Monday, April 14, 2014

துளிப்பாக்கள்



இலையுதிர்காலம்
புலம் பெயர
நினைக்கும் மரங்கள்

-

எல்லாபேய்களும்
என்னைச்சந்திக்க வருமுன்
லாண்ட்ரிக்குச்சென்றுவிட்டே
வருகின்றன

-

என் வலைப்பூவிற்கும்
அவ்வப்போது தேவைப்படுகிறது
கொஞ்சம் வெய்யில்

-

காற்றை வரைய
முற்பட்டேன்
கலைந்த கிளைகளோடே
நிறுத்திவிட்டேன்

-

தற்கொலை செய்துகொள்ள
மலையுச்சியில் நின்றுகொண்டிருக்கிறேன்
எனக்கு முன்னாலேயே
நிழல் கீழே விழுந்துவிட்டது.

-

எனக்காக பூமி
தன்னைச்சாய்த்துக்கொண்டு
இந்த வெய்யிலை என்
முற்றத்தில் கொணர்ந்திருக்கிறது

-

விழ எத்தனித்த ஒரு துளி
மழைநீரை
அந்தக்காம்பு ஏனோ பிடித்து
வைத்துக்கொண்டிருக்கிறது
ஒரு கணம் தட்டிவிட்டுவிடலாமா
என எண்ணிய எனக்குள்
ஒரு மிடறு
உள்ளிறங்கிக்கொண்டிருக்கிறது

-

எத்தனை காடுமலைகள்
கடந்து வந்திருக்கும்
இந்தக்கைப்பிடி நீர் ?
என் கைகளையும்
ஒரு தரவாக்கிக்கொள்ளும் அது.

-

ஒரு மரத்தைக்கொல்வதும்
ஒரு கவிஞனைக்கொல்வதும் சுலபம்
இரண்டிலிருந்தும்
பறவைகளை நீக்கிவிட்டால்
போதும்

-

நினைத்தவுடன் பறந்துபோய்
மலர்களுக்கிடையே
அமர்ந்துகொள்ளும் பறவை நான்

-

உலகத்தில் இரண்டே பேர்
காதலிக்க நினைப்பவர்களும்
காதலிப்பவர்களும்

-

கனவுக்குள்
உறங்கினால்
வருவது
நனவாகத்தானிருக்கும்

-

மாற்றம் என்ற ஒன்று
எப்போதும் வருவதேயில்லை
அதனாலேயே அது
மாறாதிருக்கிறது.

-

உருளும் கூழாங்கல் நதியை
அதன்போக்கில் அனுபவிக்கிறது.

-

 

 .






6 comments:

  1. அருமை! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. துளிப்பாக்கள் யாவும் அருமை.

    தற்கொலை செய்துகொள்ள
    மலையுச்சியில் நின்றுகொண்டிருக்கிறேன்
    எனக்கு முன்னாலேயே
    நிழல் கீழே விழுந்துவிட்டது

    இதை மிகவும் இரசித்தேன்.

    ReplyDelete
  3. நன்றி தளிர் சுரேஷ் :)

    ReplyDelete
  4. நன்றி முனைவர் இரா.குணசீலன் :)

    ReplyDelete