Saturday, November 12, 2016

ராசாளி


எப்பவுமே எஸ்ரா'வுக்கு இந்த வாய்ஸ் ஓவர்ல ஒரு க்றேஸ் உண்டு. இங்க பெங்களூர் வந்திருந்தப்ப அதையே பேசிக்கிட்டு இருந்தார். வாய்ஸ் ஓவர்ல சொல்லி கதைய தொடங்கணும்னு. ஆரம்பிக்கிறது சரி..அதுக்காக இப்டி படம் பூராவுமா? கெளதம்?.. கொடுமைங்ணா. சரக்கு தீர்ந்திருச்சு,அவ்வளவுதான் அவுட்டு அப்டீல்லாம் எழுதப்போறதில்ல நான்..ஏன்னா அவர்கிட்ட இருக்குறத தானே வெச்சு எடுப்பாரு? ஹ்ம் சரிதானே. "என் பேர் தமிழ்ச்செல்வன் , நான்..."  அப்டீன்னு "காக்க காக்க"லருந்து அதயே தான் பண்ணீண்டுருக்கார். ஹிஹி.. நமக்குத்தான் புளிக்கிறது. அண்ணா பியர் புளிச்சா நன்னா கிக்கேறும், இங்க தாங்கல.

ட்ராவலாக்' எடுக்கலாம் தான். ஒரு மோட்டார் சைக்கிள் டயரி மாதிரி அதுலயும் காதல்,வீரம், பாசம் எல்லாம் உண்டு.முக்கியமா சே கபாடா இருந்தார் அதுல. இங்க ? 'கத்துக்கிட்ட வித்தைய மொத்தமா எறக்குன' லிங்குசாமி கூடத்தான் ஒரு ட்ராவலாக் 'பையா' (அடங்கொய்யா)ன்னு எடுத்தார். அதுலயுந்தான் அடிதடி காதல் வீரம், ஹ்ம்...அங்க காரு இங்க ராசாளி'ங்ணா. ராயல் என்ஃபீல்டு. நம்ம பாலா' அதுலதான் ஓசூர்லருந்து வருவார்.இப்ப ஃப்ராங்காய்ஸ் டீ பெங்களூர்ல ஒரு ஹிந்துஸ்தானி கச்சேரி நடந்தது.அதுக்கு கூட அந்த ராசாளீலதான் வந்தார். ஆனா பின்னால ஒரு மஞ்சிமா இல்லை. ஹிஹி..

அதெல்லாம் சரி. ஒரு வீட்டுக்குள்ள ஒரு மாசம்னு வெச்சுக்குங்களேன்.அப்டி இப்டி லீகலா பழகினாங்கன்னும் வெச்சிக்கலாம். குடும்பத்தோட ஒண்ணா இருந்தாங்கன்னும் வெச்சிக்கலாம் தான். அதுக்காக ஒடனே ராசாளீல பின்னால ஒக்காந்துக்கிட்டு ஒலகம் பூரா சுத்துததுக்கு ஒரு பொண்ணு ஒத்துக்குவாளாங்ணா ?..ரெண்டு வர்சம் கோலம் போட்டூமே இங்க பஸ்ல ஒரே சீட்ல பக்கத்துல பக்கத்துல ஒக்கார மாட்டாளுஹ.. இப்டிக்கும் வாஸப்ல நீட் சாட்(மட்டுந்தான்) ஓட்டி மெயின்டென் பண்ணிக்கிட்டு இருந்தாலுமே நடக்காதூ. ஓஹொ..இது சினிமாப்பா அப்டித்தான் ஒடனே பின்னாடி ஒக்காந்து 'தள்ளிப்போகாதே அடியெ' அப்டீன்னு பாடீருவாளுக..ஹிஹி..

தலைவி பேர் தெரியாம, இந்த சின்னப்பசங்களுக்கு முட்டாயி,அப்புறம் கேட்பரீஸ் எல்லாம் குடுத்து தலைவன் தலைவியோட பேரைத்தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுவார். அப்டித்தான் நாமெல்லாம் பாத்து பழகிருக்கோம். இங்க ஹிஹி தலைவி பேரை முதல்லயே சொல்லீர்றார் கெளதம். "பேரைச்சொல்லவா அது நியாயமாகுமா"ன்னு சிம்பு பாடீருவாரோன்னு பயந்தே போயிட்டேன். ஹ்ம்.அங்க ஹெலிகாப்டர்ல ..இங்க இது ராசாளீ.. ராசாளீ... அந்த சோகம் உன்னத்தாக்கிடுமோன்னு நினைக்கும்போது நின்னுடுது..அதான் காதல். லாட்ஜ்ல ரூம் புக் பண்ணும்போது கூட பேரச்சொல்ல மாட்டேங்றார்னா பாத்துக்கோங்களேன். அதுக்கு நமக்கு கடசீல ஒரு ட்விஸ்ட் வெச்சிருக்கார் கெளதம். ஆனா தேட்டர்ல அதப்பாக்றதுக்குத்தான் யாருமேயில்ல. ஹ்ம்..அந்தக்கொடுமய அப்பால சொல்றேன். இடைவேளைக்கி அப்பால பின்னாடி கேட்டுக்கிட்ருந்த வாஸப் சவுண்டு ஆஃப்..பின்னாடி பாக்றேன். சுத்தம் யாருமேயில்லை.

