Tuesday, October 4, 2022

நட்சத்திரம் நகர்கிறது

                                     வெளியானது பா.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது' ஃபர்ஸ்ட் லுக் | pa  ranjiths Natchathiram Nagargiradhu movie first look released - hindutamil.in

நட்சத்திரம் நகர்கிறது... உரையாடுகிறது. பொதுவா ஒரு நம்பிக்கை உண்டு, ஷூட்டிங் ஸ்டார்ஸை பார்த்தால் அக்கணம் நினைத்து நடக்கும் என. அது ஒரு மூடநம்பிக்கை. இந்த மூட நம்பிக்கை கொண்ட ஒரு பெண் தான் ”தமிழ்” ரெனெ. (எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் ஒரு சில மூட நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்யும்) நான் கூட ரெனே என்றவுடன் ரெனே மெர்க்ரிட் என்ற ஒரு ஐரோப்பிய ஓவியக்கலைஞர் பெயரைத்தான் வைத்துக் கொண்டிருக்கிறாளா என, அப்படி இல்லை, மார்க்வேஸின் நாவலில் வரும் ஒரு கதா பாத்திரத்தின் பெயர் என அவளே கூறுகிறாள். ஏன் ’தமிழ்’ என்ற பெயர் பிடிக்கவில்லையா? 
 
படத்தின் துவக்கம் குஸ்ட்டாவ் க்ளிம்ட்’டின் ஓவியம் ஒரு சிற்பமாக அமைக்கப்பட்ட ஒரு படுக்கையிலிருந்து.ஹ்ம்.. வித்தியாசமாத்தான் இருக்கும்போலருக்கு என்று பார்க்க முற்பட்டேன். உடனே துவங்குது உரசல். உனக்கு ராசைய்யாவை பிடிக்காது. சாதிப்புத்தியைக் காட்டீட்டீல்ல.. என்கிறாள். வரிசை கட்டி நிற்கவைத்தார் அத்தனை பேரையும், சினி உலகமே கைக்குள் கிடந்தது என்று விதந்தோதுகிறாள். பொதுவா இன்னொரு ஆணைப் பற்றி புகழ்ந்து பேசினால் அதுவும் அத்தனை நெருங்கிய படுக்கை அறையில் எந்தப்பயலுக்குத்தான் கோவம் வராது? ஹ்ம்..? அவர் ராசைய்யாவாவே இருக்கட்டும். கோபம் வரத்தான் செய்யும்.தொடர்ந்தும் ராசைய்யாவின் பாடலையே பாடுகிறாள். அவனுக்கு இன்னமும் கோபம் பெருக்கெடுக்கிறது. உனக்கு என் மேல தான் கோபம் என்று புரிந்து கொண்டு நகர்கிறாள். என்னுடைய ரசனைகள் உனக்குப் பிடிக்கவில்லை, எனது தெரிவுகள் உனக்கு ஒத்துப்போகவில்லை என சொல்லிக்கொண்டு.
 
பீஃப் சாப்டுறியா எனக்கேட்பது ரொம்பப்பழசாகி விட்டது. இங்கு பெங்களூரில் அதெல்லாம் சர்வ சாதாரணம். இனியும் படங்களில் கதா பாத்திரங்கள் இதையே பேசி திடுக்கிட வைக்க இயலும் என எனக்குத் தோணவில்லை. ’ரெட் டீ’ வாசிச்சிருக்கிறியா, அதுல ஒரு கருப்பன் வள்ளின்னு கேரக்டர்ஸ், நல்ல ஒரு லவ் ஸ்ட்டோரி இருக்கு அந்த அவல நாவலுக்குள்ளயும் என்று கூறும்போது ‘எனக்கு லவ் ஸ்டோரியே பிடிக்காது’ என்கிறான் இனியன். ரெனேவுடன் சேர்ந்து நானும் சத்தமாக சிரித்துவிட்டேன்.
 
