Sunday, March 28, 2021

இசைவிருது

 திரையிசை இப்போது கொஞ்சம் சுணங்கித்தான் கிடக்கிறது. மெச்சூரிட்டி இல்லாத இசை பெருகிவிட்டது. அதற்கான தளங்கள் உருவாகாமலில்லை. இருப்பினும் மேம்பட்ட தரமிக்க இசை என்பது தென்னகத்தில் இல்லை எனவே சொல்லலாம். ராசைய்யா தமது பொற்காலங்களிலிருந்து ஓய்ந்து விட்டார். ரஹ்மானியாக்களின் காலமும் கடந்துவிட்டது.  சிறுவர்களை முன்னிறுத்த மாஜா, யாழ் என அமைப்பை உருவாக்கி இருக்கிறார். கொஞ்சம் தேக்க நிலை இருக்கிறது என்பது உண்மைதான். இதுகாறும் திரைப்படத்திற்கென பின்னணி இசையில் இருந்து வந்த முக்கியத்துவமும் அதை முழுமையாகக் கொடுக்க நினைக்கும் இசை அமைப்பாளர்களும் அருகி விட்டனர் என்பதே உண்மை.

யாரும் எதிர்பார்க்காமலில்லை. வந்துவிழும் இசையை அமைதியாக கடந்து சென்று கொண்டு தானிருக்கிறோம் மேலும் பழைய இசையை நமக்குள் அசை போட்டுக்கொண்டே என்பதே உண்மை. இன்னமும் ஒரு ஆர்ப்பாட்டக் கால, கட்டுடைக்க முயலும், மேலும் இதயத்தை அறுத்து உள்ளிருந்து நீர் கசிய விடும் இசையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு தானிருக்கிறது தென்னகம். இன்னார் செய்கிறார் இன்னாரால் இயலவில்லை எனச்சுட்டுவதற்கு எனக்கு விருப்பமில்லை. இருப்பினும் மேம்போக்கான இசையே போதும் என்றாகி விட்டது போன்ற ஒரு தோற்ற மயக்கம் நிலவுவது உண்மைதான். யாருக்கும் நேரமில்லை எனற கருத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. மேலும் மென்மேலும் திறப்புகள் இருக்கின்றன, மிகச்சில மற்றும் குறுகிய வாய்ப்புகள் என்ற முற்காலம் போலல்லாது இப்போது  அவையனைத்தும் பெருகிவிட்டது. தரம் இல்லை. கூடவே கட்டற்ற சந்தையும் ஒரு பிழை.

முன்பு தென்னக இசை வடநாடுசென்றடையவில்லை என்ற காரணத்தினால் சிற்சில சமரசங்கள் செய்து கொண்டு இசைத்தவை அவரை சர்வதேச சந்தை வரை இட்டுச்சென்றது. ஒரே பாடலை முழுத் துணைக்கண்டமும் கேட்கவேணும் என்ற சந்தை மனப்பான்மை காரணமாக இசைக்கப்பட்ட பாடல்கள் மண்ணுக்குரியதாக அல்லாது மண்ணை விட்டகன்ற ஒன்றாகக்கருதி ஒதுக்கப்பட்டது கண்கூடு .

இப்போதைய இளம் இசையமைப்பாளர்களும் அதே பாணியில் சர்வதேசச் சந்தையை மனதில் இருத்தி இசைத்துக்கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. வேறுபாடுகள் காண்பிக்க வேணும் என்றெண்ணி நிலத்திற்கொவ்வாத இசையை கொண்டு வந்து சேர்ப்பதில் என்ன பெருமை இருந்து விடப்போகிறது ? ரிமோட்டின் அடுத்த பொத்தானை அழுத்தினால் என்னால் அந்த தேசத்து இசையை அதன் பாரம்பரியத்தில் வளர்ந்த ஒருவனால் இசைக்கப்படுவதை  என்னால் காண இயலுமே? அதையே கொடுக்க இவர் எதற்கு? வெற்றிப் பாணிகளில் சிக்கிக்கொண்டு புதியதைக்கொடுக்க இயலாது தமக்குள் உழன்றுகொண்டிருக்கும் இவர்கள் தாமே மறுப்பர் விருதுகளை.
#இசைவிருது

No comments:

Post a Comment