வசனம் எப்பவுமே வசனமாவே தோணாது அதுவும் காதல் வசனங்களெல்லாம் கெளதம் படங்கள்ல. "ஒரு ஃப்ளாஷ்ல வந்திருச்சு மச்சான்" "சொன்ன டைமிங்தான் தப்பு ஆனா மேட்டர் கரெக்ட்டு". அதேபோல தலைவனும் தலைவியும் வேறு வேறு சமயங்களில்  காதலைச் சொல்லுமிடமும் ஹ்ம்..கெளதம்க்கு ஒரு பூச்செண்டு. அதுக்கப்புறம் அந்த பூந்தொட்டியவே தூக்கி அடிக்கிற அளவுக்கு..படம் பயணிக்குது .ஹ்ம்...சரி வேணாம். "பயத்தப்பாத்து நாம ஓடக்கூடாது , நம்மளப்பாத்துதான் அது ஓடணும்" இப்டி கொஞ்சம் அப்பாலிக்காவும் ஓட்ற வசனங்கள்லாம் கீது.


கமல் ஒரு படம் எடுத்தார் ஹேராம்னு. ஒரு நாப்பத்தெட்டு பாஷா பேசீருப்பாளா அந்தப்படத்துல. இங்க ஒரு நாலஞ்சு பாஷா பேசறா. அதுல "நான் தமீழண்டா"ன்னு வேற ஒரு வசனம். மொதல்ல கெளதமே தமிழன் கெடயாது. அது சரி.பரவால்ல. விட்ரலாம். சிம்புவா வர்ற நண்பர் மகேஷ் , அருமை. மச்சான் மச்சான்னு கலக்குறார்.  இனிமே ஈரோவுக்கு பெரண்டா நிறையப் படங்கள்ல தோன்றுவார். சதீஷ்,சந்தானம், இவாளுக்கெல்லாம் வயசாயிடுச்சில்லியா அதனால. ஆமா சந்தானத்த எங்க காணம் அதுவும் சிம்பு படத்துல.. என்னவோ தெரியல.

"மேம் பீ மடோன்னா"ன்னு ஆல்பம்லாம் போட்டுக்கிட்டிருந்தார் பாபா சேஹ்கல். கொஞ்சம் ஹிப் ஹாப்/ராப் வெச்சிண்டு பொழுது ஓட்டி ஓய்ஞ்சு போனவர். இங்க மொட்ட போலீஸ். நான் கூட 'விசாரணை'ல வந்த அந்த மொட்ட போலீஸ்காரராக்கும்னு நினைச்சிட்டேன். கொஞ்சம் மராட்டியும், பாம்பே இந்தியுமா பேசறார். வில்லனுக்கு ஒத்துவரல அவரது உடல் மொழி.

பாடல்கள் இடம்பெறும் காலங்கள், அதற்கான காரணங்கள், புகுத்தும் இடங்கள் எல்லாமே எப்போதும் கெளதம் படங்களில் பிரமாதமாக இருக்கும். நீஎபொவ' மாதிரியே இங்கும்/எங்கும் பாடல்கள்  பொருந்தும் காட்சிகள். அதிலும் "தள்ளிப்போகாதே" பாடல் யாருமே எதிர்பாரா இடத்தில்.. ஆஹா சபாஷ் கெளதம். இதுவரை இப்படி இந்தியப்படங்களிலே வந்ததேயில்லை. 



