Saturday, June 17, 2017

நாயினும் கடையேன்


இன்று பெங்களூரில் மதியம் மூன்று மணிக்கு தொடங்கிய மழை நிற்காது பெய்து கொண்டேயிருந்தது. நிகழ்ச்சி 0630க்கு எனினும் அத்தனை மழையில் ட்ராஃபிக் தொநதரவில் போய்ச்சேரவே 0635 ஆகிவிட்டது. உள்ளே நுழையும் போது மிகச்சரியாக புத்தக வெளியீடு தொடங்கிவிட்டது. பெங்களூர் இன்டர்நேஷனலில் நடைபெற்ற திரு தியோடர் பாஸ்கரனின் 'the book of indian dogs' நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். ராமச்சந்திர குகா வெளியிட்டார். பிறகு தியொடர் அவர்களின் பேச்சு. நாய்களில் இத்தனை வகைகளா?..என்னென்னவொ பெயர் சொல்லி அவைகளின் குணநலன்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

நிறைய சுவாரசியமான தகவல்கள். இந்தியாவில் போலீஸ் நாய்கள், ராணுவத்துக்கு பயன்படும் நாய்கள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படுவதாக தெரிவித்தார். இன்டியன் ப்ரீட்ஸ்களை தயார்ப்படுத்துவதில்லை. எகிப்து மற்றும் மொகஞ்சதாரோ காலங்களின் வரலாற்று குறிப்புகளை எடுத்து படங்களுடன் காட்டினார். தமிழ்நாட்டில் நடுகற்கள் நாய்களைப்பற்றியும் குறிப்பிடுபவனாக இருப்பதையும் காண்பித்தார். நாய்க்கென கோவில் கட்டியிருப்பது,நாய்களை தம் பிள்ளைகள் போலப்பார்த்துக்கொள்வது என தொடர்ந்தும் பேசினார். வெள்ளைக்காரர்கள் எப்போதும் இன்டியன் ப்ரீட்ஸ் ஒரிஜினல்ஸ் என அழைக்கத் தவறுவதில்லை

பழங்காலத்திலேயே நாய்களை வளர்ப்பு மிருகங்களாக வீட்டில் வைத்து பாதுகாக்கும் முறை இருந்து வந்தது. அவற்றின் கழுத்தில் பட்டி இட்டு பெட் டாக்ஸ்- களாக அவற்றை வளர்த்ததும் தெரிய வருகிறது. இந்தியாவில் அவை இன்னமும் வேட்டையாடவும், பாதுகாப்புக்கெனவுமே அதிக அளவில் பயன்படுகிறது.


நமக்குத்தெரிந்ததெல்லாம் தெரு நாய்கள் தான். இரவில் நடக்கமுடியாதபடி ஊரையே ஆண்டுகொண்டிருப்பவை. கிரீஷ் கர்னாட் வந்திருந்தார். அமைதியாக அமர்ந்து நிகழ்வுகளை கவனித்துக்கொண்டிருந்தார். ராமச்சந்திர குகா தமிழராம்.( எனக்கு இப்பத்தான் தெரியும்) பரபரவென இருக்கிறார், ஒரு இடத்தில் நிலை கொள்ளாது :) புத்தகத்தில் இருந்து குறிப்புகள் எடுத்துக்காட்டி பேசினார். வீரப்பனைப்போல வடநாட்டில் ஒரு கொள்ளையன் இருந்ததாகவும் அவனது அடியாட்களை அவன் வளர்த்து வந்த நாய்களே பிடித்துக்கொடுத்ததாகவும் ஜிம் கார்பெட் புத்தகத்தில் இருக்கிறது, (இந்த சாட்சிகளை எங்கனம் ஒத்துக்கொள்ளாதிருப்பது என அடியாட்கள் சரணடைந்ததாகவும்.)

கொள்ளையனைப் பிடித்தாகிவிட்டது . அவனின் அடியாட்கள் தப்பித்து ஓடும்போது போலீஸ் சுட்டதில் ஒருவனுக்கு மூக்கை அறுத்துக்கொண்டு போயிற்று. இந்த இருவரும் வெளியூர் தப்பிச்செல்ல ரயில்வே ஸ்டேஷ்னில் காத்திருந்த போது அங்கு தேடுதல் வேட்டைக்கு மாறு வேடத்தில் வந்த கமிஷ்னர் , வாருங்கள் ரயில் வர இன்னமும் நேரமிருக்கிறது என்றழைத்துக்கொண்டு அவர்களை வீட்டுக்கு கூட்டிச்சென்றார் அங்கு அந்த கொள்ளைக்காரனின் நாய் இருந்தது இவர்களை பார்த்ததும் பழக்க தோஷத்தில் வாலாட்டிக்கொண்டு கால்களை நக்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கெனவே காத்திருந்த அதிகாரி அவர்களைக்கைது செய்தார்.
 
மேலும் கொள்ளைக்காரனை தூக்கிலிடும்போது கடைசி ஆசையாக தமது வளர்ப்பு நாயை யாரேனும் வளர்க்க வேணும் என்று கேட்டுகொண்டான் என்ற சுவாரசியமான தகவல்கள் பகிர்ந்து கொண்டார். வீரப்பன் நாயேதும் வளர்த்தானா என்றவரிடம் , அப்படி வளர்த்திருந்தால் சீக்கிரம் பிடிபட்டிருப்பான் என்றார் பாஸ்கரன்.


