Tuesday, October 24, 2023

கழுதைப்புலி - லியோ

 


பார்த்தா / பார்த்திபன் கதாபாத்திரம் மகாபாரதத்தில் வரும் அர்ஜுனனின் கதை. வில்லாளன் அர்ஜுனின் இன்னொரு பெயர் பார்த்திபன். போர் முடிவடைந்ததும் மனைவி மக்களோடு இமாலயம் சென்று வாழத் துவங்கினான். (நம்ம காப்பி ஷாப் பார்த்திபன் இமாசலப்பிரதேசத்தில் அமைதியாக வாழ்வார்) வில்வித்தையில் விஜயன் (விஜய் ! ) கண்ணைக்கட்டிக் கொண்டு கூட குறிபார்த்து அம்பெய்துவான். குறி ஒருபோதும் தவறாது. ( நெற்றிப் பொட்டில் பார்த்து சிறு தவறேனும் செய்யாது கொன்றழிப்பார் நம்ம ஜோஸப் விஜய்) கூடப்பிறந்தவர்களைக் கொன்றவன். தம்மை தனது திறமைகளை வீரதீர பராக்ரமங்களை மறைத்துக் கொண்டு வாழ்ந்தான் பலகாலமாக அஞ்ஞாத வாசத்தில் மஹாபாரத பார்த்திபன். நம்ம விஜய் அதையே தான் ’தியோக்’ நகரில் இமாசலத்தில் காஃபி ஷாப் வெச்சுண்டு வாழ்றார்.
 
’ஷ்வேதவாஹனா’ என்ற ஒரு பெயரும் மஹாபாரத அர்ஜுனனுக்கு உண்டு. (கறந்த பால் வெண்மையுடன் கூடிய வெள்ளைக்குதிரைகள் பூட்டியவெண் தேரில் பயணிப்பவன் எனப்பொருள்படும்) ஒரு கட்டத்தில் வீட்டுக்கு விரைவாகச் செல்லவேணும் என வெள்ளைக் குதிரையில் பயணிப்பார் நம்ம காஃபி ஷாப் பார்த்திபன் ... அஞ்ஞாத வாசத்தில் பிரிஹன்னளை என்ற மூன்றாம் பாலினர் ஒருவருக்கு ஆடல் பாடல் எல்லாம் சொல்லிக் கொடுக்கும் குருவாக இருந்தான் மஹாபாரத பார்த்திபன். நம்ம விஜய் சார் நன்னா ஆடுவார், அதுவும் பாடிண்டே ஆடுவார். 🙂 Picture Yourself ன்னு குழந்தைகளுடன் அமர்ந்து கதை சொல்வார் நம்ம பார்த்திபன். அது வேறொன்றுமில்லை. சக்கரவியூகம் தான். நாலா பக்கமும் எதிரிகள் புடைசூழ வென்றெடுத்து வெளிவருவது எங்கனம் என வினவுகிறார். அதையே திரும்பத்திரும்ப சொல்லிக் கொடுத்து பதிலை வரவழைக்கிறார்.
 
எந்தப்போருக்குச் செல்லும் முன்பும் பலி கொடுத்தல் என்பது அக்காலத்தில் சகஜந்தானே?... மஹாபாரததில் குருக்‌ஷேத்ரா போரில் வென்றெடுக்க வில்லாளன் அர்ஜுனனின் மகன் ‘அரவானை’ப்பலி கொடுத்தனர். அதே போல இங்கு பார்த்திபனையே தேர்ந்தெடுக் கின்றனர். அதனால தர்க்கப்பிழை ஒன்றும் தெரிய வில்லை.
 
கூட்டிக்கழிச்சு எல்லாம் சேர்த்துப்பாருங்க , நம்ம லியோ வந்து சேர்வார் எல்லா இடத்திலும். என்ன இங்க ட்ரக் மாஃபியா/ Breaking Bad ஹெய்சென்பர்க் எல்லாம் சேர்த்து இக்காலத்துக்கு சுவையாக கலவையாக கொடுத்திருக்கிறார் லோகேஷூ.
 
ஒரு விஷயம் பாராட்டலாம். கதையின் நாயகன் மட்டுமல்ல. மொத்தக் குடும்பமுமே கிறிஸ்து மதத்தினர். இதுவரை ஒரு படமும் நான் இத்தனை வேற்று மதத்தினர் பாத்திரங்களை வைத்து தமிழில் பார்த்ததில்லை. பாபநாசம் கூட ஒரிஜினலில் இருந்த கிறிஸ்டியன்ஸை இந்துவாக்கித்தான் அழகு பார்த்தது.
 
ஒரே ஒரு சந்தேகம் ,அதற்கு எந்த பதிலும் இல்லை. சஞ்சய் தத் தம் மகனை தேடிவருகிறார். மீண்டும் அந்த ‘டதூரா’ ப்ராண்ட் போதைச்சரக்கை மீள மார்க்கெட்டுக்கு கொண்டுவர. ஏனெனில் லியோவுக்கு மட்டுமே அதன் சூத்திரம் தெரியும். ஆனால் ஹெரால்ட் தாஸ் ஏன் லியோவைச்சந்திக்க வேணும் என விரும்புகிறார்.? போட்டுத்தள்ளவா?..அதான் இரட்டையரில் தங்கையை ஏற்கனவே பலி கொடுத்தாயிற்றே ?!... சும்மா (சஞ்சய் தத்) அண்ணன் தேட்றான் நானும் தேட்றேன்னு சொல்வதை நம்ப இயலவில்லை. சரி அப்டியே குடுமபத்துல இருக்கறவங்களையெல்லாம் போட்டுத் தள்ளிட்டு என்னா ம**க்கு பிஸ்னெஸ் பண்ணோணும் ??!🙂 
 
