Tuesday, September 6, 2016

தப்பு பண்ணினா சாமி கண்ணக்குத்திடும்


டனல் விஷன்

நீங்க ஒரு தப்பு பண்ணீட்டீங்கன்னா, அத நெனச்சு பின்னால வருத்தப்படுபவரா? இல்லை காலங்கடந்தாவது வருத்தப்படுபவரா ?,,இதெல்லாம் எதுவுமே இல்லைன்னுட்டு , செய்த தவறுகள் தான் தன்னை இப்டி போட்டு வாட்டுது , இந்த நெலமைக்கு கொண்டாந்து விட்ருக்குன்னு நினைப்பவரா?..ஹ்ம்… இப்டீல்லாம் இருக்கறவரா இருந்தா இந்தப்படம் பார்க்கலாம். அதெல்லாம் ஒண்ணுங்கெடயாதுன்னு தூக்கியடிக்கிறவரா இருந்தா படம் செம போர் அடிக்கும்.

மணிகண்டன் படம் , காக்கா முட்டை கொஞ்சமே வேறுபட்டு இருந்ததால குற்றமே தண்டனை' பார்க்கலாம்னு முடிவு பண்ணி வழக்கம்போல டொரண்ட் தேடினா , மூணு வர்சம் உள்ளே போறியா இல்ல மூணு லெட்சம் கட்றியான்னு ஒவ்வொரு டொரண்ட் சைட்லயும் போய் போட்டு வெச்சிருக்காங்க்ய. அடங்கொய்யால.. இப்ப ரீசண்டா ஒரு லைம் டொரண்ட் ஓனர்னு நினைக்கிறேன், அரெஸ்ட் பண்ணி உள்ள தள்ளிவிட்டார்கள். மச்சி அவ்ளவ்தானா இனிமே… சரி படத்த விடு, நமக்கு ஏகத்துக்கு வாரி வழங்கிய பலான காரியங்களுக்கெல்லாம் சரியான ஆப்பு வெச்சிட்டாங்கயளேன்னு நெனக்கும் போது ஸ்ரீனி தான் வாங்க ராம் , நீலசந்தரால ஒரு காட்சி போட்ருக்கான் , போய்ப்பார்க்கலாம்னு கூப்பிட்டார்.

அங்க போனா இருக்கிற போஸ்ட்டரெல்லாம் உள்ளூர் போலீஸே கிழித்துக்கொண்டிருப்பதை பார்த்தோம். காவிரித்தண்ணி விடமுடியாது , இருக்கிற தமிழ் பட சுவரொட்டி மொதக்கொண்டு கிழிச்சுப்போடுவோம்னு போலீஸ் தல மேல நடந்துகொண்டிருக்கிறது. சரி இன்னிக்கு இவங்க படம் போட்டா மாதிரிதான்னு தேவுடு காத்துக்கெடந்தோம். 8:15க்கு படம் என்றவர்கள் எட்டு மணிக்கெல்லாம் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்த போதுதான் ஊர்ஜிதமானது படம் இருக்கு மச்சின்னு. செந்தில் இடைல கூப்ட்டு நான் வரலைன்னுட்டார். நாளைக்கு பந்த்னு டிக்ளேர் வேறே பண்ணீட்டா..இந்தத்தொல்ல வேறே..நீலசந்த்ராலருந்து யெலஹங்க்கா போணும் ஸ்ரீனிக்கு , எனக்கு மாரத்தஹள்ளி வரை..இடையில பிடிச்சு எதையாவது எரிச்சு விட்ருவானுஹளோன்னு வேறே பயம்..அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்கலை. போஸ்ட்டரைக் கிழித்தது வரை போதுமென காவல் ஜீப் கிளம்பிச்சென்று விட்டது.

பாலாஜி தியேட்டர் அவ்வளவு மோசம் ஒண்ணுமில்லை. என்ன ஒரு இருவது டிக்கெட் வந்திருக்கும் அவ்வளவு தான். உள்ளே எழுத்து ஓட ஆரம்பித்துவிட்டது. கையிலிருந்த டிக்கெட்டை கிழிப்பவரிடம் கொடுத்தா, அவர் கிழிக்காமலேயே முழு டிக்கெட்டையும் வாங்கி வைத்துக்கொண்டு உள்ள போங்க என்றார். நின்று நின்று பார்த்துவிட்டு பின் உள்ளே சென்று மறைக்காத சேர் பார்த்து உக்காந்தோம். ஏகப்பட்ட வாகை மலர் இருபுறமும் சூழ்ந்த சின்னங்கள் ஓடிக்கொண்டு இருந்தது. படத்துக்கு கிடைத்த நிறைய வெளிநாட்டு விருதுகள்.

