Monday, June 18, 2012

எனக்காக யாரும் அழவேண்டாம்




எந்தன் கல்லறையில் மலர்களை வைக்கவேண்டாம்
எல்லா மலர்களின் நிறங்களையும்
அவற்றின் இயல்பான மணங்களையும்
மரபணு மூலம் பிறழச்செய்தவன் நான்

எல்லா ஆண்டுகளிலும் என் நினைவு தினத்தன்று

யாருக்கும் உணவளிக்க வேண்டாம்
எல்லா உணவுகளுக்கும் ஊட்டம் கொடுத்து
அவற்றின் இயற்கைச்சுழற்சியை மாற்றியவன் நான்

என் நினைவாக எனது கல்லறையில்

கனிகளை வைத்துப் படையல் செய்யவேண்டாம்
எந்தக்கனியும் இனிச் செடியில் உருவாகுதல் கூடாது என்று
அவற்றை விதையின்றித் தோன்றச்செய்தவன் நான்.


என் பெயரை மறந்தும் கூட பின் வரும் சந்ததியினருக்கோ
அல்லது தெருவுக்கோ வைத்து விடவேண்டாம்
யாருடைய பெயரும் நிலைத்திருக்கவியலாது
அனைவரின் வரலாற்றையும் திரித்து எழுதியவன் நான்.

என் கல்லறையில் எந்த மொழியிலும்

நான் வந்து சென்றதை எழுதிவைக்கவேண்டாம்
சிறு இனங்களைப் பூண்டோடு அழிக்க அமர்ந்து திட்டம் தீட்டி
முதலில் அவர்களின் மொழியை அறவே அழித்தவன் நான்.

எனக்காக யாரும் அழவேண்டாம்

கண்ணிமைகளின் அழகு கூட்ட முயல்களின் இமைகளைக்
கட்டிவைத்து அவற்றின் மீது ஆராய்ச்சி செய்தவன் நான்.


என் கல்லறையில் எந்தச் சிறு விளக்கையும்
ஏற்றி வைக்கவேண்டாம்
இயற்கையின் எண்ணை வளங்களை
ஆதிக்கச்சக்திகள் தமக்குள் கூறு போட்டுக்கொள்ள
அடிப்படைத்திட்டம் தீட்டிக்கொடுத்தவன் நான்.

உயர்த்திப்பிடித்த மதுக்கோப்பையுடன்

என் இறந்த நாளை நினைவு கூரவேண்டாம்
அருந்தும் அத்தனை மதுவிலும் கலப்படம் செய்து
பல குடிகளைக்கெடுத்தவன் நான்

என் உடலை எடுத்துச்செல்ல

மரத்தாலான பெட்டி செய்ய வேண்டாம்
அத்தனை காடுகளையும் அழித்து
நகரச் சுடுகாடுகளைக் கட்டி எழுப்பியவன் நான்.


என் உடலைப்பதப்படுத்திக் காட்சிப்பொருளாகப்
பிறர் பார்வைக்கு வைக்கவேண்டாம்
பல இனங்களை அவற்றின் சுவடின்றி
அழித்தொழித்தவன் நான்

என்னை எரித்துவிட்டு அந்தச்சாம்பலை

எந்த ஆற்றிலும் கரைக்கவேண்டாம்
அத்தனை ஆறுகளையும் மாசுபடுத்தியவன் நான்

என் சாம்பலை எந்த மலையின் மீதும் தெளிக்கவேண்டாம்
அத்தனை மலைகளின் பனியை இன்னும் இறுகச்செய்யும் வகை
பூமியின் வெப்பத்தை அதிகரிக்கச்செய்தவன் நான்.

நான் இறந்தபின்னும்

இந்தக்கவிதையைப்பிறர் வாசிப்பதை அறிய
உடல் தானம் செய்திருக்கிறேன்
எஞ்சும் உதவாத பாகங்களை
உங்கள் விருப்பப்படி
பிணந்தின்னி வல்லூறுகளுக்குப் படைத்துவிடுங்கள்.



.

7 comments:

  1. அருமையாக எழுதியுள்ளீர் நல்வாழ்த்து.

    ReplyDelete
  2. மிக்க நன்றி கவி அழகன்..

    ReplyDelete
  3. கவிதையும் படங்களும் மிக அருமை
    தமிழ்க் கவிதை புதிய திசைகளில் பாய்கிறது என்பதற்கு இது ஒர் சான்று

    ReplyDelete
  4. மிக்க நன்றி நந்தினி மருதம்..

    ReplyDelete
  5. மனம் கவர்ந்த அருமையான கவிதை
    திரும்பத் திரும்ப படித்து ரசித்தேன்
    கருத்தும் கவிதைத் திற்னும் பிரமிப்பூட்டியது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மிக்க நன்றி ரமணி சார்.. தொடர்ந்து உங்கள் பார்வையில் படும்படி இன்னும் எழுத முற்படுகிறேன்..
    வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி..!

    ReplyDelete