருக்கிறேன். வாயில் திறப்பதாக இல்லை. ஒருங்கிணைப்பாளர் வந்து லைன் முச்சூடும் ஆட்களை எண்ணிக்கொண்டிருந்தார். இல்ல உள்ள எல்லாருக்கும் சீட் இருக்குமான்னு பாக்கத்தான் என.கெதக் என்றிருந்தது.

ஒரு வழியாக ஏழு இருபதுக்கு வாயில் திறந்தது. எனக்கு முன்னால் குழுமியிருந்த பக்த கோடிகள் எல்லாம் அவா அவா சீட்ல போய் உக்காந்துட்டா :) முன்பதிவெல்லாம் கிடையாது. முதலில் வருவோர்க்கு இடம் கிடைக்கும். அதுல தமக்கு பக்கத்துல ரெண்டு கர்ச்சீஃப் எல்லாம் போட்டு வெச்சு இந்தியாவின் மானத்தைக் காப்பாதுதுஹ சில பிரகஸ்பதிகள். ஜெர்மென் கச்சேரியானாலும் நாமெல்லாம் இண்டியா பிரஜையான்னோ. அடக்கெரஹமே. எல்லா இருக்கையும் ஃபுல். வாசப்படீல ஒக்கார வேண்டீது தான். அதுல ரெண்டு வரிசை போட்டாங்ய. ஒருங்கிணைப்பாளர் வந்து பாருங்க க்ரைஸிஸ் வந்தா போவதற்கு வழி வேணும். ஒரு வரிசை மட்டும் போடுங்க என்றார். இந்தக்கண்றாவில்லாம் பாக்க ஜெர்மன் டீம் இன்னும் மேடைக்கு வர்ல.

கொஞ்சம் லேட்டா வந்த ஜெர்மன் கன்ஸுலேட் அதிகாரிகளுக்கே இடம் இல்லைன்னா பாத்துக்குங்க...ஹிஹி.. அப்பறம் இவங்க தான் ஸ்பான்ஸர்ஸ் ன்னு சொல்லி முன்னாலா சீட்ல பகுமானமா ஒக்காந்திருந்த சிலரை கெளப்பி விட்டது நிர்வாகம். ஹ்ம்..எழுந்தவர் எல்லாரும் சலித்துக் கொண்டே படிகளில் அமர்ந்தனர்.

ஜாஸ் இசை நமக்கு பரிச்சயமானது தான். என்ன ஒண்ணு இதுதான் ஜாஸ்னு தெரியாம கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஒரு சாக்ஸஃபோன், ஒரு ட்ரம்ஸ்,ஒரு செல்லோ மற்றும் ஒரு பியானோ ..அவ்ளவ்தான் டீம். ஜெர்மென் காரா பேரெல்லாம் வாயில நுழையாது, இருந்தாலும் சுருக்கமாக அறிமுகப்படுத்தினார். சாக்ஸஃபோன் கலைஞர். இவர் இதுவரை நான்கு முறை க்ராமி அவார்டுக்கென பரிந்துரைக்கப்பட்டவர் என்பது கூடுதல் செய்தி. ஏழரை மணிமுதல் ஒன்பதரை வரை இசை மழை பொழிந்தது.

The Klaus Graf Quartet.

Klaus Graf - சாக்ஸஃபோன் கலைஞர், Thilo Wagner – பியானிஸ்ட் ,Veit Hubner – செல்லோ பாஸ்ஸிகல், மற்றும் Obi Jenne – ட்ரம்ஸ் இசைக்கலைஞர்கள். எல்லாருக்கும் தலை வெள்ளை தான். வெள்ளைக்காரா எல்லாம் வெள்ளையாத்தான் இருக்கும் :) வயசு அதிகம் போலருக்கு. ஜாஸ் இசை மென்மையானது என்றெல்லாம் இல்லை. ட்ரம்ஸ் அடித்துப்பிளந்து விட்டார். அந்த பியானோ கலைஞரைப் பார்த்தால் ‘ஹான்ஸ் ஸிம்மர்’ (ட்யூன் புகழ்) போலவே இருந்தார். ஆஹா.