Good Bad Ugly படத்துக்குப்பிறகு நிறைய அதே போன்ற ஸ்டீரியோடைப் கெளபாய் படங்களாக எடுத்துத் தள்ளினர் அமெரிக்கர்கள். எல்லாவற்றுக்கும் ’என்னியோ மரிக்கோன்’ தான் இசைக்கவேண்டும் என தவம் கிடந்தனர். ஒவ்வொரு படத்தையும் பார்த்து முடித்து இசைக்க முற்படும்போது ’என்னியோ’ அப்படியே தூங்கி விடுவார். அதே கதைதான் தம்பி அநிருத்துக்கும். வர்ற படமெல்லாம் அடிதடி/ட்ரக் மாஃபியா/கொலை கொள்ளை/ கட்டப் பஞ்சாயத்து என்றே வாய்க்கிறது. லியோவில் கண்டிப்பாக உறங்கியே இருப்பார் என்பது திண்ணம். கொஞ்சம் கூட க்ரியேட்டிவிட்டிக்கு இடம் கொடுக்காமல் அரைத்த மாவையே அரைத்துத்தள்ளப்பணித்தால் இப்படித்தான் 🙂 டெக்னிக்கலாக மிரட்டி இருக்கும் லோகேஷ் மற்றும் பரமஹம்சாவின் முன்னில் தம்பி took a back seat... ! பாடல்களுக்குக் கொடுத்த சிரத்தை பின்னணி இசைக்கு இல்லை. ஆனாலும் ஆர்ப்பாட்டமான அந்த ட்டூட்டூ சாங். அற்புதமான இந்திப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் (இவருக்கு இப்படி ஒரு கெதியா?... ’ஏகே வெர்ஸஸ் ஏகே’-வெல்லாம் எடுத்தவர்யா ?.. அடக்கெரஹமே?? ) மற்றும் அவரின் கூட்டாளிகளை சுட்டுத் தள்ளிவிட்டு உடனே தொடங்கும் டூன் டுன் டுன் டுன் டுன் பாடல் அமர்க்களம்டா.
 
நீங்க என்னாதான் சொன்னாலும் இங்கிலீஷ் படத்துலருந்து சுட்டதுன்னாலும் இப்டி ஒரு லைவ் ஆக்‌ஷன் சீக்வென்ஸ் ஞான் எப்போழும் கண்டிட்டில்லா. அந்த காஃப்பி ஷாப் ஸ்டண்ட். மிஷ்கின்/சாண்டி இன்னபிற ஆட்காரோடு அடிச்சுப்பொளிக்கும் சண்டைக்காட்சி. அதிலும் இன்னமும் ஒரு கூடுதல் சுவாரஸ்யம். மொத்தமாக அடிவாங்கி ஒவ்வொருவரும் மூலையில் கிடக்க, விஜய் களைத்துப்போய் நிற்க, மிஷ்கின் கேட்பார் ‘சாக்லேட் காப்பீ....?’ என. சிரிக்காத ஆளில்லை. காசு எடுத்தாச்சு கெளம்பினா போய்ட்டே இருக்கலாம் என்ன எழவுக்குடா உனக்கு ‘சாக்லேட் காப்பி கேக்குது’ என. அத்தனையும் ரியல் ஆக்‌ஷன். அந்தக்காட்சிக்கு தேர்ந்தெடுத்த பாடலும் அருமை. டேய் பூனை பாட்டைப்போட்றா... ஹிஹி
 
ஒண்டாத ஒரே விஷயம். ஹயீனா மட்டுமே. அனிமல் லவ்வர் என்ற அடைமொழி, இவரென்ன ஃபாண்டமா? எல்லா அனிமல்ஸையும் பொத்திக் காப்பாத்தி சரணாலயத்துல கொண்டு சேக்றதுக்கு?.. இருந்தாலும் முதற்பத்து நிமிடக்காட்சிகளில் ஹயீனா அவரின் முதுகில் கீறத்தானே செய்யுது? ஒரு ”ட்டீ.ட்டீ” இன்ஜெக்‌ஷன் போடேண்டாமோ ?...அப்டியே அலையிறார். கடையில கல்லாவில போய் ஒக்கார்றார் விசைண்ணா! ( குடும்பத்தை/தம் கூட்டத்தை விட்டுப்பிரிந்த ஹயீனா தான் நம்ம காப்பி ஷாப் பார்த்திபன். சிம்பாலிக்கா அப்பாலிக்கா 🙂 )
 
பீம்சிங்கின் ஜானர் குடும்பம்/தியாகம்/ கூட்டுக் குடும்பம்/ஏகத்துக்கு பிழிந்தெடுக்கும் செண்டிமெண்ட். பாரதிராஜாவுக்கு கிராமம். எஸ்பி முத்துராமனுக்கு மசாலா ஜானர். அதுபோல லோகேஷின் ஜானர் எப்போதுமே இதுபோல அடல்ட் சமாச்சாரம் தான். ட்ரக்ஸ்/ மாஃபியா/ போலீஸ்/ அண்டர்க்ரவுண்ட் ஆக்டிவிட்டீஸ். இதிலென்ன தவறு இருக்கமுடியும்?... #கழுதைப்புலி

No comments:

Post a Comment