ரஷோமான் பார்த்து சிலாகிச்சிருப்பார் போலருக்கு மணிகண்டன். திரும்பி வண்டீல வரும்போது அதத்தான் சொல்லிட்டு வந்துட்ருந்தேன் ஸ்ரீனியிடம். ஒரு கொலை , மூன்று பார்வைகள், மூன்று சந்தேகப்படும் நபர்கள், அவர்களின் வாயிலாக நடந்தவற்றை ஒப்புவித்தல் நீதி மன்றத்தில்..இப்ப தெரியுதா , ரஷொமான் தான்னு..ஹிஹி.

விதார்த்துக்கு டனல் விஷன் , ஒரு குவியம் போலத்தான் பார்வையே தெரியும். அதை அவ்வளவு அழகாக மறைத்துவிட்டு எப்படி சமாளிக்கிறான் பாவி ? போலீஸ்கிட்ட கூட. சம்மதிக்கணும் மாஷே..நிறைய சிகரெட் பிடிக்கிறார். கீழே சப்டைட்டிலோடே,, வுடி ஆலன் தன்னோட படத்தை இந்தியாவில ரிலீஸ் பண்ண நினைக்கும்போது இப்டி புகை/பகை சப்டைட்டிலோட தான் வெளியிடுவோம்னு தணிக்கை அலுவலகம் சொன்னதுக்கு எம்படத்து மேல நீ யார்றா கிறுக்கிறதுக்குன்னு சொல்லி படத்தை ரிலீஸ் பண்ணவேவேணாம்னு மறுத்துட்டதா ஒரு செய்தி. மணியும் தான் இருக்கார்..ஹ்ம்..

ரஹ்மான் அவ்வளவு சரியா தன்னொட பார்ட்டை செய்யவில்லைன்னு தான் சொல்வேன்.. வழக்கம்போல எல்லா வில்லன்களும் நடிப்பது போல நடிச்சு வெச்சிருக்கார். உடல் மொழில ஒரு வித்தியாசமும் காமிக்காம என்னவொ போங்க..அந்த இன்னொரு சஸ்பெக்ட் பரவால்லை.வக்கீலுக்கு  ஜூனியர் அஸிஸ்டெண்ட் செம செம. கலக்குறார். கூத்துப்பட்டறையின் ஆக்டர் என ஸ்ரீனி என்னிடம் கிசுகிசுத்தார்.

நிறையத்தவறுகள் ,கண்ணி வெச்செல்லாம் பிடிக்கணும்னு அவசியமில்லாத சாதாரணமாகவே கண்டுபிடித்துவிடும் ஓட்டைகள் , கதையில் , திரைக்கதையில், என. இருந்தாலும் மன்னிக்கலாம். கண்ணாஸ்பத்திரிக்கு ஏன் போறேன்னு கேக்கற போலீஸு , இவ்வளவு பணம் எங்கருந்து வந்துச்சுன்னு ஒரு தடவ கூட விதார்த் கிட்ட கேக்கமாட்டாங்களா ?..ஹ்ம்..? க்ரெடிட் கார்ட் பேமேன்ட் கலெக்ஷ்ன்லாம் இன்னுமா கேஷ்ல நடக்குது ? என்னவோ மணி சொல்றார் நாம கேட்டுப்போம். ஐஸ்வர்யாவின் ஃபோனிலிருந்து இன்னொரு ஃபோனுக்கு நிறைய கால்ஸ் போயிருக்கு என சொல்லும் போலீஸ் ஐஎஸ்ப்பி'யை விளித்து அழைப்புகள் எந்த இடத்தில் இருந்து பெறப்பட்டிருக்கிறதுன்னு கேக்கவே கேக்காதா ?...ஹ்ம்..?! போலீஸ் நாய் விதார்த் அபார்ட்மெண்ட் வரை மூக்கை நீட்டிக்கொண்டு வந்துவிடாதா ?!..ஹ்ம்..?!