ஒவ்வொரு இசைத்துணுக்கும் பத்து-பதினைந்து நிமிடங்களுக்கு என வாசித்தனர். இன்னிக்கு ஜாஸ் என்று சொன்னால் தம்பி அநிருத்தின் ‘மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே’ தான். அதையே ‘கண்ணால பேசிப்பேசிக்கொல்லாதே வை காப்பி அடிச்சுட்டார்னு சில ஞான சூனியங்கள் புலம்பித்தள்ள்ளிவிட்டன. அந்த ட்ரம்ஸ் பீட் அதன் இசைக்குறிப்பு எல்லாம் ஒரிஜினல் ஜாஸ்ஸிலிருந்து எடுக்கப்பட்டது. ’வானமின்று மண்ணில் வந்து ஆடுதே’ ராசைய்யாவின் பெஸ்ட் ஜாஸ். ஜாஸில் பிரதானமாக இருப்பது சாக்ஸஃபோன், பல நாட்களாக நாம கென்னி ஜி’யின் சாக்ஸை கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். ராசைய்யாவின் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ மைல்ட் ஜாஸ் வித் சாக்ஸஃபோன்,பின்னர் ‘கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்’ . ’அடியே என்ன எங்கடீ கூட்டிட்டுப்போறே’ ரஹ்மான், ’தேன்மொழி’ தம்பி அநிருத், ’அக்கம்பக்கம் பார்’ சந்தோஷ் நாராயண் இவையேல்லாம் கொஞ்சம் பிரபலமான ஜாஸ் இசைப்பாடல்கள்.

இப்டி பல பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இங்கு அவர்கள் வாசித்தவை கொஞ்சம் சொந்த காம்போஸிஷன்ஸ், மற்றும் இன்னபிற பெரும் இசைக்கலைஞர்கள் இசைத்தவை. பீட்டில்ஸின் ஒரு பாடலை பாடினார். எனக்கு அடையாளம் கண்டுபிடிக்க இயலவில்லை. கூட்டத்திலிருந்த ஒரு பெரியவர் சட்டென கூறிவிட்டார். கட்டற்ற இசை, தளைகள் இல்லாதவை, அடித்துப்பொழிந்தது. கீழே உட்கார்ந்திருக்கிறேனே என்ற நினைப்பே வரவில்லை.

குன்னூர்(ஊட்டி), பெங்களூர், மைசூர் அப்புறம் மும்பை (இந்த லிஸ்ட்ல சென்னையே காணம் .. :) ) இந்த டீமின் டூர். மாக்ஸ்முல்லர் பவனின் ஏற்பாடு இந்த இசைநிகழ்ச்சி. அரங்கத்திலிருந்து நேயர் விருப்பம் எல்லாம் கேட்கப்பட்டது. அதைச்சட்டை செய்யவேயில்லை. கரோனாவில் அடிபட்டு பெரும் வறுமைக்குள்ளானது இந்த இசைக்குழு. வருத்தப்பட்டுக்கொண்டே சொன்னார்.2020-ல் ஃபெப்ரவரியில் இங்கு பெங்களூரில் இசைத்ததாக (கரோனாவுக்கு கொஞ்சம் முன்பு) அதுவே கடைசிக்கச்சேரி என்றார். பின்னர் இப்போது தான் தொடங்கியிருக்கிறது என மகிழ்வுடன் கூறினார்.

எத்தனைதான் எம்ப்பி3-யிலும், சர்ரவுண்டு சவுண்டு ஆடியோவிலும்,  5.1 ஹோம் தியேட்டரிலும் ஐமாக்ஸிலும் கேட்டாலும், அவையெல்லாம் முன்னக்கூட்டி பதிவு செய்து திரும்ப ஒலிப்பவை. இசை நிகழ்ச்சி எனில் நேரடியாக கேட்கவேணும். அதில் தான் மகிழ்ச்சி.

ஒரு மெண்ட்டலி சேலஞ்சுடு பெண்மணியை ஒரு வீல் சேரில் உட்கார்த்தி வைத்திருந்தனர் பார்வையாளர்களில். எனக்கு கொஞ்சம் முன்னால ஒவ்வொரு இசைத்துணுக்கு முடியும்போதும் ஆ,ஹ்ம், என்ற அரங்கத்தில் கொஞ்சம் கேட்கும்படியாகவே ஒலியெழுப்பிக்கொண்டிருந்தார். இசையே மருந்து.. #ஜாஸ்ம்யூஸிக்


 

No comments:

Post a Comment