நிறைய பேர் இந்தப்பெண் கதாபாத்திரத்தை பாலச்சந்தரின் பெண்கள் போல என. அவரின் படங்களில் வரும் பெண் பாத்திரங்கள் சாதி குறிப்பிடப் படவில்லை எனினும், ஆண்டாண்டு காலமாக அவர்கள்தம் ஜெனரேஷனே படித்து உலக விஷய ஞானம் உள்ள பெண்ணாகவே இருப்பர். இங்கு ரெனே அப்படி இல்லையே. ஒதுக்கப்பட்டவள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும் பயப்பட்டவள். அத்தனை ஃப்ளாஷ்பேக்கும் ஒரு கார்ட்டூனாகவே உருவெடுத்திருக்கிறது இங்கு. அதிலும் ரெனே நீல நிற ஆடையே அணிந்திருக்கிறாள். என்னை வெறுத்து ஒதுக்கியவைகளே என்னை இன்னமும் படித்து அறிவைப்பெருக்கிக்கொள்ள வேணும் என உந்தித்தள்ளியது என தயக்கமற, அச்சமின்றி தெரிவிக்கிறாள்.
 
 
                             நட்சத்திரம் நகர்கிறது' படத்திற்கு 'ஏ' சான்றிதழ்- Dinamani
 
நீளமான பத்து பதினைந்து பேர் அமர்ந்து பேசி அலசும் காட்சி, இதுவரை எந்தப்படத்திலும் நான் பார்த்ததில்லை. அற்புதம். உரையாடல் நிகழ்கிறது. காரசாரமான உரையாடல்கள், யாரும் பொதுவில் வைத்து விவாதிக்க இயலாதவற்றை பேசித் தீர்க்கின்றனர். ரொம்ப சாதாரணமான ஒரு யுவனாக கலையரசன். ஆஹா. நம்மைப்போல ஒருவன். கூலிங் க்ளாஸ் எல்லாம் மாட்டிக்கொண்டு வருகிறார்.அவரிடம் இருக்கும் கூலிங் க்ளாஸை தாம் வாங்கிக்கொண்டு ’இங்க பாரு நடிக்க வந்தமா போனமான்னு இருக்கணும், கலைய வளக்கிறேன் அது இதுன்னு பேசுன அதோட அவ்ளவ்தான்’ என்று கூறும் ஒரு கதாபாத்திரம் நல்ல சிரிப்பை வரவழைக்கிறது.
 
 
படம் முழுக்கவும் எனக்கு ’கும்பளாங்கி நைட்ஸ்’ மற்றும் ‘சார்லி’ படம் ஞாபகமே வந்து கொண்டிருந்தது. உருவாக்கம் எல்லாம் அதன் அடிப்படை தான். (மேலும் முருகபூபதியின் நாடகங்களும்) படத்தில் வரும் நாடகம் பெர்ஃபெக்ட். அத்தனை கொல்லப்பட்ட சீவன்களும் ஒரு சட்டகத்துள் இருந்து பேசுவது பிரமாதம். அதோடு விடாமல் கொல்லப்பட்ட அந்த அத்தனை இளைஞர்களின் குரூர கொலைகள் நிகழ்விடக் காணொலிகள் செய்தி ஊடகங்கள் வாயிலாகவும் பகிரப்படுகிறது. இருப்பினும் கலையரசனின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் சி சென்டருக்கான சினிமா. நாடகத்துக்குள் ஒரு சினிமா அது. சினிமாவுக்குள் ஒரு நாடகத்தை பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு பெரும் சலிப்பு.
 