ஒனக்கு எவ்வளவு வேணும்னு கேட்கும்போது மூணு லெட்சத்தி இருபதாயிரம்னு சொல்லும் போது சிரிப்பலை தான் எழுகிறது. இந்த பதிலிலிருந்தே இவனை நம்பலாம்னு, போட்டுக்குடுக்க மாட்டான்னு ரஹ்மான் நம்பும் இடம் அருமை. தனக்குத்தேவையானதை மட்டுமே கேட்கும் அந்த மிடில் க்ளாஸ் மெண்ட்டாலிட்டி ஆஹா. அருமை மணி. ஆனாலும் அந்த நாசர் கேரக்டர் எல்லாவற்றையும் ரொம்பச்சாதாரணமா , துணையின்றித்தவிக்கும் , அந்த கேரக்டர் சொல்லிவிடுகிறது. சினிமாத்தனமான டயலாக்கை கூட ' தருமம் வேறோண்ணூமில்லை , தேவைதான்' தருமம்ம்ம்ணூ' ஹிஹி.. கேஸ் அடுப்பு ஆன் பண்ணி ஒரு கண்ணாடி சிற்பம் பண்றார் பாருங்கோ , கண்ணுல ஒத்திக்கலாம்ங்க்ணா.

விதார்த் கேட்கும் டெலிஃபொன் நம்பர்களை தேடியெடுத்துக்கொடுக்கும் அந்த சேட்டு வீட்டுப்பொண்ணு மாதிரி இருக்கும் பூஜா. கொஞ்சமாக தலையை உயர்த்தி உள்ளுணர்வோட பார்க்கும் கால் கேர்ள் ஐஸ்வர்யா. உண்மையை மறைத்து அயர்ன் செய்யும் பெண்மணி என பல லெவல்களில் வாழும் பெண் கேரக்டர்கள் .

ஏமாற்றுவது என்பது படத்தில் குற்றவுணர்வேயின்றி எங்கும் பரவிக்கிடக்கிறது. நமக்கு பணம் கிடைத்தால் போதும் என அந்த டாக்டர் செகண்ட் ஒப்பீனியன் கேட்டீங்களா என்று கேட்டுவிட்டு பின்னர் உணர்ந்து உண்மையை சொல்லுகிறார்.

ராசைய்யாவைப்பற்றி பேசியே ஆகவேணும். அப்படி ஆக்கிட்டாங்க மக்கா. இந்தப்படத்துக்கு இசையமைக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்பது தான் எனக்கு புதிராக இருக்கிறது. ஏனென்றால் கதை அப்படி. கொலை, ரத்தம் , அடிதடி , அராஜகம் இப்படியான தலைப்புகளில் வெளிவரும் படங்களை அவர் ஒத்துக்கொள்வதில்லை. ஒதுங்கியே இருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாகவே அவரின் இசை மெல்லிய ஜாஸினை அடிப்படையாகக் கொண்டு ஒலிக்கிறது என்பதே நிஜம். இருப்பினும் ஓநாய் படத்துக்கு இசைத்தார். ஹ்ம்.. இங்கு பின்னணி மட்டுமே பாடல்கள் இல்லை. என்னுடைய இசையை எடுத்துவிட்டு படத்தைப்பார் என செல்வமணியிடம் ஒரு முறை சவால் விட்டார் ராசைய்யா ' கேப்டன் பிரபாகரன்' படத்துக்கென நினைக்கிறேன். மின்உருகி பிடுங்கப்பட்ட வீடு போல இருண்டு தான் கிடக்கும். இங்கும் அதே நிலை.

இந்தப்படத்திற்கு இயற்கையான இசை, அக்கம்பக்கங்களில் இயல்பாக வெளிவரும் சப்தங்களை மட்டுமே வைத்து இசைத்திருந்தால் என்னவென ஒரு 'அறிவுச்சுழி' கேட்டிருக்கிறது. படத்தைப்பார்க்கும்போது காதுகளை திறந்து வைத்துக்கொண்டு கேட்டிருக்காது அந்த சுழி என நினைக்கிறேன். திகில் படங்களுக்கு/இது போன்ற ஸஸ்பென்ஸ் நிறைந்த படங்களை பின்னணி இசை தான் பார்ப்பவரை/கேட்பவரை ஒன்ற வைக்கும். இசையேயின்றி இயல்பாக விட்டிருந்தால் சலிப்பு தான் மிஞ்சும். என்னவோ நடக்கப்போகிறது, எதிர்பாரா நிகழ்வுகள் நிகழப்போகின்றன என்பதையெல்லாம் பார்ப்பவரின் இதயத்துடிப்பை அதிகரிக்க வைக்க ஆர்ப்பரிக்கும் இசை அவசியம். சிம்ஃபொனி இசைத்தவருக்கு இங்கிருக்கும் கற்றுக்குட்டிகள் சொல்லிக்கொடுக்கின்றன. அட சாத்தானே.