மஞ்சிமா , ஆமாம்மா இந்த அம்மாவப்பத்தி ரொம்பவே சொல்லத்தான் வேணும். செம ஃபிஸிக்.நல்ல ஓங்குதாங்கா இருக்கா. விட்டா நன்னா ஆர்ம்ஸ்/ பைசெப்ஸ்லாம் காமிப்பா போலருக்கு சாக்ஷி மாலிக் மாதிரி சிம்புவத்தூக்கி அந்தால போட்டுர்றா மாதிரி ஒரு உருவம். சன் டீவீல எட்டு மணிக்கு ஒரு சீரியல் வருமே 'தெய்வ மகள்' அதுல காயத்ரி கேரக்டர்ல ஒரு வில்லி வருவா ( அவா ஊதினா இவா வருவா..ஹிஹி ) அது மேரி இருக்குறாங்கோ இந்த மஞ்சிமா. ஒருவேள அவாளோட தங்கச்சியோன்னு நினைக்க வைக்கும் உருவம். இப்டி ஒரு ஈரோயினா. ஹ்ம்.. தமிழ்ப்படங்கள்ல எப்பவுமே பூஞ்சையா, தலைவன் வந்து தான் காப்பாத்த வேணூம்னு நினைக்கிற தலைவிகளைத்தானே இதுவரை பாத்ருக்கோம். அப்டியும் இந்தப்படம் வழக்கமான ஈரோ ஓரியன்ட்டடு சப்ஜெக்ட்டூ.    





ஈரோயினுக்கு எக்கச்சக்க க்ளோஸப் வெச்சு, இன்னும் அழகா காட்ட முயற்சி செய்திருக்கார். தலைமுடி நீவிவிடுவதும், கோதி விடுவதும், ராசாளியின் பின்புறம் பயணிப்பதும் அவ்வப்போது தின்னக்கொடுப்பதும், உள்ளங்கைகளை சிம்புவின் தொடயில் வைப்பதும் என அத்தனை க்ளோஸப் ஷாட்கள்.அத்தனையும் அருமை. பாலச்சந்தர் இதுமாதிரிதான் கொஞ்சமே பாக்றா மாதிரி இருக்கிற பெண்டுகளை அவர்கள் அழகாக இருக்கும் சில கோணங்களில் மட்டுமே காண்பித்து காண்பித்து பிடிக்க வைத்து விடுவார்.அதேதான் இங்கே.

சிம்புவுக்கு என்னா இப்டீ ஒரு மேக்கப்பு , பிட்டு பட ஈரோ மேரி. தாடி கீடில்லாம் வெச்சிக்கிட்டு. செம சதை வேற போட்ருக்கு, 'வெட்டி'ன்னு சொல்லி அத ஜஸ்டிஃபை பண்ணீர்றார் கெளதம். அவரோட தங்கை 'அவ கேரளா'ன்னு சொல்லும்போதும், அதானெ பாத்ததேன்னு சொல்லும் போதெல்லாம் சிம்பு உள்ளேன் ஐயா. ட்ரெயின் ஃபைட்டு தான் நம்பறா மேரி இருக்கு. மத்ததெல்லாம் வேஸ்ட்டு வெத்து வேட்டு. இதுல கெளதம் ஒரு கேமியோ ரோல்ல வேற. பெரிய ஹிட்ச்காக்'ன்னு நெனப்பு.



ரஹ்மான் இருக்கார். ரொம்பநாளைக்கப்புறம் நானும் ஃபீல்டுல இருக்கேன்னு காட்றார். என்ன எப்ப பாத்தாலும் "கண்ணுக்கு மையழகு கவிதைக்கு சொளகழகு"ன்னு ஒரு பாட்டு மின்னாடி போட்ருந்தார் அதையே இங்கே தந்திக்கருவிகளில் வாசித்து வாசித்து போரடிக்க வெச்சிட்டார். என்ன சொன்னாலும் பின்னணி இசை என்பது அவருக்கு தான் வாய்க்கும். சரி அரசியல் பேச வேணாம். ராப்/ஹிப் ஹாப்களில் மலிந்து போகிறார் ரஹ்மான். என்ன சொல்வது அவரைப்பற்றி.

படத்தின் பின்பகுதி முழுக்க இருட்டு.அத்தனையும் அடிதடி. சலித்துப்போய் எழுந்து வரத்தோணுவது படத்தின் பெருங்குறை. சகிக்கவே இயலவில்லை. ஒருவேளை யாராவது அஸீஸ்டென்டு கிட்ட குடுத்து எடவேளைக்கப்றம் எடுக்க சொல்லீட்டாரோன்னு நினைக்க வைக்கும் சொய்வு, இதெல்லாம் கெளதம் தானா என சோதிக்கும் பல காட்சிகள். ஹ்ம்.. முதல் பாதி அருமை, ஹ்ம்...எல்லாக்காதலிலும் முதல் பாதி எப்போதுமே அருமையாகத்தானே இருக்கும்.




No comments:

Post a Comment