அதேபோல கடைசி 20 நிமிட நிகழ்வுகளை வெட்டி எறிந்திருந்தால் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்குமென பலர் கூறியிருந்தனர். உண்மையைச் சொன்னால் அந்த மங்க்கியும் நாடகத்தில் ஒரு கதாபாத்திரம். முழு ஒப்பனையும் செய்து கொண்டு தமது காட்சிக்கென காத்துக்கொண்டு இருக்கும் ஒரு கேரக்டர். காண்போர் இருக்கையிலிருந்து எழுந்து வந்து அபிநயிக்கும் ஒரு நடிகர்.. இப்படியெல்லாம் ஒரு நாடகம் நடந்து விட முடியுமா? ஹ்ம்.. அதான் கதாயுதத்துடன் வந்து துவம்சம் செய்கிறது அந்த மங்க்கி.
புரட்சி செய்கிறேன் பேர்வழி என்று எவ்வித இடையூறுமின்றி நாடகத்தை மிகச்சிறப்பாக அரங்கேற்றியிருந்தால் அது இன்னொரு சாதாரண சினிமாவாகவே போயிருக்கும். துவம்சம் செய்ததால் தான் அது இக்காலத்திய உண்மை நிகழ்வு. (புரட்சில்லாம் இருக்கட்டும் எங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு அதைத்தான் என் சினிமா பேசும் என ரஞ்சித் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.) 
 
படம் முழுக்க ராசைய்யாவின் பாடல்களே.! எல்லாம் சரி. அந்தந்த நிகழ்வுகளுக்கென காட்சிகளுக்கென பொருத்தமான பாடல் தேர்வுகள் அருமை. ஒரு கேள்வி என்னிடம் மண்டிக்கிடக்கிறது. படத்தில் தோன்றி நடிக்கும் கிட்டத்தட்ட அனைவரும் 20களின் வயதில் இருப்பவர்கள். அவர்களுக்கு இத்தனை துலக்கமாக ராசைய்யாவின் பாடல்கள் தெரிந்திருக்குமா?… 20களில் இருக்கும் யாராயிருப்பினும் ’அநிருத்/ஆதி/ கொஞ்சம் ரஹ்மான்/பி.ட்டி.எஸ்/ப்ளாக் பிங்க்’ எனத்தான் உலவுவதாக நான் கண்டிருக்கிறேன். (எதோ ராசைய்யாவின் ஒன்றிரண்டு பாடல்கள் அதுவும் டிக்டாக் போன்ற செயலிகளில் பிரபலமானால் தான் உண்டு அவர்கள் உலகத்தில்.)
 
இத்தனை நட்சத்திரங்கள், கேலக்ஸிகள், இணைப் பிரபஞ்சம் மற்றும் அது குறித்த கோட்பாடுகள் என அறிவியல் நம் கண் முன்னே விரிகிறது, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அத்தனையையும் துடைத்தெறிகிறது இத்தனையும் தெள்ளத்தெளிவாக நம் கண்முன் விரியும் இந்த நிகழ் காலத்திலும் சாதி/மதம் ,தாழ்வு உயர்வு என்றெல்லாம் ஏன் பேச வேணும், நடைமுறையில் வைத்துக்கொண்டு கட்டி அழ வேணும் எனக்கேட்கிறார் இயக்குநர்.
 
படம் பார்த்து முடித்து சில நாட்களாகவே என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும் ஒரே கேள்வி இது தான். இத்தனை பேசாப் பொருளையும் பேசத்துணிந்த இயக்குநருக்கு ஒரு தாழ்த்தப்படுத்தப்பட்ட ஒரு இளைஞனாக ’ரெனே’ கேரக்டரை ஏன் திரையில் காண்பிக்க இயலவில்லை என. அப்படிக் காண்பித்திருந்தால் இப்படி ஒரு மாற்று/போல்டு சினிமாவாக வந்திருக்க வாய்ப்பில்லை என தோணியிருக்கும் போல அவருக்கு!...
 

                                   பா ரஞ்சித்தின் "நட்சத்திரம் நகர்கிறது" படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது!! |  Pa Ranjith's Natchathiram Nagarkirathu Movie Shooting Started Again - Tamil  Filmibeat
 

No comments:

Post a Comment