பின்னணி இசை பரவலாக இரைந்து கிடப்பினும் , இயல்பான அப்பார்ட்மெண்ட் அக்கம்பக்க/மரங்கள் அசையும், குழாயிலிருந்து நீர் சொட்டும்/சாலை இரைச்சல்கள்/ ஆஃபீஸ் களேபரங்கள்/ டெலிஃபோன் அதிரல்கள்/ போவோர் வருவோர் செருப்பு/ஷூ ஒலிகள் என படம் முழுதும் வியாபித்துக்கிடக்கிறது இயல்பான ஒலி. யாரோ ஒருவர் சொன்னதை, அவருக்கு இசைக்ககூடத்தெரியாது , ரசிகர் மட்டுமே , அவர் சொன்னதை வேத வாக்காக எடுத்துக்கொண்டு இயல்பான சப்தங்கள் இல்லை என ஒப்பாரி வைக்கும் அறிவுச்சுழிகள். ஐயோ சாமி. கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய்..ஹ்ம்….!!

பின்னணி கருவிசை இதுவரை அவர் செய்த எந்த துணுக்குகளையும் சாராது புதிதாக ஒலிக்கிறது. படம் முழுக்க. படத்தின் காலம் சொல்லப்படவில்லை. எனில் எந்த மாதிரியான இசை கொடுக்கலாம் என தீர்மானிக்கலாம் இசையமைப்பாளரால். எண்பதுகள் எனில் டிஸ்கோ'வும் க்ளாஸிக்கலாகவும் செய்யலாம்

தொண்ணூறுகளுக்குப்பிறகெனில் டெக்னொ/ஹிப் ஹாப்/மெட்டல் என தெரிவு செய்து இசைக்கலாம். இங்கு காலம் கணிக்கப்படவேயில்லை. எனினும் தமது பாணியில் எண்பதுகளில் தாமிசைத்த பாணியிலேயே இசைத்திருக்கிறார் ராசைய்யா. ஜாஸ் ஒத்துவராது மென்மை மருந்துக்கும் இல்லை, இங்கு வெறும் காமம்/குரோதம்/பின்னில் குழி பறிப்பது என்ற சூழலுக்குப்பொருந்தாது என தீர்மானித்து அதற்கேற்ப இசைக்கருவிகளைத்தேர்ந்தெடுத்து இசைத்திருக்கிறார். தற்போது வரும் அவியல்கள்/கீ போர்ட் குஞ்சுகளின் அவசர இசை கேட்டே பழகியவருக்கு உலகத்தரம் என்றெல்லாம் பிதற்றுபவருக்கு ஒன்றும் புரியப்போவதில்லை.

நேஷ்னல் ஜியோக்ராஃபி/டிஸ்கவரி சேனல்களில் நிகழ்ச்சிகள்/ ஆவணப்படங்கள் பார்த்தீர்களேயானால் அந்நிகழ்ச்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் இசையை சற்று உன்னிப்பாக கவனியுங்கள். எந்த நாட்டில் எடுக்கப்பட்ட நிகழ்வோ அந்த நாட்டின் பாரம்பரிய ஒலிகளே/இசையே இசைக்கப்படும். எகா'வாக ஆப்ரிக்க நாடுகளின் ஆவணப்படமெனில் அவர்களின் இசைக்கருவிகள் கொண்ட அவர்களின் பாரம்பரிய இசையே ஒலிக்கும், தமிழ்நாட்டு ஆவணப்படமெனில் மத்தளமும்/நாயனமும் மட்டுமே ஒலிக்கும். அது தான் உலகத்தரம்.

கருந்தட்டாங்குடியில் இருந்து பாடுபவள் 'ரெக்கே'விலும் , 'ராக்'கிலும் பாட மாட்டாள். உலகத்தரம் என்பதை பேசமுயலுமுன் அவற்றின் அடிப்படைக் கண்ணிகளை/கூறுகளை அறிந்து கொண்டு பேசவேணும்.

இருந்தாலும் படம் ஆவணப்படம் மாதிரியே உலவுவது கொடுமை.அதிரடி திருப்பங்கள் என ஏதும் இல்லை. யூகிக்க முடியும் காட்சிகள் சில இருக்கின்றன. யூகிக்கவியலாத காட்சிகள் என ஏதும் இல்லையென்பதும் உண்மை. கதை சொன்ன விதம் ரஷொமான் போன்றதேயென்றாலும்
அதன் நேர்த்தி எங்கும் தென்படவில்லை.

தப்பு பண்ணினா சாமி கண்ணக்குத்திடும்னு சொல்றார் மணி.. ஹிஹி.அவ்வளவுதான் படம்.





No comments:

Post a Comment