Monday, April 19, 2021

இரண்டாம் அலை

 

ஒரு நாளைக்கு குறைந்தது 30-35 உடல்கள் எரிக்கவென எடுத்து வரப்படு கின்றன. கடந்த இரண்டு மாதங்களில். பெங்களூரில் இருக்கும் கிரிமட்டோரியங்களின் ( மின் மயானங்கள்) எண்ணிக்கை இப்போது கூட்டப்பட்டு இருக்கிறது ஒரு உடல் முழுதுமாக எரிய நான்கு மணிநேரம் ஆகுமாம். அப்படியானால் ஒரு நாளைக்கு ஐந்து உடல்கள் மட்டுமே எரிக்க இயலும். குஜராத்தில் இந்த மின் மயானங்களை தொடர்ந்து இயக்கியதின் விளைவாக உடலை ஏந்தி உட்செலுத்தும் இரும்புக் கம்பிகள்/ குழாய்கள் அதீத வெப்பத்தில் உருகி வழிந்து விட்டன. இரும்பு உருக வேண்டுமெனில் கிட்டத்தட்ட 1500டிகிரி செண்டிக்ரேட் வெப்பம் தேவைப்படும். குறைந்தது நான்கு மணிநேர ஓய்வு கொடுத்தாலொழிய அந்த மயானங்களை சரியாக பராமரிக்க இயலாது. 24 மணி நேரமும் தொடர்ந்து இயக்கி உடல்களை எரித்துக் கொண்டிருந்த மின் மயானங்கள் இப்போது செயலிழந்து கிடக்கின்றன. உடல்களை மயானத்தின் வெளியே மரக்கட்டைகளை வைத்து எரிக்கப் பணிக்கின்றனர். 
 
இங்கு குந்தலஹள்ளி ( என் வீட்டிற்கு மிக அருகில் உள்ளது ) மின்மயானத்தில் குறைந்தது பத்து ஆம்புலன்ஸ்கள், இறுதி ஊர்வல வண்டிகள் என வரிசை கட்டி நிற்கின்றன தமதுமுறை வருவதற்கு. . இந்த வண்டிகள்/ஆம்புலன்ஸ்கள் கிடைக்கப்பெறாத கரோனா தாக்கி உயிரிழந்த உடல்கள் குப்பை வண்டிகளில் எடுத்துச்செல்லப்படுகின்றன. இங்கு எதிர்த்த தெருவில் வசித்த 30 வயதுக்குள் உள்ள ஒரு பெண்மணியின் இறப்பு கண் முன்னால் நிகழ்ந்தது. நினைத்ததை விட பெரிய இழப்புகளை கொடுக்கத் தான் போகிறது இம்முறை. 
 
எங்கள் அப்பார்ட்மெண்ட்டில் மீண்டும் சுவரொட்டி ஒட்டி வைத்திருக்கிறோம்.. சானிட்டைஸர்களும் எச்சரிக்கை அறிவிப்புகளுமாக. மீண்டும் வந்து விட்டது இது ஒரு சுழல் தப்ப முடியாத சுழல். #இரண்டாம்அலை

No comments:

Post a Comment