Saturday, June 22, 2013

குறை கூறும் என் கவிதை

என்னை எழுதி விட்டுச்சென்றுவிட்டாய்
குறை கூறுகிறது என் கவிதை


உனக்கென காட்சிகளை முன்வைத்தேன்
அதனுள் வலிந்து
ஒரு சிறு பறவையையும் பறக்கவைத்தேன்
மெல்லிய சிறகுகளின் காற்றை
உணரச்செய்தேன்
தின்று எறிந்த பழத்தின் கொட்டைகளை
முன் அலகால் கொத்தி வரச்செய்தேன்
அலகினின்று கீழ் விழும் அதன் அதிர்வை
உணரச்செய்தேன்
நீயருகில் வரும்போது
அதை விர்ர்ரென்று பறந்து செல்லப்
பணித்தேன்


இவையாவற்றையும் கண்கொண்டுணர்ந்து
எழுதச்செய்த என்னை
வேலை முடிந்ததும் அந்தப்பறவை போலவே
விட்டுப்பறந்து செல்வது ஏனோ ?


எழுதி முடித்ததும் உறவை முறித்துக்கொள்தல்
கடவுளுக்கும் கவிஞனுக்கும்
வழமை போலிருக்கிறது.


.

2 comments: