Friday, October 1, 2021

கடவுள்களின் கலகம் (Coup of Gods)



'மெஹ்தி ராஜாபியன்’ ஒரு பயங்கரமான க்ரிமினல். பல முறை சிறை சென்றார். பலமுறை இல்லச்சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தனிச்சிறையில் செல்லில் அடைக்கப்பட்டு இருந்திருக்கிறார். முழு அரசாங்க கண்காணிப்பில் தொடர்ந்து இன்னமும் இருப்பவர். அவர் செய்த குற்றம் தான் என்ன? பெண்களை, பாடகிகளை அழைத்து தமது இசைத்தொகுப்பில் பாடவைத்தார் என்பதே! இவ்வளவையும் மீறி சென்ற வெள்ளியன்று அவரின் புதிய் ஆல்பம் வெளியாகி இருக்கிறது. ’நான் இசையின் மூலம் விடுதலையடைய விரும்புகிறேன். இசைக்கொடி மேலெழும்போது வானத்தில் இசையின் விடுதலை காட்சியளிக்கும் அதுவே எனக்கு உத்வேகம் ’என்கிறார்.
 
2007ல் ஒரு அண்டர்க்ரெளண்ட் இசைத்தளமாக ‘Barg Music’ ஐ உருவாக்கி அதன் மூலம் தமது இசையை விநியோகித்து வந்தார். ஆறாண்டு களுக்குப்பிறகு அது கண்டுபிடிக்கப்பட்டு முழுதுமாக அந்தத்தளம் மூடப்பட்டது. அலுவலகமும் அடைக்கப்பட்டது. சிறைப்பிடிக்கப்பட்ட ராஜாபியன்,மிகவும் குரூரமான சிறையான ’Evin Prison’ ல் அடைக்கப்ட்டார். இடைவிடாத 24 மணிநேர விசாரணை, கைகால்கள் துண்டிக்கப்படும் என்பதான மிரட்டல்கள், சொல்லொணா துயரங்கள் அவருக்கு கிடைத்தன. இத்தனையும் அவர் இசைத்த தனால் விளைந்தவை. மூன்றுமாத தனிச்சிறையில் அடைக்கப்ட்ட காலங்களை இப்படி வர்ணிக்கிறார். ‘கண்களை மூடிக்கொண்டு மூன்று மாதகாலங்கள் கொடுஞ் சிறையில் காலந்தள்ளினேன்,அப்போது என் காதில் கேட்டவையெல்லாம் இசை இசை மட்டுமே , அப்போது தான் உணர்ந்தேன் இசையின் மகத்துவம் என்னவென்று..அதன் சக்தி என்னவென்று!’
 
2016ல் மீண்டும் அதே சிறையில் அடைக்கப்பட்டு, உண்ணா நோன்பு இருந்ததில் மேலும் அங்கு கிடைத்த கடும் தண்டனைகளால் உடல் நலிவுற்றார். தன் பார்வையை முற்றிலும் இழந்தார். ஒரு இசைக்கருவி போலும் இசைக்க முடியாது போனது அதன் பின். சிறையிலிருந்தபோதே தாம் உருவாக்கி வைத்திருந்த இசைக்கோவைகளுக்கு உயிரூட்ட எந்த உள்ளூர் இசைக் கலைஞர்களும் தயாராக இல்லை. இன்ஸ்டாக்ராம்/ வாட்ஸாப் வழி வேற்று வெளிநாட்டு இசைக் கலைஞர்களை தொடர்பு கொண்டு பாடவைத்தார். இதன் மூலம் அவருக்கு க்ராமி அவார்டுகள் கொடுக்கும் ரிக்கார்டிங் அக்காடமியின் சி.ஈ.ஓ ஹார்வி மேஸன் ஜூனியரின் தொடர்பு கிடைத்தது. இவரின் இசையை புகழ்ந்து தள்ளுகிறார் ஹார்வி.

மேலும் இப்போது வெளிநாட்டு பயணங்களுக்கான தடைகளுடன் உள்நாட்டிலேயே வசித்து வருகிறார். இந்த முப்பத்தோரு வயது மெஹ்தி ராஜாபியன். இந்த 2021/22 ஆண்டுக்கான கிராமி விருதுகளை வெல்லும் பாக்கியம் எனக்கு நிச்சயம் கிட்டும் அதன்மூலம் எனது வக்கீல்கள் எனை வெளிநாட்டு பயணங்களின் தடைகளை நீக்க உள்ளூர் நீதி மன்றங்களில் வாதிட்டு வெளிக் கொணர்வர் என்று உறுதி படக்கூறுகிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பாக இவரின் இசை ஆல்பம் யூட்யூபில் வெளியிடப்பட்டிருக்கிறது. Truly International Music! Indeed.
 
மெஹ்தி வசிக்கும் நாடு இரான். #கடவுள்களின்கலகம்

 

No comments:

Post a Comment