 
புத்தகத்தில் இருந்து சில துளிகள். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் , பல இடங்களில் 'நாயினும் கடையேன்' என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கிறார். நாய்களையும் , பசு மாடுகள் இன்னபிற வளர்ப்பு மிருகங்களை வீட்டினுள் வைத்து வளர்ப்பது தமிழரின் வழக்கம். இது தெரியாது ஜல்லிக்கட்டுக்கு தடை என அறிவிலித்தனமான விஷயங்களை எதிர்க்க தமிழ்நாடே போராட வேண்டியிருந்தது.

நிறைய ஆதாரங்களைக்காட்டி பேசினார் பாஸ்கரன். தெருவில் தனியே சுற்றிக் கொண்டிருப்பவைகளிலும் வகைகள் உள்ளன. சென்னையில் ஒரு முறை தெருநாய்களை சுட்டுத்தள்ளவேண்டும் என அரசு முடிவெடுத்தபோது அதை எதிர்த்து அனிமல் ரைட்ஸ் குழுவினர் போராட்டம் நடத்தினர், அங்கு வந்த அப்போதைய கமிஷ்னர் இதில் எத்தனை பேர் அந்த தெரு நாய்களை தத்தெடுக்கத்தயார் எனக்கேட்ட போது நான்கே பேர் கை தூக்கினர். பின்னர் கூட்டம் முடியும்போது அவர்களும் காணாது போயினர் என்ற போது அரங்கில் சிரிப்பலை. தெரு நாய்கள் என்ற பதத்தை அவர் பயன்படுத்தவேயில்லை. யாரும் சொந்தம் கொண்டாடாத நாய்கள் என்றே கூறுகிறார். (Owner less Dogs) 

மேலும் நாய்களுக்கு 'ரேபிஸ்' வராது தடுக்க ஆண்டுதோறும் ஊசி போட வேண்டிய கட்டாயம் இருக்கிறது . அது ஒரு முறையில் சரியாகும் விடயமில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஊசி போடவேண்டும், அப்போது தான் தடுக்க இயலும்,எந்த அரசு செய்கிறது தெரு நாய்களின் கூட்டத்தை தடுக்க கருத்தடை செய்யலாம் என்ற யோசனையும் சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் ஆடுகளை வேட்டையாடும் நாய்களைச்சுட ஹெலிகாப்டர்களில் செல்வார்கள் என்றார். அங்குள்ள கிராமத்தினர் அவை வேட்டை தான் ஆடுகின்றன. ஆடுகளைப்புணர அல்ல. அதனால் அவற்றை கொல்லுவது பாவம் என்று தடுத்துவிட்டனர்.


 
ராமச்சந்திர குகா பேசுகையில் தமிழனாக இருந்த போதும் இதுவரை தமிழில் எழுதவில்லை. எனக்கு தமிழ் எழுத வராது என்றவர், பாஸ்கரனை நோக்கி இவர் இருமொழியில் எழுதும் வல்லவர். இவரும் ஒரு ரேர் ப்ரீட் என்றார் :)

பாஸ்கரன் வேலை பார்த்தது போஸ்ட் ஆபீஸ் ஜெனரலாக. அவர் இருந்தவரையில் ரேர் ப்ரீட்ஸ் நாய்களின் தபால் தலைகள் கொண்டு வர பகீரத முயற்சி எடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. அவர் ஒய்வு பெற்றதும் பின்னர் கமிட்டியில் உள்ளவர்களின் சிபாரிசின் பேரில் அவை தற்போது கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். சில தபால் தலைகளின் புகைப்படங்களை காட்டினார்.


பின்னர் பேச்சைக்கேட்க வந்தவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். வெளிநாட்டில் இருந்து 'ஹஸ்கி' நாய்கள் வாங்கி வந்திருப்பதாகவும் அவை இங்கு நிலைக்குமா என்ற கேள்விக்கு அவை எப்போதும் தம்மை இருக்கும் இடத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளும் திறனுள்ளவை என்றவர், லடாக் பகுதியில் உள்ள நாய்களை வளர்க்கவென இங்கு கொணர்ந்தபோது சென்னை மெரீனாவில் அத்தனை வெய்யிலில் தம்போக்கில் விளையாடிக்கொண்டு இருந்தன என்றார். இந்திய நாய்களை ஏன் உள்ளூர் காவல்/ராணுவப்பயன்பாட்டுக்கு ஏற்றுக்கொள்வதில்லை என்ற கேள்விக்கு அவற்றுக்கு பயிற்சி கொடுக்க யாரும் முன்வருவதில்லை. அலட்சியமும் ஒரு காரணம். 1972ல் ஒரு வழக்கில் உள்ளூர் கோம்பை வகை நாயை சாட்சியாக கொண்டு வந்து நிறுத்திய போது 'நாட்டு நாயெல்லாம் சாட்சி சொல்லவந்துருச்சா' என்று நீதிபதி கேலி பேசியதாக ஒரு செய்தி இருக்கிறது என்றார்.



.

No comments:

Post a Comment